Friday, October 15, 2021

மருத்துவம் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் காட்டும் பெண் மருத்துவர்!

1996 - ல்  நாங்கள் வேதாரண்யத்தில் குடியிருந்தபோது, பக்கத்து வீட்டில் ஆசிரியர் தம்பதியினர் வசித்தனர், அவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்தப் பெண்ணிற்கு  ஆறு மற்றும் இரண்டாவது பெண்ணிற்கு மூன்று வயதிருக்கும். அன்று மூன்று வயது  துருதுரு சிறுமியாக எங்களுக்கு அறிமுகமான 'சிவகண்மணி'தான், கடந்த மாதம்  முதுநிலை மருத்துவத்தின் கனவுப் படிப்பான MDRD(கதிரியக்க நோய் கண்டறிதல்) - ஐ டெல்லி Lady Hardinge Medical College - ல் முடித்து, இம்மாதம்  சென்னை SRM மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியேற்றுள்ளார்.

இங்கு அவரை வாழ்த்துவதோடு, அவரைப் பற்றிய என்னுடைய நினைவுகள் மற்றும் தகவல்களை தங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 

இவர், ஏழாம் வகுப்பு வரை வேதாரண்யம் தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்ததோடு, விளையாட்டு மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்துக்கொண்டு நூற்றுக்கணக்கான சான்றிதழ்களையும் பெற்றிருந்த நிலையில், தன்னுடைய மருத்துவராகும் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு,  எட்டு முதல் 12 ஆம் வகுப்பு  வரை விடுதியில் தங்கி திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் பள்ளிகளில் இவரது திறமையின் காரணமாக கல்விக் கட்டணச் சலுகையில் படித்தார். பிறகு கன்னியாகுமரி அரசு மருத்துவத்துக் கல்லூரியில் MBBS முடித்து, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான  நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்றதும் வரலாறு.


டாக்டர் சிவகண்மணியை 2015 -ம் வருடம் அவர் எம்பிபிஎஸ் முடித்து விட்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பிரபல மனநல மருத்துவரும், அவரது சகோதரியுமான டாக்டர் சிவபாக்யா எம்டி அவர்கள் வீட்டில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, பொருளாதாரம் சார்ந்து எங்களுடைய பேச்சு சென்றது. அன்று அவர் சொன்னது இன்றும் என் நினைவில் அப்படியே உள்ளது.  "நமக்கு எளிமையான வாழ்க்கைப்போதும், ஆடம்பர வாழ்க்கை தேவையில்லை. அப்பா அம்மாவிற்கு ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து சமுக சேவை செய்ய வேண்டும் என்கிற விருப்பமுள்ளது. அதற்கு எனது பங்களிப்பும் இருக்க வேண்டும், அதற்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும்!"  என்றார். நாம் எளிமையாக வாழவேண்டும் என்கிற கருத்தை மிகத் தெளிவாகச் சொன்னார்.

 அன்றைய தினத்தில் அவருடைய பெற்றோர், தங்களது இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைத்துக்கொண்டு பொருளாதார ஏற்றத்தாழ்வோடு வாழ்ந்துவந்தனர்.
அதனால், அந்த செய்தி மனதளவில் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதன் பிறகு கஜா புயல் மற்றும் கோவிட் சமயங்களில் டாக்டர் கண்மணியின் பெற்றோர் ஆசிரியர் திரு கருப்பம்புலம் சித்திரவேலு  மற்றும் திருமதி வசந்தா சித்திரவேலு செய்துவந்திருக்கின்ற சேவையை உலகறியும்.

 முன்பு டாக்டர் சிவகண்மணி குறிப்பிட்டப்படி, அவரது பெற்றோர் 'Spring charitable trust' என்கிற பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து சமூகசேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.



அவரது பெற்றோருக்கு மூத்த மருமகன் டாக்டர் ஆர். மெய்ஞானகுமார் எம்டி அவர்கள் கிடைத்து போன்று இரண்டாவது மருமகன்  கிடைப்பதற்கும், டாக்டர் சிவகண்மணி MD(RD) அவர்கள் மருத்துவம் மற்றும் சமூக சேவை இரண்டிலும்  சிறந்து விளங்குவதற்கு உற்றத் துணையாக வாழ்க்கைத்துணை அமைவதற்கும் வாழ்த்துவதோடு💐 இயற்கையிடமும் வேண்டுகிறேன்!🙏
(டாக்டர் சிவகண்மணி அவர்களின் +2 தேர்வு நேரத்தில், நான் எழுதிய கடிதத்தின் நகல் முதல் படமாக உள்ளது)

No comments:

Post a Comment