Friday, October 22, 2021

சைக்கிள் டூ சூப்பர் மார்கெட் : ஒரு வரலாறு!

எனது பள்ளி கால நண்பரும், 'விஆர்கே' என்று அன்போடு அழைக்கப்படும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் வடகாடு, திரு விஆர்கே ரவி அவர்கள், 22.10. 21 இன்று 'அய்யனார் சூப்பர் மார்க்கெட்' என்கிற பிரமாண்ட பல்பொருள் அங்காடியை கருப்பம்புலம் கடைத்தெருவில் துவங்கியுள்ளார்.

அவரை வாழ்த்துவதோடு, அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொண்டால், முன்னேற விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதால், அவரைப்பற்றி நான் அறிந்தவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.


சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகளுக்கு பொருட்கள் வழங்கும் முகவராக சைக்கிளில் தனது பயணத்தை தொடங்கியவர். பின்னர், தனது தந்தையின் தொழிலான புகையிலை முகவரானார். அந்தக்கால கட்டங்களில், பெரும்பகுதியான புகையிலை முகவர்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்லுறவு இருந்ததில்லை. அதிலிருந்து மாறுபட்டு, தரம் மற்றும் நாணயம் இரண்டையும் தனது இரண்டு கண்களாக பாவித்து தொழிலை சிறப்பாக செய்து, புகையிலை வர்த்தகத்தில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப்பிடித்தவர்.


தன்னுடைய வளர்ச்சியோடு சமூக வளர்ச்சியிலும் ஏற்பட்ட அக்கறையால், அரிமா சங்கத்தில் இணைந்து பல்வேறு நலப்பணிகள் செய்துவருவதோடு, தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை செய்துவருகிறார்.

தன்னுடைய பணியாளர்களுக்கு தேவையறிந்து உதவி செய்பவர். இவரிடம் பணியாற்றியவர்கள் பலர் இன்று சிறப்பான நிலையில் உள்ளனர். 

இளமைப்பருவம் முதல், வீட்டருகே உள்ள அய்யனார் மீது கொண்ட பக்தியின் காரணமாக, தொடர்ந்து அக்கோயிலை பராமரித்து வருவதோடு, இவரின் பெரும் முயற்சியால் கோயில் புனரமைப்புப் பணிக்கு பக்தர்களிடமும் நண்பர்களிடமும் நிதியுதவிப்பெற்று, கடந்தாண்டு திருக்குட முழுக்கு நடத்தப்பட்டது.

பொது வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் இவர் வெற்றிகரமாக செயல்பட இவரின் மனைவி திருமதி ர. பூங்குழலி அவர்களின் பங்கு அளவிடமுடியாதது. தனது இரண்டு மகள்களையும் சிறப்பாக படிக்கவைத்து, நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். 

மூத்த மகள் டாக்டர் அனுசியா எம்பிபிஎஸ்-க்கு மன்னார்குடி
டாக்டர் K. S. விஜயேந்திரன் MD - ஐ மணமுடித்துள்ளார். அவர்கள் இருவரும் மன்னார்குடி பகுதியில் அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார்கள்.

இரண்டாவது மகள் ர. கோகிலா BE - ஐ உள்ளூரில் மென்பொறியாளர் 
திரு பா. விக்னேஷ் MSc., அவர்களுக்கு மணமுடித்துள்ளார். 

திரு விஆர்கே அவர்கள், தனது தாரக மந்திரமான ' தரம் மற்றும் நாணயம்' இரண்டையும் விட்டுக்கொடுக்காமல்' அய்யானார் சூப்பர் மார்க்கெட்' - ஐ அடுத்தக்கட்டத்திற்கு விரிவுப்படுத்தி பேரும் புகழும் பெறுவதோடு, 
திரு 'விஆர்கே' அவர்களின் வாரிசுகளும் அவரைப் போன்று, பொருளீட்டுவதிலும் பொது சேவையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

Wednesday, October 20, 2021

வழக்கறிஞராக விரும்பிய இயற்கை ஆர்வலரின் மகள்!

இன்றைய தினம் சென்னை, அரசு சட்டக் கல்லூரியில் BA LLB (5 Years) படிப்பதற்கு முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் செல்வி கே. வானதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    செல்வி வானதி என்னுடைய நண்பரும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் மேலக்காடு மறைந்த 'தாத்தா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட திரு சு. முருகையன் அவர்களின் மகள் வழி பேத்தியாவார். மேலும், இயற்கை ஆர்வலர் திரு வானவன் - மாலதி தம்பதியரின் மூத்த மகளாவார்.  


வானதியின்  ஐந்தாவது வயதில் முதன் முதலாக சந்தித்தேன். அப்போதே,  மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவதோடு, பிறருக்கு  யோசனைகளை அளிக்கக்கூடிய திறனுடையப் பெண்ணாக பார்த்தேன். 

பிறகு, எட்டாம் வகுப்பு படிக்கும்போது சந்தித்து பேசினேன். அப்போது, அவர் இயற்கை மருத்துவத்தின் மீது ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார்.  இவர் இந்திய மருத்துவம் அல்லது விவசாயம் போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
அதன்பிறகு, பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் படிக்கவில்லை என்பதை அறிந்து கொஞ்சம் மனவேதனையடைந்தேன்.  

கடைசியாக +2 முடித்தப்பிறகு, சட்டக்கல்வி பயில வேண்டும் என்று வானதி விரும்பியதை அறிந்து ஒரு வழக்கறிஞரின் தந்தை என்கிற முறையில், மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தேன்.



 இவருடைய திறமைக்கு ஏற்றது, சட்டக்கல்வி என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.  இவர் நன்றாக படித்து இந்த சமூகத்திற்கு நற்பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துவோம்!💐

Friday, October 15, 2021

மருத்துவம் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டும் பெண் மருத்துவர்!

1996 - ல்  நாங்கள் வேதாரண்யத்தில் குடியிருந்தபோது, பக்கத்து வீட்டில் ஆசிரியர் தம்பதியினர் வசித்தனர், அவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்தப் பெண்ணிற்கு  ஆறு மற்றும் இரண்டாவது பெண்ணிற்கு மூன்று வயதிருக்கும். அன்று மூன்று வயது  துருதுரு சிறுமியாக எங்களுக்கு அறிமுகமான 'சிவகண்மணி'தான், கடந்த மாதம்  முதுநிலை மருத்துவத்தின் கனவுப் படிப்பான MDRD(கதிரியக்க நோய் கண்டறிதல்) - ஐ டெல்லி Lady Hardinge Medical College - ல் முடித்து, இம்மாதம்  சென்னை SRM மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியேற்றுள்ளார்.

இங்கு அவரை வாழ்த்துவதோடு, அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகள் மற்றும் தகவல்களை தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இவர், ஏழாம் வகுப்பு வரை வேதாரண்யம் தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்ததோடு, விளையாட்டு மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்துக்கொண்டு நூற்றுக்கணக்கான சான்றிதழ்களையும் பெற்றிருந்த நிலையில், தன்னுடைய மருத்துவராகும் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு,  எட்டு முதல் 12 ஆம் வகுப்பு  வரை விடுதியில் தங்கி திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் பள்ளிகளில் இவரது திறமையின் காரணமாக கல்விக் கட்டணச் சலுகையில் படித்தார். பிறகு கன்னியாகுமரி அரசு மருத்துவத்துக் கல்லூரியில் MBBS முடித்து, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான  நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்றதும் வரலாறு.


டாக்டர் சிவகண்மணியை 2015 -ம் வருடம் அவர் எம்பிபிஎஸ் முடித்து விட்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பிரபல மனநல மருத்துவரும், அவரது சகோதரியுமான டாக்டர் சிவபாக்யா எம்டி அவர்கள் வீட்டில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, பொருளாதாரம் சார்ந்து எங்களுடைய பேச்சு சென்றது. அன்று அவர் சொன்னது இன்றும் என் நினைவில் அப்படியே உள்ளது.  "நமக்கு எளிமையான வாழ்க்கைப்போதும், ஆடம்பர வாழ்க்கை தேவையில்லை. அப்பா அம்மாவிற்கு ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து சமுக சேவை செய்ய வேண்டும் என்கிற விருப்பமுள்ளது. அதற்கு எனது பங்களிப்பும் இருக்க வேண்டும், அதற்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும்!"  என்றார். நாம் எளிமையாக வாழவேண்டும் என்கிற கருத்தை மிகத் தெளிவாகச் சொன்னார்.

 அன்றைய தினத்தில் அவருடைய பெற்றோர், தங்களது இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைத்துக்கொண்டு பொருளாதார ஏற்றத்தாழ்வோடு வாழ்ந்துவந்தனர்.
அதனால், அந்த செய்தி மனதளவில் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதன் பிறகு கஜா புயல் மற்றும் கோவிட் சமயங்களில் டாக்டர் கண்மணியின் பெற்றோர் ஆசிரியர் திரு கருப்பம்புலம் சித்திரவேலு  மற்றும் திருமதி வசந்தா சித்திரவேலு செய்துவந்திருக்கின்ற சேவையை உலகறியும்.

 முன்பு டாக்டர் சிவகண்மணி குறிப்பிட்டப்படி, அவரது பெற்றோர் 'Spring charitable trust' என்கிற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து சமூகசேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.



அவரது பெற்றோருக்கு மூத்த மருமகன் டாக்டர் ஆர். மெய்ஞானகுமார் எம்டி அவர்கள் கிடைத்து போன்று இரண்டாவது மருமகன்  கிடைப்பதற்கும், டாக்டர் சிவகண்மணி MD(RD) அவர்கள் மருத்துவம் மற்றும் சமூக சேவை இரண்டிலும்  சிறந்து விளங்குவதற்கு உற்றத் துணையாக வாழ்க்கைத்துணை அமைவதற்கும் வாழ்த்துவதோடு💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்!🙏
(டாக்டர் சிவகண்மணி அவர்களின் +2 தேர்வு நேரத்தில், நான் எழுதிய கடிதத்தின் நகல் முதல் படமாக உள்ளது)

Wednesday, September 15, 2021

நீட் தேர்வும் பெற்றோரும்...!

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தோல்வி பயத்தில் மன உளச்சலில்  இருப்பதும், அதில் ஒரு சிலர் வாழ்வை முடித்துக்கொள்வதாக வரும் செய்திகள் மிகவும் வருத்தமாக உள்ளது.

 பெற்றோரின் அரவணைப்பும், நல்ல அணுகுமுறையும் மட்டுமே இந்தப் பெருந்துயரத்திலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற முடியும். 

நீட் தேர்வு எழுதிய மாணவரின் தந்தையான, எனது நண்பருக்கு தனிப்பட்ட முறையில் நான் எழுதியது இங்கே பொது வெளியில்....

Tuesday, August 17, 2021

வேதாரண்யம் மருத்துவரின் சாதனை!

எனது நண்பரும், வேதாரணியம் அரசு மருத்துவமனை மருந்தாளுநரும், ஆயக்காரன்புலம் 1 -ம் சேத்தி, கொச்சிக்குத்தகையை சேர்ந்த திரு  இரெ. இரவிச்சந்திரன் மற்றும்  திருமதி கீதா தம்பதியரின் மகன் டாக்டர் இர. இராஜரெத்தினம் எம்பிபிஎஸ். 

இவர் கடந்தாண்டு, சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்த பிறகு, முதுநிலை படிப்பில் சேர்வதற்காக நுழைவுத்தேர்விற்கு தயார் செய்துவந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக, சிறப்பு மருத்துவராக நாகை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். ஒருபுறம் கொரோனா நோயாளிகள் மறுபுறம் நுழைவுத்தேர்வுக்கு தயாராவது என்கிற கடின சூழ்நிலையில் அண்மையில் நடந்த 'INI CET' என்கிற, இந்தியாவில் AIIMS போன்ற  தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 80,000 - க்கும் மேலான  மருத்துவர்கள் எழுதிய நுழைவுத்தேர்வில் 16-வது இடம் பிடித்து சாதனை புரிந்து, நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளார்.

பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.(பொது மருத்துவம்) - படிப்பை  தேர்வு செய்துள்ளார்.

 
பொது மருத்துவர் என்பவர், மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிப்பவர். நோயாளிகளின் நோய் அறிகுறிகளைக் கொண்டு, பல்வேறு கோணங்களில் அதாவது 360° யில் ஆராய்ந்து, சரியான நோய்க்கு சிகிச்சையளிப்பது அல்லது அதற்குரிய சிறப்பு  மருத்துவரை பரிந்துரை செய்வது போன்றவை அவர்களின் முக்கிய பணியாகும்.


இவருக்கு எந்தக் கல்லூரியிலும், எந்தப் படிப்பை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்வதற்குரிய தகுதியிருந்தும், வேறு படிப்புகளை தேர்வு செய்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால், தான் பிறந்த ஊரைவிட்டு வெளியில் சென்றுவிட வாய்ப்புள்ளதால், அதனை தவிர்த்து தான் பிறந்து வளர்ந்த  கிராமப்பகுதியில் மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்பதற்காக, இப்படிப்பை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கிறார்.

 
நாகையில் எனது வழக்கறிஞர் நண்பர், புதிதாகக் கட்டிய தனது வீட்டை சுற்றிக் காட்டியபோது சொன்னது, இங்கே நினைவுக்கு வருகிறது. "மாடிக்கு செல்வதற்கு வெளியில் படி வைத்தால், அதனை வாடகைக்கு விடவேண்டும் என்கிற எண்ணம் வந்துவிடும். அதனால், உள்ளே படி வைத்துள்ளேன்!" என்றார்.


தமிழகத்தின் மற்ற கிராமப்புற பகுதிகளை ஒப்பிடும்போது, வேதாரண்யம் பகுதி ஏற்கனவே சிறந்த மருத்துவர்களைக் கொண்ட பகுதியாக திகழ்கிறது.  அவர்களோடு மேலும் ஒருவராக இவர் இணைய விரும்புவது வேதாரண்யம் பகுதி மக்களுக்கு கிடைத்த வரம்!


இவரும், இவருடைய மூத்த சகோதரி மென்பொறியாளர் திருமதி தாரணி விஜயகண்ணன் அவர்களும் சிறுவயதிலேயே 1330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லியதற்காக, அன்றைய நாகை மாவட்ட ஆட்சியர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பரிசும், பாராட்டும் பெற்றவர்கள் என்பது இங்கே குறிப்பிடதக்கது.


 
இவர் தனது பள்ளிப்படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் பயின்று உள்ளார். மேலும், தொடக்கக் கல்வியை ஆயக்காரன்புலம்- 2, வள்ளுவர் உதவி தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை ஆயக்காரன்புலம் - 2, நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றவர் என்பது கூடுதல் சிறப்பு.


இவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்பது நமது கடமையாகும்.

கிராமப்புற மாணவர்கள், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும், இந்தியா அளவில் மிகச்சிறந்த இடத்தையடைய முடியும்
என்கிற நம்பிக்கையை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனதில் விதைப்பதற்கு, கடந்த காலங்களில் பலர் உதாரணமாக இருந்தாலும், நிகழ்காலத்தின் உதாரணமாக மருத்துவர் இர. இராஜரெத்தினம் திகழ்கிறார் என்றால் அது மிகையில்லை!

அவரை பாராட்டுவதோடு, வாழ்த்தி மகிழ்வோம்👏💐😀

Sunday, August 8, 2021

ஒலிம்பிக்கும் உண்மை நிலையும்!

ஒலிம்பிக்கில் நமது நாடு ஒட்டுமொத்தமாக 48 - வது இடத்தைப் பிடித்துள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைகொண்ட நாட்டில் உலகளவில் நடைபெறும் விளையாட்டில், இம் மாதிரியாக நம் நாடு பின்தங்கியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. ஏனெனில், பதகப் பட்டியல் நமக்கு மறைமுகமாக சுட்டிக்காட்டுவது, உலகளவில் தனிமனித ஆரோக்கியத்தில் எந்தளவுக்கு பின் தங்கியிருக்கிறோம் என்பதைத்தான்!



'உணவு கிடைப்பவர்கள் ஓடுவதில்லை. ஓடுபவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை!' என்பதுதான் யதார்த்த நிலை. இது மாறவேண்டும் என்பதே நமது விருப்பம்.

Saturday, July 24, 2021

கொரோனாவும் ஆவி பறக்கும் இட்லியும்!

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாகையில் உறவினரின் மருந்துக்கடையில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, அரசுப் பணியில் உள்ள ஒருவர், "காலையில் சூடான இட்லியை சாப்பிட்டப்போது உள் நாக்கில் ஒட்டிக்கொண்டது. வலி தாங்க முடியவில்லை. மாத்திரை கொடுங்கள்" என்று கேட்டார். ஆபிஸ் போகும் அவசரத்தில் சூடான இட்லியை சாப்பிட்டிருப்பார் என்கிற எண்ணத்தில் மேற்கொண்டு அவரிடம் நான் எதுவும் விசாரிக்கவில்லை. அதன் பிறகு, சூடான இட்லியை சாப்பிடும்போதெல்லாம் அவரின் நினைவு வந்துவிடும்.

குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை தயக்கமின்றி சாப்பிடக்கூடிய உணவு வகையில் முதலிடம் பிடிக்கும் இட்லி, சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேலாக தென் இந்தியாவில் இருந்து வருவதாக தெரிகிறது.
செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி, குஷ்பு இட்லி, குட்டி இட்லி (மினி இட்லி ) பொடி இட்லி என்ற பெயர்களோடு, இன்னும் பல பெயர்களில் இட்லி இருக்கலாம். 

எங்கள் வீட்டில் உணவுப்பொருட்களை ஆவிப் பறக்க சாப்பிடும் பழக்கம் யாருக்கும் கிடையாது. எனினும், கொரோனா தீவிரமான நேரத்தில் வெந்நீர் குடிப்பது, சூடான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது என்கிற புதிய பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம்.

சாதாரனமாக வைத்து சாப்பிட்ட இட்லியை 'ஹாட் பாக்ஸ்' - ல் வைத்து சாப்பிட ஆரம்பித்து, இப்போது அடுப்பிலிருந்து நேரடியாக தட்டிற்கு மாற்றி ஆவி பறக்க சாப்பிடும் நிலைக்கு சென்றுவிட்டேன். அடுப்பிலிருந்தபடியே இறக்காமல் அப்படியே சாப்பிடும் நிலைக்கு செல்லாததுதான் மிச்சமுள்ளது😀

வீடு, ஹோட்டல் என இரண்டு இடங்களிலும் இட்லியை ஒரே தரத்துடன் தொடர்ந்து தயாரிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நாம் அனைவரும் அனுபவத்தால் அறிந்திருப்போம். அதே நேரத்தில்,  இட்லி எப்படி தயாரிக்கப்பட்டாலும், ஆவி பறக்க அதனை சாப்பிடும்போது அதன் சுவை ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் தான் ஆவி பறக்க சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். 

இப்படி சூடாகச் சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல என்பதோடு, பல வருடங்களுக்கு முன்னால் நெய்விளக்கு கிராமத்தில் ரயிலில் ஏறுவதற்காக அவசரமாக சூடான டீயை குடித்த ஒருவர் இறந்துபோனார் என்கிற தகவலையும் செவிவழிச் செய்தியாக அறிந்திருக்கிறேன். 

மது அடிமையைப்போல் ஆவி பறக்க சாப்பிடும் இட்லியின் சுவைக்கு அடிமையாகிவிட்ட பலர் உண்டென்பதை இப்பதிவின் ஆராம்பத்தில் குறிப்பிட்ட நபர் மற்றும் இன்றைய எனது நிலை இரண்டும் நன்றாக உணர்த்துகிறது!

Sunday, July 18, 2021

நானும் எனது நகைச்சுவையும்!

கடந்த மாதம்தான் எனக்கு கதிர்'ஸ் மின் இதழ் -ஐ பற்றிய அறிமுகம் கிடைத்தது.

அதனுடைய கட்டுரைகள், கதைகள் மற்றும் நகைச்சுவைகள் என்று அனைத்தும் மிகவும் தரத்துடனும், தமிழகளவில் பத்திரிக்கையில் தொடர்ந்து நகைச்சுவைகள் எழுதிவரும் எழுத்தாளர்களின் ஆக்கங்களுடனும், வெளியிடப்படுவதை அறிந்தேன்.

 முகநூலில் எழுதலாம் என்று நினைத்திருந்த 'ஜோக்' ஒன்றை 'கதிர்ஸ்'க்கு அனுப்பினேன். அதுவும் இந்த வாரம் வந்த இதழில் வெளிவந்துள்ளது. நன்றி S.s. Poonkathir சார்.


நான் அதிகம் 'ஜோக்ஸ்' எழுதுபவனல்ல. எப்போதாவதுதான் எழுதுவேன். ஆனால், என்னுடைய பேச்சில் நகைச்சுவை மறைந்திருக்கும். அது எல்லோருக்கும் புரியாது. சில நேரத்தில் எனது பேச்சுக்கு நானே, 'கோனார் நோட்ஸ்'  போடுவதுண்டு. அதுவும்  புரியாமல் விழிப்போரும் உண்டு. அப்படிப்பட்டவர்களிடம், நானும் மாட்டிக்கொண்டு விழித்ததுண்டு!🙄

"நகைச்சுவையில் இரண்டு வகை உண்டு!" என்று என்னுடன் ஒருவரைப் பற்றி பேசும்போது, வழக்கறிஞர்
 திரு ச. தமிழ்வேந்தன்  குறிப்பிட்டார். மேலும், "அது வடிவேல் நகைச்சுவை, சந்தானம் நகைச்சுவை" என்றார்.   அதற்கு நான் "புரியவில்லையே!" என்றேன்.

அவர் சொன்னார், "வடிவேல் நகைச்சுவை என்பது தன்னைதானே குறைத்து மதிப்பிட்டுக்காட்டி நகைச்சுவையாக பேசுவது.
சந்தானம் நகைச்சுவை என்பது, மற்றவர்களை குறைத்து மதிப்பிட்டுக்காட்டி 
நகைச்சுவையாக பேசுவது!" என்றார்.

 அது உண்மைதான் என்பதை நாமும் அறிவோம். 
இன்றும் பலர் அடுத்தவர்களின் பலஹீனங்களை சொல்லி மற்றவர்களை சிரிக்க வைத்து தனக்குத்தானே 'நகைச்சுவையாளன்' என்ற பட்டத்துடன் அலைபவர்களுமுண்டு. அந்த நகைச்சுவைக்கு
'அவல நகைச்சுவை!' என்றும் அந்த நண்பர் குறிப்பிட்டார். 

கதிர்’ஸ் (ஜூலை 16-31, 2021) 22-வது இதழ் உங்கள் பார்வைக்கும், நண்பர்களுக்கு பகிரவும் இங்கே!


பல வருடங்களுக்கு முன்னர் விகடனில் வெளிவந்த எனது நகைச்சுவையையும் இங்கே இணைத்துள்ளேன்.

அது சரி, தலைப்பைப் பார்த்துவிட்டு
படிக்க வந்தவர்கள், "நீயும், உன் நகைச்சுவையும்!" என்று மனதில் நினைப்பது எனக்கு புரியாமலில்லை!

Sunday, June 27, 2021

கதராடையும் காந்தி குல்லாவும்...!

வேதாரண்யம் வட்டம், ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சுதந்திரப்போராட்ட தியாகியும், அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தின் பரம்பரை அரங்காவலரும், ஆயக்காரன்புலம் மாகாத்மா காந்தி பள்ளியின் மேலாளரும், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருமாகிய 
அரிமா திரு. சு. இராமாமிர்தம் அவர்கள், 25.06.21 அன்று தனது 98 வது வயதில் இயற்கை எய்தினார். 

  1990களில் நான் ஆயக்காரன்புலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியபோது, அப்போது பணியில் இருந்த டாக்டர் எஸ். சீனிவாசன் அவர்களை சந்திக்க அய்யா வருவார்கள். முதன் முதலில் அவர்களைப் பார்த்தப்போது, அவர் அணிந்து வந்த கதராடையும் காந்தி குல்லாவும் அவரை தனித்துக்காட்டியது. ஆனால், அவருடன்  நெருக்கமாக பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

 அந்த ஊரிலிருந்து மாறுதல் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றிய பிறகு, சென்னக்கு வந்துவிட்டேன். 
அதன்பிறகு, அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. எனினும், பெருங்குடியில் வசிக்கும் அவருடைய மகள் வயிற்று பேத்தி திருமதி இளநிலா மகேந்திரன் மூலமாக அவ்வப்போது அவரைப்பற்றிய செய்திகளை அறிந்து வந்திருக்கிறேன். 

98 வயது வரை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு வாழ்வதென்பது மிகப்பெரிய ஆச்சரியமான நிகழ்வாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
வாழ்க்கையில் அவர் கடைபிடித்து வந்த நேர்மை, அன்பு கலந்த பேச்சு, எளிமை, சுறுசுறுப்பு, மற்றவர்களிடம் காணப்படும் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது மற்றும் எளியவர்களுக்கு உதவுவது போன்றவைகளோடு, தன் பேரன் பேத்திகளுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுத்திருப்பதும், அவரின் வாழ்க்கையிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடமாக அமைந்துள்ளது. 

55 வயதில் எல்லாம் முடிந்துவிட்டதாக கருதிக்கொண்டிருக்கும் எனக்கு,  80 வயதில் அவர் 'டூ வீலர்' கற்றுக்கொண்டதோடு, தொடர்ந்து சில வருடங்கள்  ஓட்டிக்கொண்டிருந்தார்  என்கிற தகவல் எனது மிச்ச வாழ்க்கையின் மீது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

சுதந்திரப்போராட்டம் மற்றும் அதில் பங்கேற்ற தியாகிகள் பற்றிய வரலாற்றின், நடமாடும் நினைவுச்சின்னமாக விளங்கிய மாமனிதரை இழந்தந்திருப்பது வேதாரண்யத்திற்கு பேரிழப்பாகும். 

அன்னாரை இழந்துவாடும் அவரது வாரிசுகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, இயற்கையோடு கலந்துவிட்ட அந்த மாமனிதரை வணங்குகிறேன்🙏