Showing posts with label செய்தி.. Show all posts
Showing posts with label செய்தி.. Show all posts

Wednesday, December 12, 2012

சிலிண்டர் கணக்கு விபரம் அறிய...!

இந்த நிதியாண்டில், இதுவரை எல்பிஜி சிலிண்டர் எத்தனை வாங்கினோம், எப்பொழுது வாங்கினோம், எவ்வளவு மானியம் பெற்றுள்ளோம் போன்ற விபரங்களை அறிய இந்த தளத்திற்கு http://indane.co.in  சென்று TRANSPARENCY PORTAL -ஐ கிளிக் செய்யவும். பிறகு காஸ்ஏஜென்சி பெயரை டைப் செய்து விபரங்களைப் பெறலாம்.



சரி, மானிய விலையில் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று தற்பொழுது உள்ளது. இது ஒன்பது என்று மாறலாம் என்கிற பேச்சு உள்ளது. பார்ப்போம்.

.
படம் உதவி: கூகிள்

Friday, August 17, 2012

ஒலிம்பிக் 2012: தெரிந்ததும், தெரியாததும்!

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துவிட்டது.
இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் சேர்த்து ஆறு பதக்கங்கள் கிடைத்துள்ளது.

2008 பீஜிங்-ல் மூன்று. இப்பொழுது ஆறு, முன்னேற்றம்தான். ஆனால்,2008-ல்  50  வது இடத்திலிருந்து 2012-ல்  55 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். டென்னிஸ் வீரர்களிடையே நடந்த ஈகோ மோதலால் இரட்டையர் பிரிவில் பதக்கம் கிடைக்காமல் போய்விட்டது.
அதிகமாக  எதிர்பார்த்த தீபிகாகுமாரி ஏமாற்றிவிட்டார். உலகளவில் உசைன் போல்ட் எதிர்பார்த்த சாதனையை நிகழ்த்திவிட்டார். சரி, இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும் தானே? என்பவர்களுக்கு அதிகம் தெரியாத செய்தி வருகிறது....
 




ஆஸ்கர் பிஸ்டோரியஸ் என்கிற பெயர் இந்த ஒலிம்பிக்கில்தான் எனக்கு
அறிமுகம்.  ஆஸ்கர் பிஸ்டோரியஸ்க்கு ஒரு வயதிலே பிறவிக் குறைப்பாடுக் காரணமாக இரண்டு கால்களும் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. கார்பன் இழைகளால் செய்த மெலிதான செயற்கைக் கால்களால் ஓடுவதால் 'பிளேடு ரன்னர்' என்று அழைக்கப்படுகிறார்.

தென் ஆப்ரிக்காவின் சார்பில், இந்த ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதி வரை வந்தார். 4 x 400 மீட்டர் போட்டி அரையிறுதியில் இவருக்கு முன் ஓடிவந்து குச்சியை இவர் கையில் கொடுக்க வேண்டிய அஃபெண்ட்ஸே மொகவானே, அடுத்த பாதையில் ஓடிய கென்யாவின் வின்செண்ட் கீலுவுடன் மோதி தடுக்கி விழுந்தார். அந்தக் குச்சி தூரப்போய் விழுந்துவிட்டதால், இவர் கைக்கு கிடைக்காமல்  இவரால் ஓட்டத்தை தொடர முடியவில்லை. இருந்தும், சர்வதேச தடகள கூட்டமைப்பு (ஐ.ஏ.ஏ.எப்.,), தகுதி சுற்றில் வெற்றி பெறாத தென் ஆப்ரிக்க அணியை, பைனலில் ஓட, அனுமதி வழங்கியது. இதில் தென் ஆப்ரிக்காவின் ஜாகெர், டி பியர், வான் ஜில், பிஸ்டோரியஸ் அடங்கிய அணி, கடைசி இடம் (8வது) பெற்றது. இதையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் பிஸ்டோரியசின் கனவு மீண்டும் நிறைவேறாமல் போனது. ஒலிம்பிக் பைனலில் ஓடிய பெருமை மட்டும் கிடைத்தது.




உடல் உறுப்புகள் சரியாக இருந்தும் பலர் தன்னம்பிக்கையில்லாமல் வாழ்கிறார்கள். இவர் பொய்க்கால்களுடன்,  நிஜக் கால்களால் ஒடுபவர்களுடன்  ஒலிம்பிக்கில் ஒடி சாதனைப் புரிந்துள்ளது வியப்புக்குரியதே!

இரண்டு கால்களை இழந்த மனிதர், நடக்க முடியும் என்பதே இதுநாள் வரை எனக்கு வியப்பளிக்கும் செய்தி. அதிலும் ஒலிம்பிக்கில் ஓடுகிறார் என்கிற செய்தியை ஏற்றுக் கொள்ள எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. இந்தச் செய்தி, நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பது உறுதி!

.

Saturday, July 21, 2012

பில்லா டூவும், நண்பரின் அனுபவமும்!




எனது  நண்பர், கடந்து ஞாயிற்றுக் கிழமை, சென்னை தேவி பாரடைசில் பில்லா 2 பார்க்க, தனது மகன், மகள், மனைவி மற்றும் அம்மா ஆகியோருக்கு, ஐந்து டிக்கெட் புக் செய்துவிட்டு தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற பிறகுதான், தியேட்டர் நிர்வாகம் "சிறுவர்களை அனுமதிக்க முடியாது.  இது பெரியவர்களுக்கான படம்" என்று சொல்லியிருக்கிறார்கள். 
"சரி, டிக்கெட் பணத்தை திருப்பிக் கொடுங்கள்" என்று கேட்டதற்கு 
"விற்றது விற்றதுதான். நீங்கள் வேண்டுமானால் யாரிடமாவது விற்றுக் கொள்ளுங்கள்" என்றார்களாம். கடைசியாக, பிள்ளைகள் மற்றும் அம்மாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கணவன் மனைவி மட்டும் படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். பலர் சிறுவர்களுடன் அங்குமிங்கும் அலைந்தது பரிதாபமாக இருந்ததாம்.

இப்பொழுது 'A' சர்டிபிகேட் படங்களை பார்ப்பதற்கு, சிறுவர்களை கட்டாயம் அனுமதிக்க கூடாது என்று அரசு எச்சரிக்கை செய்திருப்பதாக சொன்னார்களாம். இது நல்ல விஷயம்தான்.  ஆனால், விரைவில் ஒரு விடுமுறை தினத்தில் நம்மைக் கேட்காமல் நம் வீட்டிற்கு வரப் போகிறதே? அப்பொழுது என்ன செய்வது?!
.

Friday, October 7, 2011

வேட்பாளரைத் தத்தெடுத்த அரசியல் கட்சி - நல்ல ஆரம்பம்!



கவுன்சிலர் பதவிக்கு ஒருவர் சுயேட்சையாக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.  இதற்கு முன், இவர் எந்தக அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லையாம்.   தற்பொழுது, அவரை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வேட்பாளராக அறிவித்துள்ளது. இதோ விபரம்....

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் திரு. சந்தானம் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் குறைவு!  அவரை  குரோம்பேட்டையின் 'டிராபிக் ராமசாமி' என்று சொன்னால் சரியாக இருக்கும். இவர் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களின் அலட்சியத்தை அம்பலப்படுத்துபவர். 

                                              படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.

அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளை 'புதிய தலைமுறை' பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்பு, மூன்று பக்கங்களில் வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள்.  மூன்று முறை  சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். அவரைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள  இங்கு சென்று படிக்கவும்.



ஒரு நகாராட்சியில் இரண்டு பெரியக் கட்சிகளின் வேட்பாளரும் தாதாக்கள். எப்படியோ ஒரு தாதா பதவிக்கு வருவது உறுதி.  இப்படி, பல ஊர்களில் அரசியல் கட்சிகளில் நல்ல வேட்பாளர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இனி வரும் காலங்களில், இந்த மாதிரியான சமூகப் போராளிகளை அரசியல் கட்சிகள்  வேட்பாளராக்கினால், அது தமிழகத்தை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.  அவர்களும் அதிகாரத்தின் துணைக் கொண்டு, பல நல்ல காரியங்களை செய்வார்கள் என்று நம்பாலாம். இல்லையெனில், மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை அறியவும் இது உதவும்.
எது எப்படியோ, இப்போதைக்கு தோழர்களுக்கு ஒரு 'வணக்கம்' போடலாம்!  
.

Friday, September 9, 2011

புரிந்து கொண்டேன்!

அண்மையில் டிவியில் விவேக் காமெடி ஓடிக் கொண்டிருந்தது.  நான் கவனித்தப் பொழுது போர்வெல் குறித்து   மக்களிடமும்  அதிகாரிகளிடமும் விழிப்புணர்வு வரும் வகையில் காட்சி அமைத்திருந்தார்கள். 'இன்னுமா  போர்வெல் தோண்டுபவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்?' என்ற யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். படத்தின் பெயர் தெரியவில்லை.   யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!

இந்த செய்தியைப் பார்த்துவிட்டு தொடருவோம்.



நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, வடக்கு விஜயநாராயணம் அருகே கைலாசநாதபுரம் என்ற குக்கிராமத்தில் 200 அடி ஆழ்துளை கிணறு மூடப்படாமல் அப்படியே இருந்தது.  அங்கே
விளையாடி கொண்டு இருந்த, சுதர்சன் என்ற 5 வயது சிறுவன், திடீர் என்று தடுமாறி `போர்வெல்' உள்ளே விழுந்துவிட்டான்.

அவனை உயிருடன் மீட்க்கும் முயற்சியில், சிறுவன் சிக்கி இருந்த போர்வெல் குழி அருகே ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகலமாக குழி தோண்டப்பட்டது. சிறிது தோண்டிய பின் மண் கடினமாக இருந்ததால் பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டது. 7 அடி ஆழத்திற்கு பின் கருங்கல் பாறை வந்ததால் மிஷின் மூலம் தோண்ட முடியவில்லை. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்தது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் டிரில்லர் மிஷின்கள் மூலம் குழியின் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்தது. 15 மணி நேரத்திற்கு பின் நள்ளிரவு 12.45 மணிக்கு சிறுவன் சுதர்சன் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது.



அந்தப் படத்தில் வரும் காட்சியில் விவேக் "போர்வெல் தோண்டும் முன்,  நூற்றி ஐம்பது ரூபாய்க்கு மூடி தயார் செய்து கொண்டு அதன் பிறகு தோண்டலாமே? இனி அதிகாரிகள், மூடி இருந்தால் மட்டுமே தோண்டுவதற்கு  அனுமதி கொடுக்க வேண்டும்" என்று சொல்வது மாதிரியான காட்சி அமைத்திருப்பார்கள். (நினைவில் உள்ளதை எழுதியிருக்கிறேன்)


 
'சினிமா மற்றும் பத்திரிகைகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வதில்லை' என்று என் மனதில் அடிக்கடி தோன்றுவதுண்டு. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு, 'சினிமாவைப் பார்த்து யாரும் திருந்த மாட்டார்கள்' என்பதை புரிந்து கொண்டேன். இதை ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதால் தானோ  என்னவோ, அதிகளவில் விழிப்புணர்வு செய்திகளுக்கு சினிமாத்துறையினரும் ஊடகங்களும் முக்கியத்துவம் தருவதில்லை!


இந்த செய்தி  குறித்து முழுமையாக அறிய மாலை மலர்  படிக்கவும்.


.


Tuesday, November 16, 2010

வாழும் கடவுள்...!

18/11/2010 புதிய தலைமுறை இதழில் 30 -ம் பக்கத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அதன் சுருக்கம் இதோ...

அவர், செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.


அந்தப் பத்திரிக்கையில், அவர் கைபேசி எண் கொடுக்கப் பட்டிருந்தது. அதற்கு நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். அதில், அவரை 'வாழும் கடவுள்' என்று குறிப்பிட்டிருந்தேன். உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அதில், 'வணக்கம் நண்பரே, உங்கள் மெசேஜ் கிடைத்தது. நன்றி. நீங்கள் சொல்லி இருப்பது போல் நான் ஒன்றும் கடவுள் கிடையாது. ஒரு சாதாரண மனிதன் தான். என் மன திருப்திக்காக என்னால் முடிந்ததைச் செய்கிறேன், அவ்வளவுதான். நன்றியுடன் பி.கிருஷ்ணராஜ்' என்ற அவரின் பதில் மேலும், அவரைப் பற்றிய உயர்வான என்னத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டதால், இந்தப் பதிவு.


இன்றைக்கு அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வர விரும்புகிறவர்களும், ஒரு நோட்டு அல்லது பேனாவை குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு அதைப் போட்டோ எடுத்து பிளெக்ஸ் போர்டில் போட்டு 'கல்வி வள்ளல்' என்று பட்டம் போட்டுக்கொள்ளும் காலத்தில், ஒரு தனிமனிதர் இந்த மாதிரி கல்விப் பணிக்காக தனது சேமிப்பை பிரதிபலன் பாராது செலவழித்துவருபவர் 'வாழும் கடவுள்' தானே? நீங்களே சொல்லுங்கள்.

அவரின் கைபேசி எண்:9790531456. முடிந்தால் நீங்களும் இவரது சேவையைப் பாராட்டலாமே!

.