Sunday, May 17, 2026

சிகிச்சை தேவைப்படும் அரசு மருத்துவமனை?!

நேற்றைய தினம் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் வந்துள்ள செய்தி குறித்தான பதிவு. 

இதனை நான் இங்கு பதிவு செய்வதன் நோக்கம், பல ஆண்டுகளாக என் மனதில் உள்ள வருத்தத்தை வெளிப் படுத்துவதற்காக மட்டுமே. மாற்றம் ஏற்பட்டால் மகிழ்ச்சி!

நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ‘ஸ்ட்ரெச்சர்’ மற்றும் ‘வீல் சேர்’ ஆகியவை, பல மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் பிற பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல அதிகமாக பயன்படுத்தப்படுவதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.

இந்த ‘ஸ்ட்ரெச்சர்’ மற்றும் ‘வீல் சேர்’ ஆகியவை மனிதர்களின் எடையை தாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. ஆனால், 200 முதல் 300 கிலோ வரை பொருட்களை ஏற்றி எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுவதால், அவை விரைவில் சேதமடைந்து பயனற்றதாகி விடுகின்றன. 

இதன் விளைவாக, நோயாளிகளே அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் பொருட்களை ஏற்றி எடுத்துச் செல்ல தனித்தனி ‘டிராலி’களை வாங்கி பயன்படுத்தினால், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
மேலும், பத்திரிக்கை செய்தியை ChatGPT உதவியுடன் தமிழில் சுருக்கமாக கீழே தந்துள்ளேன். 

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தினமும் சுமார் 12,000 வெளி நோயாளிகளுக்கும் 3,000 உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வருகிறது. 

ஆனால், CT Scan மற்றும் MRI பரிசோதனைகளுக்கு நீண்ட நேர காத்திருப்பு, ஸ்ட்ரெச்சர் மற்றும் வீல் சேர் பற்றாக்குறை, நர்ஸ்கள் மற்றும் பணியாளர்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் நோயாளிகளை அவதிப் படுத்துகின்றன. 

மேலும், சுகாதாரமற்ற கழிப்பறைகள், செயலிழந்த டயாலிசிஸ் மற்றும் குடிநீர் வசதிகள், சேதமடைந்த கட்டமைப்புகள் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையே சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளது என்பதே செய்தியின் மையக் கருத்தாகும்.

Thursday, May 14, 2026

தாம்பரம், சித்த மருத்துவர் எஸ். வடுகநாதன் மறைவு!

தஞ்சாவூர், சரபோஜி கல்லூரியில் 1983-86 ஆண்டுகளில் விடுதியில் அறிமுகமாகிய நண்பர், சித்த மருத்துவர், திரு. S. வடுகநாதன் B.Sc., RIMP.
அவர்கள் இன்று காலை, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்கிற தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

10.05.26 அன்று பாண்டிச்சேரியில் நீண்ட நேரம் அவருடனே இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்றைய தினம், அவர் மிகவும் இயல்பாக இருந்தார். 

மிகவும் நல்ல மனிதர். தன்னால் மற்றவர்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பார். மாணவப் பருவத்திலேயே அமைதியான சுபாவம் கொண்டவர். 
நண்பர் திருத்துறைப்பூண்டி, கருவேப்பஞ்சேரி காலம்சென்ற நெல் வியபாரி திரு. S. சுப்பிரமணியன் அவர்களின் மூத்த மகனாவார். மேலும்,
திரு. S. கந்தசாமி மற்றும் திரு. S. ராமானுஜம் ஆகியோரின் சகோதரரும்,
சென்னை திரு. சரத் அவர்களின் தந்தையுமாவார். 

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, May 13, 2026

திருமண புரோக்கர்?!

நாங்கள் குரோம்பேட்டையில் குடியிருந்த போது, பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பெண்மணிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தனர். இருவரும் வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அவர்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தது. அதனால், “என் பிள்ளைகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை” என்று அந்த பெண்மணி கண்ணீர் மல்க என் மனைவியிடம் அடிக்கடி வருந்துவார்.

அந்த நிகழ்வுகளை என் மனைவி என்னிடம் சொல்லும் போதெல்லாம், “இதற்கெல்லாம் இவ்வளவு வருந்துவார்களா?” என்று நான் நினைத்துக் கொள்வேன்.

என் மகனின் திருமணமும் பெரிய அளவில் பெண் தேடல் இல்லாமலேயே எளிதாக முடிந்துவிட்டதால், திருமணமாகாத பிள்ளைகளின் பெற்றோருடைய மனநிலையை அப்போதும் என்னால் முழுமையாக உணர முடியவில்லை.

இயற்கையால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் பல்கிப் பெருகுவதற்கான அமைப்பை இயற்கையே ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், மனித இனம் பல்கிப் பெருகுவதற்காக திருமணம் என்ற அமைப்பையும் இயற்கை உருவாக்கியுள்ளது.

ஒருகாலத்தில் திருமணம் செய்து வைப்பது புண்ணிய செயல் எனக் கருதி, பலர் அதை சேவையாகச் செய்து வந்தனர். ஆனால், இன்று அது பல்லாயிரக்கணக்கில் பணம் புழங்கும் தொழிலாக மாறிவிட்டது.

பெரும்பாலான புரோக்கர்களிடம் நேர்மை இல்லை. “மேட்ரிமோனி” எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களின் பணத்தைப் பெறுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சில புரோக்கர்கள், தாங்கள் கூறுவதை பெற்றோர் ஏற்கவில்லை என்றால் அந்தக் குடும்பத்தைப் பற்றி அவதூறு பரப்புவதாகவும், சில பெற்றோர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இவ்வாறு அவதூறு பரப்பி திருமணத்தைத் தடை செய்வது பழங்காலத்திலும் இருந்திருக்கிறது என்பதை பின்வரும் பாடல் உணர்த்துகிறது:

“தம்பதி சேர்க்கை தடை செய்த தீயோர்க்கு
கண்ணது இருளாகி, நாவதும் முடங்கி,
செவியதும் செத்துப் பிச்சைதேடி அலைய,
அந்திம காலத்தில் அருந்துயர் சேரும்.”

இப்பாடலின் பொருள் — திருமணத்தைத் தடை செய்பவர்கள் இறுதிக் காலத்தில் குருடாகி, ஊமையாகி, செவிடாகி, பிச்சையெடுத்து பெருந்துயரம் அனுபவிப்பார்கள் என்பதாகும்.

அதே நேரத்தில், நேர்மையான புரோக்கர்களும், திருமண தகவல் மையங்களும் இன்றும் இயற்கைக்கு பயந்து, அதை ஒரு சேவையாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர்.

அதில் புதிய முயற்சியாக, ஜோதிட திலகம் திரு. M. திருப்பதிராஜன் M.C.A., அவர்கள் “ஸ்ரீ காலபைரவர் திருமண தகவல் மையம்” என்கிற திருமண சேவையைத் தொடங்கியுள்ளார்.

நேரிடையாக அவர்களே தொடர்பு கொள்வதை இலவச சேவையாகவும்,
 பொருத்தமான ஜாதகம் பரிந்துரை செய்வதைக் கட்டண சேவையாகவும் வழங்குகிறார். 

இவர் எனது நீண்டகால நண்பர். நேர்மையானவர்; பேராசையற்றவர்; இயல்பிலேயே பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்.

இவரின் இந்த திருமண சேவை மையம் தனது சேவையில் தனித்த முத்திரையை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு 💐💐💐, இயற்கையிடமும் வேண்டிக் கொள்கிறேன் 🙏

Monday, May 11, 2026

புதிய ஓட்டுநரும் பழைய பயணியும்!

நீண்ட தூரம் செல்லும் ஒரு பேருந்தில் நீங்கள் பயணம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். ஓட்டுநர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்; உங்களது மனதிற்கு மிகவும் நெருக்கமானவர். அவருடன் பேசி, சிரித்து, வழியில் டீ குடித்து மகிழ்ச்சியாக செல்கிறது பயணம்.

பயணத்தின் இடையே, எதிர்பாராத, தவிர்க்க இயலாத காரணத்தால் உங்களுக்கு பிடிக்காத ஒருவர் நீங்கள் செல்லும் பேருந்தை இயக்க ஆரம்பித்து விடுகிறார்.

இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

“இவன் ஓட்டும் இந்தப் பேருந்து மிகப்பெரிய விபத்தை சந்திக்கும்; ஒருவரும் பிழைக்க மாட்டார்கள்” என்று சாபம் விட்டுக் கொண்டே அந்தப் பேருந்திலேயே பயணிப்பீர்களா?

எதிர்திசையில் வரும் வேறு பேருந்தில் ஏறி பயணிப்பீர்களா? 

அல்லது, அமைதியாக அமர்ந்து, "இந்த ஓட்டுனர் எச்சரிக்கையாக பேருந்தை இயக்கி நம்மையும் நம்முடன் பயனிக்கும் அனைவரையும் பத்திரமாக அழைத்து செல்ல வேண்டும்" என்று பிரார்த்தனை செய்வீர்களா? 

இறுதியாக, "நான் அவர் சரியாக ஓட்டுகிறாரா என்று அருகில் நின்று கவனித்துக்கொண்டே என்னுடைய பயனத்தை நிறைவு செய்வேன்" என்கிறீர்களா?

திருமண விழா

கடந்த மாத இறுதியில் இரண்டு நாட்கள், பல ஆண்டுகளுக்கு பிறகு, பல நண்பர்கள் மற்றும் உறவினர்களை  சந்தித்து உரையாடி மகிழும் வாய்ப்பை ஏற்படுத்திய திருமண விழா குறித்த பதிவுதான் இது.
வேதாரண்யம் வட்டம், கடினல்வயல் கிராமத்தை பூர்வீகமாகவும், வேலூர் மாவட்டம் காட்பாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. A. கருணாநிதி M.A., SA Engr., BHEL (Rtd) மற்றும் திருமதி வெண்ணிலா கருணாநிதி, CM Club Life Member, LIC தம்பதியினரின் மகன்
Dr. K. அஷ்வின்முத்து, MBBS., M.D. (Radiology), Dr. Rela Institute & Medical Center, Chennai

மற்றும்

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த திரு. R.B. சேதுராஜான் மற்றும் திருமதி P. மாரியம்மாள், B.Tech., MBA., Joint Director / General Manager, District Industries Centre, Tenkasi தம்பதியினரின் மகள்
Dr. S. ஸ்வர்ணா, MBBS., M.D. (Dermatology), M.M.C., Chennai

இவர்களின் திருமணமும் வரவேற்பும் 30.04.2026 அன்று காட்பாடி பராஸ் மஹாலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் இல்லறமேற்ற மருத்துவத் தம்பதியினரை நேரில் சந்தித்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்து பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்தியிருந்தாலும், எண்ணற்ற சமூக ஊடக நண்பர்களின் வாழ்த்துகளும் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இங்கே பதிவு செய்கிறேன்.

Saturday, May 2, 2026

காலம் கடந்து...!

இதற்கு முந்தையப் பதிவில் ஓய்வுப்பெற்ற நண்பர் திரு CM @சொ.மாயகிருஷ்ணன் B.Sc., M.A., M.Ed., M.Phil. அவர்களுக்கு எழுதிய வாழ்த்து செய்தியில், நான் பள்ளியளவில் கணிதத்தில் முதல் மதிப்பெண் பெற்றதைக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு மிகச் சிறந்த ஆளுமைகள் இருவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். 

நான் இன்றளவும் எனது மதிப்பெண் குறித்து யாரிடமும் சொல்வதில்லை. ஏனென்றால், மற்றப் பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே பெற்றவன். 

எனக்கு இன்றளவும் நான்கு வரிகளை சேர்த்து மனப்பாடம் செய்ய இயலாது. 

அந்த வயதிலும் நான் அப்படித்தான் இருந்தேன். அப்போதுதான், நண்பர் CM என்னிடம் அடிக்கடி "நல்லா படிங்கய்யா" என்பார். 

நாங்கள் இருவரும் 'அய்யா' சேர்த்து பேசிக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். இதுவும், நண்பர் CM -யிடமிருந்து வந்ததுதான். 

நான் அடிக்கடி, 'எந்த ஆசிரியராவது வாய்ப்பாட்டை மனப்பாடமாக ஒப்புவித்துவிட்டு, 'வகுப்புக்குள் வா' என்று சொல்லியிருந்தால், அப்போதே என் படிப்பு முடிந்திருக்கும்" என்று சொல்வதுண்டு.

நான் சந்திக்கும் பெற்றோரிடம் சொல்வதெல்லாம், "நல்ல பிள்ளையாக வளர்த்து விடுங்க, அவங்க நன்றாக வாழ்வார்கள்" என்பது மட்டுமே!

வாழ்த்திய ஓய்வுப்பெற்ற மயிலாடுதுறை, DBTR பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி புஷ்பவள்ளி அம்மையார் அவர்களுக்கும், திருமதி உமா மகேஸ்வரி ஆசிரியருக்கும் மற்றும் வாழ்த்தப் போகும் மற்றவர்களுக்கும். மகிழ்ச்சியையும் 😃 நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏