Friday, May 27, 2011

இது முடிவல்ல ஆரம்பம்...!

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. நம் அல்லது நம்முடைய உறவினர்,நண்பர்களின் பிள்ளைகளின் தேர்வு முடிவு வந்திருக்கும். இந்த நேரத்தில், நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போம்.

முன்பெல்லாம் தேர்வு முடிவு வெளியானால் "பாஸா?" என்று கேட்ப்பார்கள். இப்பொழுது "எத்தனை மார்க்?" என்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும். இதிலும் சில பிரச்சினைகள் வருகிறது. அது என்னவென்றால், அதிக அளவு மதிப்பெண் எடுத்தவர்களை எல்லோரும் பாராட்டுவதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விடுவதும் தான்.

இந்த வருடம் முதல் மதிப்பெண் 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு, நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ரம்யா - ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். சங்கீதா - முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம், மின்னல்விழி - செய்யாறு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர். விபரம் அறிய பார்க்க: தினமணி

இவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இவர்கள் +2 தேர்விலும் இந்த மாதிரி முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பத்தாம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்றவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த சதவிகிதம் மதிப்பெண் பெறுவதில்லை என்பதை அனுபவப் பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதே மாதிரி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அப்படியே இருந்து விடுவதுமில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த என்னுடைய நண்பர் ஒருவர், இன்று ஆடிட்டராக உள்ளார்.

சிலர், +1,+2 மட்டும் ரெசிடென்சியல் பள்ளிகளில் சேர்ப்போம் என்று சேர்த்து விடுகிறார்கள். அப்படி சேர்க்கக் காரணம். அந்தப் பள்ளிகளின் விளம்பரங்கள். அவர்கள் பள்ளியில் பத்து, இருபது மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் +1 சேர்க்கையின் பொழுதே மிகச் சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். சுமாராக ஆயிரம் மிகச் சிறந்த மாணவர்களில், பத்து இருபது பேர் மேற்படி மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மேலும், சுமாராக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதில் மாணவர்களுக்கு மன ரீதியான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும். எனவே, பிள்ளைகளின் மனப்பூர்வமான விருப்பமில்லாமல்(முதலில் தலையாட்டிக்கொண்டு சேர்ந்து விடுவார்கள், பின்பு அது சரியில்லை இது சரியில்லை என்பார்கள்) இந்த மாதிரி விடுதிகளில் சேர்ப்பது எதிர்ப்பார்த்த முடிவைத் தராது என்பதே எனது அனுபவம்.

எனவே,அதிக மதிப்பெண் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றப் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நாம் சொல்ல வருவது 'இது முடிவல்ல ஆரம்பம்' என்பதே!



Wednesday, May 25, 2011

கல்லூரியில் சேரும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!



+2 தேர்வு முடிவு வந்து எல்லோரும் கல்லூரியில் சேரும் நேரம். இப்பொழுது, மாணவர்களும் பெற்றோரும் மேற்கொண்டு எந்த படிப்பில் சேர்வது என்பதில் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பார்கள். கடைசியில் ஒருவாழியாக தனக்குப் பிடித்த, தனது பெற்றோருக்குப் பிடித்த அல்லது தனது நண்பர்கள் சேருகின்ற ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்து விடுவார்கள். அப்பாடா, ஒரு வழியா பிள்ளையை கல்லூரியில் சேர்த்தாகிவிட்டது. இனி கவலையில்லை. பணம் மட்டும் கட்டினால் போதும் என்று பெற்றோர்கள் நினைத்தால். அப்பொழுதான் வரும் பிரச்சினை. கல்லூரியிலிருந்து வந்து "எனக்கு, இந்த படிப்பு பிடிக்கவில்லை" என்பார்கள். பெற்றோருக்கு மிளகாயைக் கடித்த மாதிரி இருக்கும். இது அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் நிகழ்வல்ல. இன்று அதிகளவில், என் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் நடப்பதால்தான் இந்தப் பதிவு. சில உதாரணங்களை இங்கே பார்ப்போம்.

எனது நண்பரின் மகன் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் BDS முதலாமாண்டு தேர்வில் வெற்றிப் பெற்ற பிறகு, தனக்கு படிப்பு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அவர்கள் தனியாகவும், நண்பர்கள் மூலமும் எடுத்துச் சொல்லியும், அந்த மாணவர் கேட்கவில்லை. பிறகு, அவர் விருப்பப் படியே B.Sc. (nautical science)-ல் சேர்ந்து படித்து, இப்பொழுது ஒரு தனியார் கம்பெனியில் பயிற்சியில் சேர்ந்துள்ளார்.

இன்னொரு நண்பர் மிகப் பிரபலமான என்ஜினியரிங் கல்லூரியில் மிகச் சிரமப்பட்டு சேர்த்து விட்டார். அந்தப் பெண்ணும் ஒரு வருடம் கூடப் படிக்கவில்லை. படிப்பைப் பாதியில் விட வேண்டிய சூழ்நிலை வந்து வந்துவிட்டது.

இன்னொரு மாணவனும் இதே நிலை வந்தது. படிப்பு பாதியில் நின்று விட்டது. இப்பொழுது வேறு கல்லூரியில் இடம்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு நண்பரின் மகன் +1 யில் சேரும் பொழுது கணினி அறிவியல் பாடம்தான் படிப்பேன் என்று அடம்பிடித்து பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தப் பிறகு, "நான் டாக்டருக்குப் படிக்க வேண்டும். என்னை அறிவியல் பிரிவில் சேர்த்து விடுங்கள். இல்லையெனில் என் வாழ்வே பாழாகிவிடும்" என்றான். அவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு பிறகு மீண்டும் மறு வருடம் +1 யில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

இன்னொரு மாணவன் தான் விரும்பிய B.Tech(IT) யில் சேர்ந்து முதலாமாண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்டது இன்னும் சோகம்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டுப் போகலாம். இதிலெல்லாம் மற்ற மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. எனவேதான், அரசு இந்த வருடம் முதல், எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து ஒரு மாணவர் விலகும் நிலையில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.. விரிவாக அறிய தினமணி பார்க்கவும்.

இது மட்டும் இவர்களைத் திருத்தி விடுமா என்றால், அதற்கான வாய்ப்பு குறைவே. ஏனெனில், மேற்கண்ட உதாரணத்தில் ஏகப்பட்ட பணத்தை இழந்த பிறகுதான், அந்த மாணவர்களும் பெற்றோரும் வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கல்லூரியில் சேரும் முன்பு, நாம் சேருகிற படிப்பின் பாடத்திட்டம், வேலைவாய்ப்பு, சமூகத்தில் உள்ள மரியாதை போன்றவைகளை நன்கு ஆராய்ந்து. அதன் பிறகு, ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். அது மாணவனின் சம்மதத்தோடு கூடிய பெற்றோரின் முடிவாக இருத்தல் நலம். இப்பொழுது எல்லோரும் "பிள்ளைகள் ஆசைப்படுவதில் சேர்த்து விடுங்கள்" என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி சேர்த்தால், அது நூறு சதவிகிதம் சரியாக அமைவதில்லை என்பதே என்னுடைய எண்ணம்!

Wednesday, May 18, 2011

தமிழனைத் தலை நிமிரச் செய்த சாதனைப் பெண்!



அண்மையில் வெளிடப்பட்ட ஐ.ஏ.எஸ். தேர்வில், இந்தியா அளவில் முதலிடம் பெற்று தமிழகத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த, செல்வி திவ்யதர்ஷினி அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். (தமிழகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் விபரம் அறிய பார்க்க: தினமணி)

இவர், சென்னை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் உள்ள 'சீர்மிகு சட்டப் பள்ளி' யில் (SCHOOL OF EXCELLENCE IN LAW) பி.ஏ.,பி.எல்., (ஹானர்ஸ்) முடித்தவர் என்ற தகவல், மகிழ்ச்சியான ஒன்று. ஏனென்றால், 2002 ஆம் ஆண்டு இந்தியா அளவில், தமிழகத்தில் மிகச் சிறந்த சட்ட வல்லுனர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில், முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்பொழுது விதைக்கப்பட்டது இப்பொழுதான் அறுக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.


+2 தேர்வு முடிவு வந்திருக்கும் நிலையில், இந்தச் செய்தி பல்வேறு சிறந்த மாணவர்களை சட்டக்கல்வி பக்கம், திரும்பிப் பார்க்க வைக்கும் என்று நம்புவோம்.

எனக்குத்
தெரிந்த நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்ற போதும், யாரும் சட்டக்கல்வி பயில விரும்புவதில்லை. காரணம் கேட்டால், "சட்டக் கல்வி பயிலும் மாணவர்களிடம் ஒழுக்கம் இருக்காது. அடாவடியாக நடந்து கொள்வார்கள். நல்ல மாணவர்கள் கூட கெட்டு போய்விடுவார்கள்" என்பார்கள்.

'அமைதி விரும்பி' 2006 ஆம் வருடம் 93 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற போதும், இன்ஜினியரிங் அல்லது மருத்துவக்கல்வியில் சேர்க்காமல், சட்டக் கல்வியில் சேர்த்தோம். அப்பொழுதெல்லாம், இந்தளவுக்கு இந்த சட்டப்பள்ளி பலரால் அறியப்படவில்லை.

நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் "அமைதியை, சென்னையில் உள்ள சட்டப் பள்ளியில் பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) சேர்த்து விட்டிருக்கிறேன்" என்றேன். அதற்கு அவர் "ஏதோ பிரைவேட் காலேஜ் போல, நீங்க கவர்மென்ட் காலேஜ்ல சேர்த்திருக்கலாமே?" என்றார்.

சட்டப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது 2002 -ல், நான் சொன்னது 2006 - ல். ஏன், இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள வழக்கறிஞரிடமே, இந்தக் கல்விநிறுவனம் பற்றி என்னால் புரிய வைக்க முடியவில்லை. பிறகு, எனது உறவினர்கள், நண்பர்களிடம் எப்படி புரிய வைக்க முடியும். ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றவர்கள் என் செயலை பைத்தியக்காரத் தனமாகவே நினைத்தார்கள். இவையெல்லாம், ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், நம்மிடையே சட்டக்கல்விக் குறித்த விழிப்புணர்வு சுத்தமாக இல்லை.

இடையில் 2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை வேறு, சட்டப்படிப்பை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. கடந்த வருடம், ஐந்தாண்டு பி.எல். படிப்பில் சேர்வதற்கு குறைந்த பட்ச மதிப்பெண் ஐம்பது சொச்சமே! இங்கே பார்க்கவும்.

கொடுமை என்னவென்றால் 70, 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆர்ட்ஸ் காலேஜில் படித்துவிட்டு வேலையில்லாமல் சங்கடப்படுகிறார்கள். சட்டக்கல்வி ஒரு தொழிற்கல்வி என்பதே பலருக்குப் புரிவதில்லை. மேலும் கட்டணமும் மிக மிகக் குறைவு என்பது, இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

இன்றும் கூட சட்டக்கல்வி பயின்றால் 'கோர்ட்டில் நீட்டி முழங்கி வசனம் போல் பேச வேண்டும்' என்று நினைப்பவர்களே அதிகம். இது சினிமாக் காட்சிகளால் வந்தப் பாதிப்பு! கோர்ட்டுக்கு செல்லாமல் எண்ணற்ற வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்ளலாம். அது குறித்து 'வீடுதிரும்பல்' திரு மோகன்குமார் சார் விரைவில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனியாவது சட்டக்கல்வியின் மேன்மையை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, தலை சிறந்த மாணவர்களை சட்டக்கல்விப் பக்கம் திருப்பி விட நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது.

அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும். 044 - 24641212 / 24641919. மேலும், தகவல் அறிய http://www.tndalu.ac.in/

2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை, தமிழர்களுக்கு தலைக் குனிவை உண்டாகியது. ஆனால், இப்பொழுது அதே சட்டம் பயின்ற, செல்வி திவ்யதர்ஷினி தமிழனைத் தலை நிமிரச் செய்திருக்கிறார்!




படம் உதவி: கூகிள் & அமைதி விரும்பி.

திருந்தவே மாட்டார்களா?!

மக்களிடம் பொறுமையோ புத்திசாலித்தனமோ இல்லை என்பதற்கு இரண்டு நிகழ்வுகள் கீழே உள்ளன. படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

//பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல, நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம்.(நன்றி: தீராத விளையாட்டுப் பிள்ளை)//

//2011-12 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதல் நாளான திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 3 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மட்டும் அதிகாலை 3 மணி முதலே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக முதல் நாளிலேயே 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.(நன்றி: தினமணி)//


என்ன கொடுமைப் பாருங்கள் காலை மூன்று மணிக்கு விண்ணப்பம் வாங்குமிடத்தில் இருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது. முதலில் விண்ணப்பம் வாங்குபவர்களுக்கு, ஏதாவது முன்னுரிமை உண்டென்று நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ? ஏன் இப்படி சொல்கிறேனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் தனது மகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முதல் நாளே விண்ணப்பம் வாங்க வேண்டும் என்றார். ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் "விண்ணப்பத்தில் உள்ள நம்பரை வைத்துதான் தர வரிசை போடுவார்கள்" என்றார். பிறகு நான் எவ்வளவு விளக்கிச் சொல்லியும், அவர் சமாதானம் ஆகவில்லை என்பது வேறு கதை.

அனைவருக்கும் நிச்சயம் விண்ணப்பம் கிடைக்கும். இன்னும் வேடிக்கை என்னவென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. இவர்கள் அனைவரும் அதிகளவில் படிக்கப்போவது கணினித் துறை சார்ந்தப் படிப்பாகத்தான் இருக்கும். இவர்களுக்கே கணினியைப் பயன்படுத்தி நேரம், பொருளாதாரம் போன்றவைகளை மிச்சம் செய்ய வேண்டுமென்கிற நோக்கம் இல்லை. 31/05/11 அன்று வரை நேரடியாக
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் சமர்ப்பிக்க 3/06/11 அன்றும் கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு
http://www.annauniv.edu/tnea2011/

இவ்வளவு நாட்கள் இடைவெளி இருக்கையில், இப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு விடிய விடிய விழித்துக் கொண்டிருந்து விண்ணப்பம் வாங்க வேண்டிய அவசியமென்ன?

எல்.கே.ஜி. சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்க விடிய விடிய வரிசையில் நின்ற மக்கள் என்று பத்திரிகையில் படிக்கும் போதெல்லாம். அந்தக் கல்வி நிறுவனங்களைப் பற்றி தரக்குறைவாக நினைத்துக் கொள்வேன். ஆனால், அன்று வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள் என்பது இப்பொழுது புரிகிறது!(அட, அவனா இவன்?!)

இதையெல்லாம் சாதாரண படிப்பறிவு இல்லாத மக்கள் செய்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.
இதற்கு மேல், இது குறித்து எழுத மனசு வரவில்லை.
இவர்கள் திருந்த, இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?


Tuesday, May 17, 2011

இது நல்ல (ஏ)மாற்றம்...!



இந்த வருட தேர்தல் ஆரம்பித்ததிலிருந்து ஏமாற்றமும் மாற்றமும் நிறைய நிகழ்ந்துள்ளது . அப்படி என்னதான் நடந்தது என்று சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

முதலில் தேர்தல் தேதி. குறைந்த நாட்கள் இடைவெளியில் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டவுடன், எல்லோருக்கும் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால், குறைந்த நாட்கள் என்பதால் மக்களின் அன்றாட வாழ்விற்கு இடையுறு ஏற்படாமலும், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் குறைந்த உழைப்பிலும் தேர்தல் முடிந்தது நல்ல மாற்றமாக அமைந்தது.

பணத்தை செலவழித்து வெற்றிப் பெறலாம் என்று நினைத்தவர்களுக்கு தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் ஏமாற்றம் தந்தது. ஆனால், இந்தக் கெடுபிடிகளால் தேர்தலில் வீண் ஆடம்பரம், கட் அவுட், ஒளிப் பெருக்கிகளின் இரைச்சல், மின்சார இழப்பு (முன்பெல்லாம் தெருவுக்கு தெரு உயர் கோபுர விளக்குகள் அமைத்து மின்சாரத்தை வீணடிப்பார்கள்) வாகனங்களின் அணிவகுப்பு, சுவர் விளம்பரம், வேட்பாளர்களின் செலவு போன்றவைகள் குறைந்தது போன்றவைகள் நல்ல மாற்றம்.

தேர்தல் நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட நாட்கள் அதிகமாக இருந்தது ஏமாற்றம். ஆனால், அதிக நாட்கள் இருந்தக் காரணத்தால், வாக்கு எண்ணிக்கையின் பொழுது விரிவான ஏற்பாடு செய்வதற்கு அவகாசம் கிடைத்தது. தேர்தலுக்கு பின்பு வரும் சண்டை சச்சரவு குறைந்தது. இது நல்ல மாற்றம்.

தேர்தல் கணிப்பு வெளியிட்ட பெரும்பகுதியினரின் கணிப்புக்கு கிடைத்து ஏமாற்றம் . ஆனால், கடந்தத் தேர்தலில் நடந்தது போல் அல்லாமல் பெரும்பான்மை அரசு அமைந்தது நல்ல மாற்றம்.

தேர்தல் முடிவுக்கு பிறகு, இருப்பத்தி ஏழு அமைச்சர்கள்தான் பதவி ஏற்பார்கள் என்று ஆருடம் சொன்னவர்களுக்கு ஏமாற்றம். ஆனால், ஒன்பதாம் எண் மட்டுமல்ல எல்லா எண்ணும் ராசிதான் என்று முதலமைச்சர் நிறுபித்தது நல்ல மாற்றம்.

ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்தான் அதிகளவில் அமைச்சர்களாவார்கள் என்று ஆளாளுக்கு ஒரு பட்டியல் சொன்னவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம். ஆனால், புதியவர்கள் பலரை அமைச்சர்களாக நியமித்து. நம் பக்கத்து வீட்டுக்காரர் அல்லது உறவினர் போன்றத் தோற்றத்தில் எளிமையாக அவர்கள் இருப்பது தமிழக அரசியலில் ஏற்பட்ட நல்ல மாற்றம்.

கம்னியுஸ்ட்களும் பி.ஜே.பி. தலைவர்களும் எதிரிகள் என்பவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம். ஏனெனில், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் திரு மோடியும் திரு ராஜாவும் அருகருகே அமர்ந்து பேசியது இந்திய அரசியலில் நல்ல மாற்றம்.

இப்படியே தேர்தல் குறித்து, இன்னும் நிறைய எழுதுவேன் என்று நினைப்பவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம். ஏனெனில், இனி இப்போதைக்கு தேர்தல் மற்றும் அரசியல் பதிவு எழுதுவதில்லை என்ற முடிவை நான் எடுத்திருப்பது நல்ல மாற்றம் தானே?!

.




Saturday, May 14, 2011

ஏமாற்றிப் பெற்ற வெற்றி!


இந்தத் தேர்தல் முடிவு யார் எதிர்ப்பார்த்தார்களோ இல்லையோ , இவ்வளவு பெரிய வெற்றியை தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு அளிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. காரணம் தமிழக மக்கள் இப்படி தடாலடியாக மாறுவார்கள் என்று நம்பவில்லை. அந்தப் பயத்தில்தான் ஏகப்பட்ட விழிப்புணர்வு பதிவுகளைப் போட்டேன்.

இந்த வெற்றிக் குறித்தும், திமுக கூட்டணியின் தோல்விக் குறித்தும் அலசி ஆராய்வது அரசியல் வல்லுனர்களின் வேலை. அதை நாம் கையிலெடுக்க வேண்டாம்.

இந்தத் தேர்தலில் எனது பதிவுகளுக்கு கிடைத்த வெற்றி எப்படிக் கிடைத்தது என்பதை மட்டும் இங்கு பார்க்கலாம்.
அப்படி எனது பதிவுக்கு கிடைத்த வரவேற்புக்கு காரணம். பிறரை எப்படி ஏமாற்றுவது என்று நான் கற்றுக் கொண்ட தந்திரம்தான் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை.

தேர்தல் குறித்து நான் எதுதிய பதிவுகளை முதலில் பார்ப்போம்.

நான் எழுதியவைகளிருந்து, மாதிரிக்கு சில செய்திகளை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளேன். முழுவதும் அறிய அந்தந்த பதிவுகளுக்கு சென்று படிக்கவும்.

வரிசைப்படி தேதி வாரியாக...


யாருக்கு என் ஒட்டு!

//இலவசமா, என்ன கொடுக்கலாம்னு அறிவிக்க, அரசியல் வல்லுனர்கள் 'ரூம்' போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நகைச்சுவையா சிந்திக்க அவங்க இருக்கிறதால, நாம் கொஞ்சம் மக்களுக்காக பொறுப்போடு சிந்திப்போம்.//

இலவச அறிவிப்புத்தான் தெரியுமே உங்களுக்கு.



தேர்தல் தேதியும் விளைவுகளும்!

//அரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.//


தப்பித்துக் கொண்டார்கள் தானே!


அனைத்துத் தொகுதிகளின் தேர்தல் முடிவு!

//எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள். கட்சி, சின்னம், ஜாதி, போன்றவை இந்தத் தேர்தலில் எடுபடாது. அதற்காக, சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிபெறுவார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.//

இப்படி நான் எழுதக் காரணம். இது ஒரு விழிப்புணர்வு பதிவு என்கிற மாதிரி எழுதினேன். ஆனால், இப்பொழுது ஜாதியக் கட்சிகளும், பிரபலமான சின்னம் கொண்ட கட்சிகளும் வெற்றிப் பெறவில்லை. அதே நேரம் சுயேட்சைகள் வெற்றிப் பெற முடியாது என்பதும் என் கணிப்பே.


விவசாயம் செய்வோம், வாருங்கள்...!

//நாம் ஒட்டுப்போடும் வேட்பாளர் தோற்க கூடாது என்கிற எண்ணத்தில், யார் வெற்றிப் பெறுவாரோ அவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்பவர்களும் உண்டு. இது போல், கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன்.//

இப்ப பாருங்க அமோகமா ஜெயிச்சிருக்கிறார். எப்படி, நான் சொன்னது சரிதானே?

//விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!//

உண்மைதானே? களைகளைச் சரியாகப் பறித்து விட்டார்கள் தானே!


என்ன நடக்கும், முப்பது நாட்கள் இடைவெளியில்?

//மாற்றுக் கட்சி தொண்டர்கள் மேலுள்ள அர்த்தமற்ற பகைமை மறந்து/மறைந்து போகும். அதனால், சண்டை சச்சரவு குறையும்.//

இது உண்மையாகவே தோன்றுகிறது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு இன்றளவில் ஒரு பிரச்சினையுமில்லை.

//ஒரு மாதக் காலமும் 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம்' என்று அனைத்துக் கட்சி தலைவர்களும்,
தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம்.//

இதுவும் உண்மைதானே?! அப்படித்தானே நடந்தது?



சரி, தலைப்புக்கு வருவோம்....
தேர்தல் பதிவுகளைத் தவிர்த்து, இதுவரை நான் எழுதிய பிற பதிவுகளை, பத்து இருபது பேருக்கு மேல் படிக்க மாட்டார்கள். ஆனால், என்னுடைய தேர்தல் பதிவுகளை ஆயிரக் கணக்கானவர்கள் படித்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று என்றால், நான் எழுதிய பதிவுக்கும், தலைப்புக்கும் அப்படி ஒன்றும் நேரடித் தொடர்பு இல்லை. பெரும்பகுதியானவர்கள், தலைப்பைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் மட்டுமே! இது, நான் வேண்டுமென்றே செய்த ஒன்றுதான். அதனால்தான், உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று என் மனசாட்சி சொல்லியதால் இந்தப் பதிவு. உண்மையை ஒத்துக் கொண்டால் தண்டனைக் குறைவாமே:-)))?!

Thursday, May 12, 2011

எந்தப் படிப்பில் சேரலாம்...?

கடந்தாண்டு நான் எழுதியதுதான் இந்தப் பதிவு. சில பகுதிகளைத் தவிர்த்த பிறகு, இப்பொழுதும் இது சரியாக உள்ளதாகவேத் தோன்றுகிறது. இனி தொடருங்கள்...

ஒருவழியாக +2 வரை குழப்பமில்லாமல் பிள்ளைகளைப் படிக்க வைத்தாயிற்று, இனி, என்ன படிக்க வைப்பது, எதைப் படிக்க வைத்தால் சீக்கிரம் வேலையும், சமூக அந்தஸ்த்தும் கிடைக்கும் என்று தெரியாமல், பெற்றோர்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலில் இப்படி ஆரம்பிப்பார்கள், "பிள்ளையை எதுல சேர்க்கப் போறிங்க?" உடனே நாம், ஒரு படிப்பின் பேரைச் சொன்னால், நிச்சயமாக அதற்கு அவர்கள்  அளிக்கும் பதில், "எல்லோரும் ஏதேதோ படிக்க வைக்கிறாங்க, நீங்க இப்படி சொல்றீங்களே...?!"  உடனே, நாம் சொன்ன படிப்பின் பாதகங்களை பட்டியலிடுவார்கள். அதே நேரம், எல்லோரும் சேரும் பிரபல படிப்பாக இருந்தால், எதுவும் சொல்லமாட்டார்கள். மேலும், நமக்கு அவர்கள் சில யோசனைகளை வழங்குவார்கள். அவை பெரும்பாலும் நமது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளப்படாமலிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட படிப்பு மட்டுமே சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்டக் கல்லூரி மட்டுமே சிறந்தது என்பதெல்லாம் சரியானவையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தனியார் கல்லூரிகளில் படித்த மருத்துவர்களோ மற்ற துறையைச் சார்ந்தவர்களோ அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், தற்பொழுது நானறிந்த சில துறைகளில், சிறப்பாகவும், ஈடுபாட்டோடும் பணிபுரிந்து வருபவர்களை, விசாரித்ததில் (குறிப்பாக மருத்துவர்கள்) அவர்களில் பெரும் பகுதியினர், தனியார் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனவே, மிக சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று கவலைப் படவேண்டாம். கிடைக்கின்ற கல்லூரியில், கிடைக்கின்ற பாடத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் படித்தல் நலம்.


எந்தத் துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும், அதை சிறப்பாக படித்தால் மட்டுமே எதிர் காலம் உண்டு. நம்முடைய வாழ்வியல் உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஒரு குறிப்பிட்ட தொழிலை எல்லோரும் செய்தாலும், அதில் ஒரு சிலர் மட்டுமே பேரோடும் புகழோடும் உள்ளனர். அதற்கு காரணம் அந்த தொழில் அல்ல, அந்த தனி நபர்தான். உதாரணத்திற்கு முடி திருத்துபவர் முதல் துணி தைப்பவர் வரை, பொது மருத்துவர் முதல் பல் மருத்துவர் வரை, ஆசிரியர் முதல் அரசியல்வாதி வரை எல்லாவற்றிலும் தனி நபர்தான் முக்கியமே தவிர அவர்களின் தொழிலோ, படிப்போ அல்ல.

எந்த குழப்பமும் அடையாமல் உங்களுடைய பொருளாதார சூழ்நிலை, பிள்ளையின் திறமை, ஆர்வம், போன்றவைகளை மனதில்க்கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.
படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் எந்த கௌரவத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் சேர்கிறார்கள் அல்லது நமது பிள்ளையை புதிய படிப்பில் சேர்க்க வேண்டுமென்றோ நினைக்காதீர்கள். (சில பெற்றோர், தனது பிள்ளை யாரும் படிக்காதப் படிப்பை படிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்)

பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி & மைக்ரோ பயாலஜி போன்ற இன்னும் சில படிப்புகளுக்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது, முது நிலை மற்றும் டாக்டரேட் வரை படிக்க வேண்டும். அப்பொழுதான் வேலை கிடைக்கும். எனக்குத் தெரிந்து பல புத்திசாலி மாணவர்கள் பயோடெக் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எந்த வேலைக்கும் செல்லமுடியாமல், டேட்டா என்ட்ரி செய்யும் வேலையில் உள்ளனர்.

முதலில் எல்லா படிப்பிற்கும் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அனுப்புங்கள். பிறகு எது சரியென்று தோன்றுகிறதோ அதில் சேர்த்துவிடுங்கள். உங்களுக்கு பொருளாதார வசதியிருந்தால், சுயநிதிக் கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கினங்க, உடனடியாக சேர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகள் சிறந்த நிலையை அடையவும், உங்களுக்கு மன அமைதி கிடைக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்.

கடைசியாக மாணவர்களுக்கான வேண்டுகோள்,  'உங்களுடைய பலம் மற்றும் பலஹீனம் அறிந்து, உங்களுடைய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்ந்தெடுங்கள். சேர்ந்த பின்பு, படிப்பு சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, கூட படிக்கும் மாணவர்கள் சரியில்லை என்று தினம்தோறும் ஏதோ ஒன்றைச் சொல்லி பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுத்துவிடாதீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள்!'

கடந்த ஆண்டு எழுதிய பதிவையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் அறிய இங்கே செல்லவும்.

Monday, May 9, 2011

+2 தேர்வு முடிவு - அடுத்து என்ன செய்ய வேண்டும்?!

இது ஒரு அவசரப் பதிவு. இன்று தேர்வு முடிவு. நிச்சயம் 85 சதவிகிதத்திற்கு மேல்தான் வெற்றி சதவிகிதம் இருக்கும். ஆனால், 85 சதவிகித குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவுமா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால், தேர்ச்சி மட்டும் பார்த்து சந்தோஷப்படுவது அந்தக்காலம். என்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வு எண் பத்திரிகையில் வந்ததும் துள்ளிக் குதித்தேன். பத்தாம் வகுப்பை பாஸ் செய்வது என்பது அவ்வளவு பெரிய விஷயம்.

இன்று மதிப்பெண்ணைப் பார்த்து சந்தோஷப் படுகிறோம். இன்று பலருக்கு எதிர் பார்த்த மதிப்பெண் வராமல் போகலாம். அதற்காக மனமொடிந்து விடக்கூடாது. இன்னும் சில வாய்ப்புகள் உள்ளன. முதலில், விடைத்தாளின் செராக்ஸ் வாங்கிப் பார்க்க வேண்டும். பிறகு, மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம். இதையெல்லாம், ஏன் சொல்கிறேனென்றால் எனது உறவினர்களுக்கு நண்பர்களுக்கு நிகழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடுதான் இது.

எனக்கு, உறவினர்கள் நண்பர்களின் பிள்ளைகளுக்கு மதிப்பெண் பார்த்து சொல்லும் வேலையிருப்பதால். இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

விரிவாக பின்னூட்டத்தில் பார்ப்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Saturday, May 7, 2011

கண்டிப்பாக, அட்சய திருதியையன்று தங்கம் வாங்காதவர்களுக்கு மட்டும்!

'அட்சயதிருதியை' இந்த வார்த்தையை தவிர, வேறு ஒன்றும் எனக்கு தெரியாது. அது குறித்தும் இங்கு நான் எதுவும் எழுதப்போவதில்லை. தங்கம் என்பது தேவை இல்லாத ஆடம்பர பொருள், அது மற்றுமோர் உலோகம் என்பதே எனது எண்ணம். அதற்கு காரணம், எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, 'தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு புத்திசாலித் தனம் கிடையாது' என்று எனக்குள் குடிகொண்டுவிட்ட நாம்பிக்கையை அத்தனை எளிதில் விரட்ட முடியாது என்றே தோன்றுகிறது.


தங்கத்தின் விலையை கடந்த பல ஆண்டுகளாக பார்த்தால் உண்மை புரியும். அதனை முதலில் பார்ப்போம். 2006 வருட இறுதியில்தான் விலையில் ஏறுமுகம் கண்டது. முதலில் கீழ்கண்ட வரைப் படத்தைப் பாருங்கள்.




இதன் விபரம் மேலும் அறிய இங்கே செல்லவும்.







Yearly Average Prizes GOLD FROM 1833 TO 2002

YEAR
YEARLY AVERAGE
YEAR
YEARLY AVERAGE
YEAR
YEARLY AVERAGE
YEAR
YEARLY AVERAGE
from 1833 to 1871 18,93 from 1872 to 1878 18,94 1879 18,93 from 1880 to 1885 18,94
from 1886 to 1887 18,93 1888 18,94 1889 18,93 1890 18,94
from 1891 to 1893 18,93 1894 18,94 1895 18,93 from 1896 to 1898 18,98
1899 18,94 1900 18,96 1901 18,98 1902 18,97
1903 18,95 1904 18,96 1905 18,92 1906 18,90
1907 18,94 1908 18,95 1909 18,96 1910 - 1911 18,92
1912 18,93 1913 18,92 from 1914 to 1918 18,99 1919 19,95
1920 20,68 1921 20,58 1922 20,66 1923 21,32
1924 20,69 1925 20,64 1926 20,63 1927 20,64
1928 20,66 1929 20,63 1930 20,65 1931 17,06
1932 20,69 1933 26,33 1934 34,69 1935 34,84
1936 34,87 1937 34,79 1938 34,85 1939 34,42
from 1940 to 1944 33,85 from 1945 to 1948 34,71 1949 31,69 1950 - 1951 34,72
1952 34,60 1953 34,84 1954 35,04 1955 35,03
1956 34,99 1957 34,95 1958 - 1959 35.10 1960 35,27
1961 35,25 1962 35,23 1963 35,09 1964 35,10
1965 35,12 1966 35,13 1967 34,95 1968 38,69
1969 41,09 1970 35,94 1971 40,80 1972 58,16
1973 97,32 1974 159,26 1975 161,02 1976 124,84
1977 147,71 1978 193,22 1979 306,68 1980 612,56
1981 460,03 1982 375,67 1983 424,35 1984 360,48
1985 317,26 1986 367,66 1987 446,46 1988 436,94
1989 381,44 1990 383,51 1991 362,11 1992 343,82
1993 359,82 1994 384,15 1995 384,05 1996 387,87
1997 331,29 1998 294,09 1999 278,57 2000 279,11
2005
271,04 2002 309,68 2003 363.38 2004 409.72
2005 444.72 2006 594.66(appr)











































இதனை விபரமாக அறிய இங்கே பார்க்கவும்.


பல்வேறு காலக் கட்டங்களில், தங்கம் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துதான் வந்துள்ளது. எனவே, இப்பொழுது உள்ள விலை ஏற்றமும் தற்காலிகமானதுதான் அல்லது இனி தொடர்ந்து வரும் பல ஆண்டுகளுக்கு இந்த விலையே தொடரும் என்று நினைத்து தங்க நகை வாங்காதவர்கள் மகிழ்ச்சியடையலாம். இது என்னுடைய எண்ணம் மட்டுமே. நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் கிடையாது. இது, தங்கம் வாங்க முடியாதவர்களை சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே! மற்றபடி அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கியவர்களுக்கு, அவர்களே இனி வேண்டாம் என்றாலும் விடாது இந்த ஆண்டு முழுதும் தங்கம் கொட்டியே தீரும். அதை, யாராலும் தடுக்க முடியாது.

இப்பொழுது புரிகிறதா தலைப்பு எதற்கென்று?!


Tuesday, May 3, 2011

உலக ஆஸ்த்மா தினம் - ஒரு பார்வை!


இன்று உலக ஆஸ்த்மா தினம். நான் இதை அறிந்தவுடன் "இப்படி ஒரு தினம் கடைப்பிடிக்கப் படுகிறதா?" என்கிற ஆர்வத்தில் தேடிப் படித்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், முதல் செவ்வாய்க் கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்த வருட ஆஸ்த்மா தினத்தின் மையக் கருத்து "உங்களுடைய ஆஸ்த்மா நோயை உங்களால் கட்டுப்படுத்த முடியும்" (You Can Control Your Asthma)
என்பதாகும். வருகிற 2015 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்த்மா நோயால் மருத்துவமனையில் தாங்கி சிகிச்சைப் பெறுபவரின் சதவிகிதத்தை ஐம்பதாக குறைக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறது GINA -(Global Initiative for Asthma) இதை தமிழில் 'உலகளவில் ஆஸ்த்மாவை முன்னிலைப் படுத்துதல்' என்று பொருள் கொள்ளலாம். முதல் ஆஸ்த்மா தினம் 1998 -ல் ஸ்பெயினில் கொண்டாடப்பட்டது. ஆஸ்த்மா குறித்த மேலதிக தகவல் ஆங்கிலத்தில் அறிய இங்கே செல்லவும்.


ஆஸ்த்மா தினத்தையொட்டி சென்னையில் 'டாக்டர் மேத்தா ஹாஸ்பிடல்' சார்பாக இலவச ஆஸ்த்மா நோய் கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. மே 3 முதல் 12 வரை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை மாலை 5.30 முதல் 8.00 மணி வரை நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 9841075876 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட தகவலை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்த பிறகே இங்கே குறிப்பிடுகிறேன். இது குறித்து மேலும் அறிய இங்கே செல்லவும்.


ஆஸ்த்மாவைக் கட்டுப்படுத்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் ஆராயிச்சி பற்றி அறிய இங்கே செல்லவும். கூடிய விரைவில் அந்தப் பக்கத்தை தமிழில் தர முயற்சி செய்யலாம் என்று உள்ளேன். மேலும் அவர்களின் ஆராயிச்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய அவர்களுடன் தொடர்பு கொள்ள உள்ளேன். பதில் கிடைத்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது குறித்து கடந்த ஆண்டு ஒரு பதிவு போட்டிருந்தேன். ஆஸ்த்மா,அலர்ஜி நோயாளிகளுக்கு...! அது பலருக்கும் பயன் பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

விழிப்புணர்வு பெறுவோம், விரட்டுவோம் ஆஸ்த்மாவை!


Monday, May 2, 2011

வீட்டுக் கணக்கு...?!

வீட்டுக் கணக்கு எழுதும் ப(வ)ழக்கம் , நம்மில் எத்தனைப் பேருக்கு உண்டு என்று எனக்குத் தெரியவில்லை. எங்கள் குடும்பத்தில் கடந்த வருடம் முதல்தான் எழுத ஆரம்பித்தோம். முன்பெல்லாம், என்னிடம் யாராவது "வீட்டு வரவு செலவு கணக்கு எழுதுவீர்களா?" என்றுக் கேட்டால், "நாங்க, எந்த அனாவசிய செலவும் செய்வதில்லை. அதனால், அதை எழுதி சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை" என்பேன். அது மிகப் பெரிய தவறான வாதம் என்பதை பிறகுதான் உணர்ந்தேன்.

அப்படிக் கணக்கு எழுதுவதால் வரும் நன்மை தீமைகளை இங்கேப் பார்ப்போம்.

1 . நம்முடைய செலவுகளை மாத இறுதியில் ஒருமுறை படித்துப் பார்க்கும் பொழுது, எந்த செலவைக் குறைத்திருக்கலாம், எதை தவிர்த்திருக்காலாம் என்று சிந்திக்க முடியும்.

2 . வாடகை, பால், கேபிள், டெலிபோன், கரண்ட் பில்,இன்சூரன்ஸ் போன்றவை எந்த தேதியில் கட்டப் பட்டது என்பதை நினைவு கொள்வது எளிது.

3 . வண்டி எந்த தேதியில் சர்வீஸ் செய்தோம். டாக்டரிடம் எந்த தேதியில் சென்றோம், ஊருக்கு எப்பொழுது சென்று வந்தோம் என்பதை எளிதாக நினைவுப் படுத்திக்கொள்ளலாம்.

4 . அடிக்கடி வாடகை வீடு மாறுபவர்களுக்கு, எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்தோம். எந்த தேதியில் கொடுத்தோம் என்ற விபரங்களை எளிதில் அறிய முடியும். பலர் வாடகைப் பத்திரம் கேட்பதுமில்லை, கொடுப்பதுமில்லை.

5 . பல வருடங்களுக்குப் பிறகு இத்தைகைய கணக்குப் நோட்டை பார்த்தால், நம்முடைய பொருளாதார வளர்ச்சி / வீழ்ச்சி குறிந்து அறிந்து கொள்ளலாம். சந்ததியினர்களுக்கும், நம் மீது மதிப்பும் மரியாதையும் கூடும்.

6 . ஒரே தீமை என்றால், அது நம்முடைய வருமானத்தை பிறர் அறிந்து கொள்ளவார்கள். இதிலும், நேர்மையான வருமானம் உள்ளவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது.

'ஆற்றில் போட்டாலும், அளந்து போடு' என்பார்கள். அது சரிதானே?

எங்கே புறப்பட்டுட்டீங்க, நோட்டு வாங்க கடைக்கா?