Wednesday, February 11, 2026

வீட்டுத் தோட்டம்!

1970 -களில் அதாவது, எனது பள்ளிப் பருவத்தில், வீட்டைச் சுற்றி மரம், செடி, கொடி என்று அடர்பச்சையாகப் காணப்படும். நாட்டுக் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டிருக்கும். அப்போதெல்லாம், அதன் சுவை எனக்கு பிடிக்காமல் இருந்தது. இந்தக் காடுகளெல்லாம் அழிக்கப்படவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். 

வளர்ந்து கல்வி மற்றும் வேலையின் காரணமாக மன்னார்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை என்று, அதாவது 'கான்கிரிட் காடு' என்றழைக்கப்படும் நகர வாழ்க்கையை வாழ்ந்தபோதுதான், பசுமையின் அவசியம் குறித்தான புரிதல் வந்தது. 

அதன்பிறகு, ஊருக்கு வந்துப் பார்த்தால், நான் முதலில் சொன்ன, எனது சிறுவயது ஆசையெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்போதிருந்த மரங்கள் இப்போதில்லை. அன்று எனக்கு பிடிக்காத நாட்டுக் காய்கறிகளை  இப்போது மருந்துக்குகூட  எவரும் மறந்தும் பயிரிடுவதில்லை.

 பெரும்பகுதியான வீடுகளில் ஏசி மெஷின் மாட்டப்பட்டுள்ளது. கடைத்தெருவில் பிரமாண்ட காய்கறி கடைகள் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டம் முற்றிலும் அழிந்துபோய்விட்டது. ரசாயனத்தின் உதவியால் பயிரிடப்பட்ட காய்கறிகளை கடைகளில் வாங்கி சமைப்பதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது.

இதற்கிடையே, வீட்டு வாசலில் இந்த மரம் இருக்கக் கூடாது. வீட்டைச் சுற்றி எந்தெந்த மரங்கள் வளர்க்ககூடாது என்றெல்லாம் சொல்வதற்கு, ஊரில் நிறைய நிபுணர்கள் தோன்றிவிட்டார்கள்.

 ஓய்வு பெற்றுவிட்டதால் ஊரில் தங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வீட்டைச்சுற்றி ஏதாவது மரங்களை நடலாம் என்று நினைத்து, கரியாப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வடமழை மணக்காட்டில் அமைந்துள்ள 'எஸ்எம் கார்டன்' Sm gardening- என்கிற நர்சரி பற்றி அறிந்திருந்ததால், நண்பரும் பிரபல ஜோதிடருமான திரு ம. திருப்பதிராஜன் அவர்களுடன் அங்கு சென்று, நர்சரியை சுற்றிப்பார்த்து தோட்டத்தின் உதவியாளரிடம் விளக்கம் கேட்டு சில செடிகளை வாங்கிவந்ததோடு, ஒன்றல்லது இரண்டாண்டுகளில் பலன்தரும் மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, நாவல் என்று பல்வேறு ரகத்தில் பெரிய மரச்செடிகளை வைத்துள்ள அதன் உரிமையாளர் திரு முத்தரசன் அவர்களையும் சந்தித்து, அவருடைய இந்த சேவையைப் பாராட்டிவிட்டு, விரைவில் மீண்டும் வருகிறோம் என்று சொல்லி விடைபெற்று வந்தோம். 

மரம் வளர்ப்போம், காய் மற்றும் பழம் பறிப்போம், மற்றவர்களுக்கும் கொடுப்போம்!

(வயதானக் காலத்தில், இவர் எதற்காக மரம் நடுகிறார் என்றெல்லாம் சிலருக்கு தோன்றலாம். அதனால்தான் கடைசி வரிகள்)

No comments:

Post a Comment