Wednesday, April 13, 2011

என்ன நடக்கும், முப்பது நாட்கள் இடைவெளியில்?

அப்பாடா, ஒருவழியா ஒட்டுப் போட்டு கையில மைய வச்சிகிட்டு வந்தாச்சி. முடிவு தெரிய இன்னும் முப்பது நாள் காத்துக் கிடக்கணும். முடிவு வர்றப்ப, கிட்டதிட்ட நாம எப்போ ஓட்டுப் போட்டோம்ன்னு மறந்து போயிடும்!

இப்படி ஒரு மாதம் கழிச்சி ஒட்டு எண்ணுவதால், என்ன லாபம் அப்படின்னு மட்டும் இங்கே பார்ப்போம்.

1 .மாற்றுக் கட்சி தொண்டர்கள் மேலுள்ள அர்த்தமற்ற பகைமை மறந்து/மறைந்து போகும். அதனால், சண்டை சச்சரவு குறையும்.

2 . ஒரு மாதக் காலமும் 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம்' என்று அனைத்துக் கட்சி தலைவர்களும்,
தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம்.

3 . 'வெற்றிப் பெற்றால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது. தோல்வியடைந்தால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது' என்று
இந்த கால அவகாசத்தில் சிந்தித்து, இரண்டுக்குமே அறிக்கை தயார் செய்து வைத்து விடலாம். இதிலும், ஒரு சிக்கல் இருக்கிறது,
வெற்றிப் பெற்ற சந்தோஷத்திலோ, தோல்வியடைந்த வருத்தத்திலோ அறிக்கையை மாற்றி வெளியிடும் அபாயம் உள்ளது.

4 . கருத்துக் கணிப்பு வெளியிட்ட பத்திரிக்கைகளும், பதிவர்களும் இந்தக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கும் மேலே
உள்ள மூன்றாவது 'பாரா' பொருந்தும்.

5 . முடிவு தெரிவதற்குள் தலைவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளிநாட்டுக்கு சென்று வரலாம்!

6 . எந்தக் கவலையும் இல்லாமல் ஐ.பி.எல். பார்க்கலாம்!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

Monday, April 11, 2011

விவசாயம் செய்வோம், வாருங்கள்...!

என்னுடைய ஒரு ஒட்டு, என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறது? என்பதுதான் பலரின் கேள்வி. இப்படி நினைப்பவர்கள், சுமார் முப்பதுக்கு மேற்பட்ட சதவிகிதத்தினர். இவர்கள்தான், வாக்குச்சாவடிப் பக்கம் செல்வதில்லை. இதில் பெரும்பகுதியினர் படித்தவர்கள் என்பதும், அரசியல் நிலைபாடு நன்கு அறிந்தவர்கள் என்பதும்தான் வேதனையான விஷயம்.
இந்தத் தேர்தலில் கூட கிராமத்து மற்றும் ஏழை மக்களை குறிவைத்தே பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைத் தயாரித்துள்ளதே இதற்கு சான்று. படித்தவர்களின் ஒட்டு அவர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

நாம் ஒட்டுப்போடும் வேட்பாளர் தோற்க கூடாது என்கிற எண்ணத்தில், யார் வெற்றிப் பெறுவாரோ அவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்பவர்களும் உண்டு. இது போல், கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன். எனவே, உங்கள் தொகுதியில் போட்டியிடும் நல்ல வேட்பாளருக்கு, அவரின் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் வாக்கை, அவசியம் பதிவு செய்யுங்கள். இன்றைக்கு நம்முடைய ஒட்டு மதிப்பில்லாமல் போவது போல் தோன்றும். ஆனால், வரும் தலைமுறைக்கு அது நல்ல அரசியல் சூழ்நிலையை உருவாக்க வழி வகுக்கும். நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையும், அது அவரவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்பதையும் மறக்க கூடாது.

சரி, எனது தொகுதியில் உள்ள வேட்பாளர் யாருமே எனக்குப் பிடிக்கவில்லை என்பவர்களுக்கு, 49 'ஒ' இருக்கிறது. இதுமாதிரியான ஓட்டுக்கள் ஒரு தொகுதியில் அதிகம் விழுவதாக வைத்துக் கொள்வோம். அது வெற்றிப் பெற்ற வேட்பாளரின் வித்தியாசத்தைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில், தோல்வியடைந்த கட்சி, நல்ல வேட்பாளரை நிறுத்தியிருந்தால், இந்த 49 'ஒ' வாக்களித்தவர்கள் நமக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்களே என்று நினைக்கத் தோன்றலாம் அல்லவா? அப்படி நடந்தால், அது எதிர்வரும் தேர்தலில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த வழிவகுக்கும்.

' உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை' என்பார்கள். ஆம், நாம் விதைக்கிற நாள் ஏப்ரல் 13 . அறுக்கிற நாள் மே 13. அறுக்கிற நாள்தான் மே பதிமூன்றே தவிர, அதுதான் வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்.

விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!

Wednesday, April 6, 2011

அளவுக்கு மீறினால்...?!

மூக்கு முட்ட சாப்பிட்டவனைப் பிடித்துவைத்து மீண்டும் ஒரு விருந்து சாப்ப்பிடச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் உள்ளது, இப்பொழுது நடக்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. வரும் எட்டாம் தேதி ஐபிஎல் தொடங்க உள்ளது. டோனி சென்னை வந்து விட்டார். இதைக் கேட்டவுடன், என் மனநிலை மேற் சொன்ன விருந்து சாப்பிட்டவனின் நிலைக்கு சென்றுவிட்டது.

நம்முடைய நீண்ட நாளைய கனவு, இப்பொழுதான் நிறைவேறி உள்ளது. நமது வீரர்கள் ஹீரோக்களாகவும், யாருமே வெல்ல முடியாதவர்களாகவும் திகழ்வதாக நினைத்து மகிழ்ச்சியில் உள்ளோம். இந்நிலையில், நாளை ஐபிஎல்-யில் நமது வீரர்கள் சரியாக விளையாடாமல் போனால், உதாரனத்திற்கு டோனியோ, காம்பிரோ ஜீரோவில் அவுட்டானால், நம்முடைய இப்போதைய சந்தோஷம் காணாமல் போய்விடுமே! எனவே கிரிக்கெட் ரசிகர்கள், இப்பொழுது உள்ள மகிழ்ச்சியை கொஞ்ச நாள் அனுபவிக்க நினைத்தால், ஐபிஎல் பார்ப்பதை தவிர்க்கலாம் என்பதே என் யோசனை. எனவே இந்த ஐபிஎல் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படாது என்பதே எனது எண்ணம். பொறுத்திருந்து பார்ப்போம்.