Showing posts with label அரசுப் பள்ளி. Show all posts
Showing posts with label அரசுப் பள்ளி. Show all posts

Tuesday, August 17, 2021

வேதாரண்யம் மருத்துவரின் சாதனை!

எனது நண்பரும், வேதாரணியம் அரசு மருத்துவமனை மருந்தாளுநரும், ஆயக்காரன்புலம் 1 -ம் சேத்தி, கொச்சிக்குத்தகையை சேர்ந்த திரு  இரெ. இரவிச்சந்திரன் மற்றும்  திருமதி கீதா தம்பதியரின் மகன் டாக்டர் இர. இராஜரெத்தினம் எம்பிபிஎஸ். 

இவர் கடந்தாண்டு, சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்த பிறகு, முதுநிலை படிப்பில் சேர்வதற்காக நுழைவுத்தேர்விற்கு தயார் செய்துவந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக, சிறப்பு மருத்துவராக நாகை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். ஒருபுறம் கொரோனா நோயாளிகள் மறுபுறம் நுழைவுத்தேர்வுக்கு தயாராவது என்கிற கடின சூழ்நிலையில் அண்மையில் நடந்த 'INI CET' என்கிற, இந்தியாவில் AIIMS போன்ற  தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 80,000 - க்கும் மேலான  மருத்துவர்கள் எழுதிய நுழைவுத்தேர்வில் 16-வது இடம் பிடித்து சாதனை புரிந்து, நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளார்.

பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.(பொது மருத்துவம்) - படிப்பை  தேர்வு செய்துள்ளார்.

 
பொது மருத்துவர் என்பவர், மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிப்பவர். நோயாளிகளின் நோய் அறிகுறிகளைக் கொண்டு, பல்வேறு கோணங்களில் அதாவது 360° யில் ஆராய்ந்து, சரியான நோய்க்கு சிகிச்சையளிப்பது அல்லது அதற்குரிய சிறப்பு  மருத்துவரை பரிந்துரை செய்வது போன்றவை அவர்களின் முக்கிய பணியாகும்.


இவருக்கு எந்தக் கல்லூரியிலும், எந்தப் படிப்பை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்வதற்குரிய தகுதியிருந்தும், வேறு படிப்புகளை தேர்வு செய்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால், தான் பிறந்த ஊரைவிட்டு வெளியில் சென்றுவிட வாய்ப்புள்ளதால், அதனை தவிர்த்து தான் பிறந்து வளர்ந்த  கிராமப்பகுதியில் மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்பதற்காக, இப்படிப்பை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கிறார்.

 
நாகையில் எனது வழக்கறிஞர் நண்பர், புதிதாகக் கட்டிய தனது வீட்டை சுற்றிக் காட்டியபோது சொன்னது, இங்கே நினைவுக்கு வருகிறது. "மாடிக்கு செல்வதற்கு வெளியில் படி வைத்தால், அதனை வாடகைக்கு விடவேண்டும் என்கிற எண்ணம் வந்துவிடும். அதனால், உள்ளே படி வைத்துள்ளேன்!" என்றார்.


தமிழகத்தின் மற்ற கிராமப்புற பகுதிகளை ஒப்பிடும்போது, வேதாரண்யம் பகுதி ஏற்கனவே சிறந்த மருத்துவர்களைக் கொண்ட பகுதியாக திகழ்கிறது.  அவர்களோடு மேலும் ஒருவராக இவர் இணைய விரும்புவது வேதாரண்யம் பகுதி மக்களுக்கு கிடைத்த வரம்!


இவரும், இவருடைய மூத்த சகோதரி மென்பொறியாளர் திருமதி தாரணி விஜயகண்ணன் அவர்களும் சிறுவயதிலேயே 1330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லியதற்காக, அன்றைய நாகை மாவட்ட ஆட்சியர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பரிசும், பாராட்டும் பெற்றவர்கள் என்பது இங்கே குறிப்பிடதக்கது.


 
இவர் தனது பள்ளிப்படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் பயின்று உள்ளார். மேலும், தொடக்கக் கல்வியை ஆயக்காரன்புலம்- 2, வள்ளுவர் உதவி தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை ஆயக்காரன்புலம் - 2, நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றவர் என்பது கூடுதல் சிறப்பு.


இவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்பது நமது கடமையாகும்.

கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும், இந்தியா அளவில் மிகச்சிறந்த இடத்தையடைய முடியும்
என்கிற நம்பிக்கையை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் விதைப்பதற்கு, கடந்த காலங்களில் பலர் உதாரணமாக இருந்தாலும், நிகழ்காலத்தின் உதாரணமாக மருத்துவர் இர. இராஜரெத்தினம் திகழ்கிறார் என்றால் அது மிகையில்லை!

அவரை பாராட்டுவதோடு, வாழ்த்தி மகிழ்வோம்👏💐😀

Sunday, September 6, 2020

அரசுப் பள்ளியும் ஆசிரியர்களும்...!

அரசுப் பள்ளியில் அதுவும் தமிழ் வழியில் குழந்தைகளை படிக்க வைப்பதென்பது, குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறையில்லாத பெற்றோரின் செயலாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. 

1994 - ல் எனது மகனை ஆங்கில வழியில், தனியார் பள்ளியில் படிக்க வைப்பதற்குரிய வசதி எனக்கும், அதை படிப்பதற்குரிய தகுதி எனது மகனுக்கும் இருந்தபோதிலும், நான் விடாப்பிடியாக 'எல்கேஜி' எல்லாம் அனுப்பாமல், நேரடியாக அரசு பள்ளியில், தமிழ் வழியில் சேர்த்தேன். +2 வரை தமிழ் வழியில் படித்து,
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் சேர்வதற்குரிய மதிப்பெண் பெற்ற போதும், சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து, இன்றைய தினம் பன்னாட்டு நிறுவனத்தில் சட்டப் பிரிவில் துணை மேலாளராக பணியாற்றுகிறான். எனது மகனுடன் தமிழ் வழியில் படித்த பலர் மருத்துவம், பொறியியல், சட்டம், கல்வி மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் நம் நாடு மட்டுமல்லாது, வெளி நாடுகளிலும் மிகவும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர்.

என்னுடன் அரசுப் பள்ளியில் படித்தவர், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தின் 'CEO' - வாக உள்ளார். இன்னும் பலர் உலகலவில் மருத்துவம், பொறியியல், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் உயர்நிலையில் உள்ளனர். 

சரி, இதெல்லாம் எதற்காக இங்கே குறிப்பிடுகிறேனென்றால்...
'கொரனா' தாக்கத்தால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள இக்காலத்தில், அதிகளவில் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாததால், வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளிகளை பெற்றோர் நாடுவதால், இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்திகள் வருகிறது. 
அப்படி சேர்ந்தவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்பதற்காவும், அண்மையில் நானறிந்த A3 JOURNEY...
 ( Asaththum Arasu palli Asiriyarkal ) 
குறித்து பகிர்ந்து கொள்வதும்தான், நோக்கம்.

அண்மையில், நண்பர் ஆசிரியர் திரு பாலாஜி கருப்பம்புலம் அவர்களின் பேச்சைக் கேட்பதற்காக A3 முகநூல் பக்கம் சென்றேன். அதன்பிறகு, பல ஆசிரியர்களின் பேச்சைக்கேட்டு, இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமடைந்து வருகிறேன். 
ஒவ்வொருவரும், சுமாராக ஒரு மணி நேரம் பேசுகிறார்கள். அந்த பேச்சின் வழியாக அவர்களின் செயல்களை அறியும்போது, 'நாம் கற்பனையில் எதிர்பார்த்திருக்கும் ஆசிரியர்கள் அல்லவா, இவர்கள்!' என்கிற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அவர்கள் விவரிக்கும் தகவல்கள், ஒரு நல்ல திரைப்படத்தில் வரும் கதாநாயகன் செய்யும் செயல்களுக்கு ஒப்பாகவுள்ளது. மேலும், 
தமிழகத்தை குறுக்கு நெடுக்காக உலா வந்ததுபோல் நம்மால் உணரமுடிகிறது.  

நான், சாதாரணமாக பார்க்க ஆரம்பித்து, இப்பொழுது தொடர்ந்து A3 ஆசிரியர்களின் பேச்சைக்கேட்டு வருவதோடு, அவர்களின் பேச்சு, நாமும் நமது துறையில் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற சிந்தனையையும் தூண்டுகிறது என்றால், அது மிகையல்ல. 

இதற்கெல்லாம், ஆசிரியை திருமதி Uma Maheswari Gopal அவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மைதான் காரணம். தமிழக அளவில் மிகச் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பேசவைக்கிறார்கள்.
இவரின் செயல்பாடுகளால், இனிவரும் ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஏறுமுகத்தில் இருக்கும் என்றே தோன்றுகிறது.

கற்பித்தலை புனிதமாகக் கருதும் அனைவருக்கும், 'ஆசிரியர் தின' நல் வாழ்த்துகள்!