Saturday, July 26, 2014

'சதுரங்க வேட்டை'யும் நானும்!

சதுரங்க வேட்டை!

 
நேற்று நான் பார்த்த 'சதுரங்க வேட்டை'  படம்
இன்றைக்கு மனிதன் 'பணம்' என்கிற மூன்றெழுத்து சொல்லுக்கு எப்படி அடிமையாகிக் கிடக்கிறான் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது.

ஊரில் உள்ள ஏமாற்று வேலைகள் அனைத்தையும் விலாவாரியாக காட்டியவர்கள், 'சென்னைக்கு அருகே' திண்டிவனத்தில் உள்ள 'லே அவுட்' பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏனோ?


'நாளைக்குச் சம்பாதிக்க முடியாதுன்னு நினைக்கிறவன்தான் சேர்த்து வைப்பான்' போன்ற வசனங்கள் நச்!
 
படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்பொழுது, பணம் முக்கியமில்லை மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்று நமது மனதில் தோன்ற வைப்பதே இப்படத்தின் வெற்றி!


சமூகத்திற்கு செய்தி சொல்லும் படங்கள் ஒன்றும் வருவதில்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்பொழும் உண்டு. அதற்கு பதில் சொல்லும் படமே சதுரங்க வேட்டை.

இனி நான்....
  
என்னுடைய அனுபவத்தில் எத்தனையோ 'எம்.எல்.எம்' நிறுவனத்திலிருந்து என்னை தொடர்பு கொண்டு சேர்ந்துக் கொள்ளுமாறு கட்டயாப் படுத்திய நண்பர்கள் பலர்! என்னிடம் அவர்கள் எல்லோரும் சொன்னது, "உங்களுக்கு நண்பர்கள் அதிகம். நன்றாகவும் பேசுகிறீர்கள். உங்களால் இந்த 'பிசினெஸ்' ஐ வெற்றிகரமாக செய்யமுடியும்!" என்பதே. நான் ஒரு நிரந்தரப் வேலையில் உள்ள பொழுது, எனக்கு எதற்கு இன்னொரு வேலை? என்கிற என்னுடைய கேள்விக்கு "உங்களுடைய தேவைக்கு, நீங்கள் சம்பாதிக்கும் பணம் பத்தாது" என்பார்கள்.

பணம் சம்பாதிப்பது பற்றி பேசும்பொழுது அண்மையில் ஒரு நண்பரிடம் சொன்னேன், "மூன்று வேலை சாப்பிடும் அளவுக்கு பொருளாதாரம் என்னிடம் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் 108 வரும், அரசாங்க மருத்துவமனை போதும் எனக்கு வைத்தியம் செய்ய. அதனால், பணம் சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை!" என்றேன்.

இதற்கு பொருள், எல்லோரும் சோம்பேறியாக இருக்க வேண்டுமென்று அல்ல. பேராசைப் படாமல், நம்மால் முடிந்த வேலைகளை செய்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, பிறருக்கும் உதவிகரமாக அன்புடன் வாழவேண்டும் என்பதே!

Friday, February 14, 2014

நானறிந்த 'ஆர்ஐ சார்'!





6.2.2014  அன்று கருப்பம்புலம் வடகாட்டில் தனது எண்பதாவது வயதில் இயற்கை எய்திய திரு ஆர்.வேணுகோபாலன் (ROAD INSPECTOR) அவர்கள் எனக்கு உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர். நான் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும், அவர்களை சந்திக்காமல் வந்ததில்லை. கடந்த 3.2.2014 மாலை அவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். ஆனால், இரண்டு நாட்களில் அவர்கள் மறைந்த செய்தி வந்து என்னை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. . அவர்களைப் பற்றிய எனது நினைவுகளை இங்கேபதிவு செய்கிறேன் 

.
அந்தக் காலத்தில் எங்கள் கிராமத்தில் படித்தவர்கள் குறைவு. அதோடு, ஆசிரியர் பணியல்லாத அரசுப்பணியில் இருந்தவர்கள் ஒரு சிலரே! எனது பள்ளிப் பருவத்தில் மேஸ்திரியார் என்று அழைக்கப்பட்டதையும். கல்லூரி காலத்திற்கு பிறகு, 'ஆர் ஐ' என்று அழைக்கப்படதையும் இங்கு நினைவுகூர வேண்டும். ஏனெனில், எனது  பள்ளிப்  பருவத்திற்கும் கல்லூரிக் காலத்திற்கும் இடையில் 'நிறைய' படித்தவர்கள்  எங்கள் பகுதியில் உருவாகியதின் அடையாளமே இந்தப் பெயர் மாற்றம். எனது சிறு வயதில் 'ஆர்ஐ சார்' அவர்களுடன் அவ்வளவாகப் பேசிப் பழகியதில்லை. எளிமையாக அதே நேரத்தில் நேர்த்தியாக உடையணியும் பழக்கமுள்ளவர். தினம்தோறும் 'ஷேவ்' செய்து எந்த நேரத்திலும் ஒரே தோற்றத்தில் இருப்பார். தோற்றம் மட்டுமல்ல, பேச்சும் நாகரீகமாக இருக்கும். சத்தம் போட்டு பேசியதையோ, பிறரிடம் சண்டையிட்டதையோ நான் பார்த்ததில்லை. தன்னுடைய வாரிசுகளையும் அப்படி வளர்த்திருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.


அரசுப் பணியாற்றிய காலத்தில் அவர் நினைத்திருந்தால், வசதியாகவும் வளமுடனும் வாழ்ந்திருக்க முடியும். கடைசி வரை நேர்மையாக வாழ்ந்தவர். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நினைப்பு அவரிடம் எப்பொழுதும் இருக்கும். "சம்பளம் வாங்கினோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று  என்னிடம் அடிக்கடி சொல்வார். 'ஆர்ஐ சார்' தவிர்த்து, இதுநாள் வரை என்னிடம் நேரடியாக "மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யுங்கள்" என்று ஊக்கப்படுதியவர்கள் ஒரு சிலர் மட்டுமே. வேலைப் பளுவின் காரணமாக நான் சோர்ந்துப் போகும் பொழுதெல்லாம், மக்களுக்கு உதவ வேண்டுமென்கிற அவரின் வார்த்தைகள் என்னுள் ஒலிக்கும் 

 .
எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கு ‘புரவலர்’ நிதி சேர்க்க மிகவும் பாடுபட்டார். திருத்துறைபூண்டி - கடிநெல்வயல் வழித்தடத்தில் பல ஆண்டுகளாக  நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவையை மீண்டும் துவங்குவதற்காக  அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதியதை நானறிவேன். நான் அறிந்தவைகள் இவை மட்டுமே. எனக்கு தெரியாமல் இன்னும் எண்ணற்ற நலப்பணிகளை அவர் செய்ததற்கு, அவரின் இறுதி சடங்கில் கலந்துக் கொண்ட மக்கள் வெள்ளமே சாட்சி.


ஏறக்குறை இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதய நோயுடன் வாழ்ந்திருந்தாலும் தன்னுடைய பணிகளை ஒருநாளும் அவர் நிறுத்தியதில்லை. இரண்டு மாதத்திற்கு முன்புவரை, இரு சக்கர வாகனத்தித்தில் பயணம் செய்துள்ளார். எளிய உடற்பயிற்சி, அளவான சாப்பாடு, குறித்த நேரத்தில் மாத்திரைகள் உட்கொள்ளுதல் மற்றும் பதற்றமற்ற வாழ்கை இதுவே அவர் கடைபிடித்தவைகள். என்னுடைய நண்பர்களுக்கு அவரைதான் உதாரணமாக சொல்வேன். 


கடைசியாக, தெரு விளக்கை அணைத்துவிட்டு வீடு திரும்பிய போது மயங்கி விழுந்திருக்கிறார் என்பதிலிருந்தே அவரின் சமூக அக்கறையை நாம் அறிந்துக் கொள்ளலாம். இவருக்கு நிகராக இனி யார்? இந்தக் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும். 


எத்தனையோ பேர் பிறந்து வாழ்ந்து மறைந்து போகிறார்கள். அதில், 'ஆர்ஐ சார்' போன்ற ஒரு சிலர்தான் வரலாறாகிறார்கள். அவரைப் போல் நாம் வாழ முயற்சிப்பதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்!