Tuesday, January 24, 2012

என்னிடம் திருடிக்கொள்?!


மற்றவர்களை குறை சொல்லி பதிவெழுதக் கூடாது என்று அண்மையில் ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். ஏனென்றால், நல்ல விஷயங்கள் என் கண்ணில் படாமலே போய்விடுமோ என்கிற அச்சம் எனக்குள் வந்துவிட்டது.  தினசரி, பேப்பரில் வரும்  விபத்து மற்றும் திருட்டு போன்ற செய்திகளை முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக என் மனைவிடம் சொல்வேன். ஆனால், என் மனைவியோ "உங்களுக்கு காலையில் நல்ல செய்தி சொல்லத் தெரியாதா?" என்பார். பதிலுக்கு,  "நல்ல செய்தி இருந்தால்தானே சொல்வதற்கு?!" என்பேன்.
ஒரு கட்டத்தில் இந்தப் பிளாக்கும் அப்படி மாறி விடுமோ என்கிற பயத்தில் தான் முதலில் சொன்ன முடிவை எடுத்திருந்தேன்.


சரி நேரா விஷயத்துக்கு வருவோம். நேற்று, சென்னை பெருங்குடி OMR சாலையில் உள்ள பரோடா வங்கியில் வேலை நேரத்தில் நான்கு பேர் சுமார் 24 லட்சத்தை கொள்ளையடித்து சென்ருக்கின்றனர். மேலும் தகவலுக்கு இங்கே படிக்கவும்.

மேற்கண்ட கொள்ளை சம்பவம் நடந்த வங்கியில் CCTV இல்லை என்பது தான் வேடிக்கை மற்றும் விநோதமாக உள்ளது. இந்த வங்கியில்  CCTV இல்லாததால்தான் கொள்ளையர்கள்,  இந்த வங்கியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. எத்தனை முறை எச்சரிக்கை செய்தாலும், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் யாரும் திருந்த மாட்டார்கள் என்பதற்கு உதாரணம் தான் இது. சினிமா நகைச்சுவை பாணியில் என்னிடம் திருடிக்கொள்  என்கிற விதத்தில், இப்படி அலட்சியமாக இருக்கக் கூடாது.


இன்றைக்கு குற்றங்களைக்  குறைப்பதற்கு அல்லது கண்டுபிடிப்பதற்கு CCTV பெருமளவில் உதவிபுரிகிறது என்பதை அன்றாடம் செய்தித்தாள் படிப்பவர்கள் அறிவார்கள். பெரிய நிறுவனங்கள் முதல் பெட்டிக்கடை வரை CCTV வந்துவிட்டது. எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு மருத்துவர் தனது கிளினிக்கில் கண்காணிப்பு கேமரா வைத்துள்ளார். வெளியில் நோயாளிகள் கூட்டம் குறைவாக இருந்தால் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவார். ஆனால்,  நோயாளிளுக்கு  ஆலோசனை வழங்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்.  அவருக்கு தன்  மருத்தவமனையில் எப்பொழுதும் கூட்டம் இருக்கவேண்டும். அந்த விதத்தில் கண்காணிப்பு கேமரா அங்கு  பயன்படுகிறது!




இனியாவது கண்காணிப்பு கேமிராவை எல்லா நிறுவனங்களும், அதுவும் குறிப்பாக பணம் புழங்கும் இடங்களில் அவசியம்  நிறுவ வேண்டும் என்பதே நமது விருப்பம்.

 CCTV குறித்த எனது முந்தையப் பதிவு.

படம்  உதவி: கூகிள்.

Sunday, January 22, 2012

இப்படியும் ஒரு மருத்துவர்!

வேதாரணியம் பகுதியில் மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' என்று அன்போடு அப் பகுதி மக்களால் அழைக்கப்படும்,  திரு டாக்டர் வி.ஜி.சுப்பிரமணியன் அவர்களைப் பற்றி 'புதிய தலைமுறை' வார இதழ் செய்தி வெளிட்டுள்ளது. மருத்துவர் பற்றி நான் அறிந்த விபரங்களையும் இங்கே பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.




கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து. பின்பு, அந்தக் கிராமத்திலேயே மருத்துவம் பார்க்கும் திரைப்பட கதாநாயகன் போல், வேதாரணியம் அருகே செம்போடை என்கிற கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து. அரசு பள்ளிகளில் கல்விக் கற்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பட்டம் பெற்று,  லண்டனில் பணிபுரிந்து, பின்பு வேதாரணியம் பகுதியில் அரசு மருத்துவனைகளில் பணியாற்றி.  பின்பு,  அரசுப் பணியை விட்டு விலகி  தன்னுடையை சேவை, தான்  பிறந்த மண்ணிலேயே தொடர வேண்டும் என்பதற்காக,   வேதாரணியம் பகுதியிலேயே தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வரும்   'டாக்டர் வி.ஜி.எஸ்' அவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.


 கிராமத்தில் பிறந்தாலும் தனது கிராமத்து மக்களின் மீது அக்கறைக் கொள்ளாமல்  நகரத்தில் மருத்தவம் பார்க்க விரும்பும் மருத்துவர்கள் மத்தியில், தான் பிறந்த கிராமத்திலேயே, அப் பகுதி மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக, வருமானக் கணக்குப் பார்க்காமல், இத்தனை நாள் உழைத்து சம்பாதித்த பணத்தைப் போட்டு  அண்மையில் ஐ.சி.யு. வசதியுடன் ஒரு நவீன மருத்துவமனையை 'நேதாஜி' பெயரில் திறந்துள்ளார். 

இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவமனையில் தங்கி, அங்கு வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு எந்த வித வேறுபாடும் பார்க்காமல், மருத்துவ சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் சேவை அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வாழ்த்துவோம். மேலும், இவரைப் பின்பற்றி புதிதாக மருத்துவப்படிப்பு முடிக்கும் மருத்துவர்கள், பொருளாதாரக் கணக்குப் பார்க்காமல் கிராமத்தில் சேவையாற்ற முன் வர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

இந்த மாதிரி, சமூக சேவை செய்பவர்களை கண்டுபிடித்து பாராட்டி உற்சாகப் படுத்தும் 'புதிய தலைமுறை'க்கு நன்றி தெரிவிப்போம்.

.

Sunday, January 15, 2012

பொங்கல் நினைவுகள்- பாகம் 2




    பொங்கல் கரும்பு!

    இதை நாங்கள் பார்ப்பதே பொங்கல் சமயத்தில்தான். மற்றபடி கரும்புக்கும் எங்கள் ஊருக்கும் சம்பந்தம் கிடையாது. அதனால், முடிந்த வரையில் நிறைய கரும்புகள் வாங்கித் தருவார்கள்.  கரும்பு நம்ம ஊரில் விளையவில்லையே என்கிற ஏக்கம் எப்பொழுதும் உண்டு. கரும்பில் இரண்டு வகை உண்டு என்பதை நான் மன்னார்குடி படிக்க சென்ற பொழுதான் அறிந்துக் கொண்டேன்.





     எங்கள் ஊரில் நான் சிறுவனாக இருந்த பொழுது அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவது புகையிலை மற்றும் பூ. மரங்களில் சவுக்கு. முந்திரி மரங்கள் கூட எங்காவது ஓர் இடத்தில்தான் இருக்கும்.  சுவைக்காக சாப்பிடும் பழ வகைகளில் மா, எங்காவது நாவல், சீதா மரங்கள்  இருக்கும்.  பிறகு கொய்யா வந்தது.

 பலா மரம் ஊரில் இல்லை. பலா மரம்  இருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என்றும், அதை நட்டவர்கள் அம் மரம் காய்க்கும் பொழுது உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றும் ஒரு மூட நம்பிக்கை இன்றளவும் எங்கள் பகுதியில் உண்டு.


      கடலூர் மாவட்டத்தில் 'தானே' புயலால் விழுந்த பலா மரங்களைப் பற்றிய  செய்தியை அறியும் பொழுது, ஒரு பலா மரம் முழுமையாக  அதாவது முழுமையான  அளவில் காய்க்க முப்பது வருடங்களுக்கும்  மேலாகும் என்கிற தகவலை பத்திரிகையில் படித்தேன். இதற்கு  'அமைதி அம்மா' சொன்னது,  "அதானால் தான், நம்ம ஊரில் பலா மரம் நட்டவர்கள் அது காய்க்கும் பொழுது உயிரோடு இருக்க மாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்களோ?"

   மேற்கண்ட தகவல்கள், கிராமத்தில் வளர்ந்த பொழுது இனிப்பு சுவையறியாத எங்கள் நாக்குக்கு, பொங்கல் கரும்பு எப்படி சுவைத்திருக்கும் என்று புரிந்துக் கொள்வதற்காக! எங்கள் வீட்டில்  வாங்கி வந்த கரும்பை துண்டாக்கி, பிறகு தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டித் தருவார்கள். அப்படித்தான் கரும்பைத் தின்று எனக்கு பழக்கம். முழு கரும்பை அப்படியே 'பல்லால்' கடித்து சாப்பிடும் பழக்கம் இன்றளவும் இல்லை.

 இந்த வருடம் ஒரு கரும்பின் குறைந்தப் பட்ச சில்லறை விலை ரூபாய் முப்பது. விலை கசந்தாலும் கரும்பின் சுவை?

  பாகம் ஒன்று படிக்க இங்கே செல்லவும்.

  அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!


Thursday, January 12, 2012

இதுவல்ல தீர்வு...!

தூத்துக்குடி பெண் டாக்டர் சேதுராமலட்சுமி, வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதும். அதன் பிறகு நடந்த மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும் அறிந்ததுதான்.  ஆனால், இந்த சம்பவம் எந்தளவுக்கு சமூக சீர்கேட்டை உருவாக்கும் என்பதுதான் நமது சிந்தனை. 

நோயாளி  இறந்ததற்காக சிகிச்சையளித்த மருத்துவர் படுகொலை செய்யப்படுவது எனக்குத் தெரிந்து இது முதல் நிகழ்வு. இச் செய்தியை கேட்டவுடன்  என்னுடைய இதயம் சில வினாடிகள் நின்றுவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த செய்தியை என்னால் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  

இந்த நிகழ்வால்,  இனி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாம். அதனால், தரமான மருத்துவர்களின் சதவிகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள்  மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுக்க தயங்குகிறார்கள். பலர், பெற்றோரின் விருப்பத்திற்காகத்தான் மருத்துவ படிப்பில் சேர்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

அப்படி சேர்ந்தவர்களும் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  எம்.பி.பி.எஸ். மட்டும் இன்றைய சூழலில் போதாத ஒன்றாக உள்ளது.
எம்.பி.பி.எஸ். முடித்த அனைவருக்கும் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே, வாய்ப்பு கிடைத்து மேற்படிப்பு முடித்துவிட்டு வந்தாலும்,   தனியாக மருத்துவமனை கட்டுவதற்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதும் நடுத்தர வர்க்க மருத்துவர்களால் இயலாத நிலையில் உள்ளது.

எல்லாவற்றையும்  புறம்தள்ளிவிட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு, நோயாளிகளின் மூலம் உயிர்க் கொல்லி  நோய்கள்  தொற்றிக் கொள்ளும் அபாயமும் அதிகமாகி வருகிறது.  நுகர்வோர் நீதிமன்றத்தை எதிர்கொள்வது இன்னுமொரு பெரிய சவால்.
இம் மாதிரியான சூழ்நிலைகள் மருத்துவர்களுக்கு  மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.

சரி, மருத்துவர்களுக்கு என்ன, அவர்களுக்குத்தான் பணம் கிடைக்கிறதே என்று கூட சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில மருத்துவர்களுக்கு பணம் கிடைப்பது
உண்மைதான். ஆனால், எல்லோர் நிலையம் அப்படி அல்ல. மேலும் அவர்கள் பணம் சம்பாதிப்பதாக எடுத்துக் கொண்டாலும். அந்தப் பணத்தை அவர்கள் செலவு செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பதே எதார்த்தம். முன்பெல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமாயின் டாக்டருக்கு படித்தால்தான் முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், இன்று மருத்துவர்களை விட மற்ற துறைகளில் உள்ளவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

சில  நாட்களுக்கு  முன், என்னுடைய  கண்ணில் ஒரு துகள் விழுந்துவிட்டது. இரவு முழுதும் தாங்க முடியாத வேதைனையில் தவித்தேன். மேலும், கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.  மறுநாள் காலை மருத்துவர் அந்தத்  துகளை எடுத்த மறு வினாடியே என்னுடைய வேதனை காணாமல் போய்விட்டது. அப்பொழுது அந்த மருத்துவர் எனக்கு கடவுளாகத் தெரிந்தார்.  பல சமயங்களில் மருத்துவர்கள் எனது வியாதியை குணப்படுத்தி இருந்தாலும்,
இதற்கு முன் எனக்கு அப்படி தோன்றியதில்லை. 'மருந்துக் கொடுக்கிறார்கள், அதனால் நோய் சரியாகிறது. அப்படியெனில், அந்த மருந்துதான் கடவுள் என்கிற மனப்பான்மை எனக்கு இருந்திருக்கலாம்' என்று நினைக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் உண்மையான சேவை மனப்பான்மையுடன் வைத்தியம் செய்யும் மருத்துவரை கடவுளாக நினைத்து வணங்க வேண்டும். அனைத்து மருத்துவர்களும் தங்களை அதற்கு தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

 எது எப்படியோ, தூத்துக்குடி நிகழ்வு மீண்டு கற்பனையில் கூட நடக்கக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும்.

Sunday, January 1, 2012

புத்தாண்டு அன்று நான்!



என்னைப் பொறுத்தவரை  2011, 2012 என்று பிரித்துப் பார்க்க விரும்புவதில்லை. எல்லா ஆண்டும் ஒன்றுதான். ஆனால், ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் பொழுதும் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்கிற நினைப்பு வருவதை  இங்கு மறைக்காமல் ஒப்புக் கொள்கிறேன். 
 
 

ஒவ்வொரு வருடம் பிறக்கும் பொழுதும், நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், ஐந்தாறு பேருக்கு போன் செய்து பேசுவதற்குள் போரடித்து விடுகிறது. முடிந்த வரை வருடத்தில் ஒரு முறை மட்டும் பேசும் நண்பர்களுக்கு புத்தாண்டு அன்று பேசுவதை வழக்கமாக வைத்துள்ளேன். குறிப்பாக மருத்துவர்கள் சிலர் எனக்கு நண்பர்களாக உள்ளார்கள். அவர்களை முடிந்தவரை மற்ற நாட்களில் போன் செய்து தொந்தரவு செய்வதை தவிர்த்துவிடுவேன். இங்கு தொந்தரவு என்று நான் குறிப்பிடுவது மருத்துவர்களுக்கு அல்ல. அவர்களை பார்க்க காத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு. பெரும் பகுதியான மருத்துவர்கள் நோயாளி அல்லாத நண்பர்களிடம் போனில் பேசுவதை விரும்புகிறார்கள் என்பது எனது அனுபவ உண்மை! 

நாம் எதிர்பார்க்காத நண்பர்கள் நமக்கு போன் செய்வார்கள்.  இன்னும் சிலர் பெயர் போடாமல் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். யாரிடமிருந்து வாழ்த்து வருகிறது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது.  

இந்த ஆண்டு அனைவருக்கும் மிக சிறந்த ஆண்டாக அமையும் என்று நம்புவோம்.