Friday, June 14, 2024

உறவினரின் திருமணமும் எனது அனுபவமும்...!

பெரும்பாலும் ஊரில் நடக்கின்ற விசேஷங்களுக்கு சென்றுவர எனக்கு வாய்ப்புகள் அமைவதில்லை. ஒன்று விடுப்பு எடுக்கும் வாய்ப்பு அமையாது அல்லது உடல்நிலை ஒத்துழைக்காது.  

சென்னையில் எங்களது வீட்டைத்தேடி கண்டுபிடித்து அழைப்பிதழ் கொடுத்து சென்ற நண்பர்கள் மற்றும் உறவினர் வீட்டு விழாக்களில் பல நேரங்களில் கலந்துக்கொள்ள இயலாமல் போய்விட்டதே என்கிற ஒருவிதமான குற்ற உணர்வு எப்போதும் என் மனதில் இருப்பதுண்டு. 

அதே போன்றதொரு மனநிலையில் தான், எங்களது அம்மா வழியில் வந்த சகோதரியின் மகன் G M Ramkumar
அவர்களின் திருமணத்திற்கு புறப்படும் முந்தைய நாள் வரை விடுப்பு எடுக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்கிற சந்தேகத்துடனையே இருந்தேன். ஒரு வழியாக, விடுப்பும் கிடைத்து திருமண விழாவிலும் கலந்துக் கொண்டு மணமக்களை நேரடியாக வாழ்த்தும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றேன்.

 திறந்த வெளி விழா மேடை, பயன்பாட்டிலிருந்து மறைந்த வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த விதம், திண்பண்டங்களின் அணிவகுப்பு, குழந்தைகளின் விளையாட்டு மற்றும் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தப்போது, சிறு வயதில் நான் பார்த்து மகிழ்ந்த கோவில் திருவிழாவை எனக்கு நினைவுப்படுத்தியது என்பதை மறுபதற்கில்லை. 

பல வருடங்களுக்குப் பின்பு, சில உறவுகளையும் பல நட்புகளையும் சந்தித்தபோதும், சிலருடன் மட்டும் படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அதனை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சகோதரியின் மகனாக 'ஜிஎம்ஆர்' இருந்தபோதிலும், எனக்கு அவரையும் அவருக்கு என்னையும் நெருக்கமாக இணைத்தது முகநூல் என்றால் அது மிகையல்ல. 

இளம் வயதிலேயே, வீட்டையும் நாட்டையும் நேசிக்கும் குணத்தையும், மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், வளரும் தலைமுறைக்கு முன்னோடியாகவும், சொல்லும் செயலும் எப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவரும், நேர்மை மட்டுமே நிரந்தர முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்று நம்புவதோடு, இந்த சமூகத்திற்கும் தன்னால் இயன்றதை செய்ய விரும்புபவராகத் திகழ்ந்துவரும் 'ஜிஎம்ஆர்' மற்றும் செம்பருத்தி இருவரையும் வாழ்த்துவதோடு💐💐💐, அவர்கள் எல்லா வளமும் பெற வேண்டும் என்று இயற்கையிடமும் 
வேண்டுகிறேன்🙏.