Saturday, January 29, 2011

கிம் கிளைஸ்டர் ஒரு பாடம்!


கிம் கிளைஸ்டர் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் டென்னிசில் இருந்து காயம் காரணமாக ஓய்வு பெற்றுச் சென்றார். பிறகு,ஜூலை 2007 -ல் அமெரிக்க பேஸ்கட்பால் வீரரை திருமணம் செய்துகொண்டார். பிப்ரவரி 2008-ல் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். (ஏற்கனவே, டிசம்பர் 2003-ல் ஆஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட்-ஐ திருமணம் செய்து அக்டோபர் 2004 -ல் அந்த திருமணம் முறிவடைந்ததை, இங்கு சொல்லத் தேவையில்லை) இந்நிலையில் மீண்டும் 2009 -ல் டென்னிஸ் விளையாட்டில் களம் புகுந்து இன்று பட்டங்களை வென்று கொண்டிருக்கிறார்.

இவர் வாழ்வின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது. திருமணம் என்று ஒன்று நடந்து விட்டால் அதன் பிறகு பெண்களுக்கு எல்லாமே முடிந்து விட்டது என்று இன்று படித்த பெண்கள் கூட நினைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு தனது உடல் நலத்தின் மீது அக்கறை கொள்வதில்லை. திருமணம் வரை சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கும் பெண்கள், அதன் பிறகு வீட்டில் முடங்க தயாராகி விடுகிறார்கள்.நல்ல திறமையோடு இருக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு முடங்க வேண்டிய அவசியமென்ன? அதுவும், ஒரு குழந்தைப் பிறந்துவிட்டால், தான் பார்க்கிற வேலை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிட்டு குழந்தை குடும்பம் என்று மாறிவிடுகிறார்கள். அவர்கள் மனதிற்குள் சோர்வு ஒளிந்திருக்குமோ? சில ஆண்கள் கட்டாயப்படுத்தி பெண்களை வீட்டில் முடக்குவது உண்டு. "பொண்ணு பி. ஈ. படிச்சிருக்கணும் ஆனா... வேலைக்கு போகக்கூடாது" என்று சொல்ற மணமகனும் உண்டு. அதற்கு, ஏன் ஒரு கலை அல்லது அறிவியலில் பட்டம் பெற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க கூடாது?

திருமணமோ அல்லது குழந்தை பெற்றெடுத்து விட்டாலோ தங்களுக்கு எல்லாமே முடிந்துவிட்டது. இனி டி.வி.சீரியல், மார்கெட் செல்வது, மாலையில் அரட்டை என்பதுதான் வாழ்க்கை என்று நினைத்துவிடுகிறார்கள். ஒரு சில பெண்கள் விதிவிலக்காக இருப்பதையும் நான் அறிவேன். கிம் கிளைஸ்டர் வாழ்க்கையை அறிந்த பிறகாவது திருமணம், குழந்தை பிறப்பு போன்றவை பெண்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்கிற உண்மையை பெண்களும் ஆண்களும் உணர வேண்டும். அப்படி, நமது பெண்கள் எழுச்சிப் பெற்றால், இந்தியாவின் மனித வளத்திற்கு எந்த நாடும் இணையாக முடியாது.

.

Friday, January 28, 2011

பதிவரின் பிரச்னை...!

நான் பிளாக் எழுத ஆரம்பித்தது, ஏதோ திட்டமிட்டு நடந்த செயலன்று. முதலில் பிளாக்கை ஆரம்பித்து, எனது படத்தை போட்டு, அதன் கீழ் எனது பெயரை பெரிய எழுத்துக்களில் எழுதி அழகு பார்த்தேன். தினமும் கண்ணாடியில் பார்க்கும் முகமாக இருந்தாலும், கம்பியூட்டர் மானிட்டரில் பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருந்தது. ஆனால், மறுநாளே படத்தையும் பெயரையும் எடுத்துவிட்டு, 'அமைதி அப்பா' (அமைதி விரும்பி-யின் அப்பா) என்று எழுதி, அதையே பிளாக்கின் பெயராகவும் வைத்தேன். பிறகு, ஏதாவது எழுதலாம் என்று நினைத்து எழுதி, நானே படித்துக்கொண்டேன். இதற்கிடையே ஓரிரு நண்பர்கள் நான் எழுதியதை படித்து, அதற்கு பின்னூட்டம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ஆக நம்ம எழுதுறதையும் யாரோ படிக்கிறாங்கன்னு ஒருவித பயத்தால், எழுதுவதில் கொஞ்சம் கவனம் செலுத்தினேன். இவையெல்லாம் என்னுடைய பழைய பதிவுகளைப் பார்த்தாலே புரியும்.

சரி, தலைப்புக்கு வருகிறேன். இப்பொழுது, பதிவுலக நண்பர்கள் சிலர், பின்னூட்டத்திற்கு மாடரேஷன் வைத்திருப்பவர்களை அடிக்கடி விமர்சனம் செய்கிறார்கள். அதாவது 'மாடரேஷன்' வைத்திருப்பவர்கள் 'தன்னைப் பாராட்டி' வரும் பின்னூட்டங்களை மட்டுமே வெளியிடுகிறார்கள் என்பது மாதிரியான குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். அப்படி மாடரேஷன் வைத்திருப்பவர்களில் நானும் ஒருவன் என்பதால், அதற்கு என்னுடைய தன்னிலை விளக்கம்தான் இந்தப்பதிவு!

ஆரம்பத்தில், பின்னூட்டத்தை 'மாடரேஷன்' இல்லாமல் வைத்திருந்தேன். பிறகு, பல வலைப்பூக்கள் மற்றும் இணைய செய்திப் பத்திரிக்கைகளைப் படிக்கும் போது அதில் வரும் பின்னூட்டங்கள் மிகமிக ஆபாசமாகவும், மற்றவரைத் திட்டியும் எழுதப்படுவதைப் பார்த்தேன். எனவே, எனக்குள் ஒரு பயம் வந்துவிட்டது. நானோ, எப்பொழுதாவது கம்பியூட்டர் பக்கம் செல்பவன். அப்பொழுது, சொந்தமாக கம்பியூட்டர் கிடையாது. எனவே, நாம் கவனிக்காமல் இருக்கும் பொழுது, இந்த மாதிரியான பின்னூட்டமிடப்பட்டு, அது நமக்குத் தேவையற்ற சிக்கலை உண்டு பண்ணுமோ என்ற பயத்தால் 'மாடரேஷன்' வைத்தேன். அதனால், சிலர் எழுதிய பின்னூட்டங்கள் பல வாரங்கள் கழித்துக் கூட என்னால் வெளியிடப்பட்டது. அப்பொழுது மெயில் வழியாக பின்னூட்டம் பார்க்கும் வசதிப் பற்றி எனக்குத் தெரியாது.

இதுவரையில் இரண்டு பின்னூட்டங்கள் மட்டுமே நான் வெளியிடாமல் நிறுத்தி உள்ளேன். ஒன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் போதுமா? பதிவுக்கு வந்தது. மற்றொன்று ஏழு லட்சம் குடும்பங்களின் நிம்மதி...? பதிவுக்கு வந்தது. முதலாவது பின்னூட்டத்தில், அந்த நண்பர் இட ஒதுக்கீட்டால்தான் அரசு ஊழியர்கள் சரியில்லாமல் போய்விட்டார்கள் என்கிற மாதிரி எழுதியிருந்தார். அதை நான் வெளியிட்டிருந்தால் என்னுடைய நோக்கமே சிதைக்கப்பட்டு, விவாதம் வேறு திசையில் சென்றிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இரண்டாவது பதிவிற்கு மற்றொரு நண்பர் எழுதிய பின்னூட்டத்தில் உள்ள அவர் பெயரை கிளிக் செய்தால் ஒரு 'கிரிக்கெட் இணையதளம்' திறக்கிறது. மற்றபடி அவர் யார் என்பதெல்லாம் தெரியாது. இந்தப் பதிவிற்கு, இப்படி பின்னூட்டம் போட்டால், என்ன சொல்வது? இது வேண்டுமென்றே செய்யும் செயல் அல்லவா? மாடரேஷன் இல்லையெனில் இது போன்ற பின்னூட்டங்களை எப்படி மட்டுப்படுத்துவது. அவர் என்னைத் திட்டி எழுதியிருந்தால் கூட நான் வெளியிட்டிருப்பேன். ஆனால், எனது கருத்தை ஏற்றுக்கொள்வது போல் பின்னூட்டம் எழுதி, அவர் பெயரைக் கிளிக் செய்தால் அந்த 'கிரிக்கெட் பற்றிய இணையதளம்' திறப்பது மாதிரி செய்த செயலை என்னவென்று சொல்வது? நான், ஒன்றும் கிரிக்கெட்டுக்கு எதிரானவன் கிடையாது. குறிப்பிட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மனநிலையை பிரதிபளித்திருந்தேன், அவ்வளவுதான்!

இது மாதிரியான செயல்களை தவிர்க்கவே கமென்ட் மாடரேஷன் வைத்துள்ளேன். மற்றபடி என்னுடைய கருத்துக்கு எதிர் கருத்தை நாகரிகமான முறையில் சொன்னால், வெளியிட நான் தயார். எதிர் கருத்துச் சொல்ல நீங்க தயாரா? எப்படியாவது, யாரையாவது பின்னூட்டம் எழுத வச்சிட்டலாம்னு நினைப்புத்தான்;-))))!

.

Wednesday, January 26, 2011

ஏழு லட்சம் குடும்பங்களின் நிம்மதி...?


தேர்வு சமயத்தில் வீட்டிற்கு விருந்தினர் வருகையைக் கூட தேர்வுக்கு தயாராகும் பிள்ளைகளின் பெற்றோர் விரும்புவதில்லை. இந்நிலையில் அழையா விருந்தாளியாக கிரிக்கெட் வர உள்ளது. அது என்னவோ தெரியல, நம்ப எக்ஸாமுக்கும் கிரிக்கெட்டுக்கும் அப்படி ஒரு பந்தம். ரெண்டும் சேர்ந்துதான் வரும்.

உலககோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நாளும், நமது மாணவர்களுக்கு +2 தேர்வு தொடங்கும் நாளும் ஒன்றாகவே உள்ளது. தேர்வு முடியும் போது கிரிக்கெட் போட்டியும் முடிந்துவிடும். குறிப்பாக பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர்கள்தான் டி.வி.யில் போட்டியைக் காண ஆசைப்படுகிறார்கள். இது பெற்றோருக்கு ஒரு சவாலான விஷயம்தான். இன்று டி,வி.இல்லாத வீடுகளே இல்லை. இந்தக் கிரிக்கெட்டால், +2 தேர்வு எழுதவுள்ள ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் குடும்பங்களில் நிம்மதி கேள்விக்குறிதான். விதிவிலக்காக, ஒரு சில பெற்றோர் நடு வீட்டில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு பிள்ளையை தனியறையில் "கதவைச் சாத்திக் கொண்டு படி" என்று சொல்வோரையும் நாமறிவோம். டி.வி.யை மூட்டைக்கட்டி வைத்தாலும், எஸ்.எம்.எஸ். மூலம் ஸ்கோர் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் மாணவர்களும் அதிகம். இந்திய அணியின் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுவதையும் நாம் அறிவோம். இன்னும் கொடுமை, போட்டிகளில் இந்திய அணி தோற்றுவிட்டால் மறுநாள் பரிட்சை அம்போதான்!

ஒவ்வொரு மாணவனுக்கும், இந்தத் தேர்வு ஒரு வாழ்வா சாவா பிரச்சினை. ௦.25 மதிப்பெண் கூட பலர் வாழ்க்கையை திசைதிருப்பி உள்ளதை அனைவரும் அறிவோம்.

'' யூசுப்பதானின் அதிரடி ஆட்டம் மூலம் கடைசி 10 ஓவரில் விக்கெட்டுகள் இருந்தால் எந்த ரன் இலக்கையும் எடுக்க முடியும் என்று நினைக்கிறேன். உலககோப்பைக்கு முன்பு இந்த தொடர் மூலம் இந்த பாடத்தை கற்றுக் கொண்டேன்" இது, நம் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் டோனி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சில நாட்களுக்கு முன்பு நடந்த ஐந்தாவது ஒரு தினப் போட்டியின் இறுதியில் தெரிவித்தக் கருத்து.

டோனி, வருகிற உலகோப்பை கிரிக்கெட்டிலும் கூட அனுபவம் மூலம் பாடம் படிக்க முடியும். அவருக்கு மீண்டும் மீண்டும் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு வரும், அவரும் ஓய்வு பெரும் வரை பாடம் கற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், கிரிக்கெட் பார்த்து தேர்வினை சரியாக எழுதாமல் அனுபவம் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் தேர்வு வருமா?

மாணவர்கள், இந்த உலககோப்பை போட்டியை பார்ப்பதையும், அது குறித்து விவாதித்து நேரத்தை வீணடிப்பதையும் தவிர்த்தால்தான், பெற்றோருக்கு நிகழ் காலத்திலும், மாணவர்களுக்கு எதிர் காலத்திலும் நிம்மதி கிடைக்கும்.

படம் உதவி:கூகிள்.

Thursday, January 20, 2011

'கார்' காலம்!




கடந்த வருடம் தொடர்ச்சியாக இந்திய அளவில் கார் விற்பனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. "நாடு முன்னேறுகிறது என்று மகிழ்ச்சியடைய வேண்டியதுதானே...!" என்பதுதானே உங்கள் எண்ணம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புறநகருக்கு குடி வந்த பொழுது, தெருக்களில் எங்காவது ஒரு கார் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால், இன்று தெருவுக்கு பத்துக்கு மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. குறுகலான சந்துகளில் நேரெதிரே இரண்டு கார்கள் நின்று கொண்டு, யார் எப்படி போவது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. அதிக அளவில் 'L' போர்ட் கார்களைக் கானமுடிகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் நான்கு வருடங்களில் தெருக்களில் வாகனம் போவதோ, சாலைகளில் போக்குவரத்தோ அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது.

இதற்கெல்லாம் காரணம் கார் விலை குறைந்ததுதான் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், அது உண்மையில்லை. முன்பெல்லாம் ஒவ்வொருவரும் முதலில் சொந்த வீடு வாங்க வேண்டும். அதன் பின்பு கார் வாங்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால், இன்று அடுக்குமாடி வீடு வாங்குவதென்றால் கூட, முப்பது முதல் நாற்பது லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இன்றைய நிலையில் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவோர் மட்டுமே வீடு வாங்குவது குறித்து சிந்திக்க முடியும். இன்றைக்கு புதிதாக ஐ.டி. துறையில் வேலையில் சேரும் இளைஞர்களாகட்டும், மத்தியத் தர அரசு ஊழியராக இருந்தாலும் வீடு வாங்க முடியாது என்பது எதார்த்தம். அதனால், மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்குவோர் கூட கார் வாங்குகிறார்கள் அல்லது வாங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

வாடகை வீட்டில் குடியிருந்தாலும் கார் வாங்க வேண்டும் என்கிற சிந்தனை நடுத்தர வர்க்கத்தினரிடையே வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. கையில் இருக்கும் பணத்தோடு வங்கியில் கடன் வாங்கி கார் வாங்குபவர்களும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. சொந்தமாக வீடு இருப்பது கௌரவத்தின் அடையாளமாக இருந்த நிலை மாறி, கார் வைத்திருப்பது கௌரவத்தின் அடையாளமாகி விட்டது. இப்படி எல்லோரும் 'கார் வாங்குவது' கௌரவத்தின் அடையாளமாகக் கருதினால் சென்னையின் போக்குவரத்து என்னாவது? இப்பொழுதே பத்து கிலோ மீட்டர் பயணம் செய்ய ஒரு மணி நேரமாகிறது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தும். இதை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும். இனி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்கும் போதே கட்டாயம் 'கார் பார்க்கிங்' இருக்க வேண்டும் என்பதை கட்டாயப் படுத்தவேண்டும். மேலும், நடுத்தர வர்க்கம் வீடுகள் வாங்கும் விலையில் அரசே குறைந்த விலைகளில் வீட்டைக் கட்டி விற்க வேண்டும். இல்லையெனில், இந்தக் கார் வாங்கும் கலாச்சாரம் நிச்சயம் நம்மையெல்லாம் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சென்னை மற்றும் பெரு நகரங்களில்
வீடுகள் கட்டி குறைந்த விலையில் விற்போம்" என்று வரும் தேர்தலில் வாக்குறுதியளிக்கும் கட்சிக்கே என்னுடைய வாக்கு!

"உனக்கு ஓட்டுரிமை இருக்கான்னு" நீங்க கேட்கிறது என் காதில் விழுகிறது!

படம் உதவி: கூகுள்!

.

Saturday, January 15, 2011

பொங்கல்- என் நினைவுகள்!


எதுக்கு இந்தப் படமுன்னு குழம்பாம தொடருங்க புரியும்.....




பொங்கல் என்றால் நிறைய விஷயங்கள் நினைவுக்கு வரும். அதில், ஒன்று மட்டும் இந்தப் பொங்கலுக்கு. அடுத்த வருடம் என்ன பண்றதுன்னு முழிக்கக் கூடாது பாருங்க!

பொங்கல் வாழ்த்து அட்டை.
********************
இதுதான் இந்தப் பொங்கலுக்கு கதாநாயகன். எனக்கு வெளியூரில் உறவினர்கள் கிடையாது. எனது பள்ளி வகுப்புத் தோழர்களுக்கு வாழ்த்து அட்டை வரும்போது, எனக்கு ஒரு வித ஏக்கம் இருக்கும். எங்கள் கிராமத்தில் போஸ்ட்மேன் வேலைப் பார்ப்பதே எங்கள் பள்ளி மாணவர்கள்தான். ஏனென்றால் பெரிய கிராமம்(பரப்பளவில்) மற்றும் வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வயல்களுக்கு நடுவே இருக்கும். தெரு என்று கிடையாது. இப்பொழுதும் அப்படித்தான். வயதான போஸ்ட்மேன் நடந்து சென்று தபால் கொடுக்க முடியாது என்பதால், அந்தந்த பகுதி மாணவர்கள் வசம் தபால்களை ஒப்படைத்து உரியவர்களிடம் கொடுக்கச் சொல்லிவிடுவார். (இப்பொழுது, அந்தப் பழக்கம் மாறிவிட்டது) எனவே, ஊர் மக்களுக்கு வரும் வாழ்த்து அட்டைகளை பார்த்து மகிழ்வோம்.

ஒன்பதாம் வகுப்பிற்கு வேறொரு பள்ளிக்கு சென்ற பிறகு, வகுப்புத் தோழர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ்வேன். முதலில் வாழ்த்து அட்டை அனுப்புவது. பிறகு, நமக்கு வந்த வாழ்த்து அட்டைகளுக்கு நன்றி அட்டை அனுப்பவது என்பது வழக்கம். இரண்டு செலவு. இதில் கணக்கு வழக்கு வேறு. எத்தனை அட்டை அனுப்பினேன், எத்தனை அட்டைக்கு நன்றி வந்ததென்று. தட்டுத்தவறி ஒரு நண்பன் நன்றி அனுப்ப மறந்துவிட்டால், பாவம் எங்கள் போஸ்ட்மேன்தான். அவரிடம் தினம்தோறும் "எனக்கு ஏதாவது அட்டை வந்திருக்கா" என்று போஸ்ட் ஆபிஸ் சென்று விசாரிப்பேன்.




எனக்கு எம்.ஜி.ஆர். படங்கள் அந்த வயதில் ரொம்பப் பிடிக்கும். கடலை மிட்டாய் பாக்கெட்டில் வரும் எம்.ஜி.ஆர். படங்களைக்கூட காசுக் கொடுத்து வாங்குவேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கடையில் இலவசமாக கிடைப்பதை சில மாணவர்கள் விற்பார்கள்.

முதல் வருடம் எம்.ஜி.ஆர். பட வாழ்த்து அட்டைகளாக வாங்கி அனுப்பினேன். மறு வருடம், நான் நண்பர்களுக்கு அனுப்புவதற்காக வாங்கி வந்த படங்களைப் பார்த்த எனது உறவினர் ஒருவர் "நமக்குப் பிடித்த படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது. அவர்களுக்கு பிடித்ததை நாம் வாங்கி அனுப்பவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்" அன்று முதல் எம்.ஜி.ஆர். படம் வாங்குவதையும் தவிர்த்து விட்டேன்.

எனக்கு மனதுக்குப் பிடித்த எம்.ஜி.ஆர். படம் இருந்தால், அதை வாங்கி எனது நண்பன் பெயரில் எனக்கு அனுப்பி மகிழ்ச்சியடைந்த வரலாறும் உண்டு!

அனைவருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

Friday, January 14, 2011

இன்று கார், நாளை கிட்னி?!


அண்மையில், பத்திரிகையில் படித்த செய்தி.
'கேரளா மற்றும் தமிழக பகுதியில், கார்களை திருடி விற்கும் நான்கு
பேர் கொண்ட கும்பல் காரைக்காலில் சிக்கியது. அவர்களிடம் இருந்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 19 சொகுசு கார்கள், நான்கு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்' இது ஒரு சாதாரண விஷயம்தான் என்று எல்லோருக்கும் தோன்றும்.
தொடர்ந்து படிக்கையில்தான் பயப்பட வேண்டிய செய்தி வருகிறது.


'கடலூர் புதுச்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் 10 கார்களை
வாங்கி, விற்றுள்ளார். இவர், தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்
ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர். இன்னும் ஒருவர் ஒரு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்' என்பதுதான் அது. அரசியல் கட்சி பிரமுகரை விட்டுவிடுவோம். இதில், ஆச்சர்யம் என்ன இருக்கிறது?!


நமது மனதை நெருடுவது இந்த மருத்துவக் கல்லூரி மாணவனின் செயல்தான்.
இன்றைக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்
இரவு பகல் பாராமல், சுக துக்கங்களைத் தொலைத்து எண்ணற்ற மாணவர்கள் தயார் செய்துகொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் மருத்துவ தொழில்
என்பது புனிதமானது. 'மருத்துவர்கள் கண்கண்ட கடவுள்' என்பதுதான். சமூகத்தில் மருத்துவர்களுக்கு என்று ஒரு மரியாதை உண்டு. ஒரு சில மருத்துவர்கள் விதிவிலக்கு.

தனியார் கல்லூரிகள் பணத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதின் விளைவுதான் இது. இந்த மாணவனின் பெற்றோர், தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு மாணவனின் விருப்பம் இல்லாமல் மருத்துவம் படிக்க சேர்த்து விட்டிருப்பார்கள். இவனுக்கு படிப்பில் அக்கறை இருந்தால் படிப்பைத் தவிர
வேறு எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. இந்த மாணவனுக்கு கெட்ட பழக்கங்கள்
வந்திருக்க வேண்டும். செலவுக்கு பணம் தேவைப்பட்டிருக்கும. நியாயாமன
செலவுகளுக்கு பெற்றோர் பணம் தருவார்கள். தேவையற்ற செலவுகளுக்கு
திருடுவதைத் தவிர வேறு என்ன செய்வது?

கடந்த வருடத்தில் சென்னையின் புகழ்ப் பெற்ற தனியார் மருத்துவப் பல்கலைக்
கழகத்தில் படித்த மாணவன், தனக்கு உதவியாக இருந்த பெண்மணி, தனது கெட்ட பழக்க வழக்கங்களை கண்டித்தார் என்பதற்காக கொலை செய்து எரித்ததை மறந்திருக்க முடியாது. நாவரசு படு கொலை செய்யப்பட்டதும், ஒரு தனியார் கல்லூரியில்தான். தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவன், மதிப்பெண்ணை திருத்தி மாட்டிக் கொண்ட கதை நாடறியும்.

படிப்பின் மீது அக்கறை இல்லாதவர்களை பணத்தைக் கொட்டி படிக்க வைத்தால் இதுதான் நடக்கும். தட்டுத்தவறி இவர்கள் படித்து முடித்து மருத்துவர்களாக பதிவு செய்து விட்டால், அப்பாவி மக்களின் கதி என்னவாகும்?


இன்று கார் திருடுபவன் நாளை கிட்னி திருடமாட்டான் என்பதற்கு என்ன
உத்திரவாதம்?
இன்றைய தினம், திருடர்களிடமும், ஊழல்வாதிகளிடமும்,அயோக்கியர்களிடமும்தான் அளவுக்குஅதிகமான பணம் உள்ளது. அதிக அளவில், இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, இப்படி அரைகுறையாக படித்துவிட்டு..... நினைக்கவே பயமாக உள்ளது. இன்னும், எதை எதை படிக்கப் போகிறோமோ, பார்க்கப் போகிறோமோ?

இதற்கெல்லாம் அரசுதான் ஒரு முடிவுக் கட்ட வேண்டும். இந்தக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் வெளிப்படையான அணுகுமுறை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், அரசே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

இந்தப் பிரச்சினையை சாதாரணப் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது. இது ஒரு சமூகப் பிரச்சினை. மாட்டிக்கொண்டவர்கள்தான் மேலே உள்ளவர்கள். இன்னும் மாட்டாமல் இருப்பவர்கள் எத்தனைப் பேரோ?

Wednesday, January 12, 2011

சிரமப்படாமல் உதவலாம்!

நாம் பிறருக்கு உதவ விரும்புகிறோம்.ஆனால், உதவும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை.எங்கு உதவி கிடைக்கும் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதும் ஒரு உதவிதான். அப்படி தோன்றியதால் இந்தப் பதிவு.


எனக்கு வந்த மெயிலை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை அனுப்பிய நல்ல உள்ளத்திற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்களும் மற்றவர்களுக்கு தெரிவிக்கலாமே!

Dear Friends,

Kindly, share this valuable information wherever possible.

1. If you see children Begging anywhere in TAMIL NADU, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.
www.friendstosupport.org

3. Engineering Students can register in
www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors.
Everything is free. Contact : 045420-240668,245732
"Helping Hands are Better than Praying Lips"

6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"
9. Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/


10.
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. It’s available free of cost at "Adyar

Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone

Thursday, January 6, 2011

இலவசமாய் எம்.பி.பி.எஸ். படிக்க, இறுதி வாய்ப்பு!

அகில இந்திய அளவில் மருத்துவக்கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு வருடம்தோறும் ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது, இப்பொழுது பிரச்சினையாக உள்ள பொது நுழைவுத்தேர்வல்ல. அது வேறு, இது வேறு.


இந்தத் தேர்வை தடுக்கவோ, இதில் தமிழகம் இழக்கும் இடங்களை மீட்கவோ ஒருவருமில்லை. இந்தத் தேர்வின் மூலம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், பதினைந்து சதவிகித இடங்கள் நிரப்பபடுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் சுமாராக 280 இடங்கள், இந்தத் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்படுகிறது. இதற்கான விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்துவிட்டது. இருந்த போதிலும் தாமதக் கட்டணத்துடன் வரும் 10/01/2011 முதல் 17/01/2011 வரை கூடுதாலாக ரூ. 500/- செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைப்பு இங்கே.www.aipmt.nic.in

"இதற்கெல்லாம் ஒரு பதிவா?" என்று சிலருக்கு கேள்வி எழுவது இயற்கையே!
அவசியம்தான் என்பதற்கு என்னைச் சுற்றி நடந்த சில நிகழ்வுகள் ஆதாரமாய் உள்ளன. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2005-2006-ல் 'அமைதி விரும்பி' +2 படித்தபோது, எனக்கு இதைப் பற்றிய விபரம் தெரியவில்லை. அப்பொழுது, எனது நண்பர் சொன்னார் "அரசுக்கலூரியில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு வழியாக நிரப்படுகிறது. குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் கூட இந்தத் தேர்வை எழுதி இடம் பிடித்துவிடுகிறார்கள். அதைப்பற்றிய விபரமும், எந்தத் தேதியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்றவை எதுவும் தெரிய மாட்டேங்குது" என்றார். இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் அந்த நண்பரின் இரண்டு மகள்கள் அரசுக்கலூரியில் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தார்கள். அவரின் மூன்றாவது மகளை எம்.பி.பி.எஸ். சேர்க்கவேண்டும் என்று நினைப்பில்தான் என்னிடம் மேற்கண்டவாறு கூறினார். அவரும் விண்ணப்பிக்கவில்லை.

மற்றொரு செய்தி, மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் மூன்றாம் இடம் பிடித்த, எனது உறவினர் பெண் இந்தவருடம் +2 எழுதுகிறார். அந்தப் பெண்ணுக்கோ, பெண்ணின் பெற்றோருக்கோ, இப்படி ஒரு நுழைவுத்தேர்வு நடப்பது தெரியவில்லை. ஆசிரியர்களும் வழிக்காட்டவில்லை. இந்த நுழைவுத்தேர்வு குறித்த விளம்பரங்கள் தமிழக பத்திரிக்கைகளில் வருவதில்லை.

இன்னும் கொடுமை என்னவென்றால் லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் தனியார்ப் பள்ளிகள், குறிப்பாக நாமக்கல், ஈரோடு மாவட்ட 'பெயர் பெற்றப்பள்ளிகள்' இம்மாதிரி நுழைவுத்தேர்வு குறித்துக் கண்டுக்கொள்வதில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமில்லை. மேலும், இந்தத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதும் கிடையாது.

தமிழகத்தில் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்தத் தேர்வை எழுதி பதினைந்து சதவிகித தமிழக ஒதுக்கீட்டில் சேர்ந்தால், எழுத முடியாதவர்களுக்கு (தேர்வு ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் எழுதுவது கடினம்) தமிழகத்தில் எண்பத்தைந்து சதவிகித இடத்தில் வழி விடலாமே!!

ஐ. ஏ. எஸ். தேர்வில் சாதனைப்புரியும் நாம், சரியான வழிக்காட்டுதல் இருந்தால், இந்தத் தேர்விலும் சாதனைப்புரிய முடியும். இன்றே துவங்குவோம்! உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வுக் குறித்து தெரிவிப்போம்!!

.