Saturday, February 4, 2012

என் கருத்தைச் சொல்ல மாட்டேன்!



அண்மையில், எனது மருத்துவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மிகச் சிறந்த சிந்தனையாளர். நேரம் கிடைக்கும் பொழுது, அவரிடம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சில நாட்களுக்கு முன்  அவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. பேச்சு இப்படித்தான் ஆரம்பித்தது.

"குழந்தைக்கு பேர் வச்சிட்டீங்களா சார்?"

"நிரஞ்சனா" என்றார் அவர்.

" நிரஞ்சனா-ன்னா என்ன அர்த்தம்?"

"நிரஞ்சனா-ன்னா, அது ஓர்  ஆற்றின் பெயர், புத்தர் அந்த ஆற்றில் குளித்தப் பிறகுதான் ஞானம் பெற்றார்"

"பெயர் வைக்கிறதுங்கிறது ரொம்பக் கஷ்டம். என்னோட பையனுக்கு குழந்தை பிறக்கும் பொழுது, என்ன பெயர் வைக்கிறதுன்னு இப்ப நினைச்சாலே ஒரே குழப்பமா இருக்கு  சார்!"

"அது, உங்க பையனோட பிரச்னை. அதுல நீங்க தலையிடக் கூடாது!"

"ஆமாம் சார், அது அவங்க உரிமை. அதுல நான் தலையிடல. ஆனா, என்னுடைய கருத்தைச் சொல்லலாம் இல்லையா?"

"உங்களோட கருத்துன்னு, நீங்க சொல்றீங்க. ஆனா, உங்கப் பையன் நம்ம அப்பா ஆசைப்பட்டு சொல்லிட்டார். நாம வேறு பேர் வச்சா,  அப்பா மனசு கஷ்டப்படுமேன்னு நினைச்சு, அந்தப் பேரையே வச்சுடுவார். அதனால, நீங்க எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது!" என்றவர் தொடர்ந்து...

"என்னோட முதல் குழந்தைப்  பிறந்தப்பவே,  நேரா எங்க அப்பாகிட்ட போய், நீங்க பேரு ஏதும் வச்சிடாதீங்கன்னு முதல்லையே சொல்லிட்டேன்!"  என்றார்.

  நிரஞ்சனா என்ற ஆற்றில் குளித்தப் பிறகு, புத்தர் ஞானம் பெற்றதாக மருத்துவர் சொன்னார்.  மேற்கண்ட உரையாடல் எனக்கு புது சிந்தனையைக் கொடுத்தது.  ஏற்கனவே,  நான் சொன்னதால்தான் 'அமைதி விரும்பி' வழக்கறிஞர்  படிப்பில் சேர்ந்தான். இனி, என்னுடையக் கருத்துக்களை 'அமைதி விரும்பி'  கேட்காமல்,  நான் சொல்வதில்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.

இது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய மகன் வயதில் உள்ள  பிள்ளைகளின்  பெற்றோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

.

8 comments:

  1. எல்லார் வீட்டிலும் நடப்பதுபோலத்தான் இருக்கு. எங்க வீட்டிலும் பேரக்குழந்தைகளுக்கு நாங்க ஒருபேர் யோசிச்சு வைத்திருந்தொம்ம். மகனும் மருமகளும் வேருபெயர் வைக்க ஆசைப்பட்டாங்க. அவங்க விருப்பத்துக்கே விட்டுக்கொடுத்துட்டோம். நீங்க நம்ம பக்கம் வந்து நாளாச்சே?

    ReplyDelete
  2. எனக்கென்னவோ அவர் சொல்வதில் முழு உடன்பாடில்லை. என்ன கோர்ஸ் படிப்பது போன்ற விஷயங்களில் நாம் சொல்வதை ஏற்று கொள் என கம்பெல் செய்வது தான் தவறு. நம் கருத்தை சொல்லி விட்டு, நீயாக யோசித்து முடிவு செய்; எதுவாயிருந்தாலும் ஓகே என சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.

    ஆனாலும் பையனுக்கு பேர் வைக்க நீங்க யோசிக்க வேண்டாம் சார். அது மாதிரி விஷயங்கள் நிச்சயம் அவரும் அவர் மனைவியும் முடிவு செய்யணும் என ஒதுங்கிடனும் என தோன்றுகிறது

    ReplyDelete
  3. படிப்பும் சரி, பெயர் வைப்பதும் சரி கலந்து பேசி முடிவெடுக்கலாமே....நீஙக என்ன நினைச்சிருக்கே, உன் ஆசை என்ன என்ற கேள்விகளுக்குப் பின் நம் எண்ணங்களைப் பகிர்ந்தால் அவர்களுக்கு அது இன்னும் பொருத்தமாகத் தோன்றினால் எடுத்துக் கொள்ளலாமே...

    ReplyDelete
  4. உங்கள் தீர்மானம்தான் சரி
    ஏனெனில் குழந்தை கருவானவுடன்
    தாய் தந்தையர்கள் மனதில்
    ஆண் என்றால் இந்தப் பெயர்
    பெண் என்றால் இந்தப் பெயர் என
    நிச்சயம் ஒரு கருத்து உருவாகிவிடும்
    இதில் நாம் வேறு ஏன் குழப்பவேண்டும்
    பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. கருத்துள்ள பதிவு ! நன்றி !

    ReplyDelete
  6. நான் ஸ்ரீராம் கட்சி:)!

    ReplyDelete
  7. நிரஞ்சனா என்றால் அஞ்சனம்- அதாவது மை - தீட்டாமலேயே அழகிய கண்களை உடையவள் என்றும் பொருள் உண்டு. இந்தப் பெயர் வைக்கும் விஷயத்தில் ஸ்ரீராம் சொன்ன கருத்து என் கருத்துடன் ஒத்துப் போவதால் அதையே வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  8. இளையவர்கள் தம் பொறுப்புகள் புரிந்து பெரியவர்களானாலும், வீட்டுப் பெரியவர்களின் அனுபவக்கருத்தைக் கேட்பது அவசியமே.

    குழந்தைக்குப் பெயர் வைப்பதென்பது, இப்பவெல்லாம் ஒன்று இரண்டோடு நிறுத்திக் கொள்கிறார்கள். எனவே, பெயர் வைப்பதை பெற்றவர்கள் விருப்பப்படி விட்டுவிடுவதே நல்லது.

    ReplyDelete