Showing posts with label புயல். Show all posts
Showing posts with label புயல். Show all posts

Saturday, December 31, 2011

வரும்..., ஆனா, வராது!


 சிறிய வயதில் வேடிக்கைக்காக மற்றவர்களை பயமுறுத்த அபயக் குரலெழுப்புவோம்! அப்பொழுது, எங்கள் தாத்தா சொல்வார், "இப்படித்தான், ஒருத்தன் புலி வருது... புலி வருதுன்னு சத்தம் போடுவானாம். எல்லோரும் ஓடிப்போய் பார்த்தால். எல்லோரையும் ஏமாற்றி விட்டதாக சிரிப்பானாம். பின்பு ஒரு நாள், உண்மையில் புலி வந்தப் பொழுது அவன் போட்ட சத்தத்தை எல்லோரும் பொய் என்று நினைத்து. அங்கு ஒருவரும் செல்லவில்லையாம். காப்பற்ற ஆளில்லாமல் புலி அடித்துக் கொன்றுவிட்டதாம்"



இப்படித்தான், அண்மையில் 'தானே' புயல் குறித்த வானிலை ஆராயிச்சி மையத்தின் எச்சரிக்கையையும் மக்கள் பார்த்தார்கள். நான்கு நாட்களுக்கு முன்பே, வானிலை ஆராய்ச்சி மையம் தெளிவாக வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்த பொழுதும். மக்கள் அதற்கான திட்டமிடலில் இறங்கவில்லை என்பதுதான் உண்மை.


வீட்டில் மின்சாரம் இல்லாமல், செய்தி தெரிந்துக்கொள்ள  முடியவில்லை. பேட்டரி ரேடியோ வைத்திருந்தவர்கள் கூட அதற்கு பேட்டரி  வாங்கிப் போட வேண்டும் என்று நினைக்கவில்லை. செல் போனை முழுவதும் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளவில்லை. வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. வெளியூர் பயணத்தை தவிர்கவில்லை. இவையனைத்தும், எனக்கும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவங்கள்.

'வரும்..., ஆனா, வராது!'  இப்படி ஒரு நகைச்சுவை சினிமாவில் அமைத்திருப்பார்கள். அது போல வானிலை அறிக்கையையும்  மக்கள் எடுத்துக் கொண்டார்கள்.

இதுநாள் வரை, "ரமணன் சொல்லிட்டார் மழை பெய்யும்-ன்னு. குடைய வீட்ல வச்சிட்டு வாங்க" அப்படின்னு கணவனைப் பார்த்து மனைவி சொல்வதாக ஜோக் சொல்வார்கள். அப்படித்தான் 'தானே' புயல் குறித்த திரு.ரமணனின் எச்சரிக்கையும் பார்க்கப்பட்டது. மிக துல்லியமாக கணித்துச் சொன்ன வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு நமது பாராட்டுக்கள். இனி வரும் காலங்களில், மக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகளை மதித்து, அதற்குரிய குறைந்தப்பட்ச முன்னேற்பாடுகளை செய்துக் கொள்ள வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்.


தானே புயலால் வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு அனுதாபத்தையும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் தெரிவிப்போம்.