Tuesday, June 9, 2026

வாழ்க்கைப் பாடம்!

என்னுடன் பணியாற்றிய இருவருக்குள் நடந்த கொடுக்கல் வாங்கலில் நான் தலையிட்டதால் என்னுள் ஏற்பட்ட மாற்றம்!

எனக்கு மேலதிகாரியாக இருந்த பெண்மணி பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். தன்னோடு இருப்பவர்களும் தன்னைப் போன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

என்னோடு ஒர் ஆண் கடைநிலை ஊழியராகப் பணியாற்றினார். இவருக்கு அந்த அதிகாரி கடன் கொடுத்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது.
ஒரு நாள் அந்த ஊழியர், தான் வாங்கிய கடன் தொகையை என் எதிரில் திருப்பிக் கொடுக்கிறார். அப்போது அந்த பெண் அதிகாரி அதைப் வாங்க மறுத்து, "வேண்டாம், வச்சுங்க!" என்கிறார்.

அதற்கு நான், "வாங்கிக்கங்க மேடம், பின்னாடி அவருக்கு தேவைப்படும் போது கொடுத்து உதவுங்க!" என்றேன்.

அதற்கு அந்த கடைநிலை ஊழியர், "அப்படி ஒரு நெலம எனக்கு வரக்கூடாதுன்னு வேண்டிக்கங்க, சார்" என்றார்.

பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதைப் பலரிடம் கற்றுக் கொண்ட எனக்கு, உதவி பெறும் நிலையில் யாரும் இருக்கக் கூடாது என்று நினைக்க வைத்தது, அந்த கடைநிலை ஊழியரின் வார்த்தைகள்.

நம்மில் பலர் உதவி கிடைக்கிறது என்பதற்காக, தேவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

நமக்கான தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளும் நிலைக்கு நாம் செல்லவேண்டும் என்று நினைத்து,  அதன்படி  வாழும் அந்த ஊழியருக்கு வாழ்த்துகள் 💐💐💐

அந்தப் பெண் அதிகாரி அந்தப் பணத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். இன்று அந்த ஊழியர் சிறப்பான நிலையில் உள்ளதோடு, இரண்டு நண்பர்களும் வாழ்வில் மகிழ்ச்சியோடும், என்னிடம் அதே அன்போடும் உள்ளார்கள் என்பது எனக்கு பெருமகிழ்ச்சி! 😃

Saturday, June 6, 2026

நாகை ஆசிரியர் மா.சு. மறைந்தார் ...

வேதாரண்யம் வட்டம், பன்னாள் கிராமத்தைப் பூர்வீகமாகவும், நாகை, தேசிய மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நாகை - புத்தூர், சிவன் வடக்கு வீதியை இருப்பிடமாகவும் கொண்ட திரு மா. சுப்பிரமணியன் அவர்கள் 4.06.26 அன்று இயற்கை எய்தினார் என்கிற தகவலை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

நான், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 1999 முதல் 2007 வரை பணியாற்றிய எட்டு ஆண்டுகளில் நாகையில் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றிருந்தேன். அதில் ஆசிரியர் திரு மா. சு. அவர்களின் குடும்பமும் அடங்கும்!

நாகப்பட்டினத்திற்கு குடிவந்த புதிதில் பன்னாள் திரு ச. அன்பழகன் ஆசிரியர் (தலைமையாசிரியர், விக்டரி பள்ளி, பஞ்சநதிக்குளம்) அவர்கள் மூலமாக கிடைத்த ஆசிரியர் திரு மா. சு. அவர்களின் அறிமுகம், குடும்ப நட்பாக மாறியது.

திரு மா. சு. அவர்களின் மருமகன் ஆசிரியர் திரு K. மாரிமுத்து அவர்கள், நடராஜன் தமயந்தி பள்ளியில் எனது மகன் அமைதி விரும்பி படித்தபோது, அவனின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

மேலும், நான் நாகையிலிருந்து சென்னைக்கு மாறுதல் பெறுவதற்கு முன்பு, அவரது மருமகள் மருந்தாளுநர் திருமதி R. பூமாதேவி அவர்களுடன் சில மாதங்கள் ஒன்றாகப் பணியாற்றினேன். 

சென்னைக்கு வந்த பிறகு, திரு மா. சு. அவர்களை சந்திக்கும் வாய்ப்பை காலமும் தூரமும் தடுத்துவிட்டன.

தன்னால் இயன்றதை மற்றவர்களுக்கு செய்ய நினைக்கும் வெள்ளையான, அன்பு நிறைந்த மனதைக் கொண்டவர் என்பதோடு, இவரது வாரிசுகளின் ஒற்றுமையே இவரின் நேர்மையான சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்