Friday, May 27, 2011

இது முடிவல்ல ஆரம்பம்...!

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. நம் அல்லது நம்முடைய உறவினர்,நண்பர்களின் பிள்ளைகளின் தேர்வு முடிவு வந்திருக்கும். இந்த நேரத்தில், நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போம்.

முன்பெல்லாம் தேர்வு முடிவு வெளியானால் "பாஸா?" என்று கேட்ப்பார்கள். இப்பொழுது "எத்தனை மார்க்?" என்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும். இதிலும் சில பிரச்சினைகள் வருகிறது. அது என்னவென்றால், அதிக அளவு மதிப்பெண் எடுத்தவர்களை எல்லோரும் பாராட்டுவதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விடுவதும் தான்.

இந்த வருடம் முதல் மதிப்பெண் 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு, நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ரம்யா - ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். சங்கீதா - முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம், மின்னல்விழி - செய்யாறு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர். விபரம் அறிய பார்க்க: தினமணி

இவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இவர்கள் +2 தேர்விலும் இந்த மாதிரி முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பத்தாம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்றவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த சதவிகிதம் மதிப்பெண் பெறுவதில்லை என்பதை அனுபவப் பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதே மாதிரி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அப்படியே இருந்து விடுவதுமில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த என்னுடைய நண்பர் ஒருவர், இன்று ஆடிட்டராக உள்ளார்.

சிலர், +1,+2 மட்டும் ரெசிடென்சியல் பள்ளிகளில் சேர்ப்போம் என்று சேர்த்து விடுகிறார்கள். அப்படி சேர்க்கக் காரணம். அந்தப் பள்ளிகளின் விளம்பரங்கள். அவர்கள் பள்ளியில் பத்து, இருபது மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் +1 சேர்க்கையின் பொழுதே மிகச் சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். சுமாராக ஆயிரம் மிகச் சிறந்த மாணவர்களில், பத்து இருபது பேர் மேற்படி மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மேலும், சுமாராக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதில் மாணவர்களுக்கு மன ரீதியான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும். எனவே, பிள்ளைகளின் மனப்பூர்வமான விருப்பமில்லாமல்(முதலில் தலையாட்டிக்கொண்டு சேர்ந்து விடுவார்கள், பின்பு அது சரியில்லை இது சரியில்லை என்பார்கள்) இந்த மாதிரி விடுதிகளில் சேர்ப்பது எதிர்ப்பார்த்த முடிவைத் தராது என்பதே எனது அனுபவம்.

எனவே,அதிக மதிப்பெண் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றப் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நாம் சொல்ல வருவது 'இது முடிவல்ல ஆரம்பம்' என்பதே!