கெட்டவன் அழிந்ததைக் குறிக்கும் மகிழ்ச்சியான பண்டிகைதான் தீபாவளி என்பதை நாம் அறிவோம்.
அப்படி என்றால் கெட்டவனே இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்காது.
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நம்மோடுதான் நரகாசுரர்கள்( இனி வில்லன் என்று எழுதுகிறேன், இதுவரை தலைப்புக்காக) இருக்கிறார்கள்.
அண்மையில் கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றார்களே இவர்கள் யார்? இது போன்றவர்கள் எப்போதாவதுதான் செய்திகளில் அடிபடுவார்கள்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நம்மோடு பல வில்லன்கள் கலந்திருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
பெற்றோரை கவனிக்காமல் விடும் பிள்ளைகளும்,
உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு மேலேயோ அல்லது கீழேயோ பணிபுரியும் சிலர், மற்றவரின் மனநிலையும் நியாமும் அறியாமல் அவர்கள் சொல்வதுதான் சரி என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பவர்களும்.
தனக்கு ஒரு ரூபாய் கிடைக்க வேண்டுமென்பதற்காக தொன்னூற்றி ஒன்பது ரூபாயை வீணடிக்கும் ஊழல் பேர்வழிகளும் .
தனது வீட்டில் மிஞ்சியிருக்கும் கழிவுகளை பிளாஸ்டிக் பையில் கட்டி சாக்கடையில் வீசுபவர்களும்.
தனது வீட்டிள் உள்ள தென்னை மட்டை வீணாகி விடுகிறது என்பதற்காக மற்றவர்களைப் பற்றியும் சுற்றுசூழல் போன்றவற்றிலும் அக்கறையில்லாமல் கொல்லைப்புறம் அடுப்பை வைத்து புகைத்து, ஊரையே புகை மண்டலமாக மாற்றி வெந்நீர் போட்டுக் குளிப்பவர்களும்.
நடு வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நேரெதிரே நிற்கும்போது, இருக்கிற சிறு இடைவெளியிலும் ஆட்டோ அல்லது பைக்கை கொண்டு நிருத்துபவர்களும்.
இப்படி நம்மிடையே நிறைய வில்லன்கள் உள்ளார்கள்.
என்னால் பட்டியல் போடவும் முடியவில்லை, உங்களால் படிக்கவும் முடியாது. இந்த வில்லன்கள் திருந்தினால் மட்டுமே உண்மையான தீபாவளி, அதுவரை மற்றவர்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே!