Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Tuesday, July 28, 2020

நம்பிக்கை தரும் ஓவியம்!

இந்த ஓவியம் சென்னை, குரோம்பேட்டையில் ஒரு பள்ளி வளாகத்தில், ஆறு மாதங்களுக்கு முன்பு வரையப்பட்டது. எப்பொழும் பரபரப்பான சாலையில் அந்தப் பள்ளி உள்ளதால், நான் நின்றுகூட சரியாக பார்க்கமுடிந்ததில்லை.
எனினும், ஊரடங்கு சமையத்தில் நின்று பார்த்து வியந்ததோடு, படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தப்படத்தை வரைந்தது எம். பவித்ரா, எட்டாம் வகுப்பு என்றுள்ளது. இது மாணவி பவித்ராவின் சிந்தனையில் தோன்றியதா அல்லது வேறு ஓவியத்தைப் பார்த்து வரைந்தாரா என்று தெரியவில்லை.
எல்லா தகுதிகள் இருந்தும், பிறரின் உழைப்பில் வாழ நினைப்பவர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் ஓவியமிது.

 இந்தப் பள்ளியில் பயிலும், பிஞ்சு உள்ளங்களில் உயர்ந்த எண்ணத்தை விதைக்க, இதனை சுவற்றில் வரைய முடிவெடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி!

Wednesday, September 15, 2010

விபத்துக்கு பின்னே ஆபத்து - ஒரு பார்வை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி மாணவன் அந்தப் பள்ளியின் பேருந்து மோதிய  விபத்தில் இறந்துவிடுகிறான். இதனையறிந்த அந்த மாணவனின் ஊரைச் சேர்ந்த உறவினர்களும் பொதுமக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை தீக்கிரையாக்கிவுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக அந்தப்பள்ளியில் படித்த  மாணவர்களோ, ஆசிரியர்களோ சிக்கிக்கொள்ளவில்லை. இல்லையென்றால்  விவசாயக்கல்லூரி  மாணவர்களை இழந்தைப் போன்று  பலரை இழக்க வேண்டியதிருந்திருக்கும். 

பள்ளி மாணவனின் இறப்பில் நேரடித் தொடர்பு   அந்தப் பேருந்தை ஒட்டிய ஓட்டுனருக்கு  மட்டுமே.  ஒரு விபத்து நடந்தால் அதில் சம்பந்தப்பட்ட,  பாதிக்கப்பட்ட இருவருக்குமே பொறுப்பு உள்ளது.  இந்த விபத்து அந்த மாணவனின் கவனக்குறைவாலும் நிகழ்ந்திருக்கலாம் என்பதை நாம் மறுக்க முடியாது. எது எப்படியோ தண்டிக்கப்பட வேண்டியவர் அந்த ஓட்டுனர் மட்டும்தான். ஆனால், நடந்தது என்ன? பேருந்தை எரித்ததோடு பள்ளியையும் அதனுள் இருந்த ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் சான்றிதழ்களும் எரிக்கப்பட்டிருக்கிறது.   தாளாளரின் கார் மற்றும் வீடும் தப்பிக்கவில்லை. இந்த வன்முறைக் கும்பலின் வெறிச்செயலை  யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு விபத்துக்குப் பின்னும் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டால், நினைக்கவே பயமாகவுள்ளது



இதைவிட கொடுமையான விபத்து கடந்த ஆண்டு,  வேதாரணியம் அருகே நடந்தது நினைவிருக்கும். அப்பொழுது, ஒன்பது குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாயினர்.
. அன்றைய நிலையில் அந்த விபத்துக்கு முழுக்காரணம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்குத்தான் என்பதை அனைவரும் அறிந்தபோதும், இதுமாதிரி யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்பதையும் நாம் இங்கு நினைவு கொள்ளவேண்டும். 


அண்மையில் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனை உறுதி செய்தபோது,
இதுபோல்  வன்செயல்  மீண்டும் நிகழாமல் இருக்க, இந்தத் தீர்ப்பு உதவும் என்றே
அனைவரும்   நினைத்தோம். ஆனால், அந்த சம்பவம் நிகழ்ந்த தர்மபுரிக்கு அருகிலேயே  இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதால்,  நம்மையெல்லாம் எதிர்காலத்தை நினைத்து  கவலைப்பட  வைக்கிறது. 



எத்தனைப் பேருக்கு தண்டனைக் கொடுத்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். கல்வியறிவும், தெளிவான சிந்தனையும், சுயநலமற்ற தலைவர்களும் கிடைத்தால்தான், நமது நாட்டு மக்கள் திருந்த வாய்ப்புள்ளது. அதுவரை சட்டமும் நியமும் மற்றவர்களுக்குத்தான் என்ற நினைப்பு
மாறப் போவதில்லை. 



.