பதினைந்து நிமிடங்கள் செலவிட்டு, இந்த வீடியோவைப் பாருங்கள். எளிமை மற்றும் யதார்த்தம் இரண்டும் கலந்த பேச்சு. கிராமப்புற மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் செல்வி பிரியங்கா IAS அவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் நிச்சயம் பயனளிக்கும்.
மேலும், பண்ருட்டி பாலவிகார் பள்ளியில் இவர் படித்தபோது, எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை , இவரின் வகுப்பாசிரியராக இருந்தவர், எனது நண்பர் திரு சங்கர் அவர்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன். அவர்தான் இந்த வீடியோவையும் எனக்கு அனுப்பி வைத்தார்.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துவிட்டது.
இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் சேர்த்து ஆறு பதக்கங்கள் கிடைத்துள்ளது.
2008 பீஜிங்-ல் மூன்று. இப்பொழுது ஆறு, முன்னேற்றம்தான். ஆனால்,2008-ல் 50 வது இடத்திலிருந்து 2012-ல் 55 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். டென்னிஸ் வீரர்களிடையே நடந்த ஈகோ மோதலால் இரட்டையர் பிரிவில் பதக்கம் கிடைக்காமல் போய்விட்டது.
அதிகமாக எதிர்பார்த்த தீபிகாகுமாரி ஏமாற்றிவிட்டார். உலகளவில் உசைன் போல்ட் எதிர்பார்த்த சாதனையை நிகழ்த்திவிட்டார். சரி, இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும் தானே? என்பவர்களுக்கு அதிகம் தெரியாத செய்தி வருகிறது....
ஆஸ்கர் பிஸ்டோரியஸ் என்கிற பெயர் இந்த ஒலிம்பிக்கில்தான் எனக்கு
அறிமுகம். ஆஸ்கர் பிஸ்டோரியஸ்க்கு ஒரு வயதிலே பிறவிக் குறைப்பாடுக் காரணமாக இரண்டு கால்களும் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. கார்பன் இழைகளால் செய்த
மெலிதான செயற்கைக் கால்களால் ஓடுவதால் 'பிளேடு ரன்னர்' என்று
அழைக்கப்படுகிறார்.
தென் ஆப்ரிக்காவின் சார்பில், இந்த ஒலிம்பிக்கில் 400
மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதி வரை வந்தார். 4 x 400 மீட்டர் போட்டி அரையிறுதியில் இவருக்கு முன் ஓடிவந்து குச்சியை இவர் கையில் கொடுக்க வேண்டிய அஃபெண்ட்ஸே
மொகவானே, அடுத்த பாதையில் ஓடிய கென்யாவின் வின்செண்ட் கீலுவுடன் மோதி
தடுக்கி விழுந்தார். அந்தக் குச்சி தூரப்போய் விழுந்துவிட்டதால், இவர்
கைக்கு கிடைக்காமல் இவரால் ஓட்டத்தை தொடர முடியவில்லை. இருந்தும், சர்வதேச
தடகள கூட்டமைப்பு (ஐ.ஏ.ஏ.எப்.,), தகுதி சுற்றில்
வெற்றி பெறாத தென் ஆப்ரிக்க அணியை, பைனலில் ஓட, அனுமதி வழங்கியது. இதில்
தென் ஆப்ரிக்காவின் ஜாகெர், டி பியர், வான் ஜில், பிஸ்டோரியஸ் அடங்கிய அணி,
கடைசி இடம் (8வது) பெற்றது. இதையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும்
பிஸ்டோரியசின் கனவு மீண்டும் நிறைவேறாமல் போனது. ஒலிம்பிக் பைனலில் ஓடிய
பெருமை மட்டும் கிடைத்தது.
உடல் உறுப்புகள் சரியாக இருந்தும் பலர் தன்னம்பிக்கையில்லாமல்
வாழ்கிறார்கள். இவர் பொய்க்கால்களுடன், நிஜக் கால்களால் ஒடுபவர்களுடன் ஒலிம்பிக்கில் ஒடி சாதனைப்
புரிந்துள்ளது வியப்புக்குரியதே!
இரண்டு கால்களை இழந்த மனிதர், நடக்க
முடியும் என்பதே இதுநாள் வரை எனக்கு வியப்பளிக்கும் செய்தி. அதிலும்
ஒலிம்பிக்கில் ஓடுகிறார் என்கிற செய்தியை ஏற்றுக் கொள்ள எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. இந்தச் செய்தி, நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பது உறுதி!