
தேர்வு சமயத்தில் வீட்டிற்கு விருந்தினர் வருகையைக் கூட தேர்வுக்கு தயாராகும் பிள்ளைகளின் பெற்றோர் விரும்புவதில்லை. இந்நிலையில் அழையா விருந்தாளியாக கிரிக்கெட் வர உள்ளது. அது என்னவோ தெரியல, நம்ப எக்ஸாமுக்கும் கிரிக்கெட்டுக்கும் அப்படி ஒரு பந்தம். ரெண்டும் சேர்ந்துதான் வரும்.
உலககோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நாளும், நமது மாணவர்களுக்கு +2 தேர்வு தொடங்கும் நாளும் ஒன்றாகவே உள்ளது. தேர்வு முடியும் போது கிரிக்கெட் போட்டியும் முடிந்துவிடும். குறிப்பாக பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்கள்தான் டி.வி.யில் போட்டியைக் காண ஆசைப்படுகிறார்கள். இது பெற்றோருக்கு ஒரு சவாலான விஷயம்தான். இன்று டி,வி.இல்லாத வீடுகளே இல்லை. இந்தக் கிரிக்கெட்டால், +2 தேர்வு எழுதவுள்ள ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் குடும்பங்களில் நிம்மதி கேள்விக்குறிதான். விதிவிலக்காக, ஒரு சில பெற்றோர் நடு வீட்டில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு பிள்ளையை தனியறையில் "கதவைச் சாத்திக் கொண்டு படி" என்று சொல்வோரையும் நாமறிவோம். டி.வி.யை மூட்டைக்கட்டி வைத்தாலும், எஸ்.எம்.எஸ். மூலம் ஸ்கோர் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் மாணவர்களும் அதிகம்.
இந்திய அணியின் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுவதையும் நாம் அறிவோம். இன்னும் கொடுமை, போட்டிகளில் இந்திய அணி தோற்றுவிட்டால் மறுநாள் பரிட்சை அம்போதான்! ஒவ்வொரு மாணவனுக்கும், இந்தத் தேர்வு ஒரு வாழ்வா சாவா பிரச்சினை. ௦.25 மதிப்பெண் கூட பலர் வாழ்க்கையை திசைதிருப்பி உள்ளதை அனைவரும் அறிவோம்.
'' யூசுப்பதானின் அதிரடி ஆட்டம் மூலம் கடைசி 10 ஓவரில் விக்கெட்டுகள் இருந்தால் எந்த ரன் இலக்கையும் எடுக்க முடியும் என்று நினைக்கிறேன். உலககோப்பைக்கு முன்பு இந்த தொடர் மூலம் இந்த பாடத்தை கற்றுக் கொண்டேன்" இது, நம் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் டோனி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐந்தாவது ஒரு தினப் போட்டியின் இறுதியில் தெரிவித்தக் கருத்து.
டோனி, வருகிற உலகோப்பை கிரிக்கெட்டிலும் கூட அனுபவம் மூலம் பாடம் படிக்க முடியும். அவருக்கு மீண்டும் மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு வரும், அவரும் ஓய்வு பெரும் வரை பாடம் கற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், கிரிக்கெட் பார்த்து தேர்வினை சரியாக எழுதாமல் அனுபவம் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்வு வருமா?
மாணவர்கள், இந்த உலககோப்பை போட்டியை பார்ப்பதையும், அது குறித்து விவாதித்து நேரத்தை வீணடிப்பதையும் தவிர்த்தால்தான், பெற்றோருக்கு நிகழ் காலத்திலும், மாணவர்களுக்கு எதிர் காலத்திலும் நிம்மதி கிடைக்கும்.
படம் உதவி:கூகிள்.