Friday, July 31, 2026

பக்கத்து வீடு ...!

இரண்டு நாட்களுக்கு முன்பு கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். 

 அந்தக் காணொளியில் அந்தக் குறிப்பிட்ட வீட்டை மட்டுமே காட்டியிருந்தார்கள். பக்கத்தில் உள்ள வீடுகளையோ, முழுமையான சாலையையோ அவர்கள் காட்டவில்லை. அதனால், பின்னூட்டத்தில் பக்கத்தில் வீடுகள் இருக்கிறதா என்று கேட்டிருந்தேன். 

நான் எதற்காக கேட்டேன் என்கிற காரணம் நேரடியாக மற்றவர்களுக்கு புரியாது. நம்முடைய வீடு இருக்கின்ற இடத்தில் அருகில் இருப்பவர்களின் இயல்பைப் பொறுத்து நம்முடைய அன்றாட வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. 

பக்கத்து வீடுகளில் நல்ல இயல்போடு இருப்பவர்கள் இருந்தால், நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி. அதே நேரத்தில் குணக்கேடு உள்ளவர்கள் அமைந்துவிட்டால், நமக்கு ஒவ்வொரு நாளும் சோகம் தான். 

நகரப் பகுதிகளில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. அதனால், நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்கிற நிலையில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும். 

ஒரு வீடு அமைந்துள்ள இடத்திற்கு அருகே பள்ளி, பேருந்து நிறுத்தம், மருத்துவமனை மற்றும் கடைகள் என்று இருந்தால், அந்த இடத்திற்கு மதிப்பு அதிகம். அதே நேரத்தில் அந்த இடத்தில் ஒரு சமூக விரோதி நிரந்தரமாக குடியிருந்தால், அந்த இடத்திற்கு மதிப்பு இருக்காது என்பது பலரும் அறிந்த உண்மை. அதனால் தான் பக்கத்தில் வீடு இருக்கிறதா என்று கேட்டிருந்தேன். அதற்கு அண்டை வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அந்த வீட்டின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தேன்.

நல்லதை நினைப்போம், நல்லதையே விதைப்போம்!