Friday, December 31, 2010

2010- விமர்சனம்.

எல்லோரும் சினிமாவுக்கு விமர்சனம் எழுதுறத படிக்கும் பொழுது, நாமும் இப்படி எழுதலாமே என்று தோன்றும். ஆனால், அதற்கு சினிமா பார்க்கணுமே! அதனால்தான் இப்படி விமர்சனம் எழுதி, என்னுடைய ஆசையை நிறைவு செய்து கொள்கிறேன். "அதற்கு, நாங்கதான் கிடைச்சோமா?" என்பது என் காதில் விழுகிறது!

கடந்த வருடம் நமக்கு பல அனுபவங்களை கொடுத்திருக்கிறது. அதில், தலையாயது இந்திய அளவில் பல்வேறு ஊழல்கள் நடந்தது மற்றும் வெளியில் தெரிந்தது.
தனிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பலருக்கு நல்ல ஆண்டாகவே இருக்கலாம்.
என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைச் சிறப்பாகவே இருந்தது. ஆனால், அலுவலகத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தேன். உறவினர்களுக்கும் பல்வேறு இழப்புக்கள், இன்னல்கள்.


பிளாக் பற்றி சொன்னால் நிறைவான ஆண்டுதான். கடைசியில் கொஞ்சம் சுமாராக அமைத்துவிட்டது.

அரசியல்வாதிகளுக்கும் அப்படி ஒன்றும் மகிழ்சியான ஆண்டாக அமையவில்லை. அது, ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற வேறுபாடு கிடையாது.
வேலைவாய்ப்பில் பரவாயில்லை ரகம்.

அதிகப்பட்ச மகிழ்ச்சியை அடைந்தவர்கள் ரஜினி ரசிகர்கள் மட்டுமே!

மொத்தத்தில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்ணே கடந்த ஆண்டு பெற்றுள்ளது .

எது எப்படியோ, புது வருடம் சிறப்பாக அமையும் என்று நம்புவோம்.

மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய பிளாக் வலைச்சரத்தில் இங்கே திரு. ரமேஷ்- ரொம்ப நல்லவன் (சத்தியமா) அவர்களால் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அவருக்கு என்னுடைய நன்றிகள்.

உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

.

Saturday, December 25, 2010

காய்கறிகள் விலை உயர்வது, எதனால்?

நேற்று காய்கறி வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது, கடைக்காரர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்...! அதனால், விலை கேட்க்காமல் எடுத்து வைத்துவிட்டேன். பிறகு, மொத்த தொகையைக் கேட்டவுடன் எனக்குத் தலைசுற்றியது. வேறொன்றுமில்லை வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை எடுக்காமல். சவ்சவ்(பெங்களூர் கத்தரிக்காய்), புடலங்காய், போன்ற யாரும் விரும்பாத, விலை குறைந்தவைகளாக எடுத்திருந்தேன். "என்ன இவ்வளவு சொல்கிறீர்கள்?" என்றுக் கேட்டேன். உடனே அவர், "புடலங்காய் கிலோ 80 ரூபாய்" என்றார். புடலங்காயயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, மற்றவைகளை வாங்கிவந்தேன்.

எனக்கு எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு. விலை அதிகாமான காய்கறிகளை வாங்குவதை தவிர்த்துவிடுவேன். விலைக் குறைந்தவைகளை அதிகமாக வாங்குவேன்.

நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால், எனக்கு புடலங்காய், முருங்கைக்காய் போன்றைவைகள் எப்பொழுதும் சாதாரணமாகப்படும். கிராமத்தில் அவைகளை யாரும் வாங்க மாட்டார்கள்/விரும்பமாட்டார்கள். மற்றவரை திட்டுவதற்கு கூட 'புடலங்காய்' என்று சொல்வார்கள். அவ்வளவு மதிப்பு அந்த புடலங்காய்க்கு! முருங்கைக்காய் பறிப்பார் யாருமின்றி மரத்தில் முற்றித் தொங்கும். இது சில வருடங்களுக்கு முந்தைய நிலை.

இப்பொழுதும், அதே நிலம் இருக்கிறது. ஆனால், மரமில்லை. மரத்தை பராமரிக்க மக்களிடம் மனமுமில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் விவசாயத்தின் மீது மக்களுக்கும் அரசுக்கும் அக்கறை இல்லாமல் போனதுதான்.

கிலோ 50 ரூபாய் விற்கப்படும் தக்காளி திடிரென்று ஒருநாள் கிலோ 50 காசுக்கு விற்கப்படும். அன்று விவசாயிகள் அதை ரோட்டில் கொட்டி அழிப்பார்கள். இது மாதிரி உற்பத்தியாகின்ற பொருட்களை விற்க முடியாமல் அவதிப்படும் விவசாயி, எதை நம்பி மீண்டும் தக்காளி பயிரிடுவார்?

எதிர்காலத்தில், "கையில் பணமிருக்கும், வாங்க பொருட்கள் இருக்காது" என்று சிலர் அடிக்கடி சொல்வார்கள். அது இப்பொழுதே உண்மையாகி வருவது, நிச்சயம் வேதனைதான்.

இதைப் படிப்பவர்கள், உங்களுடைய எண்ணங்களையும், தீர்வுகளையும் பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதிவாகவோ எழுதினால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன். அதனால்தான், இந்தப் பதிவை மிக விரிவாக எழுதவில்லை. எல்லோரும் இதில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.


.

Thursday, December 2, 2010

யார் எழுதியது இதை?

எனக்கு மெயிலில் வந்ததைப் படித்து வியந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இதை முன்பே கூட நீங்கள் படித்திருக்கலாம் அல்லது இப்பொழுது படிக்கலாம். இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. நானும் கூகுள் மூலம் தேடினேன், கண்டுபிடிக்க முடியவில்லை. பல்வேறு இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களிலும் இது வெளியாகி உள்ளது. ஆனால், யாரால் எழுதப்பட்டது என்று எங்கும் குறிப்பிட படவில்லை.அனுபவித்து எழுதப்பட்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் யார் எழுதியதென்று?


உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!


1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.
உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர்கள் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா?
கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததை பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருபத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்து கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிக் களம்! எல்லாத் தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பில் கவனம் செலுத்தலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

Monday, November 22, 2010

எப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு?

எனக்கு தெரிந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்வது என்பது அபூர்வம். இதற்கு விதிவிலக்காக சிலர் இருப்பார்கள். அப்படி, நீங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தால் உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

'ஐந்து வயதில் அண்ணன் தம்பி; பத்து வயதில் பங்காளி' என்று எங்கள் பகுதியில் குறிப்பிடுவார்கள்.

நான் சந்தித்த சகோதர யுத்தத்தை இங்கு சொன்னால் அனைவருக்கும் புரியாது. அதனால், அனைவருக்கும் தெரிந்த உதாரணத்தைச் சொன்னால் மட்டுமே நன்றாக இருக்கும்.


அண்மையில் பா.ம.க. நிறுவனத் தலைவரின் தம்பி, காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை அனைவரும் அறிவோம். ஒரே குடும்பத்தை சார்ந்த ஆறு பேர் கொலைக்கு, சகோதர சொத்துச் சண்டையே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் கொல்லப்பட்டதும், அம்பானி சகோதரர்கள் அடித்துக்கொண்டதும், பங்காளிகள் ராகுல் காந்தியும, வருண் காந்தியும் நேரெதிர் கட்சியில் உள்ளதும்
நாடறியும்.

நண்பர்களிடம் விட்டுக் கொடுப்பவர்கள்கூட, அண்ணன் தம்பியிடம் விட்டுக்கொடுப்பதில்லை என்பதுதான் எதார்த்தம். அண்ணனின் முன்னேற்றத்தை தம்பியோ, தம்பியின் முன்னேற்றத்தை அண்ணனோ தாங்கிக் கொள்ளமுடிவதில்லை. இதற்கு உளவியல் ரீதியாக ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். அதைப்பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்று.

இதை தவிர்க்க முடியாதா என்றால், இனி வரும் காலங்களில் ஒரு குழந்தை இருந்தால் மட்டுமே அது முடியும். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றால் அவர்களுக்கும் நிம்மதி இருக்காது. நீங்களும், கடைசிக் காலத்தில் இரண்டு பிள்ளைகளுக்கு இடையே பந்தாடப்படுவீர்கள்.

சரி, "இதற்கு தீர்வுதான் என்ன?" என்ற கேள்வி எழலாம். இன்றிலிருந்தே, ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுப்பதின் அவசியத்தை, குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். உங்கள் சகோதரர்களுடன், உண்மையான அன்புடனும், பாசத்துடனும் பழகுங்கள்.

உங்கள் பெற்றோரை "அண்ணன் கவனிக்கவில்லை, தம்பி கவனிக்கவில்லை, நான் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும்?" என்கிற ரீதியில் நடத்தாதீர். இது போன்று, சிந்தித்து நடந்தால் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள், அண்ணன் தம்பி அல்லது தங்கை பிரச்சினைகளுக்கு விதிவிலக்காக இருக்கலாம்.

அண்ணன் தம்பி உறவு என்றதும், உங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயர்கள் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல....! 
இது குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பதிவு மட்டுமே!
.

Tuesday, November 16, 2010

வாழும் கடவுள்...!

18/11/2010 புதிய தலைமுறை இதழில் 30 -ம் பக்கத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அதன் சுருக்கம் இதோ...

அவர், செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.


அந்தப் பத்திரிக்கையில், அவர் கைபேசி எண் கொடுக்கப் பட்டிருந்தது. அதற்கு நான் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். அதில், அவரை 'வாழும் கடவுள்' என்று குறிப்பிட்டிருந்தேன். உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அதில், 'வணக்கம் நண்பரே, உங்கள் மெசேஜ் கிடைத்தது. நன்றி. நீங்கள் சொல்லி இருப்பது போல் நான் ஒன்றும் கடவுள் கிடையாது. ஒரு சாதாரண மனிதன் தான். என் மன திருப்திக்காக என்னால் முடிந்ததைச் செய்கிறேன், அவ்வளவுதான். நன்றியுடன் பி.கிருஷ்ணராஜ்' என்ற அவரின் பதில் மேலும், அவரைப் பற்றிய உயர்வான என்னத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டதால், இந்தப் பதிவு.


இன்றைக்கு அரசியல்வாதிகளும் அரசியலுக்கு வர விரும்புகிறவர்களும், ஒரு நோட்டு அல்லது பேனாவை குழந்தைகள் கையில் கொடுத்து விட்டு அதைப் போட்டோ எடுத்து பிளெக்ஸ் போர்டில் போட்டு 'கல்வி வள்ளல்' என்று பட்டம் போட்டுக்கொள்ளும் காலத்தில், ஒரு தனிமனிதர் இந்த மாதிரி கல்விப் பணிக்காக தனது சேமிப்பை பிரதிபலன் பாராது செலவழித்துவருபவர் 'வாழும் கடவுள்' தானே? நீங்களே சொல்லுங்கள்.

அவரின் கைபேசி எண்:9790531456. முடிந்தால் நீங்களும் இவரது சேவையைப் பாராட்டலாமே!

.

Monday, November 8, 2010

நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

போர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க.
பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்னு கஸ்ட்டமர் திட்றது வேற கதை!

எனக்கு நகைச்சுவையாகப் பேசுவது ரொம்பப் பிடிக்கும். நகைச்சுவை என்பது பெரும்பகுதி மற்றவர்களை கிண்டல் கேலி செய்வதுதான்.
கௌண்டமணி செந்தில் காலம் முதல் வடிவேல் காலம் வரை ஒருவர் மற்றவரை அவமானப்படுவது(அடி, உதை) மட்டுமே நகைச்சுயாக ரசிக்கப்பட்டு வருகிறது.

நகைச்சுவையாகப் பேசுவதில் பல வகை உண்டு.
நம் அருகில் இல்லாதவரைக் கிண்டல் செய்து பேசுவது.
தன்னையே கிண்டல் செய்து கொள்வது.
எதிரில் உள்ளவரைக் கிண்டல் செய்து பேசுவது.

முதல் வகையில், சிலர் எப்போதும் அருகில் இல்லாதவரைப் பற்றியோ, அவர்களின் குடும்பத்தைப் பற்றியோ கிண்டல் செய்து பேசுவார்கள். கேட்டுக் கொண்டிருக்கும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அப்படி பேசுபவரை 'சிரிப்பாக பேசுவார்' என்று சர்ட்டிபிகேட் வேறு கொடுப்பார்கள்.

இரண்டாம் வகை தம்மைப் பற்றியோ தம் குடும்பத்தைப் பற்றியோ(பட்டிமன்ற நகைச்சுவை) கிண்டல் செய்து பேசுவது; இதையும் ரசித்து சிரிப்பார்கள்.

மூன்றாம் வகை இதுதான் அபாயகரமானது, தம் எதிரில் இருப்பவரைக் கிண்டல் செய்வது. இதைப் பெரும் பகுதியினர் ரசிப்பதில்லை(உண்மையாக நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் விதிவிலக்கு)
மற்றவர்களைக் கிண்டல் செய்து பேசுவதை ரசிப்பவர்கள். தாங்கள் கிண்டல் செய்யப்படும் பொழுது அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
இதனால் நட்பில் முறிவு கூட ஏற்படும் என்பது எனது அனுபவ உண்மை.

நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களை மகிழ்விக்க நினைத்தால், நம்மை நாமே கிண்டல் செய்து பேசுவது மட்டுமே நகைச்சுவையாக பேசுவதில் வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி!

.

Wednesday, November 3, 2010

நம்மோடு நரகாசுரன்!


கெட்டவன் அழிந்ததைக் குறிக்கும் மகிழ்ச்சியான பண்டிகைதான் தீபாவளி என்பதை நாம் அறிவோம்.
அப்படி என்றால் கெட்டவனே இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்காது.

இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நம்மோடுதான் நரகாசுரர்கள்( இனி வில்லன் என்று எழுதுகிறேன், இதுவரை தலைப்புக்காக) இருக்கிறார்கள்.

அண்மையில் கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றார்களே இவர்கள் யார்? இது போன்றவர்கள் எப்போதாவதுதான் செய்திகளில் அடிபடுவார்கள்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நம்மோடு பல வில்லன்கள் கலந்திருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

பெற்றோரை கவனிக்காமல் விடும் பிள்ளைகளும்,
உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு மேலேயோ அல்லது கீழேயோ பணிபுரியும் சிலர், மற்றவரின் மனநிலையும் நியாமும் அறியாமல் அவர்கள் சொல்வதுதான் சரி என்று தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பவர்களும்.

தனக்கு ஒரு ரூபாய் கிடைக்க வேண்டுமென்பதற்காக தொன்னூற்றி ஒன்பது ரூபாயை வீணடிக்கும் ஊழல் பேர்வழிகளும் .

தனது வீட்டில் மிஞ்சியிருக்கும் கழிவுகளை பிளாஸ்டிக் பையில் கட்டி சாக்கடையில் வீசுபவர்களும்.

தனது வீட்டிள் உள்ள தென்னை மட்டை வீணாகி விடுகிறது என்பதற்காக மற்றவர்களைப் பற்றியும் சுற்றுசூழல் போன்றவற்றிலும் அக்கறையில்லாமல் கொல்லைப்புறம் அடுப்பை வைத்து புகைத்து, ஊரையே புகை மண்டலமாக மாற்றி வெந்நீர் போட்டுக் குளிப்பவர்களும்.

நடு வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நேரெதிரே நிற்கும்போது, இருக்கிற சிறு இடைவெளியிலும் ஆட்டோ அல்லது பைக்கை கொண்டு நிருத்துபவர்களும்.

இப்படி நம்மிடையே நிறைய வில்லன்கள் உள்ளார்கள்.
என்னால் பட்டியல் போடவும் முடியவில்லை, உங்களால் படிக்கவும் முடியாது. இந்த வில்லன்கள் திருந்தினால் மட்டுமே உண்மையான தீபாவளி, அதுவரை மற்றவர்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே!

Monday, October 18, 2010

இளைமையை மீட்டெடுக்க எளிய வழி!(40+)

நாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நமது இளைமைப்பருவம் கடந்து விட்டதாக நினைத்து, ஒரு சோர்வு வந்து விடுகிறது. இதை தவிர்க்க எனது வாழ்வில் நடந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


கல்லூரியில் படித்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரியை எனது ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, மற்ற நண்பர்களின் முகவரியை மட்டும் எழுதி வைத்துக் கொண்டேன். காலப்போக்கில், வாழ்க்கைப் போராட்டத்தில் ஞாபகத்திலிருந்த 'நெருங்கிய' நண்பர்களின் முகவரிகள் மறந்து போய்விட்டது. இப்பொழுது அவர்களைக் கண்டறிய பல வழிகளில் முயற்சி செய்தேன். என் ஞாபகத்தில் உள்ள ஊர் பெயரைக் கொண்டு, சிலருக்கு கடிதம் எழுதினேன். அதன் படி ஒரு நண்பரை கண்டறிந்தேன். அவர் மூலம் மற்றவரைப் பிடிக்கலாம் என்றால், அவரும் மற்றவர்களின் பெயரை மட்டும் சொல்கிறார். மற்றபடி ஒரு முன்னேற்றமும் இல்லை.


அண்மையில் தமிழக அரசு, என்னுடன் படித்தவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க உள்ளதை அறிந்தேன். இணையத்தில் பதிவு மூப்பு பட்டியலில் நண்பர்களின் பெயரைத்தேடினேன். அவர்களின் பெயர் இருந்ததும், அவர்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர்கள் பணி நியமன ஆணை வாங்க வரும் தேதியறிந்து, அங்கு சென்று நண்பர்களை மீட்டெடுத்தேன். அவர்கள் நான் அங்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தகவல் தொடர்பும் இல்லாமல், திடிரென்று நண்பர்களைச் சந்தித்ததில் என்னுடைய கல்லூரி நாட்களின்
நினைவுகளும், அந்த மனநிலையும் எனக்கு வந்துவிட்டதாக தோன்றுகிறது.


இப்பொழுது எனக்குள் ஓர் இருபது வயது இளைஞன் இருப்பதாக உணர்கிறேன்.
நீங்களும், நீண்டநாள் சந்திக்காத உங்களுடைய 'நெருங்கிய' கல்லூரி தோழர்கள்/தோழிகளை சந்தித்து, புத்துணர்ச்சிப் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

.

Sunday, October 10, 2010

நீங்க ஜூனியரா, சீனியரா...?

ஜூனியர், சீனியர் பிரச்சனை ஒவ்வொரு நிலையிலும் உள்ளது. அண்மையில் நான் சந்தித்தவர்களில் பலர் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அவற்றின் விளைவே இந்தப்பதிவு.


அண்மையில், திருச்சி அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்கள், விடுதியில் தங்களுக்குள் மோதிக்கொண்ட விபரம் அனைவரும் அறிந்ததே. இதற்கு காரணம் ஜூனியர், சீனியர் வேறுபாடே! கல்லூரியில் மட்டுமல்ல படித்து பணியில் சேர்த்த பின்பும், இது தொடர்வதுதான் வேதனை. எனது உறவினர் பெண், சென்னையின் பிரபல எலும்பு முறிவு சிக்கிச்சை மருத்துவனையில் அண்மையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியில் சேர்ந்தார். அங்கு, அவருக்கு முன்னாள் பணியில் சேர்ந்தவர்கள் நடந்துகொள்ளும் விதம் பற்றி, அவர் சொன்னதைக்கேட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். தனியார்த்துறையிலும், இப்படியா என்பதுதான் எனது அதிர்ச்சிக்குக் காரணம்.


அரசு அலுவலகங்களில், ஒருநாள் முன்பாக பணியில் சேர்ந்தாலும் அவர் சொல்வதைத்தான் மறுநாள் சேர்ந்தவர் கேட்கவேண்டும். எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் ஜூனியர் ஜூனியர்தான். சிலர், "நாங்கள் சீனியர் எங்களை வேலைப்பார்க்க சொல்லலாமா?" என்றுகூட கேட்பவர்களும் உண்டு. சீனியர் என்பதால், அதற்குரிய ஊதிய உயர்வை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், எல்லா வேலையும் ஜூனியர்தான் செய்ய வேண்டும் என்பது எப்படி சரியாகும்? இது நாகரிக உலகத்தில் உள்ள அடிமைத்தனமேயன்றி, வேறு என்ன?


சில நல்ல சீனியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்கள் எல்லோருடனும் கலந்து பழகுவார்கள். வேலையையும் பகிர்ந்து 'ஈகோ' பார்க்காமல் செய்வார்கள். சீனியரின் அனுபவம் ஜூனியருக்குப் பயன்படும் என்பது உண்மைதான். அதேபோல், ஜூனியரின் புத்திசாலித்தனத்தை சீனியர் பயன்படுத்தலாமே!


சீனியர் என்று அலட்டிக்கொள்ளும் நபர்களில் பெரும்பகுதியினருக்கு தன்னம்பிக்கை, திறமை மற்றும் புத்திசாலித்தனம் குறைவாக இருக்கும். அதனால்தான், அவர்கள் மற்றவரைவிட தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள, இந்த சீனியர் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.


எனது நண்பர் வீட்டில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் ஓயாமல் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனால், எனது உறவினர் வீட்டில் உள்ள இரட்டைக் குழந்தைகள், ஒருவரோடு மற்றவர் அன்பாக பழகுவதும், நட்போடும் இருப்பதும் நான் அறிந்தவையே. இதில், நான் புரிந்துகொண்டது எனது நண்பர் வீட்டில் இரட்டையர்களாக இருந்தபோதும் அக்கா, தங்கை என்று பிரித்து சொல்வார்கள். ஆனால், எனது உறவினர் வீட்டில் இன்றுவரை, முதலில் பிறந்தது யார் என்ற விபரத்தைச் சொல்லமாட்டார்கள். அதுவே அவர்களின் ஒற்றுமைக்குக் காரணமாக நான் நினைக்கிறேன்.


இப்படி சீனியர், ஜூனியர் வேறுபாடு மாமியார் மருமகளில்(வீட்டிற்கு முதலில் வந்தவர்) ஆரம்பித்து, மூத்த மாப்பிள்ளை முறுக்கு வரை அடக்கம். இது வலைப்பூக்களிலும் வந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்?!
இந்த மாதிரியான வேறுபாடுகள் பல வழிகளில் நம் முன்னேற்றத்திற்கும், மன அமைதிக்கும் இடையூறாக இருப்பதை நாம் அறிவோம். இனியாவது இந்த மாதிரி வேறுபாடுகள் பார்க்காமல், நட்புடனும் அன்புடனும் இருப்போம்.


ஜூனியரின் வேகமும்,சீனியரின்(ஒரு வினாடி முன்னாள் பணியில் சேர்ந்தவர் அல்ல) விவேகமும் சேர்ந்தால், வெற்றி நிச்சயம்.

அது சரி, நீங்க ஜூனியரா, இல்ல சீனியரா...?

Thursday, September 30, 2010

தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதி காப்போம்!

                
இது   இன்றைய தினமலரில் வந்தப் படம். 
இந்தச் சிறுவர்களின்  ஒற்றுமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் பின்னணியில் இவர்களின் பெற்றோரும் ஆசிரியரும் இருப்பார்கள் என்பதை அறிவோம். இது ஒரு 'பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்'என்பது போல், நாடு முழுதும் எல்லோரும் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஒரு சில காட்டுமிராண்டிகளின் எண்ணங்களுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது
என்பதுவே நமது சிந்தனையாக இருக்கட்டும்.