Showing posts with label அனுபவம்.. Show all posts
Showing posts with label அனுபவம்.. Show all posts

Friday, October 2, 2020

குற்றவாளிகளும் இன்றைய சமூகமும்!

இன்று காலையில் நீண்ட நாள் கழித்து, நண்பர் ஒருவர் தொடர்புக்கொண்டார்.
பேச்சு பொதுவாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, தற்சமயம் நான் அறிந்த செய்தி குறித்து விசாரித்தேன். 
அந்த செய்தியில் குற்றவாளியாக கருதப்படும் நபர் தனக்கு நண்பர் என்றார். எனக்கு நேரமில்லாததால் மேற்கொண்டு பேசவில்லை.

சுமார், இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியிடம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது, நான் அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு நபரின் பெயரைச்சொல்லி அவர் எனக்கு உறவினர் என்றேன்.
அவர் உடனடியாக, "நாம் இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். நீங்களும் அவரை உறவினர் என்று அறிமுகம் செய்வதற்கோ அல்லது நானும், ஆமாம் அவர் எனது அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்று சொல்லிக்கொள்வதற்கோ, அவர் தகுதியில்லாதவர். அந்த அறிமுகம் தேவையில்லை!" என்றார்.

இந்த சமூகம் குற்றவாளிகளை அங்கீகரிக்க துவங்கிவிட்டதின் அடையாளம்தான்,
குற்றச்செயலில் ஈடுப்பட்டவரை நண்பர் என்று ஏற்றுக்கொள்ளும் நிலை. 

இன்னும் சிலர், "அவன் மோசமானவன் தான். ஆனால், என்னிடம் 'வச்சிக்க' மாட்டான்" என்பார்கள். ஊரிலுள்ள அனைவரைப் பற்றியும் குறை சொல்லும் நபர், நம்மைப் பற்றி பிறரிடம் குறை சொல்ல மாட்டார் என்று நம்புவதற்கு சமமானதுதான், மேலே உள்ள நண்பரின் நம்பிக்கையும்.

காவல்துறையும் நீதித்துறையும் மட்டுமே குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கட்டுப்படுத்தவும் முடியும் என்று கருதிவிட முடியாது. அதில், இந்த சமூகத்திற்கும் பொறுப்புள்ளது.

 சில வருடங்களுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவி ரோட்டில் செல்லும்போது, பலரது முன்னிலையில், கணவர் வெட்டி கொல்லப்படுகிறார். பாதிக்கப்பட்ட மனைவி, பின்பு சொல்லியதாக பத்திரிகையில் வந்த செய்தி, "அந்த இடத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் ஆளுக்கொரு கல்லெடுத்து வீசியிருந்தால், இந்நேரம் எனது கணவர் உயிரோடு இருந்திருப்பார்" 
இதுதான் சமூகம் குறித்தான பார்வை.

 நமது சந்ததியினர் பாதுகாப்புடன் வாழ்வதற்கு, அகிம்சையை போதித்த மகாத்மா பிறந்த நாளில், 'குற்றவாளிகளுக்கு துணை போகமாட்டோம்' என்று உறுதி ஏற்போம்!

Saturday, August 1, 2020

தொலைபேசியும் நானும்...!

நேரமில்லாததாலும், உடல்நிலை ஒத்துழைக்காததாலும்(தொடர்ச்சியாகப்பேசினால் காதில் இரைச்சல் வருகிறது) உறவு மற்றும் நட்புகளிடம் தொலைபேசியில் பேசுவது குறைந்துவிட்டது.

நம் ஒவ்வொருவருக்கும், தொலைபேசியில் பேசுமளவுக்கு குறைந்தது 300 உறவினர்கள் மற்றும் நண்பர்களாவது இருப்பார்கள். 
தினம்தோரும் ஒருவரிடம் பேசினால்கூட, மீண்டும் பேசுவதற்கு குறைந்தது ஒரு வருடமாகும். 

இந்தக்கணக்கு புரியாமல், நாம் பேசுவதில்லை என்று சிலரும், நம்மிடம் சிலர் பேசுவதில்லையென்று நாமும் நினைத்துக்கொள்கிறோம். 

வேலையெல்லாம் முடித்துவிட்டு
ஓய்வாக, ஒருவரிடம் பேசுவோமென்று நினைத்து, அவர் இப்பொழுது நம் அழைப்பை ஏற்கும் நிலையில் இருப்பாரா என்று யோசித்து, அழைத்தால் அவர் 'பிசி'யாகவோ அல்லது எடுக்காமலோ போய்விடுவார். 
நாமும் உடனே அடுத்தடுத்த நபர்களுக்கு ஃபோன் செய்து கடைசியாக ஒருவர் எடுத்துவிட்டால் நம்மால், தொடர்ந்து பேச முடியாத அளவிற்கு, நாம் முன்னே அழைத்தவர்களின் அழைப்பு வந்துக்கொண்டேயிருக்கும். பேசிக்கொண்டிருப்பவரிடமும் சரியாக பேச முடியாது. 

எனவே, இதுபோன்ற சங்கடங்களை தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு பேருக்கு ஃபோன் செய்யலாம். அப்படி, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லையென்றால், நாம் வேறு வேலைப்பார்க்கலாம். அவசியமான செய்தியென்றால் எஸ்எம்எஸ்-ல் விபரம் தெரிவிக்கலாம். நான் அனுபவத்தில் கற்றுக்கொண்டது.

Tuesday, December 13, 2011

விட வேண்டாம் இடைவெளி...!


கடந்த இரண்டு வருடங்களாக நானும் பதிவெழுதி வருகிறேன். இப்பொழுது எனக்கு வந்துள்ள சோர்வு, இதற்கு முன்பு வந்ததில்லை. எவ்வளவோ வேலைகள் இருந்த போதும் தொடர்சியாக எழுத வேண்டும் என்கிற ஒரு விதமான எண்ணம் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும். ஆனால், இப்பொழுது அது 'ஆப்சென்ட்' டாகி விட்டது. இதற்கு காரணமாக நான் நினைப்பது, கடந்த நவம்பர் மாதத்தில் பல்வேறு காரணங்களால் பிளாக் பக்கம் வராமல் 'விடுப்பில்' சென்றுவிட்டேன்.





பதிவெழுத முக்கியத் தகுதியே எதையாவது தொடர்ச்சியாக எழுத வேண்டும். இல்லையெனில், எழுதுவதிலிருந்து விலகி விடுவோம். பிரபலமான பதிவர்கள்கூட, சிறு இடைவெளிக்குப் பிறகு, எழுதுவதை தவிர்த்து விடுகிறார்கள் அல்லது  மீண்டும் அவர்களால் பழைய மாதிரி முழு திறனோடு எழுத முடியாமல் சிரமப் படுவதை கூர்ந்து கவனித்தால் அறிந்துக் கொள்ளலாம்.


 சரி, எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படி ஒரு நிலை வருமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பதிவெழுதுவது என்பது சும்மா ஒரு பொழுது போக்குக்காக எழுதுவது அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்காக எழுதுவது. பதிவெழுதாமல் இருக்கிற காலத்தில் பொழுது போக்குவதற்கோ அல்லது நாம் நினைப்பதை பிறரிடம் சொல்வதற்கோ வேறு வழியைக் கண்டுப் பிடித்து விடுவோம். அதனால், பதிவெழுதும் ஆர்வம் குறைந்து விடுகிறது. பதிவு எழுதாமல் இருப்பதால் நமக்கு ஒன்றும் இழப்பு வந்துவிடப் போவதில்லை. இதுவே, இதில் வருமானம் கிடைப்பதாக இருந்தால் இப்படி ஆர்வம் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு.


இனி, பதிவுலக நண்பர்கள் நீண்ட விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும். நானும் என்னென்னவோ எழுதிப் பார்க்கிறேன் முன்ன மாதிரி சிந்தனை(?!) வர மாட்டேங்குது:-))))!

இதுவும் பதிவருக்கான எனது அனுபவ ஆலோசனை...!

 

பதிவை எழுதி டிராப்ட்-ல் வைத்திருப்போருக்கு - ஓர் எச்சரிக்கை!





படம் உதவி: கூகிள்.

Thursday, October 27, 2011

தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் வெற்றிப் பெறலாம்...?!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவு  மக்கள் போட்டியில் குதித்தனர். இதற்கு காரணம் அரசியல் கட்சிகள்  தனியாக நின்றதும், அரசியலில் பங்கேற்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டதுதான். நல்ல விஷயம் வரவேற்போம். ஆனால், போட்டியில் இறங்குபவர்களில் பலர், பணம் கொடுத்து வெற்றியடைந்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். பெரும்பகுதியினர்  முதலீடு செய்து லாபம் பார்க்கும் தொழிலாக தேர்தலைப் பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்த மாதிரி நபர்கள் அதிகளவில் வெற்றியடையவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம்.



இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் கட்சி அதிகளவில் வெற்றிப் பெற்றது என்று ஒரே வரியில் முடித்துவிட முடியாது. சுயேட்சைகளின் வெற்றி குறிப்பிடும் படியாகவும் இருந்தது. தனி நபர் செல்வாக்கு அவசியம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
சரி, தனி நபர் செல்வாக்கு என்றால் என்ன?  ஊரில் உங்கள் பெயர் சொன்னால் எல்லோருக்கும் தெரியும் என்றால், அது செல்வாக்காக இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உங்களுக்கு மக்கள் மீது அக்கறை கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு நபரிடம்  நீங்கள் நெருங்கி பழக வேண்டும். அவர்களின் வீட்டு சுக துக்கங்களில்  பங்கெடுக்க வேண்டும். தாராளமாக மொய் எழுத வேண்டும்.இதைத் தான் இன்றைய நிலையில் மக்கள் எதிர்ப் பார்க்கிறார்கள். இந்த மாதிரியான வேட்பாளர்களே வெற்றியும் பெறுகிறார்கள்.



இதையெல்லாம் செய்யாமல், நீங்கள், 'தெரு விளக்கு எரியவில்லை, குப்பைகள் அள்ளப்படவில்லை,  ரோடு சரியாகப் போடப்படவில்லை, அரசு அலுவலங்கள் சரியாக இயங்கவில்லை' என்று புகார் தெரிவிப்பீர்கள். அதனால், ஒப்பந்தக்காரர் உங்களைக் கண்டு பயந்து சரியாக ரோடு போடலாம். அரசு அலுவலர்கள் உங்களுக்கு பயந்து சரியாக வேலை செய்யலாம். ரேஷன் கடை சிறப்பாக செயல்படலாம். இவ்வளவு மக்கள் நலப் பணியில் ஈடுபடுகிறோமே, ஏன் நாம் தேர்தலில் நிற்கக் கூடாது? என்று நீங்கள் நினைத்தால் தோல்விதான் உங்களுக்கு பரிசாகக் கிடைக்கும். எனவே, இன்றைய நிலையில் இவையெல்லாம் மக்கள் நலப் பணியாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை என்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்காக இவையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இதனுடன் சேர்த்து மக்களோடு மக்களாக சேர்ந்து பழகவும் கற்றுக் கொள்ள  வேண்டும். உங்களுடைய போராட்டத்தில் மக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.  அப்படி செய்தால் தான் உங்களால் வெற்றிப் பெற முடியும்.


நல்லது செய்வதுதான் உங்கள் நோக்கம் என்றால் இன்றே மக்களோடு மக்களாக கலந்து விடுங்கள். வரும் தேர்தலில் யார், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்  கொண்டு உங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பது உறுதி.

.

Thursday, October 20, 2011

புகழ் சோறு போடுமா?!

ஒவ்வொருவருக்கும்  தன்னுடைய பெயர் சொன்னால் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். அப்படி புகழ் அடைவதற்கு தன்னால் முடிந்த வரையில் தனக்குத் தெரிந்த வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.  புகழ்ப் பெற்றவர்கள் வாழ்வில் கடைசி வரை  மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.


புகழ்ப்  பெற்ற மனிதர்களில்  சிலர் கடைசிக் காலத்தில் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் நிகழ்வுகளை  நினைத்தால் 'புகழுக்கும் வாழ்விற்கும் சம்பந்தமில்லை' என்று தான் தோன்றுகிறது.


கடந்த வருடம்   நடிகை காஞ்சனா கஷ்டப்படுவதாக  பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இன்று மாலைமலர் பத்திரிகையில் நடிகர் லூஸ் மோகன் பற்றி வந்துள்ள செய்தியும் என்னை வருத்தப்பட வைத்துள்ளது. அவரது மகன் அவருக்கு சாப்பாடு போடுவதில்லை என்று போலிஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். செய்தியைப் படிக்க இங்கே செல்லவும்.


எனக்கு தெரிந்து, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பெற்றோரை நல்ல மாதிரி கவனிக்கிறார்கள். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களை நல்ல முறையில் பாது காக்கிறார்கள். ஆனால்,  வசதிப் படைத்த குடும்பங்களில்தான், பெரும்பகுதி பெற்றோரை கண்டு கொள்ளாமல், இப்படி தவிக்க விடும்   நிலை உள்ளது.


'நமக்கும் வயதாகும், முதுமையும் வரும்' என்று ஏன் இவர்களுக்கு தெரிவதில்லை!



Thursday, October 13, 2011

பிரபல பத்திரிக்கையும் நானும்!

 அண்மையில், நான் ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவில் தொடர்புடைய செய்தி குறித்து  பிரபல பத்திரிகையில் வந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


கடந்த 10/10/11 அன்று வெளிவந்த தினமலர் நாளிதழில் குரோம்பேட்டை  திரு வி.சந்தானம் அவர்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள். இதோ..





                                           
                                           படத்தைக் கிளிக் செய்து படிக்கவும்.


நான்  எழுதிய பதிவை படிக்க இங்கே செல்லவும்.


பி.கு. பெருமைப்பட்டுக் கொள்வதற்காக அல்ல  இந்தப் பதிவு.  இது மாதிரியான செய்திகள் நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்பதற்காக மட்டுமே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்!

.

Friday, September 2, 2011

செத்தப் பாம்பை அடிக்காதீங்க!

கடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும்  பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே!  ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி  தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற செய்திதான் அது. இதிலென்ன இருக்கிறது, தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கில் போடுவதுதானே சரி என்பவர்கள் மட்டும் அவசியம்  தொடர்ந்து  படியுங்கள்.

 இங்கு  அவர்களைக் குற்றமற்றவர்கள் என்று விவாதிப்பதற்கு  நான் முயலவில்லை. சராசரி மனிதனின்  மனதில்  இந்த விவகாரம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


  தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம் இதோ..

''தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.'

-  இப்படிக்கு தோழர் செங்கொடி.


செங்கொடி பற்றி மக்கள் மன்ற அமைப்பாளர்கள் "சிறு வயது முதல் தங்கள் அமைப்பில் இணைந்து, ஈழத் தமிழர் போராட்டம், காஞ்சி மக்கள் போராட்டம் என பலவற்றில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்" என்கின்றனர். 

இப்படி பிறர் துன்பத்தை தன் துன்பமாகப் பார்க்கும் பெண் இன்று நம்மிடையே இல்லை. இவரின் செயலை நான் நியாப்படுத்தவில்லை. ஆனால், இவரின் நல்ல உள்ளத்தை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு அனுப்பி விட்டு பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவரின் மனநிலையும், அவர்களின் குடும்பத்தாரின் மனநிலையும்,  ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அதனால் தான் மேலே குறிப்பிட்ட சோகம் என்னை வாட்டி வதைத்தது. குறிப்பாக, சுனாமி  நாகையை தாக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்த பொழுது, பகல் முழுவதும் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுவிட்டு, இரவில் தொலைக்காட்சியில் அந்த காட்சியைக் காணும் பொழுது என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்தோடும். அது மாதிரியான நிலைக்கு அற்புதம்மாளின் கெஞ்சலும் செங்கொடியின் மரணமும்  மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்தின் எழுச்சியும் என்னை இட்டுச் சென்றுள்ளது.

பொதுவாகவே வழக்கறிஞர்கள்  போராட்டம் செய்வதை நான் விரும்புவதில்லை. ஏனெனில், ஏன்  இவர்கள் போராடுகிறார்கள்.  நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டியது தானே? என்ற கேள்வி என்னுள் எழுவதால். ஆனால், அவர்கள் இப்பொழுது நடத்தி வருகின்ற போராட்டம் நியாயமானதாக தோன்றியது.


 சென்னை  உயர் நீதிமன்றத்தின்  எட்டு வாரத் தடையும், தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் பார்க்கும் பொழுது மூவருக்கும் தண்டனைக் குறைப்பு கிடைக்கும் போல் தோன்றுகிறது.
சரி, அப்படி என்ன இந்த மூன்று பேரின் உயிரைக்காப்பற்ற  இப்படி அக்கறையாக எல்லோரும் போராடுகிறார்களே என்ன காரணம்? என்று சிந்தித்தால் கிடைப்பது... 




இந்தப் படுகொலைக்கு காராணமாக சொல்லப்படும் விடுதலைப்புலி அமைப்பு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதும். முக்கிய குற்றவாளிகள் படுகொலை நடந்த சமயத்திலேயே கொல்லப்பட்டு விட்டதும். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதும். சம்பத்தப்பட்டவர்கள் பல வருடங்களாக   சிறையில் உள்ளதும். குற்றவாளிள் முழு அளவில் தண்டனைப் பெற்று  விட்டதாகவே மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.




இப்பொழுது, இந்த கொலை சம்பவத்தில் விசரிக்கப்பட்டவர்களும் விசாரணை செய்தவர்களும் வெளியுடும் தகவல்களும். மேலும் , ராஜபட்சேவால்  பல்லாயிரக் கணக்கான  ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதும்.  பல்லாயிரம் பேர் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடப்பதும்.  இப்படி பலவாறாக துன்பத்தை கண்டு  துவண்டு போயிருக்கும் தமிழர்களின் மனதில், இந்த மூவரின் உயிர்  மீதும் கருணை ஏற்படுவது இயற்கையே. 

 



எங்கள் கிராமத்தில் வயல்களுக்கு, அதாவது காடுகளுக்கு நடுவே வீடுகள் அமைத்திருக்கும். எங்கள் வீடும் அப்படித்தான். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டை சுற்றி பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எங்கள் தாத்தா பாம்பைக் கண்டால் அடித்துக் கொன்று விடுவார். அப்படி அவர் பாம்பு அடிப்பதை, ஒருவித பயத்தோடு  பார்த்துக் கொண்டிருக்கும் நானும் எனது தம்பிகளும், அவர் அடித்துப் போட்டப் பாம்பை  ஆளுக்கொரு குச்சியை வைத்துக் கொண்டு 
அடிப்போம். அப்படி நாங்கள் அடிப்பதைப் பார்த்து எங்கள் தாத்தா சொல்லவார். " செத்தப் பாம்பை அடிக்காதீங்க!" என்பார். செத்தப் பாம்பின் மீது கருணையின் காரணமாகவோ, அல்லது  செத்தப் பாம்பிடம் உனது வீரத்தைக் காட்டக் கூடாது என்பதற்காகவோ  சொல்லியிருப்பாரா  என்று  அதன் அர்த்தம் இன்றளவும் புரியவில்லை. 

எது எப்படியோ, 'செத்தப் பாம்பை அடிப்பது தர்மம் அல்ல!' என்பது மட்டும் புரிகிறது!

.

Monday, July 4, 2011

பொறியியல் கலந்தாய்வு - ஓர் அவசர ஆலோசனை!

ஜூலை முதல் மற்றும் இரண்டாம் தேதி நடந்த மருத்துவ கலந்தாய்வில் அழைக்கப்பட்ட அனைவரும் (இரண்டு மூன்று பேரைத் தவிர்த்து) மருத்துவக் கல்வி பயில இடம் பிடித்துள்ளார்கள். அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். இதில் எத்தனைப் பேர் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளார்கள் என்பது இப்பொழுது தெரியாது. இவர்களில் பெரும் பகுதியினர் பொறியியல் படிப்பிலும், தரப் பட்டியலில் முன்னிலையில் இருப்பார்கள் என்பதை அறிவோம். இன்று மருத்துவக்கல்வியைத் தேர்ந்தெடுத்தவர்களில் எத்தனைப்பேர், இதை உதறிவிட்டு பொறியியல் பக்கம் செல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. என்னுடைய கணிப்பு, ஒரு சிலர் மட்டுமே பொறியியல் பக்கம் செல்வார்கள் என்று நம்புகிறேன்.




மருத்துவக்கல்வியைப் பொறுத்துவரை கல்லூரிகளும் இடங்களும் குறைவு. மேலும், எம்.பி.பி.எஸ். என்ற ஒரே படிப்புதான். அதனால், கலந்தாய்வு அவ்வளவு சிக்கலானது கிடையாது. ஆனால், எஞ்சினியரிங் படிப்பு அப்படிக் கிடையாது. இடங்கள், கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் ஏராளம். மேலும், எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக சிக்கலான ஒன்று. இதில் மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம், என்ன படிக்கப் போகிறோம், என்ன மாதிரி வேலையில் சேர வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் தெளிந்த அறிவு இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

இங்கு ஒரு செய்தியை சொல்லியாகவேண்டும். எனக்குத் தெரிந்த ஒருவர், படிப்பறிவும் குறைவு, அவ்வளவாக பொருளாதாரமும் இல்லாதவர். அவர் மகன் +2 -வில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். அந்த மாணவன் தற்பொழுது கணினி அறிவியல் படாப்பிரிவில் பொறியியல் படித்து வருகிறார். அந்த மாணவனின் தந்தையை அண்மையில் சந்தித்தேன். அவரிடம், மகனின் படிப்புக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்,"சரியா படிக்க மாட்டேங்கிறான், அவனுக்கு பிடிச்ச படிப்பில் சேர்த்திருந்தால் நன்றாக படிச்சிருப்பான்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது, கவுன்சிலிங் அழைத்துச் சென்ற உறவினர், அந்த மாணவனின் விருப்பமான மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு பதிலாக கம்பியூட்டர் எடுக்க சொல்லியிருக்கிறார். மாணவனும் அந்த நேரத்தில் தலையாட்டிவிட்டு, பிறகு எனக்கு அந்தப் படிப்பில் விருப்பமில்லை என்று சொன்னால், யார் வாழ்க்கை வீணாகிறது பாருங்கள்.

சரி, விரும்பாத பாடமாக இருந்தாலும் சேர்ந்து விட்டோம். இனி சிறப்பாக படித்து, நாமும் நம் குடும்பமும் முன்னேற பாடுபடுவோம் என்று நினைக்காமல், சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு காரணம், தனக்கு பிடிக்காத படிப்பு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இதில், சொத்தை விற்று, வங்கியில் கடன் வாங்கி கஷ்டப்படும் அந்த அப்பாவி தந்தையின் பங்கு என்ன? ஒரு கிராமத்தில் ஏழை வீட்டில் பிறந்த மாணவனே இப்படி நடந்துக் கொள்ளும் பொழுது, நடுத்தர மற்றும் பணக்கார வீட்டு பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

தட்டுத் தவறி கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் சேரவேண்டும், எந்தப் பாடப் பிரிவில் சேரவேண்டும் என்று ஆலோசனை சொல்லி விடாதீர்கள். அப்புறம் நீங்கள்தான் அவர்களின் படிப்பிற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்றவர்கள் சிறப்பாகப் படிப்பதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு காரணம், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கே, அதாங்க முகநூல்(facebook), செல் போன் மூலம் நேரம் போதவில்லை. சினிமா, பர்த்டே பார்ட்டி (நாற்பது மாணவர்கள் வகுப்பில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். வருடத்தில் நாற்பது நாள் பர்த்டே பார்ட்டிக் கொண்டாடுவதில் போய்விடுகிறது) இவை எல்லாவற்றையும் விட ஆன்லையன் கேம்ஸ் அதிக நேரத்தை விழிங்கி விடுகிறது. இவையெல்லாம் போக நேரம் கிடைத்தால் படிப்பு என்கிற சூழ்நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய தரப்பை நியாயப்படுத்த ஒரு காரணம் தேடுவார்கள். அந்தக் காரணம் எனக்குப் பிடிக்காதப் படிப்பு அல்லது கல்லூரி என்பதாக இருக்கும்.

அது சரி, "எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம், எந்தக் கல்லூரி நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்" என்று யாராவது கேட்டால், முதலில் உங்கள் விருப்பம் என்னவென்று கேளுங்கள் அதற்கு தகுந்தபடி ஆலோசனை சொன்னால், நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் தினந்தோறும் கவுன்சிலிங் பற்றிய விபரங்களைப் பார்த்து வந்தால், அவர்களுக்கு வரும் ஆண்டில் குழப்பங்கள் குறையலாம். எனக்குத் தெறித்த 'நிறைய படித்த' நண்பர் என்னிடம் கேட்டார், "கட் ஆப் மதிப்பெண் எப்படிக் கணக்கிடுகிறார்கள்?" இவராவது பரவாயில்லை. எனது இன்னொரு நண்பர் சொன்னார், "அப்பிளிகேஷன் நம்பர் படியும், ரேங் போடுவார்கள்" என்றார்.

படம் உதவி: கூகிள்.

Wednesday, May 25, 2011

கல்லூரியில் சேரும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!



+2 தேர்வு முடிவு வந்து எல்லோரும் கல்லூரியில் சேரும் நேரம். இப்பொழுது, மாணவர்களும் பெற்றோரும் மேற்கொண்டு எந்த படிப்பில் சேர்வது என்பதில் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். கடைசியில் ஒருவாழியாக தனக்குப் பிடித்த, தனது பெற்றோருக்குப் பிடித்த அல்லது தனது நண்பர்கள் சேருகின்ற ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து விடுவார்கள். அப்பாடா, ஒரு வழியா பிள்ளையை கல்லூரியில் சேர்த்தாகிவிட்டது. இனி கவலையில்லை. பணம் மட்டும் கட்டினால் போதும் என்று பெற்றோர்கள் நினைத்தால். அப்பொழுதான் வரும் பிரச்சினை. கல்லூரியிலிருந்து வந்து "எனக்கு, இந்த படிப்பு பிடிக்கவில்லை" என்பார்கள். பெற்றோருக்கு மிளகாயைக் கடித்த மாதிரி இருக்கும். இது அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் நிகழ்வல்ல. இன்று அதிகளவில், என் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் நடப்பதால்தான் இந்தப் பதிவு. சில உதாரணங்களை இங்கே பார்ப்போம்.

எனது நண்பரின் மகன் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் BDS முதலாமாண்டு தேர்வில் வெற்றிப் பெற்ற பிறகு, தனக்கு படிப்பு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அவர்கள் தனியாகவும், நண்பர்கள் மூலமும் எடுத்துச் சொல்லியும், அந்த மாணவர் கேட்கவில்லை. பிறகு, அவர் விருப்பப் படியே B.Sc. (nautical science)-ல் சேர்ந்து படித்து, இப்பொழுது ஒரு தனியார் கம்பெனியில் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

இன்னொரு நண்பர் மிகப் பிரபலமான என்ஜினியரிங் கல்லூரியில் மிகச் சிரமப்பட்டு சேர்த்து விட்டார். அந்தப் பெண்ணும் ஒரு வருடம் கூடப் படிக்கவில்லை. படிப்பைப் பாதியில் விட வேண்டிய சூழ்நிலை வந்து வந்துவிட்டது.

இன்னொரு மாணவனும் இதே நிலை வந்தது. படிப்பு பாதியில் நின்று விட்டது. இப்பொழுது வேறு கல்லூரியில் இடம்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு நண்பரின் மகன் +1 யில் சேரும் பொழுது கணினி அறிவியல் பாடம்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தப் பிறகு, "நான் டாக்டருக்குப் படிக்க வேண்டும். என்னை அறிவியல் பிரிவில் சேர்த்து விடுங்கள். இல்லையெனில் என் வாழ்வே பாழாகிவிடும்" என்றான். அவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு பிறகு மீண்டும் மறு வருடம் +1 யில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

இன்னொரு மாணவன் தான் விரும்பிய B.Tech(IT) யில் சேர்ந்து முதலாமாண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்டது இன்னும் சோகம்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டுப் போகலாம். இதிலெல்லாம் மற்ற மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எனவேதான், அரசு இந்த வருடம் முதல், எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து ஒரு மாணவர் விலகும் நிலையில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.. விரிவாக அறிய தினமணி பார்க்கவும்.

இது மட்டும் இவர்களைத் திருத்தி விடுமா என்றால், அதற்கான வாய்ப்பு குறைவே. ஏனெனில், மேற்கண்ட உதாரணத்தில் ஏகப்பட்ட பணத்தை இழந்த பிறகுதான், அந்த மாணவர்களும் பெற்றோரும் வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கல்லூரியில் சேரும் முன்பு, நாம் சேருகிற படிப்பின் பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, சமூகத்தில் உள்ள மரியாதை போன்றவைகளை நன்கு ஆராய்ந்து. அதன் பிறகு, ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம். இப்பொழுது எல்லோரும் "பிள்ளைகள் ஆசைப்படுவதில் சேர்த்து விடுங்கள்" என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி சேர்த்தால், அது நூறு சதவிகிதம் சரியாக அமைவதில்லை என்பதே என்னுடைய எண்ணம்!

Wednesday, May 18, 2011

தமிழனைத் தலை நிமிரச் செய்த சாதனைப் பெண்!



அண்மையில் வெளிடப்பட்ட ஐ.ஏ.எஸ். தேர்வில், இந்தியா அளவில் முதலிடம் பெற்று தமிழகத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த, செல்வி திவ்யதர்ஷினி அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். (தமிழகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் விபரம் அறிய பார்க்க: தினமணி)

இவர், சென்னை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் உள்ள 'சீர்மிகு சட்டப் பள்ளி' யில் (SCHOOL OF EXCELLENCE IN LAW) பி.ஏ.,பி.எல்., (ஹானர்ஸ்) முடித்தவர் என்ற தகவல், மகிழ்ச்சியான ஒன்று. ஏனென்றால், 2002 ஆம் ஆண்டு இந்தியா அளவில், தமிழகத்தில் மிகச் சிறந்த சட்ட வல்லுனர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில், முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்பொழுது விதைக்கப்பட்டது இப்பொழுதான் அறுக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.


+2 தேர்வு முடிவு வந்திருக்கும் நிலையில், இந்தச் செய்தி பல்வேறு சிறந்த மாணவர்களை சட்டக்கல்வி பக்கம், திரும்பிப் பார்க்க வைக்கும் என்று நம்புவோம்.

எனக்குத்
தெரிந்த நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்ற போதும், யாரும் சட்டக்கல்வி பயில விரும்புவதில்லை. காரணம் கேட்டால், "சட்டக் கல்வி பயிலும் மாணவர்களிடம் ஒழுக்கம் இருக்காது. அடாவடியாக நடந்து கொள்வார்கள். நல்ல மாணவர்கள் கூட கெட்டு போய்விடுவார்கள்" என்பார்கள்.

'அமைதி விரும்பி' 2006 ஆம் வருடம் 93 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற போதும், இன்ஜினியரிங் அல்லது மருத்துவக்கல்வியில் சேர்க்காமல், சட்டக் கல்வியில் சேர்த்தோம். அப்பொழுதெல்லாம், இந்தளவுக்கு இந்த சட்டப்பள்ளி பலரால் அறியப்படவில்லை.

நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் "அமைதியை, சென்னையில் உள்ள சட்டப் பள்ளியில் பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) சேர்த்து விட்டிருக்கிறேன்" என்றேன். அதற்கு அவர் "ஏதோ பிரைவேட் காலேஜ் போல, நீங்க கவர்மென்ட் காலேஜ்ல சேர்த்திருக்கலாமே?" என்றார்.

சட்டப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது 2002 -ல், நான் சொன்னது 2006 - ல். ஏன், இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள வழக்கறிஞரிடமே, இந்தக் கல்விநிறுவனம் பற்றி என்னால் புரிய வைக்க முடியவில்லை. பிறகு, எனது உறவினர்கள், நண்பர்களிடம் எப்படி புரிய வைக்க முடியும். ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றவர்கள் என் செயலை பைத்தியக்காரத் தனமாகவே நினைத்தார்கள். இவையெல்லாம், ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், நம்மிடையே சட்டக்கல்விக் குறித்த விழிப்புணர்வு சுத்தமாக இல்லை.

இடையில் 2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை வேறு, சட்டப்படிப்பை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. கடந்த வருடம், ஐந்தாண்டு பி.எல். படிப்பில் சேர்வதற்கு குறைந்த பட்ச மதிப்பெண் ஐம்பது சொச்சமே! இங்கே பார்க்கவும்.

கொடுமை என்னவென்றால் 70, 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆர்ட்ஸ் காலேஜில் படித்துவிட்டு வேலையில்லாமல் சங்கடப்படுகிறார்கள். சட்டக்கல்வி ஒரு தொழிற்கல்வி என்பதே பலருக்குப் புரிவதில்லை. மேலும் கட்டணமும் மிக மிகக் குறைவு என்பது, இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

இன்றும் கூட சட்டக்கல்வி பயின்றால் 'கோர்ட்டில் நீட்டி முழங்கி வசனம் போல் பேச வேண்டும்' என்று நினைப்பவர்களே அதிகம். இது சினிமாக் காட்சிகளால் வந்தப் பாதிப்பு! கோர்ட்டுக்கு செல்லாமல் எண்ணற்ற வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்ளலாம். அது குறித்து 'வீடுதிரும்பல்' திரு மோகன்குமார் சார் விரைவில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனியாவது சட்டக்கல்வியின் மேன்மையை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, தலை சிறந்த மாணவர்களை சட்டக்கல்விப் பக்கம் திருப்பி விட நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது.

அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும். 044 - 24641212 / 24641919. மேலும், தகவல் அறிய http://www.tndalu.ac.in/

2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை, தமிழர்களுக்கு தலைக் குனிவை உண்டாகியது. ஆனால், இப்பொழுது அதே சட்டம் பயின்ற, செல்வி திவ்யதர்ஷினி தமிழனைத் தலை நிமிரச் செய்திருக்கிறார்!




படம் உதவி: கூகிள் & அமைதி விரும்பி.

Friday, January 28, 2011

பதிவரின் பிரச்னை...!

நான் பிளாக் எழுத ஆரம்பித்தது, ஏதோ திட்டமிட்டு நடந்த செயலன்று. முதலில் பிளாக்கை ஆரம்பித்து, எனது படத்தை போட்டு, அதன் கீழ் எனது பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதி அழகு பார்த்தேன். தினமும் கண்ணாடியில் பார்க்கும் முகமாக இருந்தாலும், கம்பியூட்டர் மானிட்டரில் பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருந்தது. ஆனால், மறுநாளே படத்தையும் பெயரையும் எடுத்துவிட்டு, 'அமைதி அப்பா' (அமைதி விரும்பி-யின் அப்பா) என்று எழுதி, அதையே பிளாக்கின் பெயராகவும் வைத்தேன். பிறகு, ஏதாவது எழுதலாம் என்று நினைத்து எழுதி, நானே படித்துக்கொண்டேன். இதற்கிடையே ஓரிரு நண்பர்கள் நான் எழுதியதை படித்து, அதற்கு பின்னூட்டம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஆக நம்ம எழுதுறதையும் யாரோ படிக்கிறாங்கன்னு ஒருவித பயத்தால், எழுதுவதில் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். இவையெல்லாம் என்னுடைய பழைய பதிவுகளைப் பார்த்தாலே புரியும்.

சரி, தலைப்புக்கு வருகிறேன். இப்பொழுது, பதிவுலக நண்பர்கள் சிலர், பின்னூட்டத்திற்கு மாடரேஷன் வைத்திருப்பவர்களை அடிக்கடி விமர்சனம் செய்கிறார்கள். அதாவது 'மாடரேஷன்' வைத்திருப்பவர்கள் 'தன்னைப் பாராட்டி' வரும் பின்னூட்டங்களை மட்டுமே வெளியிடுகிறார்கள் என்பது மாதிரியான குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். அப்படி மாடரேஷன் வைத்திருப்பவர்களில் நானும் ஒருவன் என்பதால், அதற்கு என்னுடைய தன்னிலை விளக்கம்தான் இந்தப்பதிவு!

ஆரம்பத்தில், பின்னூட்டத்தை 'மாடரேஷன்' இல்லாமல் வைத்திருந்தேன். பிறகு, பல வலைப்பூக்கள் மற்றும் இணைய செய்திப் பத்திரிக்கைகளைப் படிக்கும் போது அதில் வரும் பின்னூட்டங்கள் மிகமிக ஆபாசமாகவும், மற்றவரைத் திட்டியும் எழுதப்படுவதைப் பார்த்தேன். எனவே, எனக்குள் ஒரு பயம் வந்துவிட்டது. நானோ, எப்பொழுதாவது கம்பியூட்டர் பக்கம் செல்பவன். அப்பொழுது, சொந்தமாக கம்பியூட்டர் கிடையாது. எனவே, நாம் கவனிக்காமல் இருக்கும் பொழுது, இந்த மாதிரியான பின்னூட்டமிடப்பட்டு, அது நமக்குத் தேவையற்ற சிக்கலை உண்டு பண்ணுமோ என்ற பயத்தால் 'மாடரேஷன்' வைத்தேன். அதனால், சிலர் எழுதிய பின்னூட்டங்கள் பல வாரங்கள் கழித்துக் கூட என்னால் வெளியிடப்பட்டது. அப்பொழுது மெயில் வழியாக பின்னூட்டம் பார்க்கும் வசதிப் பற்றி எனக்குத் தெரியாது.

இதுவரையில் இரண்டு பின்னூட்டங்கள் மட்டுமே நான் வெளியிடாமல் நிறுத்தி உள்ளேன். ஒன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் போதுமா? பதிவுக்கு வந்தது. மற்றொன்று ஏழு லட்சம் குடும்பங்களின் நிம்மதி...? பதிவுக்கு வந்தது. முதலாவது பின்னூட்டத்தில், அந்த நண்பர் இட ஒதுக்கீட்டால்தான் அரசு ஊழியர்கள் சரியில்லாமல் போய்விட்டார்கள் என்கிற மாதிரி எழுதியிருந்தார். அதை நான் வெளியிட்டிருந்தால் என்னுடைய நோக்கமே சிதைக்கப்பட்டு, விவாதம் வேறு திசையில் சென்றிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இரண்டாவது பதிவிற்கு மற்றொரு நண்பர் எழுதிய பின்னூட்டத்தில் உள்ள அவர் பெயரை கிளிக் செய்தால் ஒரு 'கிரிக்கெட் இணையதளம்' திறக்கிறது. மற்றபடி அவர் யார் என்பதெல்லாம் தெரியாது. இந்தப் பதிவிற்கு, இப்படி பின்னூட்டம் போட்டால், என்ன சொல்வது? இது வேண்டுமென்றே செய்யும் செயல் அல்லவா? மாடரேஷன் இல்லையெனில் இது போன்ற பின்னூட்டங்களை எப்படி மட்டுப்படுத்துவது. அவர் என்னைத் திட்டி எழுதியிருந்தால் கூட நான் வெளியிட்டிருப்பேன். ஆனால், எனது கருத்தை ஏற்றுக்கொள்வது போல் பின்னூட்டம் எழுதி, அவர் பெயரைக் கிளிக் செய்தால் அந்த 'கிரிக்கெட் பற்றிய இணையதளம்' திறப்பது மாதிரி செய்த செயலை என்னவென்று சொல்வது? நான், ஒன்றும் கிரிக்கெட்டுக்கு எதிரானவன் கிடையாது. குறிப்பிட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மனநிலையை பிரதிபளித்திருந்தேன், அவ்வளவுதான்!

இது மாதிரியான செயல்களை தவிர்க்கவே கமென்ட் மாடரேஷன் வைத்துள்ளேன். மற்றபடி என்னுடைய கருத்துக்கு எதிர் கருத்தை நாகரிகமான முறையில் சொன்னால், வெளியிட நான் தயார். எதிர் கருத்துச் சொல்ல நீங்க தயாரா? எப்படியாவது, யாரையாவது பின்னூட்டம் எழுத வச்சிட்டலாம்னு நினைப்புத்தான்;-))))!

.