Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Sunday, February 27, 2022

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

கடந்த வருடம் கொரனா பெருந்தொற்று நேரத்தில் ஆசிரியர் திரு கருப்பம்புலம் பாலாஜி  அவர்கள் வழியாக அறிமுகமானவர்தான் ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அவர்கள்.

அதன் பிறகு அவர்களுடைய கல்வி சார்ந்த செயல்பாடுகளை முகநூல் வழியே கவனித்து வருகிறேன். 
அவர்களுடைய எழுத்து மற்றும் பேச்சு  எப்போதும் கல்வி, பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் குறித்துதான்  இருக்கும். மாணவர்களை குழந்தைகள் என்றுதான் அன்போடு அழைக்கிறார். 

இந்த சமூகம், ஏழை எளிய மக்களால் நிறைந்தது. அவர்களின் முன்னேற்றும் மட்டுமே நாட்டின் முன்னேற்றமாக அமையும் என்பதில் பெரும் நம்பிக்கையுடையவர்.

இன்றையதினம், அவர் பங்கேற்று பொதிகை டிவி - ல் வெளிவந்த நேர்காணலைப் பாருங்கள். 
இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும்  அரசுப் பள்ளிகளின் மீது மரியாதையும், நம்பிக்கையும் கூடுமென்பதில் சந்தேகமில்லை!🙏


Saturday, July 24, 2021

கொரோனாவும் ஆவி பறக்கும் இட்லியும்!

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாகையில் உறவினரின் மருந்துக்கடையில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, அரசுப் பணியில் உள்ள ஒருவர், "காலையில் சூடான இட்லியை சாப்பிட்டப்போது உள் நாக்கில் ஒட்டிக்கொண்டது. வலி தாங்க முடியவில்லை. மாத்திரை கொடுங்கள்" என்று கேட்டார். ஆபிஸ் போகும் அவசரத்தில் சூடான இட்லியை சாப்பிட்டிருப்பார் என்கிற எண்ணத்தில் மேற்கொண்டு அவரிடம் நான் எதுவும் விசாரிக்கவில்லை. அதன் பிறகு, சூடான இட்லியை சாப்பிடும்போதெல்லாம் அவரின் நினைவு வந்துவிடும்.

குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை தயக்கமின்றி சாப்பிடக்கூடிய உணவு வகையில் முதலிடம் பிடிக்கும் இட்லி, சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேலாக தென் இந்தியாவில் இருந்து வருவதாக தெரிகிறது.
செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, சாம்பார் இட்லி, குஷ்பு இட்லி, குட்டி இட்லி (மினி இட்லி ) பொடி இட்லி என்ற பெயர்களோடு, இன்னும் பல பெயர்களில் இட்லி இருக்கலாம். 

எங்கள் வீட்டில் உணவுப்பொருட்களை ஆவிப் பறக்க சாப்பிடும் பழக்கம் யாருக்கும் கிடையாது. எனினும், கொரோனா தீவிரமான நேரத்தில் வெந்நீர் குடிப்பது, சூடான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது என்கிற புதிய பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம்.

சாதாரனமாக வைத்து சாப்பிட்ட இட்லியை 'ஹாட் பாக்ஸ்' - ல் வைத்து சாப்பிட ஆரம்பித்து, இப்போது அடுப்பிலிருந்து நேரடியாக தட்டிற்கு மாற்றி ஆவி பறக்க சாப்பிடும் நிலைக்கு சென்றுவிட்டேன். அடுப்பிலிருந்தபடியே இறக்காமல் அப்படியே சாப்பிடும் நிலைக்கு செல்லாததுதான் மிச்சமுள்ளது😀

வீடு, ஹோட்டல் என இரண்டு இடங்களிலும் இட்லியை ஒரே தரத்துடன் தொடர்ந்து தயாரிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நாம் அனைவரும் அனுபவத்தால் அறிந்திருப்போம். அதே நேரத்தில்,  இட்லி எப்படி தயாரிக்கப்பட்டாலும், ஆவி பறக்க அதனை சாப்பிடும்போது அதன் சுவை ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் தான் ஆவி பறக்க சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். 

இப்படி சூடாகச் சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல என்பதோடு, பல வருடங்களுக்கு முன்னால் நெய்விளக்கு கிராமத்தில் ரயிலில் ஏறுவதற்காக அவசரமாக சூடான டீயை குடித்த ஒருவர் இறந்துபோனார் என்கிற தகவலையும் செவிவழிச் செய்தியாக அறிந்திருக்கிறேன். 

மது அடிமையைப்போல் ஆவி பறக்க சாப்பிடும் இட்லியின் சுவைக்கு அடிமையாகிவிட்ட பலர் உண்டென்பதை இப்பதிவின் ஆராம்பத்தில் குறிப்பிட்ட நபர் மற்றும் இன்றைய எனது நிலை இரண்டும் நன்றாக உணர்த்துகிறது!

Friday, October 2, 2020

குற்றவாளிகளும் இன்றைய சமூகமும்!

இன்று காலையில் நீண்ட நாள் கழித்து, நண்பர் ஒருவர் தொடர்புக்கொண்டார்.
பேச்சு பொதுவாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, தற்சமயம் நான் அறிந்த செய்தி குறித்து விசாரித்தேன். 
அந்த செய்தியில் குற்றவாளியாக கருதப்படும் நபர் தனக்கு நண்பர் என்றார். எனக்கு நேரமில்லாததால் மேற்கொண்டு பேசவில்லை.

சுமார், இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியிடம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது, நான் அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு நபரின் பெயரைச்சொல்லி அவர் எனக்கு உறவினர் என்றேன்.
அவர் உடனடியாக, "நாம் இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். நீங்களும் அவரை உறவினர் என்று அறிமுகம் செய்வதற்கோ அல்லது நானும், ஆமாம் அவர் எனது அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்று சொல்லிக்கொள்வதற்கோ, அவர் தகுதியில்லாதவர். அந்த அறிமுகம் தேவையில்லை!" என்றார்.

இந்த சமூகம் குற்றவாளிகளை அங்கீகரிக்க துவங்கிவிட்டதின் அடையாளம்தான்,
குற்றச்செயலில் ஈடுப்பட்டவரை நண்பர் என்று ஏற்றுக்கொள்ளும் நிலை. 

இன்னும் சிலர், "அவன் மோசமானவன் தான். ஆனால், என்னிடம் 'வச்சிக்க' மாட்டான்" என்பார்கள். ஊரிலுள்ள அனைவரைப் பற்றியும் குறை சொல்லும் நபர், நம்மைப் பற்றி பிறரிடம் குறை சொல்ல மாட்டார் என்று நம்புவதற்கு சமமானதுதான், மேலே உள்ள நண்பரின் நம்பிக்கையும்.

காவல்துறையும் நீதித்துறையும் மட்டுமே குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கட்டுப்படுத்தவும் முடியும் என்று கருதிவிட முடியாது. அதில், இந்த சமூகத்திற்கும் பொறுப்புள்ளது.

 சில வருடங்களுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவி ரோட்டில் செல்லும்போது, பலரது முன்னிலையில், கணவர் வெட்டி கொல்லப்படுகிறார். பாதிக்கப்பட்ட மனைவி, பின்பு சொல்லியதாக பத்திரிகையில் வந்த செய்தி, "அந்த இடத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் ஆளுக்கொரு கல்லெடுத்து வீசியிருந்தால், இந்நேரம் எனது கணவர் உயிரோடு இருந்திருப்பார்" 
இதுதான் சமூகம் குறித்தான பார்வை.

 நமது சந்ததியினர் பாதுகாப்புடன் வாழ்வதற்கு, அகிம்சையை போதித்த மகாத்மா பிறந்த நாளில், 'குற்றவாளிகளுக்கு துணை போகமாட்டோம்' என்று உறுதி ஏற்போம்!

Friday, February 14, 2014

நானறிந்த 'ஆர்ஐ சார்'!





6.2.2014  அன்று கருப்பம்புலம் வடகாட்டில் தனது எண்பதாவது வயதில் இயற்கை எய்திய திரு ஆர்.வேணுகோபாலன் (ROAD INSPECTOR) அவர்கள் எனக்கு உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர். நான் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும், அவர்களை சந்திக்காமல் வந்ததில்லை. கடந்த 3.2.2014 மாலை அவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். ஆனால், இரண்டு நாட்களில் அவர்கள் மறைந்த செய்தி வந்து என்னை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. . அவர்களைப் பற்றிய எனது நினைவுகளை இங்கேபதிவு செய்கிறேன் 

.
அந்தக் காலத்தில் எங்கள் கிராமத்தில் படித்தவர்கள் குறைவு. அதோடு, ஆசிரியர் பணியல்லாத அரசுப்பணியில் இருந்தவர்கள் ஒரு சிலரே! எனது பள்ளிப் பருவத்தில் மேஸ்திரியார் என்று அழைக்கப்பட்டதையும். கல்லூரி காலத்திற்கு பிறகு, 'ஆர் ஐ' என்று அழைக்கப்படதையும் இங்கு நினைவுகூர வேண்டும். ஏனெனில், எனது  பள்ளிப்  பருவத்திற்கும் கல்லூரிக் காலத்திற்கும் இடையில் 'நிறைய' படித்தவர்கள்  எங்கள் பகுதியில் உருவாகியதின் அடையாளமே இந்தப் பெயர் மாற்றம். எனது சிறு வயதில் 'ஆர்ஐ சார்' அவர்களுடன் அவ்வளவாகப் பேசிப் பழகியதில்லை. எளிமையாக அதே நேரத்தில் நேர்த்தியாக உடையணியும் பழக்கமுள்ளவர். தினம்தோறும் 'ஷேவ்' செய்து எந்த நேரத்திலும் ஒரே தோற்றத்தில் இருப்பார். தோற்றம் மட்டுமல்ல, பேச்சும் நாகரீகமாக இருக்கும். சத்தம் போட்டு பேசியதையோ, பிறரிடம் சண்டையிட்டதையோ நான் பார்த்ததில்லை. தன்னுடைய வாரிசுகளையும் அப்படி வளர்த்திருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.


அரசுப் பணியாற்றிய காலத்தில் அவர் நினைத்திருந்தால், வசதியாகவும் வளமுடனும் வாழ்ந்திருக்க முடியும். கடைசி வரை நேர்மையாக வாழ்ந்தவர். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நினைப்பு அவரிடம் எப்பொழுதும் இருக்கும். "சம்பளம் வாங்கினோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று  என்னிடம் அடிக்கடி சொல்வார். 'ஆர்ஐ சார்' தவிர்த்து, இதுநாள் வரை என்னிடம் நேரடியாக "மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யுங்கள்" என்று ஊக்கப்படுதியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. வேலைப் பளுவின் காரணமாக நான் சோர்ந்துப் போகும் பொழுதெல்லாம், மக்களுக்கு உதவ வேண்டுமென்கிற அவரின் வார்த்தைகள் என்னுள் ஒலிக்கும் 

 .
எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கு ‘புரவலர்’ நிதி சேர்க்க மிகவும் பாடுபட்டார். திருத்துறைபூண்டி - கடிநெல்வயல் வழித்தடத்தில் பல ஆண்டுகளாக  நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவையை மீண்டும் துவங்குவதற்காக  அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியதை நானறிவேன். நான் அறிந்தவைகள் இவை மட்டுமே. எனக்கு தெரியாமல் இன்னும் எண்ணற்ற நலப்பணிகளை அவர் செய்ததற்கு, அவரின் இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட மக்கள் வெள்ளமே சாட்சி.


ஏறக்குறை இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதய நோயுடன் வாழ்ந்திருந்தாலும் தன்னுடைய பணிகளை ஒருநாளும் அவர் நிறுத்தியதில்லை. இரண்டு மாதத்திற்கு முன்புவரை, இரு சக்கர வாகனத்தித்தில் பயணம் செய்துள்ளார். எளிய உடற்பயிற்சி, அளவான சாப்பாடு, குறித்த நேரத்தில் மாத்திரைகள் உட்கொள்ளுதல் மற்றும் பதற்றமற்ற வாழ்கை இதுவே அவர் கடைபிடித்தவைகள். என்னுடைய நண்பர்களுக்கு அவரைதான் உதாரணமாக சொல்வேன். 


கடைசியாக, தெரு விளக்கை அணைத்துவிட்டு வீடு திரும்பிய போது மயங்கி விழுந்திருக்கிறார் என்பதிலிருந்தே அவரின் சமூக அக்கறையை நாம் அறிந்துக் கொள்ளலாம். இவருக்கு நிகராக இனி யார்? இந்தக் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். 


எத்தனையோ பேர் பிறந்து வாழ்ந்து மறைந்து போகிறார்கள். அதில், 'ஆர்ஐ சார்' போன்ற ஒரு சிலர்தான் வரலாறாகிறார்கள். அவரைப் போல் நாம் வாழ முயற்சிப்பதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்!

Friday, August 17, 2012

ஒலிம்பிக் 2012: தெரிந்ததும், தெரியாததும்!

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துவிட்டது.
இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் சேர்த்து ஆறு பதக்கங்கள் கிடைத்துள்ளது.

2008 பீஜிங்-ல் மூன்று. இப்பொழுது ஆறு, முன்னேற்றம்தான். ஆனால்,2008-ல்  50  வது இடத்திலிருந்து 2012-ல்  55 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். டென்னிஸ் வீரர்களிடையே நடந்த ஈகோ மோதலால் இரட்டையர் பிரிவில் பதக்கம் கிடைக்காமல் போய்விட்டது.
அதிகமாக  எதிர்பார்த்த தீபிகாகுமாரி ஏமாற்றிவிட்டார். உலகளவில் உசைன் போல்ட் எதிர்பார்த்த சாதனையை நிகழ்த்திவிட்டார். சரி, இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும் தானே? என்பவர்களுக்கு அதிகம் தெரியாத செய்தி வருகிறது....
 




ஆஸ்கர் பிஸ்டோரியஸ் என்கிற பெயர் இந்த ஒலிம்பிக்கில்தான் எனக்கு
அறிமுகம்.  ஆஸ்கர் பிஸ்டோரியஸ்க்கு ஒரு வயதிலே பிறவிக் குறைப்பாடுக் காரணமாக இரண்டு கால்களும் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. கார்பன் இழைகளால் செய்த மெலிதான செயற்கைக் கால்களால் ஓடுவதால் 'பிளேடு ரன்னர்' என்று அழைக்கப்படுகிறார்.

தென் ஆப்ரிக்காவின் சார்பில், இந்த ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தில் அரையிறுதி வரை வந்தார். 4 x 400 மீட்டர் போட்டி அரையிறுதியில் இவருக்கு முன் ஓடிவந்து குச்சியை இவர் கையில் கொடுக்க வேண்டிய அஃபெண்ட்ஸே மொகவானே, அடுத்த பாதையில் ஓடிய கென்யாவின் வின்செண்ட் கீலுவுடன் மோதி தடுக்கி விழுந்தார். அந்தக் குச்சி தூரப்போய் விழுந்துவிட்டதால், இவர் கைக்கு கிடைக்காமல்  இவரால் ஓட்டத்தை தொடர முடியவில்லை. இருந்தும், சர்வதேச தடகள கூட்டமைப்பு (ஐ.ஏ.ஏ.எப்.,), தகுதி சுற்றில் வெற்றி பெறாத தென் ஆப்ரிக்க அணியை, பைனலில் ஓட, அனுமதி வழங்கியது. இதில் தென் ஆப்ரிக்காவின் ஜாகெர், டி பியர், வான் ஜில், பிஸ்டோரியஸ் அடங்கிய அணி, கடைசி இடம் (8வது) பெற்றது. இதையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் பிஸ்டோரியசின் கனவு மீண்டும் நிறைவேறாமல் போனது. ஒலிம்பிக் பைனலில் ஓடிய பெருமை மட்டும் கிடைத்தது.




உடல் உறுப்புகள் சரியாக இருந்தும் பலர் தன்னம்பிக்கையில்லாமல் வாழ்கிறார்கள். இவர் பொய்க்கால்களுடன்,  நிஜக் கால்களால் ஒடுபவர்களுடன்  ஒலிம்பிக்கில் ஒடி சாதனைப் புரிந்துள்ளது வியப்புக்குரியதே!

இரண்டு கால்களை இழந்த மனிதர், நடக்க முடியும் என்பதே இதுநாள் வரை எனக்கு வியப்பளிக்கும் செய்தி. அதிலும் ஒலிம்பிக்கில் ஓடுகிறார் என்கிற செய்தியை ஏற்றுக் கொள்ள எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. இந்தச் செய்தி, நம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என்பது உறுதி!

.

Monday, May 14, 2012

அட, இப்படியும் ஒருவர்!

அண்மையில் ஏசி வாங்குவதற்காக குரோம்பேட்டையில் உள்ள பிரபலக் கடையில் விசாரித்தேன். ஸ்டாக் இல்லை, ஆர்டர் கொடுத்தால் மூன்று நாட்களுக்குள் வாங்கித் தருகிறேன் என்றார்கள். ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால், ஐந்து நாட்களுக்கு பிறகு, "எங்களுக்கும் கம்பெனிக்கும் பேமென்ட் பிரச்னை இருக்கு, அதனால அனுப்ப மாட்டேங்கிறாங்க.  வேணும்ன வேற பிரான்ட் யோசிங்களேன்." என்றார்கள். எனக்கு விருப்பமில்லாததால் பணத்தை வாங்கி வந்துவிட்டேன்.

பிறகு  http://www.sulekha.com/ பதிவு செய்தேன். பல்வேறு கடைகளின் போன் நம்பர் எஸ் எம் எஸ் அனுப்பினார்கள். அதில்


Unitech Air Conditioner
 T. Nagar, Chennai - 600017
  Mobile: 9840175547

என்ற  கடையின் நம்பருக்கு போன் செய்தேன். அங்கு எனக்கு கிடைத்தப் பதில்தான் இந்தப் பதிவுக்குக் காரணம்.
நான் கேட்ட ஏசி தன்னிடம் இல்லை என்று சொன்னதோடு, பிரபலக் கடையின் பெயரைச் சொல்லி அங்குச் சென்றால் உடன் வாங்கிவிடலாம் என்றார்.
 நான் " உங்கள் கடைக்கு வரும் கஸ்டமர்களை, அடுத்தக் கடைக்கு வழிக் காட்டும், உங்கள் நல்ல உள்ளத்தைப் பாராட்டுகிறேன்" என்றேன். அதற்கு அவர், " உங்களுக்காக ஆர்டர் கொடுத்து, நான் வாங்கித் தருவதனால் ஒருவாரமாகும். இந்த சம்மர்ல ஒரு வாரம் சாமாளிப்பது எவ்வளவு கஷ்ட்டம்." என்றார்.  நான் தி.நகர் வந்தால் தங்களை சந்திக்கிறேன் என்று நன்றி சொல்லி வைத்துவிட்டேன். அந்த நல்ல மனிதரின் பெயரைக்  கேட்டுத் தெரிந்துக் கொள்ளவில்லை! அப்பொழுது, இப்படி ஒரு பதிவு எழுதப் போகிறேன் என்று நினைக்கவில்லை.

இந்தப் பதிவின் நோக்கம், நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே! மற்றபடி, பிறரைக்  குற்றம் சொல்ல வேண்டாம் என்பதால், மற்றக் கடைகளின் அடையாளத்தைத் தவிர்த்துவிட்டேன்.

Saturday, February 4, 2012

என் கருத்தைச் சொல்ல மாட்டேன்!



அண்மையில், எனது மருத்துவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மிகச் சிறந்த சிந்தனையாளர். நேரம் கிடைக்கும் பொழுது, அவரிடம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. சில நாட்களுக்கு முன்  அவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. பேச்சு இப்படித்தான் ஆரம்பித்தது.

"குழந்தைக்கு பேர் வச்சிட்டீங்களா சார்?"

"நிரஞ்சனா" என்றார் அவர்.

" நிரஞ்சனா-ன்னா என்ன அர்த்தம்?"

"நிரஞ்சனா-ன்னா, அது ஓர்  ஆற்றின் பெயர், புத்தர் அந்த ஆற்றில் குளித்தப் பிறகுதான் ஞானம் பெற்றார்"

"பெயர் வைக்கிறதுங்கிறது ரொம்பக் கஷ்டம். என்னோட பையனுக்கு குழந்தை பிறக்கும் பொழுது, என்ன பெயர் வைக்கிறதுன்னு இப்ப நினைச்சாலே ஒரே குழப்பமா இருக்கு  சார்!"

"அது, உங்க பையனோட பிரச்னை. அதுல நீங்க தலையிடக் கூடாது!"

"ஆமாம் சார், அது அவங்க உரிமை. அதுல நான் தலையிடல. ஆனா, என்னுடைய கருத்தைச் சொல்லலாம் இல்லையா?"

"உங்களோட கருத்துன்னு, நீங்க சொல்றீங்க. ஆனா, உங்கப் பையன் நம்ம அப்பா ஆசைப்பட்டு சொல்லிட்டார். நாம வேறு பேர் வச்சா,  அப்பா மனசு கஷ்டப்படுமேன்னு நினைச்சு, அந்தப் பேரையே வச்சுடுவார். அதனால, நீங்க எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது!" என்றவர் தொடர்ந்து...

"என்னோட முதல் குழந்தைப்  பிறந்தப்பவே,  நேரா எங்க அப்பாகிட்ட போய், நீங்க பேரு ஏதும் வச்சிடாதீங்கன்னு முதல்லையே சொல்லிட்டேன்!"  என்றார்.

  நிரஞ்சனா என்ற ஆற்றில் குளித்தப் பிறகு, புத்தர் ஞானம் பெற்றதாக மருத்துவர் சொன்னார்.  மேற்கண்ட உரையாடல் எனக்கு புது சிந்தனையைக் கொடுத்தது.  ஏற்கனவே,  நான் சொன்னதால்தான் 'அமைதி விரும்பி' வழக்கறிஞர்  படிப்பில் சேர்ந்தான். இனி, என்னுடையக் கருத்துக்களை 'அமைதி விரும்பி'  கேட்காமல்,  நான் சொல்வதில்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.

இது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய மகன் வயதில் உள்ள  பிள்ளைகளின்  பெற்றோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

.

Sunday, January 22, 2012

இப்படியும் ஒரு மருத்துவர்!

வேதாரணியம் பகுதியில் மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' என்று அன்போடு அப் பகுதி மக்களால் அழைக்கப்படும்,  திரு டாக்டர் வி.ஜி.சுப்பிரமணியன் அவர்களைப் பற்றி 'புதிய தலைமுறை' வார இதழ் செய்தி வெளிட்டுள்ளது. மருத்துவர் பற்றி நான் அறிந்த விபரங்களையும் இங்கே பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.




கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து. பின்பு, அந்தக் கிராமத்திலேயே மருத்துவம் பார்க்கும் திரைப்பட கதாநாயகன் போல், வேதாரணியம் அருகே செம்போடை என்கிற கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து. அரசு பள்ளிகளில் கல்விக் கற்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பட்டம் பெற்று,  லண்டனில் பணிபுரிந்து, பின்பு வேதாரணியம் பகுதியில் அரசு மருத்துவனைகளில் பணியாற்றி.  பின்பு,  அரசுப் பணியை விட்டு விலகி  தன்னுடையை சேவை, தான்  பிறந்த மண்ணிலேயே தொடர வேண்டும் என்பதற்காக,   வேதாரணியம் பகுதியிலேயே தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.


 கிராமத்தில் பிறந்தாலும் தனது கிராமத்து மக்களின் மீது அக்கறைக் கொள்ளாமல்  நகரத்தில் மருத்தவம் பார்க்க விரும்பும் மருத்துவர்கள் மத்தியில், தான் பிறந்த கிராமத்திலேயே, அப் பகுதி மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக, வருமானக் கணக்குப் பார்க்காமல், இத்தனை நாள் உழைத்து சம்பாதித்த பணத்தைப் போட்டு  அண்மையில் ஐ.சி.யு. வசதியுடன் ஒரு நவீன மருத்துவமனையை 'நேதாஜி' பெயரில் திறந்துள்ளார். 

இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவமனையில் தங்கி, அங்கு வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு எந்த வித வேறுபாடும் பார்க்காமல், மருத்துவ சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் சேவை அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வாழ்த்துவோம். மேலும், இவரைப் பின்பற்றி புதிதாக மருத்துவப்படிப்பு முடிக்கும் மருத்துவர்கள், பொருளாதாரக் கணக்குப் பார்க்காமல் கிராமத்தில் சேவையாற்ற முன் வர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

இந்த மாதிரி, சமூக சேவை செய்பவர்களை கண்டுபிடித்து பாராட்டி உற்சாகப் படுத்தும் 'புதிய தலைமுறை'க்கு நன்றி தெரிவிப்போம்.

.

Friday, September 2, 2011

செத்தப் பாம்பை அடிக்காதீங்க!

கடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும்  பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே!  ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி  தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற செய்திதான் அது. இதிலென்ன இருக்கிறது, தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கில் போடுவதுதானே சரி என்பவர்கள் மட்டும் அவசியம்  தொடர்ந்து  படியுங்கள்.

 இங்கு  அவர்களைக் குற்றமற்றவர்கள் என்று விவாதிப்பதற்கு  நான் முயலவில்லை. சராசரி மனிதனின்  மனதில்  இந்த விவகாரம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


  தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம் இதோ..

''தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.'

-  இப்படிக்கு தோழர் செங்கொடி.


செங்கொடி பற்றி மக்கள் மன்ற அமைப்பாளர்கள் "சிறு வயது முதல் தங்கள் அமைப்பில் இணைந்து, ஈழத் தமிழர் போராட்டம், காஞ்சி மக்கள் போராட்டம் என பலவற்றில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்" என்கின்றனர். 

இப்படி பிறர் துன்பத்தை தன் துன்பமாகப் பார்க்கும் பெண் இன்று நம்மிடையே இல்லை. இவரின் செயலை நான் நியாப்படுத்தவில்லை. ஆனால், இவரின் நல்ல உள்ளத்தை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு அனுப்பி விட்டு பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவரின் மனநிலையும், அவர்களின் குடும்பத்தாரின் மனநிலையும்,  ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அதனால் தான் மேலே குறிப்பிட்ட சோகம் என்னை வாட்டி வதைத்தது. குறிப்பாக, சுனாமி  நாகையை தாக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்த பொழுது, பகல் முழுவதும் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுவிட்டு, இரவில் தொலைக்காட்சியில் அந்த காட்சியைக் காணும் பொழுது என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்தோடும். அது மாதிரியான நிலைக்கு அற்புதம்மாளின் கெஞ்சலும் செங்கொடியின் மரணமும்  மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்தின் எழுச்சியும் என்னை இட்டுச் சென்றுள்ளது.

பொதுவாகவே வழக்கறிஞர்கள்  போராட்டம் செய்வதை நான் விரும்புவதில்லை. ஏனெனில், ஏன்  இவர்கள் போராடுகிறார்கள்.  நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டியது தானே? என்ற கேள்வி என்னுள் எழுவதால். ஆனால், அவர்கள் இப்பொழுது நடத்தி வருகின்ற போராட்டம் நியாயமானதாக தோன்றியது.


 சென்னை  உயர் நீதிமன்றத்தின்  எட்டு வாரத் தடையும், தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் பார்க்கும் பொழுது மூவருக்கும் தண்டனைக் குறைப்பு கிடைக்கும் போல் தோன்றுகிறது.
சரி, அப்படி என்ன இந்த மூன்று பேரின் உயிரைக்காப்பற்ற  இப்படி அக்கறையாக எல்லோரும் போராடுகிறார்களே என்ன காரணம்? என்று சிந்தித்தால் கிடைப்பது... 




இந்தப் படுகொலைக்கு காராணமாக சொல்லப்படும் விடுதலைப்புலி அமைப்பு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதும். முக்கிய குற்றவாளிகள் படுகொலை நடந்த சமயத்திலேயே கொல்லப்பட்டு விட்டதும். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதும். சம்பத்தப்பட்டவர்கள் பல வருடங்களாக   சிறையில் உள்ளதும். குற்றவாளிள் முழு அளவில் தண்டனைப் பெற்று  விட்டதாகவே மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.




இப்பொழுது, இந்த கொலை சம்பவத்தில் விசரிக்கப்பட்டவர்களும் விசாரணை செய்தவர்களும் வெளியுடும் தகவல்களும். மேலும் , ராஜபட்சேவால்  பல்லாயிரக் கணக்கான  ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதும்.  பல்லாயிரம் பேர் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடப்பதும்.  இப்படி பலவாறாக துன்பத்தை கண்டு  துவண்டு போயிருக்கும் தமிழர்களின் மனதில், இந்த மூவரின் உயிர்  மீதும் கருணை ஏற்படுவது இயற்கையே. 

 



எங்கள் கிராமத்தில் வயல்களுக்கு, அதாவது காடுகளுக்கு நடுவே வீடுகள் அமைத்திருக்கும். எங்கள் வீடும் அப்படித்தான். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டை சுற்றி பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எங்கள் தாத்தா பாம்பைக் கண்டால் அடித்துக் கொன்று விடுவார். அப்படி அவர் பாம்பு அடிப்பதை, ஒருவித பயத்தோடு  பார்த்துக் கொண்டிருக்கும் நானும் எனது தம்பிகளும், அவர் அடித்துப் போட்டப் பாம்பை  ஆளுக்கொரு குச்சியை வைத்துக் கொண்டு 
அடிப்போம். அப்படி நாங்கள் அடிப்பதைப் பார்த்து எங்கள் தாத்தா சொல்லவார். " செத்தப் பாம்பை அடிக்காதீங்க!" என்பார். செத்தப் பாம்பின் மீது கருணையின் காரணமாகவோ, அல்லது  செத்தப் பாம்பிடம் உனது வீரத்தைக் காட்டக் கூடாது என்பதற்காகவோ  சொல்லியிருப்பாரா  என்று  அதன் அர்த்தம் இன்றளவும் புரியவில்லை. 

எது எப்படியோ, 'செத்தப் பாம்பை அடிப்பது தர்மம் அல்ல!' என்பது மட்டும் புரிகிறது!

.

Tuesday, July 5, 2011

கு.க. அறுவை சிகிச்சைக்கு கார் பரிசு!


குடும்பக் கட்டுப்பாடு குறித்து நான் சில விஷயங்களை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பியுள்ளேன். ஆனால், அதை எந்தப் பத்திரிக்கையும் வெளியிட்டது இல்லை. நேற்று நான் படித்து செய்தி, எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. அது என்னவெனில், கு.க. அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர் ஒருவருக்கு, குலுக்கல் முறையில் நானோ கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,மோட்டார் சைக்கிள், டிவி செட்டுகள், மிக்சி வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது.



அவசரப்படாதீங்க, இது தமிழ்நாட்ல இல்ல. ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள ஜூன்ஜுனு மாவட்ட சுகாதார துறை அலுவலகம்தான் இப்படி அறிவித்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய செய்தி. இன்னும், இருபது ஆண்டுகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கையில் நாம் சீனா-வை முந்தி விடுவோம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அட, இதுல மட்டுமாவது உலகத்தில் முதலிடம் பிடிக்கலாம்ன்னு பார்த்தா, அதுக்கும் விடமாட்டாங்க போலிருக்கேன்னு உங்க மனசு சொல்லுதா?

இன்று எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம், எதற்கெடுத்தாலும் அடிபிடி என்கிற சூழ்நிலை. பேருந்து, தொடர் வண்டி, பெட்டிக்கடை முதல் பெரியக் கடைகள் வரை, எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம். இது மேலும் அசுர வேகத்தில் வளராமல் இருக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முந்தைய அரசு குழந்தைப் பெற்றுக் கொண்டால் ஆறாயிரம் ரூபாய்க் கொடுத்தது. ஆனால், கு.க. அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு சொற்பத் தொகையே சன்மானமாகக் கொடுக்கப்படுகிறது.

ஆண்களுக்கான அறுவை சிகிச்சை மிகவும் எளிமையானது, மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால், வாசெக்டமி செய்து கொள்ளும் ஆண்களுக்கு, குறைந்தப் பட்சம் பத்தாயிரம் ரூபாய்க் கொடுக்கலாம். இது பெண்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையை வழங்கலாம். பெண்களின் மீது அக்கறை உள்ள அரசு என்பதால், தமிழ்நாட்டிலும் கூடிய விரைவில் இப்படி ஒரு புரட்சிக்கரமான திட்டத்தை எதிர்ப்பார்க்கலாம் என்று நம்புகிறேன்.

இந்தப் பதிவைப் பாருங்கள்

திருந்தவே மாட்டார்களா?!

மக்கள் பெருக்கத்தின் அபாயம் புரியும்.





Wednesday, June 15, 2011

பின் தொடரும் வியாதி!



தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த வியாதி அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. அதற்கு, உதாரணம் தொலைக் காட்சித் தொடர்களில் முதல் நாள் முடிந்த நிகழ்வின் தொடர்ச்சியை அறிய மறுநாள் ஆவலுடன் காத்திரும் மக்களே சாட்சி.

முன்பெல்லாம், உறவினர்கள் வெளியூருக்குச் சென்றால் வீட்டிலிருந்து வழியனுப்பி வைத்துவிட்டு, நம்முடைய வேலையைப் பார்ப்போம். பிறகு, ஒரு வாரம் கழித்து அவர்களிடமிருந்து 'நல்ல படியாக, ஊர் வந்து சேர்ந்தோம்' என்று ஒரு கடிதம் வரும். ஆனால், இன்று நிலைமை வேறு. வீட்டிலிருந்து அவர்கள் புறப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் நாம் அறிய விரும்புகிறோம். பஸ் கிடைத்ததா, வழியில் சாப்பிட்டார்களா, எப்பொழுது வீடு போய் சேர்ந்தார்கள்? போன்ற விபரங்களை அறிந்து கொள்ள நமது மனது ஆசைப்படுகிறது. அதனால், செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை.

மற்றவர்களின், ஒவ்வொரு அசைவையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். உதாரணமாக, நாம் தொடர்ந்து படித்து வரும் பிளாக்கர், ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ புதிய பதிவுகளிடவில்லை என்றால் அவருக்கு என்ன ஆச்சு? உடல் நலமில்லையோ அல்லது குடும்பத்தில் எவருக்கேனும் பிரச்சினையோ என்பது போன்ற எண்ணங்கள் வந்துவிடுகிறது.

எப்பொழுதோ, உறவினர் போட்டித் தேர்வு எழுதியிருப்பார். அவர் எழுதிய தேர்வை அவரே மறந்திருப்பார். ஆனால், நாம் நினைவு வைத்திருந்து முடிவு என்னாச்சு? என்று அறிய ஆவலோடு தொடர்பு கொள்வோம்.

இது, மற்றவர்கள் மீது உள்ள அக்கறையா அல்லது அடுத்தவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமா? என்று எனக்குப் புரியவில்லை.

Wednesday, May 18, 2011

திருந்தவே மாட்டார்களா?!

மக்களிடம் பொறுமையோ புத்திசாலித்தனமோ இல்லை என்பதற்கு இரண்டு நிகழ்வுகள் கீழே உள்ளன. படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

//பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல, நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம்.(நன்றி: தீராத விளையாட்டுப் பிள்ளை)//

//2011-12 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதல் நாளான திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 3 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மட்டும் அதிகாலை 3 மணி முதலே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக முதல் நாளிலேயே 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.(நன்றி: தினமணி)//


என்ன கொடுமைப் பாருங்கள் காலை மூன்று மணிக்கு விண்ணப்பம் வாங்குமிடத்தில் இருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது. முதலில் விண்ணப்பம் வாங்குபவர்களுக்கு, ஏதாவது முன்னுரிமை உண்டென்று நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ? ஏன் இப்படி சொல்கிறேனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் தனது மகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முதல் நாளே விண்ணப்பம் வாங்க வேண்டும் என்றார். ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் "விண்ணப்பத்தில் உள்ள நம்பரை வைத்துதான் தர வரிசை போடுவார்கள்" என்றார். பிறகு நான் எவ்வளவு விளக்கிச் சொல்லியும், அவர் சமாதானம் ஆகவில்லை என்பது வேறு கதை.

அனைவருக்கும் நிச்சயம் விண்ணப்பம் கிடைக்கும். இன்னும் வேடிக்கை என்னவென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. இவர்கள் அனைவரும் அதிகளவில் படிக்கப்போவது கணினித் துறை சார்ந்தப் படிப்பாகத்தான் இருக்கும். இவர்களுக்கே கணினியைப் பயன்படுத்தி நேரம், பொருளாதாரம் போன்றவைகளை மிச்சம் செய்ய வேண்டுமென்கிற நோக்கம் இல்லை. 31/05/11 அன்று வரை நேரடியாக
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் சமர்ப்பிக்க 3/06/11 அன்றும் கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு
http://www.annauniv.edu/tnea2011/

இவ்வளவு நாட்கள் இடைவெளி இருக்கையில், இப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு விடிய விடிய விழித்துக் கொண்டிருந்து விண்ணப்பம் வாங்க வேண்டிய அவசியமென்ன?

எல்.கே.ஜி. சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்க விடிய விடிய வரிசையில் நின்ற மக்கள் என்று பத்திரிகையில் படிக்கும் போதெல்லாம். அந்தக் கல்வி நிறுவனங்களைப் பற்றி தரக்குறைவாக நினைத்துக் கொள்வேன். ஆனால், அன்று வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள் என்பது இப்பொழுது புரிகிறது!(அட, அவனா இவன்?!)

இதையெல்லாம் சாதாரண படிப்பறிவு இல்லாத மக்கள் செய்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.
இதற்கு மேல், இது குறித்து எழுத மனசு வரவில்லை.
இவர்கள் திருந்த, இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?


Thursday, May 12, 2011

எந்தப் படிப்பில் சேரலாம்...?

கடந்தாண்டு நான் எழுதியதுதான் இந்தப் பதிவு. சில பகுதிகளைத் தவிர்த்த பிறகு, இப்பொழுதும் இது சரியாக உள்ளதாகவேத் தோன்றுகிறது. இனி தொடருங்கள்...

ஒருவழியாக +2 வரை குழப்பமில்லாமல் பிள்ளைகளைப் படிக்க வைத்தாயிற்று, இனி, என்ன படிக்க வைப்பது, எதைப் படிக்க வைத்தால் சீக்கிரம் வேலையும், சமூக அந்தஸ்த்தும் கிடைக்கும் என்று தெரியாமல், பெற்றோர்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலில் இப்படி ஆரம்பிப்பார்கள், "பிள்ளையை எதுல சேர்க்கப் போறிங்க?" உடனே நாம், ஒரு படிப்பின் பேரைச் சொன்னால், நிச்சயமாக அதற்கு அவர்கள்  அளிக்கும் பதில், "எல்லோரும் ஏதேதோ படிக்க வைக்கிறாங்க, நீங்க இப்படி சொல்றீங்களே...?!"  உடனே, நாம் சொன்ன படிப்பின் பாதகங்களை பட்டியலிடுவார்கள். அதே நேரம், எல்லோரும் சேரும் பிரபல படிப்பாக இருந்தால், எதுவும் சொல்லமாட்டார்கள். மேலும், நமக்கு அவர்கள் சில யோசனைகளை வழங்குவார்கள். அவை பெரும்பாலும் நமது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளப்படாமலிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட படிப்பு மட்டுமே சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்டக் கல்லூரி மட்டுமே சிறந்தது என்பதெல்லாம் சரியானவையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தனியார் கல்லூரிகளில் படித்த மருத்துவர்களோ மற்ற துறையைச் சார்ந்தவர்களோ அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், தற்பொழுது நானறிந்த சில துறைகளில், சிறப்பாகவும், ஈடுபாட்டோடும் பணிபுரிந்து வருபவர்களை, விசாரித்ததில் (குறிப்பாக மருத்துவர்கள்) அவர்களில் பெரும் பகுதியினர், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே, மிக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று கவலைப் படவேண்டாம். கிடைக்கின்ற கல்லூரியில், கிடைக்கின்ற பாடத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் படித்தல் நலம்.


எந்தத் துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும், அதை சிறப்பாக படித்தால் மட்டுமே எதிர் காலம் உண்டு. நம்முடைய வாழ்வியல் உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஒரு குறிப்பிட்ட தொழிலை எல்லோரும் செய்தாலும், அதில் ஒரு சிலர் மட்டுமே பேரோடும் புகழோடும் உள்ளனர். அதற்கு காரணம் அந்த தொழில் அல்ல, அந்த தனி நபர்தான். உதாரணத்திற்கு முடி திருத்துபவர் முதல் துணி தைப்பவர் வரை, பொது மருத்துவர் முதல் பல் மருத்துவர் வரை, ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை எல்லாவற்றிலும் தனி நபர்தான் முக்கியமே தவிர அவர்களின் தொழிலோ, படிப்போ அல்ல.

எந்த குழப்பமும் அடையாமல் உங்களுடைய பொருளாதார சூழ்நிலை, பிள்ளையின் திறமை, ஆர்வம், போன்றவைகளை மனதில்க்கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.
படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் எந்த கௌரவத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் சேர்கிறார்கள் அல்லது நமது பிள்ளையை புதிய படிப்பில் சேர்க்க வேண்டுமென்றோ நினைக்காதீர்கள். (சில பெற்றோர், தனது பிள்ளை யாரும் படிக்காதப் படிப்பை படிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்)

பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி & மைக்ரோ பயாலஜி போன்ற இன்னும் சில படிப்புகளுக்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது, முது நிலை மற்றும் டாக்டரேட் வரை படிக்க வேண்டும். அப்பொழுதான் வேலை கிடைக்கும். எனக்குத் தெரிந்து பல புத்திசாலி மாணவர்கள் பயோடெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், டேட்டா என்ட்ரி செய்யும் வேலையில் உள்ளனர்.

முதலில் எல்லா படிப்பிற்கும் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள். பிறகு எது சரியென்று தோன்றுகிறதோ அதில் சேர்த்துவிடுங்கள். உங்களுக்கு பொருளாதார வசதியிருந்தால், சுயநிதிக் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, உடனடியாக சேர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த நிலையை அடையவும், உங்களுக்கு மன அமைதி கிடைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.

கடைசியாக மாணவர்களுக்கான வேண்டுகோள்,  'உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள்!'

கடந்த ஆண்டு எழுதிய பதிவையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் அறிய இங்கே செல்லவும்.

Monday, March 21, 2011

பிறவிக் குணம் மாறுமா?










திரு.தமிழருவி மணியன் அவர்கள் கொஞ்ச நாட்களாக அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். பல வருடங்களாக அவர்களின் நடவடிக்கைகளை கவனித்து நடுநிலையோடு அவர் எழுதி உள்ளதை, நடுநிலையோடு படித்ததால் வந்த சிந்தைனைதான் இங்கே பதிவாக வருகிறது.



பெரும்பகுதி
நான் எழுதுவதெல்லாம் எனது அனுபவத்தில் கிடைத்தவைகள் மட்டுமே. இங்கேயும், என்னுடன் பிறந்தவர்கள், படித்தவர்கள், எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் என்னையும் சேர்த்து பல வருடங்களாக எங்களின் செயல்கள் எப்படி உள்ளது என்று சிந்தித்தேன்.

1. எனது நண்பர் (பெயரைத் தவிர்த்துவிட்டேன்) அவரின் 13-வது வயதில், ஒரு வருடம் மட்டுமே அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதே சிந்தித்து பேசுவார். அவரின் நடையில் ஒரு கம்பீரம் தெரியும்.எல்லோரிடமும் மரியாதையாக பேசுவார். அந்த நண்பரை பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு போக்குவரத்துக் கழகத்தின் கிளை மேலாளராகச் சந்தித்தேன். அப்பொழுதும், நான் பார்த்த குணங்களுடன், பணியில் நேர்மையாகவும், சிறந்த மேலலாளராக பணியாற்றி வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.

2.என்னுடன் படித்த காதர் என்கிற நண்பர், பல வருடங்களாக ஒரே கொள்கையோடு இருக்கிறார். அவர் ஒரு பகுத்தறிவாதி. ஆனால், மனித நேயம் மிக்கவர்.

மோசமான உதாரணங்களைச் சொன்னால், தேவையற்ற பிரச்சினைகள் வரும். அதனால், அவைகளைத் தவிர்க்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது, உங்களுடன் பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இப்போதைய குணம், பல ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்தக் குணம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


'விளையும் பயிர் முளையிலையே தெரியும்' 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' போன்ற வழக்கு மொழிகளையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அண்மையை அரசியல் சூழ்நிலையையும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுதும், ஒருவர் தனது பிறவிக் குணத்தை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று தோன்றுகிறது.

.
படங்கள் உதவி: கூகிள்

Thursday, January 20, 2011

'கார்' காலம்!




கடந்த வருடம் தொடர்ச்சியாக இந்திய அளவில் கார் விற்பனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. "நாடு முன்னேறுகிறது என்று மகிழ்ச்சியடைய வேண்டியதுதானே...!" என்பதுதானே உங்கள் எண்ணம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புறநகருக்கு குடி வந்த பொழுது, தெருக்களில் எங்காவது ஒரு கார் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், இன்று தெருவுக்கு பத்துக்கு மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. குறுகலான சந்துகளில் நேரெதிரே இரண்டு கார்கள் நின்று கொண்டு, யார் எப்படி போவது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. அதிக அளவில் 'L' போர்ட் கார்களைக் கானமுடிகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் நான்கு வருடங்களில் தெருக்களில் வாகனம் போவதோ, சாலைகளில் போக்குவரத்தோ அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது.

இதற்கெல்லாம் காரணம் கார் விலை குறைந்ததுதான் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், அது உண்மையில்லை. முன்பெல்லாம் ஒவ்வொருவரும் முதலில் சொந்த வீடு வாங்க வேண்டும். அதன் பின்பு கார் வாங்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால், இன்று அடுக்குமாடி வீடு வாங்குவதென்றால் கூட, முப்பது முதல் நாற்பது லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இன்றைய நிலையில் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவோர் மட்டுமே வீடு வாங்குவது குறித்து சிந்திக்க முடியும். இன்றைக்கு புதிதாக ஐ.டி. துறையில் வேலையில் சேரும் இளைஞர்களாகட்டும், மத்தியத் தர அரசு ஊழியராக இருந்தாலும் வீடு வாங்க முடியாது என்பது எதார்த்தம். அதனால், மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்குவோர் கூட கார் வாங்குகிறார்கள் அல்லது வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

வாடகை வீட்டில் குடியிருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்கிற சிந்தனை நடுத்தர வர்க்கத்தினரிடையே வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. கையில் இருக்கும் பணத்தோடு வங்கியில் கடன் வாங்கி கார் வாங்குபவர்களும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. சொந்தமாக வீடு இருப்பது கௌரவத்தின் அடையாளமாக இருந்த நிலை மாறி, கார் வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாகி விட்டது. இப்படி எல்லோரும் 'கார் வாங்குவது' கௌரவத்தின் அடையாளமாகக் கருதினால் சென்னையின் போக்குவரத்து என்னாவது? இப்பொழுதே பத்து கிலோ மீட்டர் பயணம் செய்ய ஒரு மணி நேரமாகிறது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தும். இதை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும். இனி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்கும் போதே கட்டாயம் 'கார் பார்க்கிங்' இருக்க வேண்டும் என்பதை கட்டாயப் படுத்தவேண்டும். மேலும், நடுத்தர வர்க்கம் வீடுகள் வாங்கும் விலையில் அரசே குறைந்த விலைகளில் வீட்டைக் கட்டி விற்க வேண்டும். இல்லையெனில், இந்தக் கார் வாங்கும் கலாச்சாரம் நிச்சயம் நம்மையெல்லாம் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சென்னை மற்றும் பெரு நகரங்களில்
வீடுகள் கட்டி குறைந்த விலையில் விற்போம்" என்று வரும் தேர்தலில் வாக்குறுதியளிக்கும் கட்சிக்கே என்னுடைய வாக்கு!

"உனக்கு ஓட்டுரிமை இருக்கான்னு" நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது!

படம் உதவி: கூகுள்!

.

Monday, November 22, 2010

எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு?

எனக்கு தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம். இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

'ஐந்து வயதில் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்காளி' என்று எங்கள் பகுதியில் குறிப்பிடுவார்கள்.

நான் சந்தித்த சகோதர யுத்தத்தை இங்கு சொன்னால் அனைவருக்கும் புரியாது. அதனால், அனைவருக்கும் தெரிந்த உதாரணத்தைச் சொன்னால் மட்டுமே நன்றாக இருக்கும்.


அண்மையில் பா.ம.க. நிறுவனத் தலைவரின் தம்பி, காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை அனைவரும் அறிவோம். ஒரே குடும்பத்தை சார்ந்த ஆறு பேர் கொலைக்கு, சகோதர சொத்துச் சண்டையே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் கொல்லப்பட்டதும், அம்பானி சகோதரர்கள் அடித்துக்கொண்டதும், பங்காளிகள் ராகுல் காந்தியும, வருண் காந்தியும் நேரெதிர் கட்சியில் உள்ளதும்
நாடறியும்.

நண்பர்களிடம் விட்டுக் கொடுப்பவர்கள்கூட, அண்ணன் தம்பியிடம் விட்டுக்கொடுப்பதில்லை என்பதுதான் எதார்த்தம். அண்ணனின் முன்னேற்றத்தை தம்பியோ, தம்பியின் முன்னேற்றத்தை அண்ணனோ தாங்கிக் கொள்ளமுடிவதில்லை. இதற்கு உளவியல் ரீதியாக ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். அதைப்பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்று.

இதை தவிர்க்க முடியாதா என்றால், இனி வரும் காலங்களில் ஒரு குழந்தை இருந்தால் மட்டுமே அது முடியும். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றால் அவர்களுக்கும் நிம்மதி இருக்காது. நீங்களும், கடைசிக் காலத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு இடையே பந்தாடப்படுவீர்கள்.

சரி, "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். உங்கள் சகோதரர்களுடன், உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பழகுங்கள்.

உங்கள் பெற்றோரை "அண்ணன் கவனிக்கவில்லை, தம்பி கவனிக்கவில்லை, நான் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும்?" என்கிற ரீதியில் நடத்தாதீர். இது போன்று, சிந்தித்து நடந்தால் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள், அண்ணன் தம்பி அல்லது தங்கை பிரச்சினைகளுக்கு விதிவிலக்காக இருக்கலாம்.

அண்ணன் தம்பி உறவு என்றதும், உங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயர்கள் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல....! 
இது குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பதிவு மட்டுமே!
.

Wednesday, November 3, 2010

நம்மோடு நரகாசுரன்!


கெட்டவன் அழிந்ததைக் குறிக்கும் மகிழ்ச்சியான பண்டிகைதான் தீபாவளி என்பதை நாம் அறிவோம்.
அப்படி என்றால் கெட்டவனே இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்காது.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நம்மோடுதான் நரகாசுரர்கள்( இனி வில்லன் என்று எழுதுகிறேன், இதுவரை தலைப்புக்காக) இருக்கிறார்கள்.

அண்மையில் கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றார்களே இவர்கள் யார்? இது போன்றவர்கள் எப்போதாவதுதான் செய்திகளில் அடிபடுவார்கள்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நம்மோடு பல வில்லன்கள் கலந்திருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

பெற்றோரை கவனிக்காமல் விடும் பிள்ளைகளும்,
உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு மேலேயோ அல்லது கீழேயோ பணிபுரியும் சிலர், மற்றவரின் மனநிலையும் நியாமும் அறியாமல் அவர்கள் சொல்வதுதான் சரி என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பவர்களும்.

தனக்கு ஒரு ரூபாய் கிடைக்க வேண்டுமென்பதற்காக தொன்னூற்றி ஒன்பது ரூபாயை வீணடிக்கும் ஊழல் பேர்வழிகளும் .

தனது வீட்டில் மிஞ்சியிருக்கும் கழிவுகளை பிளாஸ்டிக் பையில் கட்டி சாக்கடையில் வீசுபவர்களும்.

தனது வீட்டிள் உள்ள தென்னை மட்டை வீணாகி விடுகிறது என்பதற்காக மற்றவர்களைப் பற்றியும் சுற்றுசூழல் போன்றவற்றிலும் அக்கறையில்லாமல் கொல்லைப்புறம் அடுப்பை வைத்து புகைத்து, ஊரையே புகை மண்டலமாக மாற்றி வெந்நீர் போட்டுக் குளிப்பவர்களும்.

நடு வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நேரெதிரே நிற்கும்போது, இருக்கிற சிறு இடைவெளியிலும் ஆட்டோ அல்லது பைக்கை கொண்டு நிருத்துபவர்களும்.

இப்படி நம்மிடையே நிறைய வில்லன்கள் உள்ளார்கள்.
என்னால் பட்டியல் போடவும் முடியவில்லை, உங்களால் படிக்கவும் முடியாது. இந்த வில்லன்கள் திருந்தினால் மட்டுமே உண்மையான தீபாவளி, அதுவரை மற்றவர்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே!

Sunday, October 10, 2010

நீங்க ஜூனியரா, சீனியரா...?

ஜூனியர், சீனியர் பிரச்சனை ஒவ்வொரு நிலையிலும் உள்ளது. அண்மையில் நான் சந்தித்தவர்களில் பலர் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அவற்றின் விளைவே இந்தப்பதிவு.


அண்மையில், திருச்சி அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்கள், விடுதியில் தங்களுக்குள் மோதிக்கொண்ட விபரம் அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் ஜூனியர், சீனியர் வேறுபாடே! கல்லூரியில் மட்டுமல்ல படித்து பணியில் சேர்த்த பின்பும், இது தொடர்வதுதான் வேதனை. எனது உறவினர் பெண், சென்னையின் பிரபல எலும்பு முறிவு சிக்கிச்சை மருத்துவனையில் அண்மையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியில் சேர்ந்தார். அங்கு, அவருக்கு முன்னாள் பணியில் சேர்ந்தவர்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றி, அவர் சொன்னதைக்கேட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். தனியார்த்துறையிலும், இப்படியா என்பதுதான் எனது அதிர்ச்சிக்குக் காரணம்.


அரசு அலுவலகங்களில், ஒருநாள் முன்பாக பணியில் சேர்ந்தாலும் அவர் சொல்வதைத்தான் மறுநாள் சேர்ந்தவர் கேட்கவேண்டும். எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் ஜூனியர் ஜூனியர்தான். சிலர், "நாங்கள் சீனியர் எங்களை வேலைப்பார்க்க சொல்லலாமா?" என்றுகூட கேட்பவர்களும் உண்டு. சீனியர் என்பதால், அதற்குரிய ஊதிய உயர்வை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், எல்லா வேலையும் ஜூனியர்தான் செய்ய வேண்டும் என்பது எப்படி சரியாகும்? இது நாகரிக உலகத்தில் உள்ள அடிமைத்தனமேயன்றி, வேறு என்ன?


சில நல்ல சீனியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்கள் எல்லோருடனும் கலந்து பழகுவார்கள். வேலையையும் பகிர்ந்து 'ஈகோ' பார்க்காமல் செய்வார்கள். சீனியரின் அனுபவம் ஜூனியருக்குப் பயன்படும் என்பது உண்மைதான். அதேபோல், ஜூனியரின் புத்திசாலித்தனத்தை சீனியர் பயன்படுத்தலாமே!


சீனியர் என்று அலட்டிக்கொள்ளும் நபர்களில் பெரும்பகுதியினருக்கு தன்னம்பிக்கை, திறமை மற்றும் புத்திசாலித்தனம் குறைவாக இருக்கும். அதனால்தான், அவர்கள் மற்றவரைவிட தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள, இந்த சீனியர் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.


எனது நண்பர் வீட்டில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஓயாமல் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனால், எனது உறவினர் வீட்டில் உள்ள இரட்டைக் குழந்தைகள், ஒருவரோடு மற்றவர் அன்பாக பழகுவதும், நட்போடும் இருப்பதும் நான் அறிந்தவையே. இதில், நான் புரிந்துகொண்டது எனது நண்பர் வீட்டில் இரட்டையர்களாக இருந்தபோதும் அக்கா, தங்கை என்று பிரித்து சொல்வார்கள். ஆனால், எனது உறவினர் வீட்டில் இன்றுவரை, முதலில் பிறந்தது யார் என்ற விபரத்தைச் சொல்லமாட்டார்கள். அதுவே அவர்களின் ஒற்றுமைக்குக் காரணமாக நான் நினைக்கிறேன்.


இப்படி சீனியர், ஜூனியர் வேறுபாடு மாமியார் மருமகளில்(வீட்டிற்கு முதலில் வந்தவர்) ஆரம்பித்து, மூத்த மாப்பிள்ளை முறுக்கு வரை அடக்கம். இது வலைப்பூக்களிலும் வந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்?!
இந்த மாதிரியான வேறுபாடுகள் பல வழிகளில் நம் முன்னேற்றத்திற்கும், மன அமைதிக்கும் இடையூறாக இருப்பதை நாம் அறிவோம். இனியாவது இந்த மாதிரி வேறுபாடுகள் பார்க்காமல், நட்புடனும் அன்புடனும் இருப்போம்.


ஜூனியரின் வேகமும்,சீனியரின்(ஒரு வினாடி முன்னாள் பணியில் சேர்ந்தவர் அல்ல) விவேகமும் சேர்ந்தால், வெற்றி நிச்சயம்.

அது சரி, நீங்க ஜூனியரா, இல்ல சீனியரா...?

Monday, June 14, 2010

கு.க.அறுவை சிகிச்சைக்கு எதிராக மாதர் சங்கம்!

கடந்த வாரத்தில் பத்திரிகையில் வந்த செய்தியின் சுருக்கம். புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு நிறைமாத கர்ப்பிணிப்பெண் சென்றிருக்கிறார்.
அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இது இரண்டாவது பிரசவம், அறுவை சிகிச்சையின் மூலம்தான் பிரசவம் நடக்கும் என்கிற நிலையில்
அம் மருத்துவனையின் மருத்துவர், சிசேரியன் அறுவை சிகிச்சையோடு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையும் செய்ய முடிவு செய்து அதற்கு அப்பெண்ணின் கணவரின் ஒப்புதலைப் பெற முயர்ற்சித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் கணவர் "வயிற்றுக்குள் உள்ளது ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை, மேலும் மனைவியின் உடல்நிலை சரியில்லை, பிறகு ஆறு மாதம் கழித்து அறுவை சிகிச்சை செய்துகொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர் "குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையும் சேர்த்து செய்துகொண்டால், நான் அறுவை சிகிச்சை செய்வேன் இல்லையெனில், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறியிருக்கிறார். உடனே உறவினர் மூலம் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்ற மாதர் சங்கத்தினர் மருத்துவருக்கு எதிராக போராடி, வேறொரு மருத்துவர் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் அந்த மருத்துவரின் செயல் ஏதோ மனிதாபிமானம் இல்லாத செயலாகத் தோன்றும். ஆனால் அந்த மருத்துவர் அந்த பெண்மணியின் உடல்நிலை மற்றும் சமூகப் பின்னணியைக் கருத்தில் கொண்டுதான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யவேண்டுமென்று சற்று கடுமையாகத் தெரிவித்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன். இந்த செய்தியின் மூலம் நாம் அறிவது யாதெனில் இன்றைக்கும் சாதாரண மக்கள் மத்தியில் குடும்பக்கட்டுப்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லையென்பதே!

அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவதும் அறுவைசிகிச்சை மூலம்தான் குழந்தையை வெளியே எடுக்கமுடியும் என்பதால் அத்துடன் சேர்த்து கு.க. அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர் முடிவு செய்திருக்கிறார். இதில் மனிதாபிமானத்துடன் கூடவே சமூக அக்கறையும் அந்த மருத்துவருக்கு இருப்பது தெரிகிறது. சிசேரியன் அறுவை சிகிச்சைமட்டும் செய்தால் நிச்சயம் மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு அப்பெண்மணி கர்ப்பமாகும் வாய்ப்புகளே அதிகம். ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்று கணவர் குறிப்பிடுகிறார். இந்தநிலையில் மீண்டும் தேவையற்றக் கர்ப்பம் என்பது அப்பெண்ணின் உயிருக்கே பிரச்சினையை உண்டுபண்ணும்.

இந்தப் பிரச்சினை மதார் சங்கத்திற்கு செல்கிறது, அவர்கள் என்ன செய்யவேண்டும் "உனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இப்பொழுது நீ கு.க. அறுவைசிகிச்சை செய்து கொள்வதே சிறந்தது. பெண் குழந்தை என்று பிரித்துப் பார்க்காதே, இன்றைக்கு பெண்கள் இல்லாத துறைகளே இல்லை" என்பன போன்ற அறிவுரை சொல்லி கு.க. அருவைசிகிச்சைக்கு சம்மதிக்க வைத்திருந்தால், நாம் அந்த மாதர் சங்கத்தைப் பாராட்டலாம். ஆனால் அவர்கள், அந்த மருத்துவருக்கு எதிராக கோஷம் போட்டு, இனி மற்ற மருத்துவர்களும் 'நமக்கென்ன' என்ற எண்ணத்துடன் செயல்பட வைக்கும் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள்.

பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்பது தெரியாததால்தான் கு.க.அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பதே அப்பெண்ணின் கணவரின் முடிவு. இதற்கு மாதர் சங்கம் ஆதரவு! என்ன விநோதம் பாருங்கள். பெண்களுக்கு பெண்களே எதிரி.

பெரிய பதிவாக போவதால் குடும்பக்கட்டுப்பாடு குறித்த என்னுடைய எண்ணங்களை வேறு ஒரு பதிவில் தெரிவிக்கிறேன்.

.