Sunday, August 15, 2010

அகரமும், அலட்சியப் பள்ளிகளும்.

அகரம் பற்றிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் 15.8.10   காலை  9 மணிக்கு ஒளிப்பரப்பினார்கள்.
நிகழ்ச்சியில் ஒவ்வொருவர் பேசும்போதும், என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிந்தது.  இது, எதோ எனக்கு மட்டும் கண்ணீர் வருவதாக  நான் நினைத்தேன்.  ஆனால், நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட  இயக்குனர் பாலா அவர்கள், அகரம் தேர்ந்தெடுத்தவர்களின் விபரத்தை அறிந்தபோது, அவரால் அழுகையை அடக்க முடியாமல்  கேட்பதை நிறுத்திவிட்டதாகச்  சொன்னார்.   

கல்  உடைக்கும் பெற்றோரின் மகன் டாக்டருக்குப் படிப்பதும், பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் கூலி வேலைப் பார்த்து, படிப்பைத் தொடர்வதும், மின்சார விளக்கு இல்லாத வீட்டுப் பிள்ளைகள்,  நல்ல மதிப்பெண் பெற்றதையும் நினைக்கையில்  நமக்குத் தெரியாத உலகம் ஒன்று இருப்பதை உணரமுடிந்தது. 
பிறக்கும் போதே வசதியான வீட்டுப்பிள்ளையான சூர்யாவுக்கு, எப்படி இவர்களின் வலி தெரிந்தது என்பதுதான் ஆச்சர்யம்.  அதற்காக திரு. சூர்யா அவர்களை, நாம்  அனைவாரும் பாராட்டத்தான் வேண்டும். மேலும் நன்கொடை வழங்கிய ஒருவர் பேசும்போது  "ஓரளவுக்கு மேல், பணம் வெறும்  பேப்பர் மாதிரிதான்" என்றார். எத்தனை உண்மை. அவருடைய பெயர் சரியாகத் தெரியவில்லை, மன்னிப்பாராக!
ஒரு மாணவன் தனக்கு பள்ளியில் கொடுத்த பரிசுத்தொகை  ஒரு லட்ச ரூபாயை அகரம் அமைப்பினரிடம் வழங்கிவிட்டு, அகரம் கொடுக்கும் உதவித்தொகையைப் பெறுவதை அறிந்தபோதும் நெகிழ்ந்துவிட்டேன்.

அகரம் அமைப்பினர், உதவிபெறும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்த விதம், அவர்களின் நல்ல மனது  மற்றும் உரியவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை, எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு, ஏழை மாணவர்களை கண்டறிய  கல்வித்துறை இயக்குனர்களின் ஒப்புதல் கடிதத்தோடு, சுமார் 850 கிராமப்புற பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், பதில் கிடைத்ததோ சுமார் 150  பள்ளிகளில் இருந்து மட்டும்தான் என்பதை பேராசிரியர் திரு. கல்யாணி அவர்கள் அறிவித்தபோது, என்னையறியாமல் தலையில் அடித்துக் கொண்டேன். எவ்வளவு வெட்கக்கேடான  விஷயம் பாருங்கள். பிறரால் கொடுக்கப்படுகின்ற  உதவியை, தனது மாணவர்களுக்கு வாங்கிக் கொடுக்ககூட,  இந்த 'பொறுப்பு' ஆசிரியர்களுக்கு மனதில்லை. இவர்களிடம் கல்விக் கற்று,  நல்ல குடிமகனாக எப்படி ஒருவன் வரமுடியும்?

எனக்குத் தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் பலர், மிகச் சிறந்த சமுக சேவை செய்பவராகவும், நன்றாக கற்பிக்கும் ஆசிரியராகவும் உள்ளார்கள். ஆனால், அகரம் கொடுக்கும் புள்ளிவிபரம், வேறு மாதிரி உள்ளது. 
சுமாராக 700 பள்ளிகளின் மேல் விழுந்துள்ள கறையைத் துடைக்க, வரும் ஆண்டில் அவர்கள் பல ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வியளித்து, அகரம் உதவித் தொகைப் பெற சிபாரிசு செய்தால் மட்டுமே அந்தப் பள்ளிகளின் மேல் விழுந்துள்ள கறையைத் துடைக்க முடியும். செய்வார்களா ஆசிரியர்கள்?
அப்படி செய்தால்தான் அவர்கள் ஆசிரியர்கள்.