Tuesday, November 20, 2018

கஜா 2018

வேதாரண்யம் என்றால் காடுதான் என்று நண்பர்களிடம் குறிப்பிடுவேன்.

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் குறைந்தது பத்து மரங்களாவது இருக்கும்.
ஊரில் உள்ள சாலைகளின் இருபுறமும்  பசுமைப் வேலியாக மரங்கள் காட்சியளிக்கும்.
இன்று அந்த மரங்கள்தான் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் வீழ்ந்து கிடக்கிறது.

தகவல்தொடர்பு இல்லாமல், அங்கு  எந்த நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதைகூட  வெளிநாடு மற்றும் வெளியூரில் இருக்கும் உறவினர்களும் நண்பர்களும் அறிந்துக்கொள்ள  முடியாமல் தவித்து வருகிறார்கள்.

குடிசை, ஓடு மற்றும் தகர கூரை வேய்ந்த வீடுகளை இழந்த எண்ணற்ற மக்கள், பிறந்த ஊரிலேயே அகதிகளாக  அருகே உள்ள கான்கிரிட் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.  அந்த கான்கிரிட் வீடுகளில் இருந்த உணவு பொருட்களும் ஓரிரு நாட்களுக்குகூட போதுமானதாக இல்லை.  மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் மற்றும் அரிக்கன் விளக்கு கிடைக்காமல் இருட்டில் இருக்கிறார்கள்.

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அவர்களை சென்றடைய  தேவை போக்குவரத்து.
அதற்கு, சாலைகளில் வீழ்ந்து கிடக்கும் மரங்களை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். மரங்களை அறுக்க போதிய உபகரணங்கள் அங்கே இல்லை.  தொண்டு நிறுவனங்கள், மற்ற மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வமுள்ள குழுக்கள் அரசுடன் ஒன்றினைந்து செயல்பட்டு செய்வதறியாது வெளியுலக தொடர்பு கிடைக்காமல் தவித்து வரும் அம் மக்களை காப்பாற்ற வேண்டும்.

நாகை மாவட்டத்தில் சுனாமி பாதிப்பின் போது சமூக ஆர்வலர்கள் மற்றும்  தொண்டு நிறுவனங்கள் செய்த உதவியால்தான் அதன் பாதிப்பிலிருந்து மீள முடிந்தது.

வேதாரண்யம் பகுதியில் மரத்தை பெத்தான், பெரியாச்சி என்று  சாமியாக வணங்கும் வழக்கமுண்டு. ஆனால்,  இப்ப மக்களை காப்பாற்ற சொல்லி முறையிட அந்த சாமி மரங்களும் இல்லை.

தமிழக மக்களே உங்களிடம் ஈரம் இருக்கிறது. தண்ணீர் தர மறுக்கும் மற்ற மாநிலத்திற்கே இயற்கை பேரிடரின் போது உதவியவர்கள் நீங்கள். காலம் தாழ்த்தாதீர்கள் உடனே நீட்டுங்கள் உங்கள் கரங்களை வேதாரண்யம் நோக்கி.

- கண்ணீருடன், வேதாரண்யம் மண்ணில் பிறந்து சென்னையில் பிழைப்பவன்.

1 comment:

  1. நல்ல உள்ளம் படைத்தவர்கள் எங்கும் இருக்கிறார்கள்

    ReplyDelete