இந்தத் தேர்தல் முடிவு யார் எதிர்ப்பார்த்தார்களோ இல்லையோ , இவ்வளவு பெரிய வெற்றியை தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு அளிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. காரணம் தமிழக மக்கள் இப்படி தடாலடியாக மாறுவார்கள் என்று நம்பவில்லை. அந்தப் பயத்தில்தான் ஏகப்பட்ட விழிப்புணர்வு பதிவுகளைப் போட்டேன்.
இந்த வெற்றிக் குறித்தும், திமுக கூட்டணியின் தோல்விக் குறித்தும் அலசி ஆராய்வது அரசியல் வல்லுனர்களின் வேலை. அதை நாம் கையிலெடுக்க வேண்டாம்.
இந்தத் தேர்தலில் எனது பதிவுகளுக்கு கிடைத்த வெற்றி எப்படிக் கிடைத்தது என்பதை மட்டும் இங்கு பார்க்கலாம்.
அப்படி எனது பதிவுக்கு கிடைத்த வரவேற்புக்கு காரணம். பிறரை எப்படி ஏமாற்றுவது என்று நான் கற்றுக் கொண்ட தந்திரம்தான் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை.
தேர்தல் குறித்து நான் எதுதிய பதிவுகளை முதலில் பார்ப்போம்.
நான் எழுதியவைகளிருந்து, மாதிரிக்கு சில செய்திகளை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளேன். முழுவதும் அறிய அந்தந்த பதிவுகளுக்கு சென்று படிக்கவும்.
வரிசைப்படி தேதி வாரியாக...
யாருக்கு என் ஒட்டு!
//இலவசமா, என்ன கொடுக்கலாம்னு அறிவிக்க, அரசியல் வல்லுனர்கள் 'ரூம்' போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நகைச்சுவையா சிந்திக்க அவங்க இருக்கிறதால, நாம் கொஞ்சம் மக்களுக்காக பொறுப்போடு சிந்திப்போம்.//இலவச அறிவிப்புத்தான் தெரியுமே உங்களுக்கு.
தேர்தல் தேதியும் விளைவுகளும்!
//அரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.//
தப்பித்துக் கொண்டார்கள் தானே!
அனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு!
//எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள். கட்சி, சின்னம், ஜாதி, போன்றவை இந்தத் தேர்தலில் எடுபடாது. அதற்காக, சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிபெறுவார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.//
இப்படி நான் எழுதக் காரணம். இது ஒரு விழிப்புணர்வு பதிவு என்கிற மாதிரி எழுதினேன். ஆனால், இப்பொழுது ஜாதியக் கட்சிகளும், பிரபலமான சின்னம் கொண்ட கட்சிகளும் வெற்றிப் பெறவில்லை. அதே நேரம் சுயேட்சைகள் வெற்றிப் பெற முடியாது என்பதும் என் கணிப்பே.விவசாயம் செய்வோம், வாருங்கள்...!
//நாம் ஒட்டுப்போடும் வேட்பாளர் தோற்க கூடாது என்கிற எண்ணத்தில், யார் வெற்றிப் பெறுவாரோ அவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்பவர்களும் உண்டு. இது போல், கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன்.//இப்ப பாருங்க அமோகமா ஜெயிச்சிருக்கிறார். எப்படி, நான் சொன்னது சரிதானே?
//விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!//
உண்மைதானே? களைகளைச் சரியாகப் பறித்து விட்டார்கள் தானே!
என்ன நடக்கும், முப்பது நாட்கள் இடைவெளியில்?
//மாற்றுக் கட்சி தொண்டர்கள் மேலுள்ள அர்த்தமற்ற பகைமை மறந்து/மறைந்து போகும். அதனால், சண்டை சச்சரவு குறையும்.//இது உண்மையாகவே தோன்றுகிறது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு இன்றளவில் ஒரு பிரச்சினையுமில்லை.
//ஒரு மாதக் காலமும் 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம்' என்று அனைத்துக் கட்சி தலைவர்களும்,
தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம்.//
இதுவும் உண்மைதானே?! அப்படித்தானே நடந்தது?
சரி, தலைப்புக்கு வருவோம்....
தேர்தல் பதிவுகளைத் தவிர்த்து, இதுவரை நான் எழுதிய பிற பதிவுகளை, பத்து இருபது பேருக்கு மேல் படிக்க மாட்டார்கள். ஆனால், என்னுடைய தேர்தல் பதிவுகளை ஆயிரக் கணக்கானவர்கள் படித்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று என்றால், நான் எழுதிய பதிவுக்கும், தலைப்புக்கும் அப்படி ஒன்றும் நேரடித் தொடர்பு இல்லை. பெரும்பகுதியானவர்கள், தலைப்பைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் மட்டுமே! இது, நான் வேண்டுமென்றே செய்த ஒன்றுதான். அதனால்தான், உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று என் மனசாட்சி சொல்லியதால் இந்தப் பதிவு. உண்மையை ஒத்துக் கொண்டால் தண்டனைக் குறைவாமே:-)))?!