Thursday, May 23, 2024

நாற்பது ஆண்டுகால நட்பு...!

1983 -ல் தஞ்சாவூர், சரபோஜியில் பிஎஸ்சி முதலாமாண்டு சேர்ந்தபோது, வேதாரண்யம் பகுதியிலிருந்து பத்துக்கு மேற்பட்டவர்கள் அங்கு படித்துக் கொண்டிருந்தனர். அனைவரிடத்திலும் நட்புடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. 

அதில், ஒருவர் செம்போடை
திரு க. பன்னீர்செல்வம் அவர்கள். தற்பொழுது காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். எனக்கு ஓராண்டு சீனியர்.

அவர், தன்னுடன் வேதாரண்யத்தில் +2 படித்து, அதிராம்பட்டினத்தில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்துக் கொண்டிருந்த நண்பர் குறித்து, எங்களிடம் அடிக்கடி பகிர்ந்துக்கொள்வார். அந்த நண்பரின் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தில் பேசும் திறன் குறித்தும், யுனிவர்சிட்டியில் முதல் மதிப்பெண் பெற்றுவருவது குறித்தும் எங்களிடம் நிறையப் பகிர்ந்துக்கொள்வார். அவருடைய பெயரைக் கூட 'இனிஷியல்' சொல்லித்தான் குறிப்பிடுவார்.

ஒருநாள், எங்களிடம் இன்று இரவு திருச்சி ரேடியோவில் நண்பர் பங்கேற்ற 'வினாடி வினா' நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது என்று தெரிவித்ததோடு, ஒரு பாக்கெட் ரேடியோவையும் ஏற்பாடு செய்து விட்டார். அன்று இரவு அதனை நடுவில் வைத்துவிட்டு, நான்கைந்து நண்பர்கள் சுற்றி அமர்ந்திருந்தோம். நிகழ்ச்சி ஒலிப்பரப்பான பிறகுதான் தெரிந்தது, அது ஆங்கிலத்தில் இடம்பெற்ற 'வினாடி வினா' என்று. அன்றைய தேதியில் ஆங்கிலம் எனக்கு வெகுதூரத்தில் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை நண்பர்களிடம் நான் பகிர்ந்து கொள்ளவுமில்லை.

பிறகு, ஒருநாள் நண்பருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது, தஞ்சாவூர் வருகிறார் என்றார். எங்கள் கல்லூரி விடுதிக்கு அவர் வந்தபோது, நான் சந்தித்த நண்பர் தான், வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதியில் பிரபலமாகவுள்ள மருத்துவர் 'Doctor VGS' அவர்கள். (அந்தக் காலகட்டத்தில் தேத்தாக்குடியில் இருந்து 
திரு N. சுப்பிரமணியன் என்கிற மருத்துவ மாணவரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் திரு பன்னீர்செல்வம் அவர்கள். ஆனால், அதன் பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு இன்றளவும் எனக்கு கிடைக்கவில்லை)

டாக்டர் VGS அவர்கள் தமிழகத்தில் நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட 1984 -ல் கிராமபுறத்திலிருந்து, எவ்வித பயிற்சியும் இல்லாமல், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர். அன்றைக்கு உயிரியல் பாடத்தில் 50 க்கு 47 -க்கும் அதிகாமான மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தார். அன்றைக்கு தொடங்கிய எங்களின் நட்பு இன்றளவும் வளர்ந்து கொண்டுள்ளது. 

எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களிடத்தில் பழகும் இயல்பு அவருக்குரியது. எனது மகனின் திருமணத்திற்கு வந்திருந்தார். மேலும், எனது தந்தை இறந்தபோது அவருக்கு செய்தி சொல்ல வேண்டுமா என்று என்னிடம் கேட்டனர். நான் வேண்டாம் என்றேன். ஆனால், அன்று அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். நான் அவரிடம் கேட்டது, "நான்தான் உங்களுக்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னேனே, சார்!". அதற்கு, டாக்டர் சொன்ன பதில், "இதற்கெல்லாம், சொல்லித்தான் வரணுமா, என்ன!?" 

மருத்துவர்களின் நேரத்தின் முக்கியத்துவத்தை எப்போதும் நோயாளிகளின் முகத்தில் பார்ப்பவன் நான். அதனால், எப்போதும் மருத்துவர்களின் நேரத்தை தேவையில்லாமல் எடுத்துக் கொள்வதில்லை. நண்பர்கள் வீட்டு சுக, துக்கங்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் கலந்து கொள்பவர் என்று அவரைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும்.

1988-ல் நடைபெற்ற எனது திருமணத்திற்கு அவருக்கு பத்திரிக்கை தரவில்லை என்று வருத்தப்பட்டார். அந்த வயதிலேயே நண்பர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்க வேண்டுமென்கிற எண்னம் அவரிடமிருந்துள்ளதையும் இப்போது உணர முடிகிறது. 

கடந்த 19.05.24 அன்று திருவாரூரில் நடைபெற்ற அவரது மகள் டாக்டர் பிரியா அவர்களின் திருமண வரவேற்பு பத்திரிக்கை என்னை வந்தடைந்தவுடன் எப்படியாவது இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். மேலும், மணமகள் டாக்டர் பிரியா மருத்துவம் படிப்பதற்கு முன் சென்னையில் பொறியியல் கல்லூரில் சேர்ந்த முதல் நாள், நானும் அங்கு எனது கும்பகோனம் நண்பர் திரு ஆறுமுகம் ஆசிரியர் அவர்கள் மகளின் சேர்க்கைக்கு சென்றிருந்தேன். அப்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று பொறியியல் சேர்ந்த இருவரும் இன்று மருத்துவர்கள் என்பது குறிபிடதக்கது. மேற்கண்ட நிகழ்வை மணமகளிடம் நினைவூட்டி, கீழ தஞ்சையின் வட்டார வழக்கில் எழுதப்பட்டு, பல்வேறு பரிசுகள் மற்றும் விமர்சனங்களைப்பெற்ற, இயற்கை ஆர்வலர் திரு வானவன் அவர்களின் ஒரக்குழி புத்தகத்தையுமளித்து, மணமக்களை வாழ்த்திவிட்டு விடைபெற்றேன். 

அத்தனை பரபரப்புக்கிடையேயும் டாக்டர் VGS அவர்கள், என்னை தனது பழைய நண்பர் என்றும், மருந்தாளுநர் என்றும் மணமகனிடம் அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியளித்தது😀 

 நன்றி🙏

பி. கு. மருத்துவர் குறித்து நான் எழுத நினைப்பதெல்லாம், 2012 ஆம் ஆண்டு புதிய தலைமுறையில் வந்துள்ளது. அதனை நேரமும் விருப்பமும் உள்ளவர்கள் இங்கே சென்று படிக்கவும்.

No comments:

Post a Comment