Tuesday, November 24, 2020

மனிதனும் தெய்வமாகலாம்...!

கடந்த 6.11.20 அன்று காலை நண்பர் திரு லட்சுமி நாராயணன் போன் செய்து 'விஜி சார்' இறந்துவிட்டார் என்று அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார். என்னால், நம்ப முடியவில்லை. எனக்கு பேச்சும் வரவில்லை, கண்ணீர் மட்டுமே வருகிறது. தொடர்ந்து என்னால், பேசமுடியவில்லை என்பதையறிந்த நண்பரும், மறுபக்கத்தில் பேசமுடியாமல் தவித்ததையும் உணர்ந்தேன். அன்றிலிருந்து சரியாக ஆறு நாட்களுக்கு முன்னர்தான் 'விஜி சார்'வுடன் பேசினேன். கோவிட் வார்டில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவித்தவர், நலமுடன் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். 
நான் கிராமத்திலிருந்து பேசியதால், சரிவர சிக்னல் கிடைக்காததின் காரணமாக அவருடன் சரியாக பேச முடியவில்லை. சென்னை வந்தவுடன் பேசுகிறேன் என்றேன், அவ்வளவுதான் வாழ்க்கை. 

எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. எனினும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் என்னை அன்பால் அனைத்துக்கொண்டவர்கள். அதில், 'விஜி சார்' ஒருவிதம்.



நான், கருப்பம்புலம் அரசு மருத்துவமனையிலிருந்து 1999 வருடம் மே மாதம், நாகை மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு பணி மாறுதலில் சென்றேன். அதன்பிறகு, சுமார் மூன்று மாதங்களுக்குள்ளாக மூத்த மருந்தாளுனர், திரு சுரேஷ்குமார் அவர்களின் மூலம் அறிமுகமானவர்தான்,
மயிலாடுதுறையில் மறைந்த பிரபல வழக்கறிஞர் திரு கே. பாலசுந்தரம் அவர்களின் இரண்டாவது மகன் திரு ராமமூர்த்தி அவர்கள். 'விஜி சார்' என்று எங்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.
அறிமுகமானா சமயத்தில் யதார்த்தமாக என்னிடம் பழக ஆரம்பித்தார். அவரும்  மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு புதிதாக வந்திருந்தார்.  வழக்கறிஞரின் மகன் என்பதோ அல்லது ஒரு கல்லூரி பேராசிரியையின் கணவர் என்பதோ அவருடைய பேச்சு மற்றும் செயல் இரண்டிலும் வெளிப்படாது. 

 அவரைப்பற்றி குறிப்பிட வேண்டுமென்றால், பிறரைப்பற்றி உயர்வாக மட்டுமே குறிப்பிடுவார். நண்பர்களாகட்டும், உறவுகளாகட்டும் எவரையும் அவர் தரம் தாழ்த்திப்பேசி நான் அறிந்ததில்லை.
அவர் ஒருவரை குறைவாக குறிப்பிட்டார் என்றால், அவர்களுடைய வளர்ச்சி சரியில்லையே என்ற வருத்தத்தின் வெளிப்பாடாகவே அதுஇருக்கும். 

தனது உறவினர் வீட்டுப்பிள்ளைகளின் வளர்ச்சியை தனது வீட்டுப்பிள்ளையின் வளர்ச்சியாகக்கருதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்வார். உறவினர்களின் பிள்ளைகளுக்கு பிறந்த நாளின்போது, சிலருக்கு தங்க காசுகளும், சிலருக்கு டிரஸ் வாங்கிக்கொடுக்கும் வழக்கமும் அவரிடமிருந்தது.

 நான் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, தனது 'M80' வண்டியை எடுத்துவந்து என்னை ஓட்டச்செய்து 'கியர்' வண்டி ஓட்டுவதற்கு உரிமம் பெற்றுக்கொடுத்தவர்.
 
எனது மகனின் படிப்பு தொடர்பாக, அவர் சொல்லிய வார்த்தைகள் மிக முக்கியமானவை. நான், சட்டம் படிக்க வைக்கவேண்டும் என்று சொல்லியபோது, "வக்கிலுக்கு பணம் தேவைப்படும்போது, பணம் கிடைக்காது. பணம் தேவை இல்லாதபோது, பணம் வந்து கொண்டே இருக்கும்" என்று தனது தந்தை அடிக்கடி குறிப்பிட்டதாக சொல்லி, சட்டப்படிப்பில் சேர்க்க வேண்டாமென்று, எனது குடும்பத்தின்மீதும், என்மீதும் உள்ள அக்கறையில் தெரிவித்தார். 

நான் 2007-ல் பணி மாறுதலில் சென்னை வந்தபோது, மிகவும் வருந்தினேன். நாகப்பட்டினத்திற்கே திரும்பி சென்று விடலாமா என்றுகூட நினைத்தேன். அதற்கு, முக்கியமான காரணம் திரு விஜி சார் அவர்களைவிட்டு பிரிந்துவந்ததை எனது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நான் மட்டுமே அறிவேன்.
நான் அவருடன் பேசும்போது நாகையில் உள்ள அனைத்து நண்பர்களின் நலனையும் விசாரித்து அறிந்துக்கொள்வேன்.

பல வருடங்களுக்கு முன்னர், ஒருநாள் எனது நண்பரின் தொல்லை தாங்கமுடியாமல் "MLM -ல் சேர்கிறீர்களா, சார்?" என்றேன்.  அதற்கு "எனது, நட்பை அடமானம் வைத்து எந்தத்தொழிலும் செய்யமாட்டேன்!" பட்டென்று பதில் சொன்னார். என்னுடன் பழகியவர்களில் ஆசைகளற்ற மனிதருக்கு சரியான உதாரணம் அவர்தான். என்னிடம், அவர் மற்றவர்களுக்காக உதவிக் கேட்பாரேத்தவிர, தனக்காக எதுவும் கேட்டதில்லை.

 இம்மாதிரியான நண்பர்கள் நமக்கு கிடைப்பது அபூர்வமான ஒன்று. எனது ஓய்வுக்கு பிந்தைய நாட்களை அவருடன் ஷேர் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். 
அவருடன் நீண்ட நாட்கள் பழகுவதற்கும், பேசுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல்போனது, மிகப்பெரிய இழப்பாகும். அவருடன் பேசிக்கொண்டிருந்தாலோ அல்லது அவர் முகத்தைப்பார்த்தாலோ நமக்குள் ஒரு 'எனர்ஜி' வரும். அதை உணர்ந்தவர்களுக்குமட்டுமே நான் சொல்வது புரியும். அவருடைய போட்டோ ஒன்றுகூட என்னிடமில்லை. அதனைக் கொடுத்து உதவிய நண்பர் Senthil Karumbairam அவர்களுக்கு நன்றியை இங்கே குறிப்பிடவேண்டும்.

நிச்சயமாக, திரு விஜி சார் என்னுள் விதைத்துச்சென்ற நற்குணங்கள் ஒவ்வொன்றும் அவரை எனக்கு நினைவுப்படுத்திக்கொண்டேயிருக்கும். 

நாகையில், அவருடைய கடையை நடத்திவரும் திரு சந்திரன், விஜி சாரின் மறைவு குறித்து சொன்னதை இங்கே பதிவு செய்கிறேன். "ஒரு மனிதன், இவ்வுலகில் வாழவேண்டுமென்றால் குறைந்தப்பட்சம் ஒருசில தவறுகளாவது செய்வேண்டும்!"

Friday, October 2, 2020

குற்றவாளிகளும் இன்றைய சமூகமும்!

இன்று காலையில் நீண்ட நாள் கழித்து, நண்பர் ஒருவர் தொடர்புக்கொண்டார்.
பேச்சு பொதுவாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, தற்சமயம் நான் அறிந்த செய்தி குறித்து விசாரித்தேன். 
அந்த செய்தியில் குற்றவாளியாக கருதப்படும் நபர் தனக்கு நண்பர் என்றார். எனக்கு நேரமில்லாததால் மேற்கொண்டு பேசவில்லை.

சுமார், இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரியிடம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது, நான் அவருக்கு கீழ் பணிபுரியும் ஒரு நபரின் பெயரைச்சொல்லி அவர் எனக்கு உறவினர் என்றேன்.
அவர் உடனடியாக, "நாம் இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். நீங்களும் அவரை உறவினர் என்று அறிமுகம் செய்வதற்கோ அல்லது நானும், ஆமாம் அவர் எனது அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்று சொல்லிக்கொள்வதற்கோ, அவர் தகுதியில்லாதவர். அந்த அறிமுகம் தேவையில்லை!" என்றார்.

இந்த சமூகம் குற்றவாளிகளை அங்கீகரிக்க துவங்கிவிட்டதின் அடையாளம்தான்,
குற்றச்செயலில் ஈடுப்பட்டவரை நண்பர் என்று ஏற்றுக்கொள்ளும் நிலை. 

இன்னும் சிலர், "அவன் மோசமானவன் தான். ஆனால், என்னிடம் 'வச்சிக்க' மாட்டான்" என்பார்கள். ஊரிலுள்ள அனைவரைப் பற்றியும் குறை சொல்லும் நபர், நம்மைப் பற்றி பிறரிடம் குறை சொல்ல மாட்டார் என்று நம்புவதற்கு சமமானதுதான், மேலே உள்ள நண்பரின் நம்பிக்கையும்.

காவல்துறையும் நீதித்துறையும் மட்டுமே குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கட்டுப்படுத்தவும் முடியும் என்று கருதிவிட முடியாது. அதில், இந்த சமூகத்திற்கும் பொறுப்புள்ளது.

 சில வருடங்களுக்கு முன்பு, காதல் திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவி ரோட்டில் செல்லும்போது, பலரது முன்னிலையில், கணவர் வெட்டி கொல்லப்படுகிறார். பாதிக்கப்பட்ட மனைவி, பின்பு சொல்லியதாக பத்திரிகையில் வந்த செய்தி, "அந்த இடத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் ஆளுக்கொரு கல்லெடுத்து வீசியிருந்தால், இந்நேரம் எனது கணவர் உயிரோடு இருந்திருப்பார்" 
இதுதான் சமூகம் குறித்தான பார்வை.

 நமது சந்ததியினர் பாதுகாப்புடன் வாழ்வதற்கு, அகிம்சையை போதித்த மகாத்மா பிறந்த நாளில், 'குற்றவாளிகளுக்கு துணை போகமாட்டோம்' என்று உறுதி ஏற்போம்!

Wednesday, September 9, 2020

நீங்களும் IAS ஆகலாம்...!


பதினைந்து நிமிடங்கள் செலவிட்டு, இந்த வீடியோவைப் பாருங்கள். எளிமை மற்றும் யதார்த்தம் இரண்டும் கலந்த பேச்சு.  கிராமப்புற மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் செல்வி பிரியங்கா IAS அவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் நிச்சயம் பயனளிக்கும். 

மேலும், பண்ருட்டி பாலவிகார் பள்ளியில் இவர் படித்தபோது, எட்டாம் வகுப்பு  முதல் பத்தாம் வகுப்பு வரை , இவரின் வகுப்பாசிரியராக இருந்தவர், எனது நண்பர் திரு சங்கர் அவர்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன். அவர்தான் இந்த வீடியோவையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

Sunday, September 6, 2020

அரசுப் பள்ளியும் ஆசிரியர்களும்...!

அரசுப் பள்ளியில் அதுவும் தமிழ் வழியில் குழந்தைகளை படிக்க வைப்பதென்பது, குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறையில்லாத பெற்றோரின் செயலாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. 

1994 - ல் எனது மகனை ஆங்கில வழியில், தனியார் பள்ளியில் படிக்க வைப்பதற்குரிய வசதி எனக்கும், அதை படிப்பதற்குரிய தகுதி எனது மகனுக்கும் இருந்தபோதிலும், நான் விடாப்பிடியாக 'எல்கேஜி' எல்லாம் அனுப்பாமல், நேரடியாக அரசு பள்ளியில், தமிழ் வழியில் சேர்த்தேன். +2 வரை தமிழ் வழியில் படித்து,
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் சேர்வதற்குரிய மதிப்பெண் பெற்ற போதும், சட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து, இன்றைய தினம் பன்னாட்டு நிறுவனத்தில் சட்டப் பிரிவில் துணை மேலாளராக பணியாற்றுகிறான். எனது மகனுடன் தமிழ் வழியில் படித்த பலர் மருத்துவம், பொறியியல், சட்டம், கல்வி மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் நம் நாடு மட்டுமல்லாது, வெளி நாடுகளிலும் மிகவும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர்.

என்னுடன் அரசுப் பள்ளியில் படித்தவர், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தின் 'CEO' - வாக உள்ளார். இன்னும் பலர் உலகலவில் மருத்துவம், பொறியியல், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் உயர்நிலையில் உள்ளனர். 

சரி, இதெல்லாம் எதற்காக இங்கே குறிப்பிடுகிறேனென்றால்...
'கொரனா' தாக்கத்தால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள இக்காலத்தில், அதிகளவில் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாததால், வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளிகளை பெற்றோர் நாடுவதால், இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்திகள் வருகிறது. 
அப்படி சேர்ந்தவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்பதற்காவும், அண்மையில் நானறிந்த A3 JOURNEY...
 ( Asaththum Arasu palli Asiriyarkal ) 
குறித்து பகிர்ந்து கொள்வதும்தான், நோக்கம்.

அண்மையில், நண்பர் ஆசிரியர் திரு பாலாஜி கருப்பம்புலம் அவர்களின் பேச்சைக் கேட்பதற்காக A3 முகநூல் பக்கம் சென்றேன். அதன்பிறகு, பல ஆசிரியர்களின் பேச்சைக்கேட்டு, இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமடைந்து வருகிறேன். 
ஒவ்வொருவரும், சுமாராக ஒரு மணி நேரம் பேசுகிறார்கள். அந்த பேச்சின் வழியாக அவர்களின் செயல்களை அறியும்போது, 'நாம் கற்பனையில் எதிர்பார்த்திருக்கும் ஆசிரியர்கள் அல்லவா, இவர்கள்!' என்கிற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அவர்கள் விவரிக்கும் தகவல்கள், ஒரு நல்ல திரைப்படத்தில் வரும் கதாநாயகன் செய்யும் செயல்களுக்கு ஒப்பாகவுள்ளது. மேலும், 
தமிழகத்தை குறுக்கு நெடுக்காக உலா வந்ததுபோல் நம்மால் உணரமுடிகிறது.  

நான், சாதாரணமாக பார்க்க ஆரம்பித்து, இப்பொழுது தொடர்ந்து A3 ஆசிரியர்களின் பேச்சைக்கேட்டு வருவதோடு, அவர்களின் பேச்சு, நாமும் நமது துறையில் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற சிந்தனையையும் தூண்டுகிறது என்றால், அது மிகையல்ல. 

இதற்கெல்லாம், ஆசிரியை திருமதி Uma Maheswari Gopal அவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மைதான் காரணம். தமிழக அளவில் மிகச் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பேசவைக்கிறார்கள்.
இவரின் செயல்பாடுகளால், இனிவரும் ஆண்டுகளில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை ஏறுமுகத்தில் இருக்கும் என்றே தோன்றுகிறது.

கற்பித்தலை புனிதமாகக் கருதும் அனைவருக்கும், 'ஆசிரியர் தின' நல் வாழ்த்துகள்!

Monday, August 31, 2020

கேள்விக்குறியாகும் எதிர்காலம்!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்படுவது, அடிக்கடி நடப்பதுதான். ஆனால், இந்த சம்பவததை படித்தவுடன், அப்படி யதார்த்தமாக கடந்துபோக முடியவில்லை.

கோயம்புத்தூர் அடுத்து, சூலூர் அருகேயுள்ள ராசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர், திரு விஜயகுமார் நான்காயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 
இவரின் வயது 24. கடந்த ஆண்டுதான் பணியில் சேர்ந்துள்ளார். 

நிச்சயமாக திறமையானவராகவும், உழைப்பாளியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றிருக்க முடியும். பத்தாம் வகுப்பு தகுதிக்குரிய 'விஏஓ' பதவிக்கு இன்றையதினம், பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வரை தேர்வெழுதி பணியில் சேர்ந்துள்ளனர். நான் அறிந்தவரையில், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் நேர்மையாக பணியாற்றுவதாக பலரும் சொல்லக் கேட்டு மகிழ்சியடைந்திருந்தேன். 

அந்த இளைஞர், ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று நினைக்கையில், மிகவும் வருத்தமாக உள்ளது. அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
 அந்த இளைஞரை நேர்மையாக பணியாற்றும்படி அறிவுரை சொல்லிருக்கவேண்டியது, அவரின் மூத்த அலுவலர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் கடமையாகும். அப்படி அறிவுரை சொல்ல நாம் தவறுவதால்தான், இம்மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுகின்றது. மேலும், இந்த இளைஞர் பிடிபடாமல் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், இன்னும் 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப்பணியில் இருந்திருப்பார். அவருடைய அலுவலகத்திலிருந்து அதுவரை லஞ்சத்தை விரட்ட முடியாது என்பதை நினைக்கும்போது வேதனை இன்னும் கூடுகிறது.

அனைவரும், அவரவர் வருமானத்திற்கேற்ற செலவை செய்து நியாயமாகவும், நேர்மையாகவும், மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம்!

Tuesday, August 25, 2020

திருட்டு - விமர்சனம்

நான் தற்சமயம் சென்னையில் வசித்துவந்தாலும் பிறந்ததிலிருந்து  சுமார் 40 ஆண்டுகள் வாழ்ந்த வேதாரண்யம் பகுதியின் நினைவுகள் என்னை விட்டு முழுவதும் அகலவில்லை.
 
கடந்த வாரத்தில் அப்பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் எனக்கு பெரும் மன வருத்தத்தை அளித்ததோடு, என்னுள்ளிருந்த பழைய நினைவுகளை மீட்டெடுத்துள்ளது.

எனக்கு நினைவு தெரிய ஆரம்பித்த 1970 - களில், அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் குடிசை வீடுகளில்தான் வசித்தனர். எங்கள் வீடும் அப்படித்தான். கதவெல்லாம் கிடையாது. வாசலில் வைக்கப்படும் தடுப்பிற்கு படல்   என்று பெயர். சும்மா எடுத்து சாத்தி வைத்துவிட்டு வெளியில் செல்வோம். பூட்டு சாவியோ, 
மின்சார விளக்கோ கிடையாது. ஊரே இருட்டாக இருக்கும். ஆனால், திருட்டுப்போய்விடும் என்று பயந்ததில்லை. அப்பகுதி வானம் பார்த்த பூமியென்பதால், பசி பட்டினியெல்லாம் அப்போது சர்வசாதாரணம். இருந்தபோதிலும்,  திருட்டு பற்றியோ, திருடர்கள் பற்றியே எந்த செய்தியும் நான் கேள்விப்பட்டதில்லை. தமிழில் ஆனந்த வருடமாகிய 1975 -ல் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. கஞ்சி வைப்பதற்குகூட அரிசி கிடைக்கவில்லை. அப்போது, எனக்கு பத்து வயதிருக்கும். அன்றைக்கிருந்த பெரியவர்கள், அதற்கு முந்தைய ஆனந்த வருடத்திலும் பஞ்சம் ஏற்பட்டதாகவும் பேசிக்கொண்டனர். அன்றைக்கு அப்படி பஞ்சம் ஏற்பட்டபோதும் திருட்டு சம்பவங்கள் நடைபெறவில்லை.

நிகழ்காலத்திற்கு வருவோம். இன்றைய தினம் பஞ்சமெல்லாம் கிடையாது. பார்க்கும் இடமெல்லாம் மாடி வீடுகள். அனைத்து வீடுகளிலும் குறைந்தது ஒரு வாகனம் உள்ளது. பகலுக்கும் இரவுக்கும் விச்தியாசம் தெரியாதளவிற்கு ஊரே ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. பின் ஏன் இப்பொழுது திருட்டு? 

உழைக்காமல் சம்பாதிக்கவும், ஆடம்பரமாக வாழ வேணடுமென்கிற மனோபாவம் பலரிடம் காணப்படுவதும், எவ்வழியில் சம்பாதித்த பணமாக இருந்தாலும், அதனை  வைத்திருப்பவரைக் கொண்டாடும் மனநிலை மக்களிடத்தில் பெருகிவிட்டதுமே காரணமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 
நடந்த திருட்டு சம்பவம் சாதாரணமாக நடந்ததாக தெரியவில்லை. நன்கு திட்டமிடப்பட்டு நடைபெற்றதாகவே தோன்றுகிறது.
நாய்க்கு விஷம் வைத்தது, மேலும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் அப்பகுதியில் புழக்கத்தில் இல்லாதவைகள் என்பதையெல்லாம் அறியும்போது, இதனை சாதாரனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 
எனினும், காவல்துறை சிறப்பாக செயல்பட்டு உடனடியாக, குற்றவாளிகளை கூண்டோடு பிடித்தது பாராட்டுக்குரியது. 

எது எப்படியோ, இனி திருட்டு நடக்காதவாறு காவல்துறையும் பொது மக்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே நமது விருப்பம்.

எந்த ஊராக இருந்தாலும், எந்த விதமான வேலையோ, பெற்றோருக்கு உரிய வருமானமோ இல்லாமல், விலை உயர்ந்த பைக் மற்றும் செல்போனுடன் ஊர் சுற்றும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மீது, பொதுமக்களாகி நமக்கு எப்போதும் ஒரு கண் இருக்கவேண்டும். 

வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் CCTV கேமரா பொருத்த முற்படவேண்டும்.
ஊரின் எல்லைகளில் ஊராட்சியின் சார்பில் CCTV கேமரா பொருத்த வேண்டும். இதன் மூலம் திருட்டை தவிர்ப்பதோடு, பெண்களின் பாதுகாப்பும்  உறுதி செய்யப்படும்.

மக்களின் பாதுகாப்போடு, வேதாரண்யம் பகுதியின் நன்மதிப்பையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்குள்ளது என்பதை நினைவில் கொள்வோம்...!

Thursday, August 13, 2020

மாற்றமில்லாத ஏமாற்றம்!

ஆவடி அருகே ஓய்வுபெற்ற  ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ. 4.80 லட்சம் மோசடி என்ற செய்தியால், இத்தனை வருடங்களாக பத்திரிகை செய்தி மற்றும் வங்கிகளிருந்து வரும் எஸ்எம்எஸ் போன்றவற்றால், இதுபோன்ற மோசடிகளை தடுக்க முடியவில்லையே என்கிற வருத்தம்தான் வருகிறது.

ஏமாற்றுவது திறமையாக அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தில் வாழும் நமக்கு, நாளொரு அனுபவம் கிடைப்பதில் வியப்பில்லை.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் தனக்கு வெளிநாட்டில் ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் பரிசு கிடைத்திருப்பதாகவும், அதை அவர்கள் தனது வங்கி கணக்கு மாற்றுவதற்கு ரூபாய் 40,000 அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமென்று மெயில் வந்து இருப்பதாகவும் தெரிவித்து, பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு எனது உதவியை  நாடினார். 
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி நடப்பது சாத்தியமில்லை. இது ஏமாற்று வேலை என்று மட்டும் அவரிடம் தெரிவித்தேன். அதே நேரத்தில், அவருக்கு கிடைக்க வேண்டிய பெரும் பணத்தை, நான் தடுத்து விட்டதாக அவர் நினைத்து விடுவாரோ என்றும் பயந்தேன். 

பின்னர், இது மாதிரி பலர் ஏமாற்றப்பட்டது பத்திரிகையில் வந்தபிறகு, நான் அப்போது சொன்னது சரி என்பதை அவர் உணர்ந்திருப்பார் என்று ஆறுதலடைந்தேன். 

நான்கு வருடங்களுக்கு முன்பு, என்னிடம் ஒருவர் தொடர்பு கொண்டு  ஒன்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சில பொருட்களின் பெயரைச்சொல்லி, பரிசு விழுந்திருக்கிறது, அதற்கு சேவைக் கட்டணமாக ரூபாய் இரண்டாயிரம் செலுத்தி அந்த பொருட்களை பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தார். "நான் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லையே!" என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அதில் தாங்கள் ஸ்கூட்டர் பெறுவதற்காக கூப்பன் எழுதிப் போட்டிருந்தீர்கள்தானே,  அதில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசாக தருகிறோம் என்றார். அதற்கு நான், "ஒன்பதனாயிரம் மதிப்புள்ள பொருட்களை தருகிறீர்கள். அதில், என்னிடம் கேட்கும் சேவைக் கட்டணம் இரண்டாயிரத்திற்கு பதிலாக  நான்காயிரம் மதிப்புள்ள பொருட்களை நீங்களே வைத்துக்கொண்டு, மற்ற பொருட்களை எனக்கு இலவசமாக தாருங்கள்" என்றேன். அத்துடன் அவர் தொடர்பை துண்டித்து விட்டார்.

 சுமாராக, பத்து நபர்கள் பல்வேறு சமயங்களில் என்னிடம் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து ஏடிஎம் கார்டு 'ரினிவல்' செய்யச் சொல்லி இருக்கிறார்கள். நானும் எந்த வங்கியில் இருந்து பேசுகிறீர்கள், என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஏடிஎம் கார்டு இருக்கிறது என்று நான் சொல்வதைக் கேட்டவுடன், அவர்கள் கெட்டகெட்ட வார்த்தையில் என்னை திட்டி இருக்கிறார்கள்.
 
திண்டிவனத்தில் இருக்குமிடத்தை சென்னையில் இருப்பவரிடம், விரைவில் திண்டிவனம் சென்னை ஆகிவிடும் என்று சொல்லி, காடுகளையும் வயல்களையும் அந்த அப்பாவிகளின் தலையில் கட்டி கமிஷன் பார்த்த சாமர்த்தியசாலிகள் பலர்.

 இம் மாதிரியான நபர்களுக்கு ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால், எதிராளி அவர்களின்  நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ அல்லது வாரிசுகளாகவோ, யாராக இருந்தாலும் ஏமாற்றிவிடுவார்கள். 
அது அவர்களுக்கு விளையாட்டுப்போன்றது. மற்றவர்களை ஏமாற்றுவதில் மகிழ்ச்சியடைவார்கள். இது ஒருவித மனநோய். ஏமாற்றியதற்காக சிறை சென்று திரும்பியவர்கள், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து சிறை செல்வதைப் பார்த்தே, நாம் இதை விளங்கிக்கொள்ளலாம்.

நாமயறியாமலேயே, தினம்தோறும் பல்வேறு நபர்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கல்வியிலிருந்து காய்கறி வரை விளம்பரங்களால் ஏமாற்றப்படுகிறோம்.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு நொடியும், நாம் ஏமாற்றப்படலாம் என்கிற விழிப்புணர்வோடு வாழ்ந்தால் மட்டுமே, நாம் தப்பிக்க முடியும்!

Wednesday, August 12, 2020

நிஜமல்ல கதை...!

அந்த கிராமத்தில் யார் தவறு செய்தாலும் தமிழாசிரியர் மணி அய்யா, தட்டிக்கேட்க தயங்கமாட்டார். அவரிடம் படிக்கும் மாணவர்கள் தவறு செய்தால், தன் கையில் எப்பொழுதும் வைத்திருக்கும் பிரம்பால் அடி பின்னி எடுத்துவிடுவார். அதனால், அவர் மீது அனைவருக்கும் பயம். 

ஒரு மாணவனின் எதிர்காலத்தை கச்சிதமாக கணிக்கும் அபார திறமையும் அவரிடமுண்டு.
இப்போ, கொஞ்சம் வயதாகிவிட்டதால், அவருடைய கோபமும் கொஞ்சம் குறையத்தொடங்கியிருந்தது.

ஒருநாள் அவர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, தூரத்தில் ஒரு ரவுடியை பொதுமக்கள் பிடித்து கட்டிப்போட்டு  சரமாரியாக அடித்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து அடிப்பதை நிறுத்தும்படி சைகை செய்துவிட்டு வந்த வழியே அவசரமாக திரும்பி சென்றுவிட்டார்.

உடனே, அங்கிருந்தவர்கள் தனது வீட்டிலுள்ள பிரம்பை எடுத்துவந்து  அடிக்கப் போகிறார் என்று பேசிக் கொண்டனர். சற்று நேரத்தில் கையில் மாலையுடன் திரும்பிவந்தார் மணி அய்யா. "என்ன அய்யா, பிரம்பு எடுத்து வந்து அடிப்பீங்கன்னு நினைச்சோம். இப்படி மாலையோட வர்றீங்க?" என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர். அவர் பதில் எதுவும் சொல்லாமல், கூட்டத்தை விலக சொல்லிவிட்டு நேரே ரவுடியின் அருகில் சென்று அவனின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு தன் கையிலிருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். பிறகு, சுற்றியிருந்தவர்களைப் பார்த்து, "நீங்க எதிர்காலத்தில் இவனை தலைவனாக ஏற்றுக்கொண்டு வரிசையில் நின்று மாலைப்போடுவீர்கள். நான், இப்போதே செய்கிறேன்!" என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார்.

Tuesday, August 11, 2020

கொரானா மீண்டும் எழுத வைத்துள்ளது!

நீண்ட காலமாக எதையும் பதிவு செய்யாமலிருந்த என்னை, கொரானா எழுத வைத்துள்ளது. 
முகநூல் மற்றும் வாட்ஸ்அப்-ல் பலரின் பாராட்டுகளைப் பெற்றவைகள்...

Saturday, August 8, 2020

ஆவி பிடித்தலும் எனது அனுபவும்!

முன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எனக்கு ஜலதோஷம் பிடிப்பது வாடிக்கை. அதுவும், குறைந்தது பதினைந்து நாட்கள் சளியால் அவதிப்படுவதோடு ஆண்டிபயாடிக் மற்றும் ஆண்டிஹிஸ்டமின் மாத்திரை எடுத்துக்கொள்வதும் வழக்கம். 

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டபோது, ஆவி பிடிக்கும்படி(வேது பிடித்தல் என்றும் சொல்கிறார்கள்) நண்பர்கள் அறிவுரை கூறினர்.

 அவர்களின் யோசனையை செயல்படுத்தும் முன்பு என் நினைவில் வந்தது இதுதான், நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் ஊர் மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் எங்க அப்பாவின்  தலைவலிக்கு வெந்நீரில் டிங்சர் பென்சாயின் ஊற்றி, இரண்டு போர்வையை போட்டு அப்பாவை மொத்தமாக மூடி  ஆவி பிடிக்க சொன்னார்.  அப்போது,
அந்த கடுமையான சிகிச்சை முறை  என்னுள் ஒருவித பயத்தை உண்டு பண்ணியது என்பது உண்மை. 
அன்றோடு சரி, அதன் பிறகு அப்பா ஆவி பிடித்து நான் பார்த்ததில்லை.
 எனினும், நண்பர்களின் அறிவுரையை ஏற்று தொடங்கிய ஜலதோஷத்திற்கு ஆவி  பிடிக்கும் பழக்கம்  இன்றுவரை தொடர்கிறது. 

ஆவி பிடிக்கும் பழக்கத்தினால், இரண்டொரு நாளில் குணம் கிடைக்கிறது. மேலும், எனக்கு ஜலதோஷம் பிடிப்பதும் அரிதாகிவிட்டது.  
ஜலதோஷத்திற்கு எந்த மருந்தும் கிடையாது என்பதை சொல்வதற்கு 'மாத்திரை சாப்பிட்டால் ஏழு நாட்களிலும், சாப்பிடாமலிருந்தால் ஒரு வாரத்திலும் குணமாகும்' என்பார்கள். அதைப்போலவே, இன்றைக்கு நம்மை பாடாய்படுத்தும் கொரானவிற்கும் எந்த மருந்தும் இல்லை என்பது நாம் அறிந்ததே.

 கடந்த பிப்ரவரி மாதத்தில் வந்த வாட்ஸ்அப் செய்திகளில், "ஆவி பிடித்தால் கொரானாவிலிருந்து தப்பிக்கலாம். இதைத்தான் சீனர்கள்  செய்தார்கள்" என்று தெரிவித்தார்கள். தற்போது, ஆவி பிடித்தல் ஒரு சிகிச்சை முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் சிரமப்பட்டு ஆவி பிடிப்பதில்லை. சிறிய துண்டை மட்டுமே பயன்படுத்துவேன். மேலும், என்னால் தாங்க முடிந்த மட்டுமே விட்டுவிட்டு பிடிப்பேன். 
யூகலிப்டஸ் எண்ணெயை மட்டும் ஊற்றி ஆவி பிடிப்பேன். 
இப்போது, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கையாக தினசரி இரவு ஆவி பிடித்து வருகிறேன்.
நம் ஒவ்வொரு வீட்டிலும் ஆவி பிடிப்பதற்குரிய ஸ்டீமர் மெஷின் இருக்க வேண்டும். ஆவி பிடிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். வெந்நீர் ஊற்றி பாதிக்கப்பட்டவர்களையும் அறிவேன்!

Monday, August 3, 2020

யார், உன் நண்பன்?

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள்.
அதுமாதிரியே முகநூலிலும் நாம் எழுதுவதும், லைக் போடுவதும், ஷேர் செய்வதும் நம்முடைய மனதின் பிரதிபலிப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. 

நம்முடைய எண்ண அலைகளோடு ஒத்துவருகிற நண்பர்களை இணைத்துக் கொண்டு, கருத்துக்களை பரிமாறிக்கொள்வதே முகநூலில் இணைபவர்களின் நோக்கமாகும். 

ஆரம்பத்தில் முகநூலில் நான் நண்பர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும், நேரடியாக நான் அறிந்தவர்கள் மட்டுமே. பிறகு, பலரிடமிருந்தும் எனக்கு 'Friend request' வர ஆரம்பித்தது. அப்படி வருபவர்களை நான் நட்பு வட்டத்தில் ஏற்றுக்கொள்வதற்கு முன், என்னுடைய நண்பர்கள் எத்தனைப் பேர் அவருடன் நண்பர்களாக உள்ளார்கள் என்பதை வைத்து, அந்த நபரின் நட்பை ஏற்பது குறித்து முடிவெடுப்பேன். 

இன்று முகநூலில் முகம் காட்டாமல் சிலர் கணக்கு வைத்துக்கொண்டு, பலருடன் நண்பர்களாக இணைந்து விடுகிறார்கள். அதாவது,
போலியான('Fack ID') பெயரில் நமக்கு நட்பு அழைப்பு வரும். நாமும் அந்த போலி நபருடன் உள்ள, நமது நண்பர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களின் நட்பு வட்டத்தில் இணைந்து விடுவோம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நண்பர்களை சேர்த்தப்பிறகு, இந்தப் போலிகள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிப்பார்கள். 

தனி நபர்களுக்கு எதிராகப் பொய்யான பதிவுகளைப் போடுவார்கள். அதைக்காட்டி, அந்த நபர்களிடம் மிரட்டி பணம் பறிப்பார்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய வைப்பார்கள். தங்கள் நோக்கம் நிறைவேறியதும் அந்தப்பதிவை நீக்கிவிடுவார்கள்.
இதில், பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தால், படித்தும் படிக்காமலும் 'லைக்' கோ அல்லது 'ஷேர்'ரோ செய்த நாமும் அந்த குற்றத்திற்கு உடந்தையாகிவிடுவோம்.

 மேலும், சிலர், நம்முடைய தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றுவிடுவார்கள். எனவே, இம் மாதிரியான சமூக விரோதிகளுக்கு நம்மை அறியாமலேயே, நாம் துணைபோய் விடுவோம். எனவே, எச்சரிக்கை அவசியம். 

இனி, நம்முடன் நண்பர்களாக இணைபவர்கள் யார், எந்த ஊர், என்ன வேலை, எங்கு படித்தார் போன்ற விபரங்கள் இருந்தால் மட்டுமே நண்பர்களா ஏற்றுக்கொள்ளுங்கள்.

'உனது நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று நான் சொல்கிறேன்' என்பார்கள். சரி, இப்போ, சொல்லுங்க, "உங்க நண்பன் யார்?"

Sunday, August 2, 2020

நவீன பொம்மலாட்டக்காரர்கள்!

நம்முடைய சிந்தனையும் செயலும் எப்போதும் ஒன்றாக இருக்கும். ஆனால், சொல்லும் செயலும் அவ்வாறு இருக்கவேண்டுமென்பதில்லை.

பெரும்பகுதியினர், ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வார்கள். ஒருவரின் செயல், இடத்திற்கிடம் மாறுபடாது. இதன் காரணமாகவே, பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில், காவல்துறையினர் எளிதாக குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
தான் செய்வது தவறு என்று தெரிந்தும்கூட அதிலிருந்து அவர்களால் விடுபடமுடிவதில்லை. 

கெட்டவர்கள் எப்படியோ, அதுமாதிரிதான் நேர்மையானவர்களும் மாறுவதில்லை. அதற்கு நம்மிடையே வாழ்ந்து மறைந்த தலைவர்களும், வாழும் எளிய மனிதர்களுமே சாட்சிகள்.

சிறுவயதில் பொம்மலாட்டங்களைப் பார்த்து ரசித்ததும்,  அந்த பொம்மையாட்டுபவரை நினைத்து வியந்துமிருக்கிறேன். ஆனால், அவர்களைப்பார்த்தில்லை. எதிரே வந்திருந்தாலும் அடையாளம் தெரிந்திருக்காது.   நடைமுறை வாழ்க்கையிலும் பலர் பொம்மலாட்டக்காரர்களாக அவதாரமெடுக்கிறார்கள். அவர்களின் கலைத்திறமையைக் காட்ட  சிந்தனையற்ற மனிதர்களை பொம்மையாக்கி ஆட்டுவிக்கிறார்கள்.
 இறுதியில்,  அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் உரிய பரிசை,  பெரும்பகுதியினர் ஏற்றுக்கொள்ளும் கடவுளாலோ அல்லது இயற்கையாலோ  அவரவர் தகுதிக்கேற்ப  வழங்கப்படும்!

Saturday, August 1, 2020

தொலைபேசியும் நானும்...!

நேரமில்லாததாலும், உடல்நிலை ஒத்துழைக்காததாலும்(தொடர்ச்சியாகப்பேசினால் காதில் இரைச்சல் வருகிறது) உறவு மற்றும் நட்புகளிடம் தொலைபேசியில் பேசுவது குறைந்துவிட்டது.

நம் ஒவ்வொருவருக்கும், தொலைபேசியில் பேசுமளவுக்கு குறைந்தது 300 உறவினர்கள் மற்றும் நண்பர்களாவது இருப்பார்கள். 
தினம்தோரும் ஒருவரிடம் பேசினால்கூட, மீண்டும் பேசுவதற்கு குறைந்தது ஒரு வருடமாகும். 

இந்தக்கணக்கு புரியாமல், நாம் பேசுவதில்லை என்று சிலரும், நம்மிடம் சிலர் பேசுவதில்லையென்று நாமும் நினைத்துக்கொள்கிறோம். 

வேலையெல்லாம் முடித்துவிட்டு
ஓய்வாக, ஒருவரிடம் பேசுவோமென்று நினைத்து, அவர் இப்பொழுது நம் அழைப்பை ஏற்கும் நிலையில் இருப்பாரா என்று யோசித்து, அழைத்தால் அவர் 'பிசி'யாகவோ அல்லது எடுக்காமலோ போய்விடுவார். 
நாமும் உடனே அடுத்தடுத்த நபர்களுக்கு ஃபோன் செய்து கடைசியாக ஒருவர் எடுத்துவிட்டால் நம்மால், தொடர்ந்து பேச முடியாத அளவிற்கு, நாம் முன்னே அழைத்தவர்களின் அழைப்பு வந்துக்கொண்டேயிருக்கும். பேசிக்கொண்டிருப்பவரிடமும் சரியாக பேச முடியாது. 

எனவே, இதுபோன்ற சங்கடங்களை தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு பேருக்கு ஃபோன் செய்யலாம். அப்படி, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லையென்றால், நாம் வேறு வேலைப்பார்க்கலாம். அவசியமான செய்தியென்றால் எஸ்எம்எஸ்-ல் விபரம் தெரிவிக்கலாம். நான் அனுபவத்தில் கற்றுக்கொண்டது.

Wednesday, July 29, 2020

தெரியாத குற்றமும் தெரிந்த தண்டனையும்!

குருவும் சிஷ்யனும்...

"பாதிக்கப்பட்டவர்களால், குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை எந்த நாட்டிலாவது உண்டா?"

"உலகெங்கிலும் ஒரு குற்றத்திற்கான தண்டனையை மட்டும், பாதிக்கப்பட்டவர்கள் வழங்குகிறார்கள்"

"அப்படியா, அது என்ன குற்றம்?"

"தன் பிள்ளைகளுக்கு நீதி, நேர்மை, நியாயம், தர்மம், அன்பு, பாசம், ஈவு  இரக்கம் மற்றும் நல்ல நண்பர்களுடன் பழகுதல் போன்றவைகளை கற்றுக்கொடுக்காத குற்றத்திற்காக, வாழ்க்கையில் இவைகளை அறியாமல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளே, குற்றவாளிகளான பெற்றோருக்கு தண்டனையளிக்கும் நடைமுறை, எல்லா நாட்டிலும் உண்டுதானே...?!"

Tuesday, July 28, 2020

நம்பிக்கை தரும் ஓவியம்!

இந்த ஓவியம் சென்னை, குரோம்பேட்டையில் ஒரு பள்ளி வளாகத்தில், ஆறு மாதங்களுக்கு முன்பு வரையப்பட்டது. எப்பொழும் பரபரப்பான சாலையில் அந்தப் பள்ளி உள்ளதால், நான் நின்றுகூட சரியாக பார்க்கமுடிந்ததில்லை.
எனினும், ஊரடங்கு சமையத்தில் நின்று பார்த்து வியந்ததோடு, படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தப்படத்தை வரைந்தது எம். பவித்ரா, எட்டாம் வகுப்பு என்றுள்ளது. இது மாணவி பவித்ராவின் சிந்தனையில் தோன்றியதா அல்லது வேறு ஓவியத்தைப் பார்த்து வரைந்தாரா என்று தெரியவில்லை.
எல்லா தகுதிகள் இருந்தும், பிறரின் உழைப்பில் வாழ நினைப்பவர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் ஓவியமிது.

 இந்தப் பள்ளியில் பயிலும், பிஞ்சு உள்ளங்களில் உயர்ந்த எண்ணத்தை விதைக்க, இதனை சுவற்றில் வரைய முடிவெடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி!

Saturday, July 25, 2020

தனி ஒருவன்!

நான்,  1983-86 வருடத்தில் தஞ்சை சரபோஜி கல்லூரியில் பி.எஸ்சி படித்தபோது நடந்த சம்பவம்.


அப்போதெல்லாம், அந்தக் கல்லூரிக்கு சுற்றுபுற சுவர் கிடையாது.
பேராசிரியர்கள் உட்பட, தஞ்சாவூரிலிருந்து வாகனங்களில் வருபவர்கள், கல்லூரியின் முகப்பு வாயிலுக்கு செல்லாமல், குறுக்கு வழியில்தான் வருவார்கள். சைக்கிளில் வரும் எனது வகுப்பு தோழர் ஸ்ரீதர் மட்டும், முகப்பு வாயில் வழியாகத்தான் வருவார். இதனை வேடிக்தையாகத்தான் நண்பர்கள் என்னிடம் சுட்டிக்காட்டினார்கள்.
மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல், அவர் மட்டும் அப்படி நடந்துக்கொண்ட விதம், அப்போது என்னிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. 


இரண்டாமாண்டு படித்தபோதே போட்டித்தேர்வை எழுதி மத்திய அரசு வேலைக்கு சென்றுவிட்ட ஸ்ரீதர் - ஐ பற்றிய நினைவுகளில், தனிவொருவனாக முகப்பு வாயில் வழியாக  வந்ததுதான் நினைவுக்கு வரும். வாழ்க்கையில் நான் ஓரளவுக்காவது  நேர்மையை கடைப்பிடிப்பதற்கு ஸ்ரீதர் போன்ற முன்னோடிகள்தான் காரணம்.


 அவர் கல்லூரியை விட்டு சென்ற பிறகு இதுநாள் வரை சந்திக்க முடியவில்லை. எஞ்சிய வாழ்நாளில் அவரை கண்டுபிடித்து, சந்தித்து நன்றி சொல்ல வேண்டுமென்பதுதான் என் விருப்பம். 

ஃபிளாஷ் பேக் முடித்து நிகழ்காலத்திற்கு வருவோம். நேற்றைய தினம், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம்  வட்டம், கருப்பம்புலம் ஊராட்சிமன்ற தலைவர் திரு சுப்புராமன் அவர்கள், ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையை வெளிப்படையாக பொதுமக்களுக்கு சமூக ஊடகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். 


இதுநாள் வரை  இப்படி யவரும் வெளியிட்டதாக நான் அறிந்திருக்கவில்லை.  மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல், தன்னளவில் நேர்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் திரு சுப்புராமன் அவர்கள், எண்ணற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழப்போகிறார் என்பதில் சந்தேகமில்லை...!

Thursday, July 23, 2020

சண்டையும் அதன் காரணமும்...!

நானும் எனது மனைவியும் சில நாட்களுக்கு முன்பு, சற்று உரக்க பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, மூன்றே வயதான எங்களுடைய பேத்தி, "ஹை,  சண்டை.." என்று மகிழ்ச்சியுடன்
வேகமாக ஓடிவந்தாள்...

மூன்று வயது குழந்தைக்கு சண்டை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
நானும், சிறு வயதில் எம்ஜிஆர் படங்களை விரும்பிப்பார்ப்பேன். 
அதில், சண்டைகள் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியடைவேன். 

யாராவது சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்டால் ஓடிச்சென்று பார்ப்பேன். நான், அங்கு செல்வதற்குள் சண்டையை முடித்துக் கொண்டார்களென்றால், சினிமாவிற்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்புவது போலாகிவிடுவேன்.

சிறுவயதில் அப்படி சண்டைகளை ரசித்திருந்தாலும் 
வளர்ந்த பிறகு, மற்றவர்களின் சண்டையை என்னால் ரசிக்க முடியவில்லை. வன்முறை அதிகமான படங்களை பார்ப்பதையும் தவிர்த்துவிட்டேன். '90' களில் பலரும் 'ரெஸ்ட்லிங்' - ஐ விரும்பிப்பார்ப்பார்கள். ஆனால்,  நான் மட்டுமல்லாது எனது மகனையும் பார்க்க அனுமதித்ததில்லை.

மனிதர்களுக்கு இயற்கையாகவே  மற்றவர்களின் சண்டையை  ரசிப்பதற்கு விருப்பமுள்ளது. 
இதன் காரணமாகவே, ஒருவருக்கொருவர் தேவையற்றவைகளை சொல்லி அதன் மூலம், மற்றவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதோடு, சண்டை முடிந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக, நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.

நேசத்துடன் வளர்க்கும் சேவலை மற்றொரு சேவலோடு மோதவிட்டு ரசிப்பது போல், நம்மை படைத்த இயற்கையே, நம்மிடையே  மோதலை உண்டாக்கி வேடிக்கை பார்ப்பதாகவே, எனக்கு தோன்றுகிறது...!

Tuesday, July 21, 2020

நாம்தான் காரணம்...!

நேற்றைய தினம், சென்னையில் மாடியிலிருந்து விழுந்து இறந்த முதுநிலை மருத்துவ மாணவரைப்பற்றிய எண்ணங்கள் என்னை இடைவிடாது சுற்றிக்கொண்டிருக்கிறது. 
அவர் இறந்ததற்கான காரணம் எதுவாயினும் அவரின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு வினாடி நேரத்தில் தன்னை அழித்துக்கொண்டதோடு
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அந்த மாணவரின் உழைப்பையும் தியாகத்தையும் சேர்த்தே அழித்துவிட்டார். 
 
இந்த சமூகம் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டது. இதற்கு இந்த சமூகமும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

 மேற்படி, மாணவர் நிச்சயமாக தன்னுடைய பிரச்சினைகளை வெளியில் சொல்லாவிட்டாலும், அவருடைய செயல்களின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.
அதனையறிந்து  அவரது உறவினர்களோ, நண்பர்களோ ஆலோசனையும் ஆறுதலையும் தெரிவிக்க தவறிவிட்டதாகவே கருதுகிறேன்.

இப்பொழுதெல்லாம், மற்றவர்களைப்பற்றிய அக்கறை என்பது நம்மிடையே குறைந்துவருவதே இதற்கெல்லாம் காரணம். ஒருவரைவொருவர் நலம் விசாரிப்பது என்பதெல்லாம் இப்பொழுது குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கெல்லாம் காரணமாக நான் கருதுவது, 'ஸ்மார்ட்போன்'தான்.

நம் அருகில் இருப்பவர்களை விட்டுவிட்டு எங்கேயோ தொலைதூரத்தில் உள்ளவர்கள்தான் நமக்கு நண்பர்களாக தெரிகிறார்கள். 'ஆன்லைன்' விளையாட்டில் நம்முடைய பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறோம். அதனால், குடும்பத்தினரையோ மற்றவர்களையோ நலம் விசாரிப்பதற்கும் அனுசரணையாக பேசுவதற்கும் நமக்கு நேரம் கிடைப்பதில்லை.

எது எப்படியோ, இது மாதிரியான இழப்புகள் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் அனைவரும் உணரவேண்டிய நேரமிது!

Sunday, July 19, 2020

நம்பிக்கை...!

பள்ளியில் படிக்கும் வயதில் பெத்தான், பெரியாச்சி, மாரியம்மன் அய்யனார், ஐயப்பன் போன்ற கடவுள்களின் மீது நம்பிக்கையுள்ள சிறுவனாக வளர்ந்தேன். அப்போதெல்லம், நான் எதையாவது வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடனாக தேங்காய் உடைக்கும் பழக்கமுண்டு. எறும்புகளை பிடித்து சாமிக்கு பலியிடுட்டு விளையாடுவதுமுண்டு. 
எது எதுக்கெல்லாம் சாமியை துணைக்கு அழைந்தேன் என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கும்.
வீட்டுப்பாடம் எழுதி வரச்சொன்ன வாத்தியார் பள்ளிக்கு வரக்கூடாது,
தேர்வில் நிறைய மதிப்பெண் பெறவேண்டும். மேலும், வீடு வந்துசேரும் வரை வயிறு வலிக்கக்கூடாது.

இப்படியாக வளர்ந்து
கல்லூரியில் சேர்ந்த பிறகு, எனது நண்பரின் பேச்சைக்கேட்டு கடவுள் மறுப்பாளனாக மாறினேன். அதன் பிறகு, அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.

கடவுள் இல்லை என்பதற்கு நான் வைக்கும் வாதங்களில் முக்கியாமானது,  "காணிக்கை என்பது நமக்கு வேலை செய்த கடவுளுக்கு நாம் கொடுக்கும் கூலி" என்பேன்.  இதுபோல் நிறைய பேசுவேன். 
ஆனால், என்னை மாற்றிய நண்பர் சில ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுள் நம்பிக்கை உள்ளவராக மாறிவிட்டார் என்பது வரலாறு. 

பல ஆண்டுகள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த எனக்கு, 1995 -ல் ஒரு நாள் ஏற்பட்ட சங்கடத்திற்கு, தீர்வாக எதுவும் தோன்றவில்லை. அப்போது, என்னுள் தோன்றிய சிந்தனையானது,  'கடவுள் நம்பிக்கை நமக்கு இருந்திருந்தால், தீர்வை கடவுளிடம் விட்டுவிட்டு நாம் நிம்மதியாக இருந்திருக்கலாமே' என்பதுதான். அதனால், 'இனி யாருடைய கடவுள் நம்பிக்கையையும் தகர்க்ககூடாது' என்று உறுதியெடுத்தேன். 

நம்மைவிட ஒரு 'சூப்பர் பவர்' மீது நாம்  நம்பிக்கை வைக்க வேண்டுமென்று எண்ணினேன். எனவே, இயற்கையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து வருகிறேன்.

 அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு, அது அடுத்தவருக்கு இடைஞ்சலாக இல்லாதவரை...!

Tuesday, July 14, 2020

மாஸ்க்கும் குல்லாவும்!

திருவாளர் டிரம்ப், இரண்டு நாட்களுக்கு முன்புதான் கொரானாவிலிருந்து தற்காத்துக்கொள்ள,  மாஸ்க் அணிந்துள்ளார் என்கிற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
 பல நாட்களுக்கு முன்பே,  கொரானாவிலிருந்து தப்பிக்க ஒரேவழி மாஸ்க் மட்டும்தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

 இப்பதான் புரியுது, உலகெங்கிலும்  இன்னும் பலர் ஏன் மாஸ்க் அணியாமல் சுற்றுகிறார்களென்று. 'தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி!'

நம் நாட்டில்கூட, உயர் பொறுப்பிலுள்ள பலர், மாஸ்க் அணியாமல் அல்லது தாடையில் மாட்டிக்கொண்டு 'போட்டோவிற்கு போஸ்' கொடுக்கும் நடைமுறை அதிகளவில் உள்ளது. 

 நான் படித்தபோது, ஆரம்பப்பள்ளி பாடத்தில் ஒரு கதை வைத்திருப்பார்கள். 
அதாவது, ஒரு குல்லா வியாபாரி குல்லாவை கூடையில்வைத்து தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் களைப்பின் காரணமாக, ஒரு மரத்தின் நிழலில் கூடையை வைத்துவிட்டு தூங்கிவிடுவார். பின்பு, கண் விழித்துப்பார்க்கும்போது அவர் தலையில் போட்டிருந்த குல்லா தவிர, கூடையிலிருந்த குல்லாவையெல்லாம் மரத்தில் உள்ள குரங்குகள் எடுத்து தலையில் போட்டிருக்கும். குல்லா வியாபாரி அதிர்ச்சியில் செய்வதறியாது, கற்களை எடுத்து குரங்கின் மீது வீசுவார். உடனே, குரங்குகள் மரத்திலிருக்கும் காய்களை பறித்து  குல்லா வியாபாரியின் மீது வீசும். இதனைப்பார்த்து சுதாரித்த குல்லா வியாபாரி, தான் போட்டிருந்த குல்லாவை எடுத்து குரங்குகளின் மீது வீசுவார். உடனே, குரங்குகள் அனைத்தும் அவைகளின் தலையிலிருந்த குல்லாவை எடுத்து வியாபாரியின் மீது வீசும். உடனடியாக, மகிழ்ச்சியுடன் அனைத்து குல்லாக்களையும் எடுத்துக்கொண்டு செல்வதாக கதை முடியும். 

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது, மற்றவர்களை எதை செய்யவைக்க வேண்டுமோ,  அதை நாம் முதலில் செய்யவேண்டும்.
 இதுகூட தெரியாதவர்களை என்னவென்று சொல்வது?

Saturday, July 11, 2020

கற்பனை கலந்த நிஜம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு, வில்லன் நடிகர் திரு பொன்னம்பலம் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தியில் படித்தேன்.

அவருடைய போட்டோவை பார்த்தவுடன், அவர் சினிமாவில் காட்டிய வில்லத்தனம்தான் என் மனதில் தோன்றியது.
கிளைமாக்ஸ் காட்சியில் அவர் அடிபடும்போது, என்ன மனநிலையில் நான் இருப்பேனோ, அந்த மனநிலைக்கு சற்றும் வித்தியாசம் இல்லாத மனநிலைதான்.

இதுவே, கதாநாயக நடிகராக இருந்தால், நாம் அனைவரும் கோவில் கோவிலாக சென்று வழிபடுவதோடு மொட்டை அடித்தல்,  நாக்கை அறுத்தல், விரலை வெட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்போம்.

இயல்பில் கெட்டவர்கள் நல்லவர்களாகவும் மற்றும்  நல்லவர்கள் கெட்டவர்களாகவும் வேடம் போடுவதற்கு வாய்ப்புகள் இல்லாமலில்லை. கற்பனை உலகில் 
ஒருவர் போடுகின்ற வேடத்தை வைத்து,  அவருடைய இயல்பை தீர்மானிக்கிறோம்.

இது மாதிரிதான், நம் வாழ்க்கையிலும் நல்ல கற்பனைவளம் மிகுந்த  கதைசொல்லிகள், எளிதில் நல்லவர்களை கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதனால், ஒருவரைப்பற்றி நாம் அறியும் தகவல்களை, நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்தி அவர்களை இனம் கண்டு, அவர்களுக்குரிய முக்கியத்துவம் அளிப்பதுதான் சரியான வழிமுறையாகும்.

இது கொஞ்சம் சவாலான வேலைதான்!

Sunday, July 5, 2020

கொரோனா அச்சமும் விளைவும்...!

இரண்டு நாட்களுக்கு முன்பு, கிராமத்திலுள்ள உறவினரிடமிருந்து அழைப்பு வந்தது. வெளி மாவட்டத்தில் வேலை செய்துவந்த நபர், அங்கு வேலை இல்லாத காரணத்தினால் கிராமத்திற்கு திரும்பி வந்திருப்பதாகவும், அவரை கொரோனா அச்சம் காரணமாக பக்கத்து வீட்டினர் ஊரைவிட்டு சென்றுவிடு என்று மிரட்டுவதாகவும் தகவல் தெரிவித்து, அதுகுறித்து மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்றும் கேட்டார். அதற்கு நான், "ஊராட்சி மன்ற தலைவர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவியுங்கள்" என்று சொன்னேன்.

மேற்கண்டவர்களிடம் பேசியபிறகு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொன்னதாக உறவினர் தெரிவித்தார். இதற்கிடையே, அந்த நபர் மக்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து, பல கிலோ மீட்டர் நடந்தே  அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றதாகவும், அங்கு அன்றைய தினம் பரிசோதனையை செய்ய இயலாது என்று சொல்லி, மேற்கண்ட நபரின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று தனிமையில் இருங்கள் என்று அறிவுரை சொல்லியும் அனுப்பி இருக்கிறார்கள். அதன்பிறகு, 'அவர் தனிமையில் இருந்து வருகிறார். இவையெல்லாம் இரண்டு வரிகளில் எழுதிவிடலாம். ஆனால், அவரின் மனது என்ன பாடுபட்டிருக்கும். வேறு ஏதேனும் விபரீத முடிவு எடுத்திருந்தால்...?
 நினைக்கவே நெஞ்சம் பதருகிறது. 
 '
இவ்வாறாக, வெளியூரில் சென்று வேலை பார்த்து வரும் நபர்கள், அங்கு வேலை இழப்பு ஏற்படும் பொழுது, சொந்த ஊர் நோக்கிச் செல்வது இயல்பு. அப்படி சொந்த ஊருக்கு வருபவர்களை அன்புடனும் மனிதநேயத்துடன் அண்டை அயலார்கள் நடத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. மேலும், இப்படி வருபவர்கள் எங்கே தங்க வேண்டும், அவர்கள் யாரை சந்திக்க வேண்டும் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது. 

இதற்கு தீர்வாக, கிராமத்தில் உள்ள பள்ளிகளில் இவர்களை தங்கவைத்து, சத்துணவு கூடத்தில் உணவு தயாரித்தளித்து, தேவையானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

தாய்மண் நோக்கி வருபவர்களை தாயாக நின்று கையிலேந்துவதே மனிதமாகும்.

Sunday, May 24, 2020

தாத்தாவின் நண்பர்!

வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் வடகாட்டில் 23.5.2020 அன்று மறைந்த திரு இரா. சந்திரதேவர் அவர்கள், எனது தாத்தாவின் நண்பர். அதனால், அவரையும் தாத்தா என்றுதான் அழைப்போம். பின்னர், உறவு முறையில் மாமாவாகிப்போனவர்.

எனது பள்ளி நாட்களில், இரவு நேரங்களில் தாத்தாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார். அவரின் பேச்சில் பெரும்பகுதி, மாடுகளை கோடியக்காட்டில் மேய்ச்சலுக்கு விட்டது மற்றும் அவைகளைப் பார்த்துவந்த  தகவல்கள்தான் அதிகமிருக்கும்.

அந்தக்காலத்தில், எங்கள் வீடு குடிசை அமைப்பிலிருந்தது. அதனை மண் சுவர் வைத்த குடிசை வீடாக மாற்றியபோது, வாசலில் கதவு நிலை அமைப்பதற்கு கல் சுவர் கட்டுவதற்கு, கடனாக செங்கற்களை கொடுத்து உதவியவர். 

விவசாயத்தை மட்டும் நம்பி, அதன் வழியாகவே ஓர் குடும்பத்தை நேர்மையான வழியில் முன்னேற்ற முடியும் என்பதை உணர்த்தியவர்.

அவரைப்பற்றி எவரும் தவறாகப்பேசி நானறிந்ததில்லை.
'மனிதன் வாழும் காலத்தில்  ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்ந்ததற்கு சான்றாக வாரிசுகளின் ஒற்றுமை அமைகிறது'
என்றார் ஓர் அறிஞர். 

அது உண்மையென்பதற்கு சான்று அவரின் வாரிசுகளுக்கிடையே நிலவும் ஒற்றுமையே. வாரிசுகளுக்கிடையே பொருளாதார ஏற்றதாழ்வு இருக்கலாம். ஆனால், ஒருவருக் கொருவர் நேசிப்பதில் ஏற்றதாழ்வு இருப்பதாக நானறியவில்லை. 

சில மாதங்களுக்கு முன்பு, ஓய்வுப்பெற்ற தலைமையாசிரியர் திரு CM அவர்களுடன் பேசியபோது, 
தனது தந்தை குறித்து, அவர் சொன்ன தகவல் ஆச்சர்யமாக இருந்தது. முன்பொரு சமயத்தில், ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தை சிலர் தவறாக குறிப்பிட்டதையும், அதற்கு  தனது தந்தை, "அவர்களின் உழைப்பால் முன்னேறியவர்கள்" என்று சொன்னதையும் குறிப்பிட்டார். படித்தவர்களே பொறாமையால் புரளி பேசும் இக்காலத்தில், அடுத்தவர்களின் முன்னேற்றதில் பொறாமைப்படாமல், நேர்மையாக பாராட்டியதை அறிந்து வியந்தேன். 

இம் மாதிரியான சிறந்த மனிதர்களிடம்  பேசுவதற்கும், பழகுவதற்கும் இயற்கை எனக்கு வாய்ப்பளிக்கவில்லை.
நம்மிடையே, அரிதாக வாழும் இம்மாதிரியான நல்லவர்களை கண்டறிந்து அவர்களுடன் பேசிப்பழகி அவர்களின் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல  வேண்டுமென்று உறுதியெடுப்பதே  நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

Tuesday, April 28, 2020

கரோனா ஆயுதம்...!

கண்னெதிரே எதிரி வந்தான்
கம்பெடுத்தேன் ஓடவில்லை.

கத்தியை எடுத்தேன்
கலவரப்படவில்லை அவன்.

துப்பாக்கியை நீட்டினேன்
தூ என்றான்.

தும்மினேன்...
தூரமாக ஓடி மறைந்தான்! 


உதவும் உள்ளம்!

வேதாரண்யம் ஆசிரியை திருமதி எம். வசந்தா சித்திரவேல் அவர்கள், பல வருடங்களாக பல்வேறு உதவிகளை செய்துவருபவர்.
கஜா சமயத்தில் அவர் செய்த உதவிகள் பல. அதேபோல், கரோனா சமயத்திலும் செய்து வருகிறார். 
முதல்வர் நிவாரண நிதிக்கு 
ரூ. 50,000/- வழங்கி ஆச்சர்யபடுத்தினார்.

 தினந்தோறும், உணவை  தானே சமைத்து  இயலாதவர்களுக்கு அளித்துவருகிறார். மேலும், இன்றைய தினம், தீ விபத்தால் வீட்டை இழந்தவருக்கும், போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் வறுமையால் வாடும் நபருக்கும் தலா ரூ. 5,000/- வழங்கியுள்ளார். 
இவரை பாராட்டுவதோடு தொடர்ந்து பல உதவிகளை செய்ய வாழ்த்துவோம்

இவர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு....

*ஏதோ என்னால் முடிந்தது...

வேதாரண்யம் காந்திநகரில்
வசிக்கும் திரு மணிமாறன்
என்பவரது வீடு எதிர்பாரத 
விதமாக தீக்கிரையானது.
மனைவி மக்களுடன் குடியிருக்க 
தவித்து வந்தவருக்கு 
பலரும் பலவகையில் உதவி 
செய்து வருகின்றனர். 
நான் சார்ந்த அரிமா சங்கம்,
வர்த்தக சங்கம் & ரொட்டேரியன் சங்கம்
உள்ளிட்டவைகளும் உதவிய வேளையில் 
நானும் என் பங்கிற்கு ரூபாய் 5000/-
(ஐந்தாயிரம் மட்டும் )  உதவினேன். மணிமாறன் குடும்பத்தினருக்கு 
ஆறுதலும் சொல்லி வந்தேன்...

 
வண்டுவாஞ்சேரி மாரியம்மன் கோவிலடி, பின்புறம் இரண்டு குழந்தைகளுடன் வசிப்பவர்கள் 
கருணாநிதி -நீலாவதி தம்பதியினர். 
சரபோஜிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்  மகள் 1100 திருக்குறளை 
சர்வசாதாரனமாக ஒப்புவிக்கிறாள். "ஐந்தாம் வகுப்பு முடிப்பதற்குள் 1330 திருக்குறளையும் மனப்படமாய் சொல்லி 
தமிழக முதல்வரிடம் பரிசும் பாராட்டும் பெறுவேன்" என நம்பிக்கையுடன் 
கூறுகிறாள். அவளால் முடியும். அத்தனை  சுறுசுறுப்பு. 
இவளால் பெற்றோருக்கு எவ்வித கஷ்டமும் இல்லை. இவளுடைய அண்ணன் ஒருவன் உள்ளான். 
கலாநிதி என்னும் பெயருடைய அவனுக்கு வயது14. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவன்.
பிறந்தது முதல் படுத்த படுக்கையாகவே உள்ளான். ஏழை விவசாயக்கூலிகளான 
பெற்றோர், தங்களால் முடிந்தளவு இருந்த குறைந்தளவு  சொத்தைக்கூட 
விற்று வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் போய்விட்டது. கூலி வேலை செய்து குடும்பம்பத்தை காப்பாற்றி வரும் கருணாநிதிக்கு 
கொரோன ஊரடங்கு பெரிய 
சவாலாய் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் உதவலாம் என எண்ணி அவர்கள் வீடுதேடிப்போய் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி, குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்ததுடன் குடும்ப செலவுக்காக ரூபாய் 5000/-(ஐந்தாயிரம் மட்டும்) வழங்கினேன்.
இப்பொழுது, சமூக ஆர்வலர்கள் பலரும் உதவி வருகின்றனர்... இரண்டு உதவிகளையும் மனமுவந்து மனநிறைவோடு செயதேன்... ஏதோ என்னால் முடிந்தது... இறைவனுக்கு நன்றி