Showing posts with label அறிக்கை. சிந்தனை.. Show all posts
Showing posts with label அறிக்கை. சிந்தனை.. Show all posts

Monday, October 31, 2011

இது கூடவா தெரியாது, இவர்களுக்கு...?!


அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பது வரவேற்க வேண்டிய  ஒன்று.  அதுவும்  சுயேட்சைகள் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பது ஆரோக்கியமானதுதான்.  ஏனெனில்,  'நாம் யாரை நிறுத்தினாலும், நமது கட்சி சின்னத்தைப் பார்த்து, மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள்' என்று, இனி அரசியல் கட்சிகள்  நினைக்கும்  வாய்ப்பு குறையலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன்.



இப்பொழுது, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு நாட்கள் கடந்து விட்ட நிலையில், தோல்வியை சந்தித்தக் கட்சியின் தலைவர்கள்,  தலையில் போட்டத் துண்டை எடுத்து தோளில் போட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் 'துண்டை  தலையில் போட்டாலென்ன, தோளில்  போட்டால் நமெக்கென்ன?' என்று இருந்து விடலாம். ஆனால், அவர்கள் விடும் அறிக்கைகளைப் படிக்க வேண்டிய துரதிர்ஷ்டம் நமக்கு கிடைத்து விடுகிறதே!

வெற்றிப் பெற்ற இந்த சுயேட்சைகள் எல்லோரும், 'இவர்கள் கட்சியில் சீட் கிடைக்காமல் போட்டியிட்ட அதிருப்தியாளர்கள்' என்று அறிக்கை விட்டு, தங்கள் கட்சி இன்னும் செல்வாக்கோடுதான் இருக்கிறது என்கிறார்கள். அது உண்மை என்றால், 'உங்கள்  கட்சியில், மக்கள் செல்வாக்கு உள்ள நபர்கள்  யாரென்று கண்டுபிடித்து. அவகளை  தேர்தலில் நிறுத்தக் கூட தெரியாத உங்களுக்கு, நாட்டை  நிர்வாகம் பண்ணும் அறிவு  எப்படி இருக்கப் போகிறது?' என்று மக்கள் நினைப்பார்கள் என்பது கூட, இந்த அதிமேதாவிகளுக்கு தெரியவில்லை என்று நினைக்கும் பொழுது, இவர்களின் மீது பரிதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை!