Showing posts with label ஆலோசனை. Show all posts
Showing posts with label ஆலோசனை. Show all posts

Tuesday, May 29, 2012

உங்கள் பள்ளியின் தேர்வு முடிவுகள் & மாணவர்களின் தர வரிசை அறிய வேண்டுமா?

நாம் படித்தப் பள்ளி இப்பொழுது எப்படி உள்ளது? மாணவர்கள் எப்படி மதிப்பெண் வாங்குகிறார்கள்? முதல் மதிப்பெண் எவ்வளவு? எத்தனை சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்? போன்ற கேள்விகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டு அறிந்துக் கொள்வோம்.

இப்படி அறிந்துக் கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் இணையதளம் உள்ளது. அப்புறமென்ன  இனி உங்கள் பள்ளியைப் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்.


நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!


.

Tuesday, December 13, 2011

விட வேண்டாம் இடைவெளி...!


கடந்த இரண்டு வருடங்களாக நானும் பதிவெழுதி வருகிறேன். இப்பொழுது எனக்கு வந்துள்ள சோர்வு, இதற்கு முன்பு வந்ததில்லை. எவ்வளவோ வேலைகள் இருந்த போதும் தொடர்சியாக எழுத வேண்டும் என்கிற ஒரு விதமான எண்ணம் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும். ஆனால், இப்பொழுது அது 'ஆப்சென்ட்' டாகி விட்டது. இதற்கு காரணமாக நான் நினைப்பது, கடந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு காரணங்களால் பிளாக் பக்கம் வராமல் 'விடுப்பில்' சென்றுவிட்டேன்.





பதிவெழுத முக்கியத் தகுதியே எதையாவது தொடர்ச்சியாக எழுத வேண்டும். இல்லையெனில், எழுதுவதிலிருந்து விலகி விடுவோம். பிரபலமான பதிவர்கள்கூட, சிறு இடைவெளிக்குப் பிறகு, எழுதுவதை தவிர்த்து விடுகிறார்கள் அல்லது  மீண்டும் அவர்களால் பழைய மாதிரி முழு திறனோடு எழுத முடியாமல் சிரமப் படுவதை கூர்ந்து கவனித்தால் அறிந்துக் கொள்ளலாம்.


 சரி, எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படி ஒரு நிலை வருமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிவெழுதுவது என்பது சும்மா ஒரு பொழுது போக்குக்காக எழுதுவது அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்காக எழுதுவது. பதிவெழுதாமல் இருக்கிற காலத்தில் பொழுது போக்குவதற்கோ அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்கோ வேறு வழியைக் கண்டுப் பிடித்து விடுவோம். அதனால், பதிவெழுதும் ஆர்வம் குறைந்து விடுகிறது. பதிவு எழுதாமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் இழப்பு வந்துவிடப் போவதில்லை. இதுவே, இதில் வருமானம் கிடைப்பதாக இருந்தால் இப்படி ஆர்வம் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு.


இனி, பதிவுலக நண்பர்கள் நீண்ட விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும். நானும் என்னென்னவோ எழுதிப் பார்க்கிறேன் முன்ன மாதிரி சிந்தனை(?!) வர மாட்டேங்குது:-))))!

இதுவும் பதிவருக்கான எனது அனுபவ ஆலோசனை...!

 

பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!





படம் உதவி: கூகிள்.

Monday, July 4, 2011

பொறியியல் கலந்தாய்வு - ஓர் அவசர ஆலோசனை!

ஜூலை முதல் மற்றும் இரண்டாம் தேதி நடந்த மருத்துவ கலந்தாய்வில் அழைக்கப்பட்ட அனைவரும் (இரண்டு மூன்று பேரைத் தவிர்த்து) மருத்துவக் கல்வி பயில இடம் பிடித்துள்ளார்கள். அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். இதில் எத்தனைப் பேர் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளார்கள் என்பது இப்பொழுது தெரியாது. இவர்களில் பெரும் பகுதியினர் பொறியியல் படிப்பிலும், தரப் பட்டியலில் முன்னிலையில் இருப்பார்கள் என்பதை அறிவோம். இன்று மருத்துவக்கல்வியைத் தேர்ந்தெடுத்தவர்களில் எத்தனைப்பேர், இதை உதறிவிட்டு பொறியியல் பக்கம் செல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. என்னுடைய கணிப்பு, ஒரு சிலர் மட்டுமே பொறியியல் பக்கம் செல்வார்கள் என்று நம்புகிறேன்.




மருத்துவக்கல்வியைப் பொறுத்துவரை கல்லூரிகளும் இடங்களும் குறைவு. மேலும், எம்.பி.பி.எஸ். என்ற ஒரே படிப்புதான். அதனால், கலந்தாய்வு அவ்வளவு சிக்கலானது கிடையாது. ஆனால், எஞ்சினியரிங் படிப்பு அப்படிக் கிடையாது. இடங்கள், கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் ஏராளம். மேலும், எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக சிக்கலான ஒன்று. இதில் மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம், என்ன படிக்கப் போகிறோம், என்ன மாதிரி வேலையில் சேர வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் தெளிந்த அறிவு இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

இங்கு ஒரு செய்தியை சொல்லியாகவேண்டும். எனக்குத் தெரிந்த ஒருவர், படிப்பறிவும் குறைவு, அவ்வளவாக பொருளாதாரமும் இல்லாதவர். அவர் மகன் +2 -வில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். அந்த மாணவன் தற்பொழுது கணினி அறிவியல் படாப்பிரிவில் பொறியியல் படித்து வருகிறார். அந்த மாணவனின் தந்தையை அண்மையில் சந்தித்தேன். அவரிடம், மகனின் படிப்புக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்,"சரியா படிக்க மாட்டேங்கிறான், அவனுக்கு பிடிச்ச படிப்பில் சேர்த்திருந்தால் நன்றாக படிச்சிருப்பான்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது, கவுன்சிலிங் அழைத்துச் சென்ற உறவினர், அந்த மாணவனின் விருப்பமான மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு பதிலாக கம்பியூட்டர் எடுக்க சொல்லியிருக்கிறார். மாணவனும் அந்த நேரத்தில் தலையாட்டிவிட்டு, பிறகு எனக்கு அந்தப் படிப்பில் விருப்பமில்லை என்று சொன்னால், யார் வாழ்க்கை வீணாகிறது பாருங்கள்.

சரி, விரும்பாத பாடமாக இருந்தாலும் சேர்ந்து விட்டோம். இனி சிறப்பாக படித்து, நாமும் நம் குடும்பமும் முன்னேற பாடுபடுவோம் என்று நினைக்காமல், சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு காரணம், தனக்கு பிடிக்காத படிப்பு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இதில், சொத்தை விற்று, வங்கியில் கடன் வாங்கி கஷ்டப்படும் அந்த அப்பாவி தந்தையின் பங்கு என்ன? ஒரு கிராமத்தில் ஏழை வீட்டில் பிறந்த மாணவனே இப்படி நடந்துக் கொள்ளும் பொழுது, நடுத்தர மற்றும் பணக்கார வீட்டு பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

தட்டுத் தவறி கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் சேரவேண்டும், எந்தப் பாடப் பிரிவில் சேரவேண்டும் என்று ஆலோசனை சொல்லி விடாதீர்கள். அப்புறம் நீங்கள்தான் அவர்களின் படிப்பிற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்றவர்கள் சிறப்பாகப் படிப்பதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு காரணம், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கே, அதாங்க முகநூல்(facebook), செல் போன் மூலம் நேரம் போதவில்லை. சினிமா, பர்த்டே பார்ட்டி (நாற்பது மாணவர்கள் வகுப்பில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். வருடத்தில் நாற்பது நாள் பர்த்டே பார்ட்டிக் கொண்டாடுவதில் போய்விடுகிறது) இவை எல்லாவற்றையும் விட ஆன்லையன் கேம்ஸ் அதிக நேரத்தை விழிங்கி விடுகிறது. இவையெல்லாம் போக நேரம் கிடைத்தால் படிப்பு என்கிற சூழ்நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய தரப்பை நியாயப்படுத்த ஒரு காரணம் தேடுவார்கள். அந்தக் காரணம் எனக்குப் பிடிக்காதப் படிப்பு அல்லது கல்லூரி என்பதாக இருக்கும்.

அது சரி, "எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம், எந்தக் கல்லூரி நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்" என்று யாராவது கேட்டால், முதலில் உங்கள் விருப்பம் என்னவென்று கேளுங்கள் அதற்கு தகுந்தபடி ஆலோசனை சொன்னால், நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் தினந்தோறும் கவுன்சிலிங் பற்றிய விபரங்களைப் பார்த்து வந்தால், அவர்களுக்கு வரும் ஆண்டில் குழப்பங்கள் குறையலாம். எனக்குத் தெறித்த 'நிறைய படித்த' நண்பர் என்னிடம் கேட்டார், "கட் ஆப் மதிப்பெண் எப்படிக் கணக்கிடுகிறார்கள்?" இவராவது பரவாயில்லை. எனது இன்னொரு நண்பர் சொன்னார், "அப்பிளிகேஷன் நம்பர் படியும், ரேங் போடுவார்கள்" என்றார்.

படம் உதவி: கூகிள்.

Tuesday, March 1, 2011

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!




தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கவனத்திற்கு...!

தேர்வுகள் துவங்கிவிட்டன, இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று இங்கு பார்ப்போம்.

மாணவர்களுக்கு....

தேர்வுக்கு செல்லும் முன் எழுத்துப் பொருட்கள், நுழைவுச் சீட்டு போன்றவற்றை சரிபார்த்து எடுத்துச் செல்லவும். பேருந்தில் செல்வோர் பஸ் பாஸ் மற்றும் சரியான சில்லறை கொண்டு செல்லவும். தனியாக வாகனம் ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவும். குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வுக் கூடத்தை அடைந்துவிடவும். கடைசி நேரத்தில் மற்ற மாணவர்களின் "அதைப் படித்தாயா, இதைப் படித்தாயா?" போன்ற கேள்விகள் உங்களின் மனநிலையைப் பதிக்கச் செய்யும். அப்படியான சூழ்நிலையைத் தவிர்க்கவும்.

தேர்வில் ஓரிரு கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லை என்றால் உடனே 'சென்டம்' போச்சே என்று கலங்க வேண்டாம். அந்தக் கேள்விகளைத் தவிர்த்து மற்றக் கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு கடைசியாக மீண்டும் அந்தக் கேள்வியைப் படியுங்கள் நிச்சயம் விடையளிப்பீர்கள். இங்கு முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் சில கேள்விகள் அச்சுப் பிழை மற்றும் தவறுதலாக இடம் பெற்றிருக்கும், அந்த மாதிரியான கேள்விகளை கடைசியாக பதிலெழுத முயற்சி செய்யவும். முதலில் எழுத முற்பட்டு நேரத்தை வீனடிப்பதோடு மனக்கஷ்டப் படவேண்டாம். இம் மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்கி விடுவார்கள். அப்படியே ஓரிரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விட்டுவிட்டாலும், வீட்டிற்கு வந்தபிறகும் அதையே நினைத்து வருந்தாமல், அடுத்து வரும் தேர்வுக்கு இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராகுங்கள்.

பெற்றோர்கள் கவனத்திற்கு...

நல்ல உணவு, வீட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேர்வு முடிந்து வந்த பிள்ளைகளிடம் "எத்தனை மார்க் வரும், எந்தக் கேள்வியை விட்டாய்?" என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். "நன்றாக எழுதினியா?" என்பன போன்ற கேள்விகள் மட்டும் போதுமானது. அப்படியே சரியாக எழுதவில்லை என்றாலும் உங்கள் வருத்தத்தை பிள்ளைகளிடம் காட்டாமல் அடுத்து வரும் தேர்வை சிறப்பாக எழுதுவாய் என்று நம்பிக்கையளித்து உற்சாகப்படுத்துங்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு...

தேர்வு எழுதும் பிள்ளைகள் உள்ள வீட்டிற்கு, இந்த சமயத்தில் விருந்தாளியாகாச் செல்வதை தவிர்க்கவும்.தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவிக்கலாம். எஸ்.எம்.எஸ். ல் வாழ்த்து அனுப்பினால் போதுமானது. ஏனெனில், உறவு மற்றும் நட்பு என்று பலரும் தேர்வு நாளன்று தொலைபேசியில் பேசினாலும் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற வாழ்த்துவோம்.

.