Monday, August 31, 2020

கேள்விக்குறியாகும் எதிர்காலம்!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்படுவது, அடிக்கடி நடப்பதுதான். ஆனால், இந்த சம்பவததை படித்தவுடன், அப்படி யதார்த்தமாக கடந்துபோக முடியவில்லை.

கோயம்புத்தூர் அடுத்து, சூலூர் அருகேயுள்ள ராசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர், திரு விஜயகுமார் நான்காயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 
இவரின் வயது 24. கடந்த ஆண்டுதான் பணியில் சேர்ந்துள்ளார். 

நிச்சயமாக திறமையானவராகவும், உழைப்பாளியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, பல லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றிருக்க முடியும். பத்தாம் வகுப்பு தகுதிக்குரிய 'விஏஓ' பதவிக்கு இன்றையதினம், பொறியியல் பட்டம் பெற்றவர்கள் வரை தேர்வெழுதி பணியில் சேர்ந்துள்ளனர். நான் அறிந்தவரையில், புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் நேர்மையாக பணியாற்றுவதாக பலரும் சொல்லக் கேட்டு மகிழ்சியடைந்திருந்தேன். 

அந்த இளைஞர், ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று நினைக்கையில், மிகவும் வருத்தமாக உள்ளது. அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
 அந்த இளைஞரை நேர்மையாக பணியாற்றும்படி அறிவுரை சொல்லிருக்கவேண்டியது, அவரின் மூத்த அலுவலர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் கடமையாகும். அப்படி அறிவுரை சொல்ல நாம் தவறுவதால்தான், இம்மாதிரியான நிகழ்வுகள் நடைபெறுகின்றது. மேலும், இந்த இளைஞர் பிடிபடாமல் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், இன்னும் 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப்பணியில் இருந்திருப்பார். அவருடைய அலுவலகத்திலிருந்து அதுவரை லஞ்சத்தை விரட்ட முடியாது என்பதை நினைக்கும்போது வேதனை இன்னும் கூடுகிறது.

அனைவரும், அவரவர் வருமானத்திற்கேற்ற செலவை செய்து நியாயமாகவும், நேர்மையாகவும், மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம்!

Tuesday, August 25, 2020

திருட்டு - விமர்சனம்

நான் தற்சமயம் சென்னையில் வசித்துவந்தாலும் பிறந்ததிலிருந்து  சுமார் 40 ஆண்டுகள் வாழ்ந்த வேதாரண்யம் பகுதியின் நினைவுகள் என்னை விட்டு முழுவதும் அகலவில்லை.
 
கடந்த வாரத்தில் அப்பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் எனக்கு பெரும் மன வருத்தத்தை அளித்ததோடு, என்னுள்ளிருந்த பழைய நினைவுகளை மீட்டெடுத்துள்ளது.

எனக்கு நினைவு தெரிய ஆரம்பித்த 1970 - களில், அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் குடிசை வீடுகளில்தான் வசித்தனர். எங்கள் வீடும் அப்படித்தான். கதவெல்லாம் கிடையாது. வாசலில் வைக்கப்படும் தடுப்பிற்கு படல்   என்று பெயர். சும்மா எடுத்து சாத்தி வைத்துவிட்டு வெளியில் செல்வோம். பூட்டு சாவியோ, 
மின்சார விளக்கோ கிடையாது. ஊரே இருட்டாக இருக்கும். ஆனால், திருட்டுப்போய்விடும் என்று பயந்ததில்லை. அப்பகுதி வானம் பார்த்த பூமியென்பதால், பசி பட்டினியெல்லாம் அப்போது சர்வசாதாரணம். இருந்தபோதிலும்,  திருட்டு பற்றியோ, திருடர்கள் பற்றியே எந்த செய்தியும் நான் கேள்விப்பட்டதில்லை. தமிழில் ஆனந்த வருடமாகிய 1975 -ல் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. கஞ்சி வைப்பதற்குகூட அரிசி கிடைக்கவில்லை. அப்போது, எனக்கு பத்து வயதிருக்கும். அன்றைக்கிருந்த பெரியவர்கள், அதற்கு முந்தைய ஆனந்த வருடத்திலும் பஞ்சம் ஏற்பட்டதாகவும் பேசிக்கொண்டனர். அன்றைக்கு அப்படி பஞ்சம் ஏற்பட்டபோதும் திருட்டு சம்பவங்கள் நடைபெறவில்லை.

நிகழ்காலத்திற்கு வருவோம். இன்றைய தினம் பஞ்சமெல்லாம் கிடையாது. பார்க்கும் இடமெல்லாம் மாடி வீடுகள். அனைத்து வீடுகளிலும் குறைந்தது ஒரு வாகனம் உள்ளது. பகலுக்கும் இரவுக்கும் விச்தியாசம் தெரியாதளவிற்கு ஊரே ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. பின் ஏன் இப்பொழுது திருட்டு? 

உழைக்காமல் சம்பாதிக்கவும், ஆடம்பரமாக வாழ வேணடுமென்கிற மனோபாவம் பலரிடம் காணப்படுவதும், எவ்வழியில் சம்பாதித்த பணமாக இருந்தாலும், அதனை  வைத்திருப்பவரைக் கொண்டாடும் மனநிலை மக்களிடத்தில் பெருகிவிட்டதுமே காரணமாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. 
நடந்த திருட்டு சம்பவம் சாதாரணமாக நடந்ததாக தெரியவில்லை. நன்கு திட்டமிடப்பட்டு நடைபெற்றதாகவே தோன்றுகிறது.
நாய்க்கு விஷம் வைத்தது, மேலும் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் அப்பகுதியில் புழக்கத்தில் இல்லாதவைகள் என்பதையெல்லாம் அறியும்போது, இதனை சாதாரனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. 
எனினும், காவல்துறை சிறப்பாக செயல்பட்டு உடனடியாக, குற்றவாளிகளை கூண்டோடு பிடித்தது பாராட்டுக்குரியது. 

எது எப்படியோ, இனி திருட்டு நடக்காதவாறு காவல்துறையும் பொது மக்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே நமது விருப்பம்.

எந்த ஊராக இருந்தாலும், எந்த விதமான வேலையோ, பெற்றோருக்கு உரிய வருமானமோ இல்லாமல், விலை உயர்ந்த பைக் மற்றும் செல்போனுடன் ஊர் சுற்றும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மீது, பொதுமக்களாகி நமக்கு எப்போதும் ஒரு கண் இருக்கவேண்டும். 

வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக தங்கள் வீடுகளில் CCTV கேமரா பொருத்த முற்படவேண்டும்.
ஊரின் எல்லைகளில் ஊராட்சியின் சார்பில் CCTV கேமரா பொருத்த வேண்டும். இதன் மூலம் திருட்டை தவிர்ப்பதோடு, பெண்களின் பாதுகாப்பும்  உறுதி செய்யப்படும்.

மக்களின் பாதுகாப்போடு, வேதாரண்யம் பகுதியின் நன்மதிப்பையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்குள்ளது என்பதை நினைவில் கொள்வோம்...!

Thursday, August 13, 2020

மாற்றமில்லாத ஏமாற்றம்!

ஆவடி அருகே ஓய்வுபெற்ற  ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ. 4.80 லட்சம் மோசடி என்ற செய்தியால், இத்தனை வருடங்களாக பத்திரிகை செய்தி மற்றும் வங்கிகளிருந்து வரும் எஸ்எம்எஸ் போன்றவற்றால், இதுபோன்ற மோசடிகளை தடுக்க முடியவில்லையே என்கிற வருத்தம்தான் வருகிறது.

ஏமாற்றுவது திறமையாக அங்கீகரிக்கப்பட்ட சமூகத்தில் வாழும் நமக்கு, நாளொரு அனுபவம் கிடைப்பதில் வியப்பில்லை.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் தனக்கு வெளிநாட்டில் ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் பரிசு கிடைத்திருப்பதாகவும், அதை அவர்கள் தனது வங்கி கணக்கு மாற்றுவதற்கு ரூபாய் 40,000 அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமென்று மெயில் வந்து இருப்பதாகவும் தெரிவித்து, பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு எனது உதவியை  நாடினார். 
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படி நடப்பது சாத்தியமில்லை. இது ஏமாற்று வேலை என்று மட்டும் அவரிடம் தெரிவித்தேன். அதே நேரத்தில், அவருக்கு கிடைக்க வேண்டிய பெரும் பணத்தை, நான் தடுத்து விட்டதாக அவர் நினைத்து விடுவாரோ என்றும் பயந்தேன். 

பின்னர், இது மாதிரி பலர் ஏமாற்றப்பட்டது பத்திரிகையில் வந்தபிறகு, நான் அப்போது சொன்னது சரி என்பதை அவர் உணர்ந்திருப்பார் என்று ஆறுதலடைந்தேன். 

நான்கு வருடங்களுக்கு முன்பு, என்னிடம் ஒருவர் தொடர்பு கொண்டு  ஒன்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சில பொருட்களின் பெயரைச்சொல்லி, பரிசு விழுந்திருக்கிறது, அதற்கு சேவைக் கட்டணமாக ரூபாய் இரண்டாயிரம் செலுத்தி அந்த பொருட்களை பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தார். "நான் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லையே!" என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அதில் தாங்கள் ஸ்கூட்டர் பெறுவதற்காக கூப்பன் எழுதிப் போட்டிருந்தீர்கள்தானே,  அதில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசாக தருகிறோம் என்றார். அதற்கு நான், "ஒன்பதனாயிரம் மதிப்புள்ள பொருட்களை தருகிறீர்கள். அதில், என்னிடம் கேட்கும் சேவைக் கட்டணம் இரண்டாயிரத்திற்கு பதிலாக  நான்காயிரம் மதிப்புள்ள பொருட்களை நீங்களே வைத்துக்கொண்டு, மற்ற பொருட்களை எனக்கு இலவசமாக தாருங்கள்" என்றேன். அத்துடன் அவர் தொடர்பை துண்டித்து விட்டார்.

 சுமாராக, பத்து நபர்கள் பல்வேறு சமயங்களில் என்னிடம் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து ஏடிஎம் கார்டு 'ரினிவல்' செய்யச் சொல்லி இருக்கிறார்கள். நானும் எந்த வங்கியில் இருந்து பேசுகிறீர்கள், என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஏடிஎம் கார்டு இருக்கிறது என்று நான் சொல்வதைக் கேட்டவுடன், அவர்கள் கெட்டகெட்ட வார்த்தையில் என்னை திட்டி இருக்கிறார்கள்.
 
திண்டிவனத்தில் இருக்குமிடத்தை சென்னையில் இருப்பவரிடம், விரைவில் திண்டிவனம் சென்னை ஆகிவிடும் என்று சொல்லி, காடுகளையும் வயல்களையும் அந்த அப்பாவிகளின் தலையில் கட்டி கமிஷன் பார்த்த சாமர்த்தியசாலிகள் பலர்.

 இம் மாதிரியான நபர்களுக்கு ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டால், எதிராளி அவர்களின்  நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ அல்லது வாரிசுகளாகவோ, யாராக இருந்தாலும் ஏமாற்றிவிடுவார்கள். 
அது அவர்களுக்கு விளையாட்டுப்போன்றது. மற்றவர்களை ஏமாற்றுவதில் மகிழ்ச்சியடைவார்கள். இது ஒருவித மனநோய். ஏமாற்றியதற்காக சிறை சென்று திரும்பியவர்கள், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து சிறை செல்வதைப் பார்த்தே, நாம் இதை விளங்கிக்கொள்ளலாம்.

நாமயறியாமலேயே, தினம்தோறும் பல்வேறு நபர்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
கல்வியிலிருந்து காய்கறி வரை விளம்பரங்களால் ஏமாற்றப்படுகிறோம்.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு நொடியும், நாம் ஏமாற்றப்படலாம் என்கிற விழிப்புணர்வோடு வாழ்ந்தால் மட்டுமே, நாம் தப்பிக்க முடியும்!

Wednesday, August 12, 2020

நிஜமல்ல கதை...!

அந்த கிராமத்தில் யார் தவறு செய்தாலும் தமிழாசிரியர் மணி அய்யா, தட்டிக்கேட்க தயங்கமாட்டார். அவரிடம் படிக்கும் மாணவர்கள் தவறு செய்தால், தன் கையில் எப்பொழுதும் வைத்திருக்கும் பிரம்பால் அடி பின்னி எடுத்துவிடுவார். அதனால், அவர் மீது அனைவருக்கும் பயம். 

ஒரு மாணவனின் எதிர்காலத்தை கச்சிதமாக கணிக்கும் அபார திறமையும் அவரிடமுண்டு.
இப்போ, கொஞ்சம் வயதாகிவிட்டதால், அவருடைய கோபமும் கொஞ்சம் குறையத்தொடங்கியிருந்தது.

ஒருநாள் அவர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, தூரத்தில் ஒரு ரவுடியை பொதுமக்கள் பிடித்து கட்டிப்போட்டு  சரமாரியாக அடித்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து அடிப்பதை நிறுத்தும்படி சைகை செய்துவிட்டு வந்த வழியே அவசரமாக திரும்பி சென்றுவிட்டார்.

உடனே, அங்கிருந்தவர்கள் தனது வீட்டிலுள்ள பிரம்பை எடுத்துவந்து  அடிக்கப் போகிறார் என்று பேசிக் கொண்டனர். சற்று நேரத்தில் கையில் மாலையுடன் திரும்பிவந்தார் மணி அய்யா. "என்ன அய்யா, பிரம்பு எடுத்து வந்து அடிப்பீங்கன்னு நினைச்சோம். இப்படி மாலையோட வர்றீங்க?" என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர். அவர் பதில் எதுவும் சொல்லாமல், கூட்டத்தை விலக சொல்லிவிட்டு நேரே ரவுடியின் அருகில் சென்று அவனின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு தன் கையிலிருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். பிறகு, சுற்றியிருந்தவர்களைப் பார்த்து, "நீங்க எதிர்காலத்தில் இவனை தலைவனாக ஏற்றுக்கொண்டு வரிசையில் நின்று மாலைப்போடுவீர்கள். நான், இப்போதே செய்கிறேன்!" என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார்.

Tuesday, August 11, 2020

கொரானா மீண்டும் எழுத வைத்துள்ளது!

நீண்ட காலமாக எதையும் பதிவு செய்யாமலிருந்த என்னை, கொரானா எழுத வைத்துள்ளது. 
முகநூல் மற்றும் வாட்ஸ்அப்-ல் பலரின் பாராட்டுகளைப் பெற்றவைகள்...

Saturday, August 8, 2020

ஆவி பிடித்தலும் எனது அனுபவும்!

முன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எனக்கு ஜலதோஷம் பிடிப்பது வாடிக்கை. அதுவும், குறைந்தது பதினைந்து நாட்கள் சளியால் அவதிப்படுவதோடு ஆண்டிபயாடிக் மற்றும் ஆண்டிஹிஸ்டமின் மாத்திரை எடுத்துக்கொள்வதும் வழக்கம். 

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டபோது, ஆவி பிடிக்கும்படி(வேது பிடித்தல் என்றும் சொல்கிறார்கள்) நண்பர்கள் அறிவுரை கூறினர்.

 அவர்களின் யோசனையை செயல்படுத்தும் முன்பு என் நினைவில் வந்தது இதுதான், நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் ஊர் மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் எங்க அப்பாவின்  தலைவலிக்கு வெந்நீரில் டிங்சர் பென்சாயின் ஊற்றி, இரண்டு போர்வையை போட்டு அப்பாவை மொத்தமாக மூடி  ஆவி பிடிக்க சொன்னார்.  அப்போது,
அந்த கடுமையான சிகிச்சை முறை  என்னுள் ஒருவித பயத்தை உண்டு பண்ணியது என்பது உண்மை. 
அன்றோடு சரி, அதன் பிறகு அப்பா ஆவி பிடித்து நான் பார்த்ததில்லை.
 எனினும், நண்பர்களின் அறிவுரையை ஏற்று தொடங்கிய ஜலதோஷத்திற்கு ஆவி  பிடிக்கும் பழக்கம்  இன்றுவரை தொடர்கிறது. 

ஆவி பிடிக்கும் பழக்கத்தினால், இரண்டொரு நாளில் குணம் கிடைக்கிறது. மேலும், எனக்கு ஜலதோஷம் பிடிப்பதும் அரிதாகிவிட்டது.  
ஜலதோஷத்திற்கு எந்த மருந்தும் கிடையாது என்பதை சொல்வதற்கு 'மாத்திரை சாப்பிட்டால் ஏழு நாட்களிலும், சாப்பிடாமலிருந்தால் ஒரு வாரத்திலும் குணமாகும்' என்பார்கள். அதைப்போலவே, இன்றைக்கு நம்மை பாடாய்படுத்தும் கொரானவிற்கும் எந்த மருந்தும் இல்லை என்பது நாம் அறிந்ததே.

 கடந்த பிப்ரவரி மாதத்தில் வந்த வாட்ஸ்அப் செய்திகளில், "ஆவி பிடித்தால் கொரானாவிலிருந்து தப்பிக்கலாம். இதைத்தான் சீனர்கள்  செய்தார்கள்" என்று தெரிவித்தார்கள். தற்போது, ஆவி பிடித்தல் ஒரு சிகிச்சை முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் சிரமப்பட்டு ஆவி பிடிப்பதில்லை. சிறிய துண்டை மட்டுமே பயன்படுத்துவேன். மேலும், என்னால் தாங்க முடிந்த மட்டுமே விட்டுவிட்டு பிடிப்பேன். 
யூகலிப்டஸ் எண்ணெயை மட்டும் ஊற்றி ஆவி பிடிப்பேன். 
இப்போது, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கையாக தினசரி இரவு ஆவி பிடித்து வருகிறேன்.
நம் ஒவ்வொரு வீட்டிலும் ஆவி பிடிப்பதற்குரிய ஸ்டீமர் மெஷின் இருக்க வேண்டும். ஆவி பிடிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். வெந்நீர் ஊற்றி பாதிக்கப்பட்டவர்களையும் அறிவேன்!

Monday, August 3, 2020

யார், உன் நண்பன்?

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள்.
அதுமாதிரியே முகநூலிலும் நாம் எழுதுவதும், லைக் போடுவதும், ஷேர் செய்வதும் நம்முடைய மனதின் பிரதிபலிப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. 

நம்முடைய எண்ண அலைகளோடு ஒத்துவருகிற நண்பர்களை இணைத்துக் கொண்டு, கருத்துக்களை பரிமாறிக்கொள்வதே முகநூலில் இணைபவர்களின் நோக்கமாகும். 

ஆரம்பத்தில் முகநூலில் நான் நண்பர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும், நேரடியாக நான் அறிந்தவர்கள் மட்டுமே. பிறகு, பலரிடமிருந்தும் எனக்கு 'Friend request' வர ஆரம்பித்தது. அப்படி வருபவர்களை நான் நட்பு வட்டத்தில் ஏற்றுக்கொள்வதற்கு முன், என்னுடைய நண்பர்கள் எத்தனைப் பேர் அவருடன் நண்பர்களாக உள்ளார்கள் என்பதை வைத்து, அந்த நபரின் நட்பை ஏற்பது குறித்து முடிவெடுப்பேன். 

இன்று முகநூலில் முகம் காட்டாமல் சிலர் கணக்கு வைத்துக்கொண்டு, பலருடன் நண்பர்களாக இணைந்து விடுகிறார்கள். அதாவது,
போலியான('Fack ID') பெயரில் நமக்கு நட்பு அழைப்பு வரும். நாமும் அந்த போலி நபருடன் உள்ள, நமது நண்பர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களின் நட்பு வட்டத்தில் இணைந்து விடுவோம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நண்பர்களை சேர்த்தப்பிறகு, இந்தப் போலிகள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிப்பார்கள். 

தனி நபர்களுக்கு எதிராகப் பொய்யான பதிவுகளைப் போடுவார்கள். அதைக்காட்டி, அந்த நபர்களிடம் மிரட்டி பணம் பறிப்பார்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய வைப்பார்கள். தங்கள் நோக்கம் நிறைவேறியதும் அந்தப்பதிவை நீக்கிவிடுவார்கள்.
இதில், பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தால், படித்தும் படிக்காமலும் 'லைக்' கோ அல்லது 'ஷேர்'ரோ செய்த நாமும் அந்த குற்றத்திற்கு உடந்தையாகிவிடுவோம்.

 மேலும், சிலர், நம்முடைய தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றுவிடுவார்கள். எனவே, இம் மாதிரியான சமூக விரோதிகளுக்கு நம்மை அறியாமலேயே, நாம் துணைபோய் விடுவோம். எனவே, எச்சரிக்கை அவசியம். 

இனி, நம்முடன் நண்பர்களாக இணைபவர்கள் யார், எந்த ஊர், என்ன வேலை, எங்கு படித்தார் போன்ற விபரங்கள் இருந்தால் மட்டுமே நண்பர்களா ஏற்றுக்கொள்ளுங்கள்.

'உனது நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று நான் சொல்கிறேன்' என்பார்கள். சரி, இப்போ, சொல்லுங்க, "உங்க நண்பன் யார்?"

Sunday, August 2, 2020

நவீன பொம்மலாட்டக்காரர்கள்!

நம்முடைய சிந்தனையும் செயலும் எப்போதும் ஒன்றாக இருக்கும். ஆனால், சொல்லும் செயலும் அவ்வாறு இருக்கவேண்டுமென்பதில்லை.

பெரும்பகுதியினர், ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வார்கள். ஒருவரின் செயல், இடத்திற்கிடம் மாறுபடாது. இதன் காரணமாகவே, பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில், காவல்துறையினர் எளிதாக குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
தான் செய்வது தவறு என்று தெரிந்தும்கூட அதிலிருந்து அவர்களால் விடுபடமுடிவதில்லை. 

கெட்டவர்கள் எப்படியோ, அதுமாதிரிதான் நேர்மையானவர்களும் மாறுவதில்லை. அதற்கு நம்மிடையே வாழ்ந்து மறைந்த தலைவர்களும், வாழும் எளிய மனிதர்களுமே சாட்சிகள்.

சிறுவயதில் பொம்மலாட்டங்களைப் பார்த்து ரசித்ததும்,  அந்த பொம்மையாட்டுபவரை நினைத்து வியந்துமிருக்கிறேன். ஆனால், அவர்களைப்பார்த்தில்லை. எதிரே வந்திருந்தாலும் அடையாளம் தெரிந்திருக்காது.   நடைமுறை வாழ்க்கையிலும் பலர் பொம்மலாட்டக்காரர்களாக அவதாரமெடுக்கிறார்கள். அவர்களின் கலைத்திறமையைக் காட்ட  சிந்தனையற்ற மனிதர்களை பொம்மையாக்கி ஆட்டுவிக்கிறார்கள்.
 இறுதியில்,  அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் உரிய பரிசை,  பெரும்பகுதியினர் ஏற்றுக்கொள்ளும் கடவுளாலோ அல்லது இயற்கையாலோ  அவரவர் தகுதிக்கேற்ப  வழங்கப்படும்!

Saturday, August 1, 2020

தொலைபேசியும் நானும்...!

நேரமில்லாததாலும், உடல்நிலை ஒத்துழைக்காததாலும்(தொடர்ச்சியாகப்பேசினால் காதில் இரைச்சல் வருகிறது) உறவு மற்றும் நட்புகளிடம் தொலைபேசியில் பேசுவது குறைந்துவிட்டது.

நம் ஒவ்வொருவருக்கும், தொலைபேசியில் பேசுமளவுக்கு குறைந்தது 300 உறவினர்கள் மற்றும் நண்பர்களாவது இருப்பார்கள். 
தினம்தோரும் ஒருவரிடம் பேசினால்கூட, மீண்டும் பேசுவதற்கு குறைந்தது ஒரு வருடமாகும். 

இந்தக்கணக்கு புரியாமல், நாம் பேசுவதில்லை என்று சிலரும், நம்மிடம் சிலர் பேசுவதில்லையென்று நாமும் நினைத்துக்கொள்கிறோம். 

வேலையெல்லாம் முடித்துவிட்டு
ஓய்வாக, ஒருவரிடம் பேசுவோமென்று நினைத்து, அவர் இப்பொழுது நம் அழைப்பை ஏற்கும் நிலையில் இருப்பாரா என்று யோசித்து, அழைத்தால் அவர் 'பிசி'யாகவோ அல்லது எடுக்காமலோ போய்விடுவார். 
நாமும் உடனே அடுத்தடுத்த நபர்களுக்கு ஃபோன் செய்து கடைசியாக ஒருவர் எடுத்துவிட்டால் நம்மால், தொடர்ந்து பேச முடியாத அளவிற்கு, நாம் முன்னே அழைத்தவர்களின் அழைப்பு வந்துக்கொண்டேயிருக்கும். பேசிக்கொண்டிருப்பவரிடமும் சரியாக பேச முடியாது. 

எனவே, இதுபோன்ற சங்கடங்களை தவிர்க்க ஒன்று அல்லது இரண்டு பேருக்கு ஃபோன் செய்யலாம். அப்படி, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லையென்றால், நாம் வேறு வேலைப்பார்க்கலாம். அவசியமான செய்தியென்றால் எஸ்எம்எஸ்-ல் விபரம் தெரிவிக்கலாம். நான் அனுபவத்தில் கற்றுக்கொண்டது.