Friday, September 2, 2011

செத்தப் பாம்பை அடிக்காதீங்க!

கடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சியைப் பார்த்தும்  பத்திரிக்கையைப் படித்தும் மிகவும் சங்கடப்பட்டிருந்தேன். காரணம் யாவரும் அறிந்ததே!  ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கும் செப்டம்பர் 9 ஆம் தேதி  தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்ற செய்திதான் அது. இதிலென்ன இருக்கிறது, தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கில் போடுவதுதானே சரி என்பவர்கள் மட்டும் அவசியம்  தொடர்ந்து  படியுங்கள்.

 இங்கு  அவர்களைக் குற்றமற்றவர்கள் என்று விவாதிப்பதற்கு  நான் முயலவில்லை. சராசரி மனிதனின்  மனதில்  இந்த விவகாரம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


  தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம் இதோ..

''தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.'

-  இப்படிக்கு தோழர் செங்கொடி.


செங்கொடி பற்றி மக்கள் மன்ற அமைப்பாளர்கள் "சிறு வயது முதல் தங்கள் அமைப்பில் இணைந்து, ஈழத் தமிழர் போராட்டம், காஞ்சி மக்கள் போராட்டம் என பலவற்றில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்" என்கின்றனர். 

இப்படி பிறர் துன்பத்தை தன் துன்பமாகப் பார்க்கும் பெண் இன்று நம்மிடையே இல்லை. இவரின் செயலை நான் நியாப்படுத்தவில்லை. ஆனால், இவரின் நல்ல உள்ளத்தை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு அனுப்பி விட்டு பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பவரின் மனநிலையும், அவர்களின் குடும்பத்தாரின் மனநிலையும்,  ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். அதனால் தான் மேலே குறிப்பிட்ட சோகம் என்னை வாட்டி வதைத்தது. குறிப்பாக, சுனாமி  நாகையை தாக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்த பொழுது, பகல் முழுவதும் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுவிட்டு, இரவில் தொலைக்காட்சியில் அந்த காட்சியைக் காணும் பொழுது என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்தோடும். அது மாதிரியான நிலைக்கு அற்புதம்மாளின் கெஞ்சலும் செங்கொடியின் மரணமும்  மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்தின் எழுச்சியும் என்னை இட்டுச் சென்றுள்ளது.

பொதுவாகவே வழக்கறிஞர்கள்  போராட்டம் செய்வதை நான் விரும்புவதில்லை. ஏனெனில், ஏன்  இவர்கள் போராடுகிறார்கள்.  நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டியது தானே? என்ற கேள்வி என்னுள் எழுவதால். ஆனால், அவர்கள் இப்பொழுது நடத்தி வருகின்ற போராட்டம் நியாயமானதாக தோன்றியது.


 சென்னை  உயர் நீதிமன்றத்தின்  எட்டு வாரத் தடையும், தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் பார்க்கும் பொழுது மூவருக்கும் தண்டனைக் குறைப்பு கிடைக்கும் போல் தோன்றுகிறது.
சரி, அப்படி என்ன இந்த மூன்று பேரின் உயிரைக்காப்பற்ற  இப்படி அக்கறையாக எல்லோரும் போராடுகிறார்களே என்ன காரணம்? என்று சிந்தித்தால் கிடைப்பது... 




இந்தப் படுகொலைக்கு காராணமாக சொல்லப்படும் விடுதலைப்புலி அமைப்பு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டதும். முக்கிய குற்றவாளிகள் படுகொலை நடந்த சமயத்திலேயே கொல்லப்பட்டு விட்டதும். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதும். சம்பத்தப்பட்டவர்கள் பல வருடங்களாக   சிறையில் உள்ளதும். குற்றவாளிள் முழு அளவில் தண்டனைப் பெற்று  விட்டதாகவே மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.




இப்பொழுது, இந்த கொலை சம்பவத்தில் விசரிக்கப்பட்டவர்களும் விசாரணை செய்தவர்களும் வெளியுடும் தகவல்களும். மேலும் , ராஜபட்சேவால்  பல்லாயிரக் கணக்கான  ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதும்.  பல்லாயிரம் பேர் முள்வேலி முகாமுக்குள் முடங்கிக் கிடப்பதும்.  இப்படி பலவாறாக துன்பத்தை கண்டு  துவண்டு போயிருக்கும் தமிழர்களின் மனதில், இந்த மூவரின் உயிர்  மீதும் கருணை ஏற்படுவது இயற்கையே. 

 



எங்கள் கிராமத்தில் வயல்களுக்கு, அதாவது காடுகளுக்கு நடுவே வீடுகள் அமைத்திருக்கும். எங்கள் வீடும் அப்படித்தான். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டை சுற்றி பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எங்கள் தாத்தா பாம்பைக் கண்டால் அடித்துக் கொன்று விடுவார். அப்படி அவர் பாம்பு அடிப்பதை, ஒருவித பயத்தோடு  பார்த்துக் கொண்டிருக்கும் நானும் எனது தம்பிகளும், அவர் அடித்துப் போட்டப் பாம்பை  ஆளுக்கொரு குச்சியை வைத்துக் கொண்டு 
அடிப்போம். அப்படி நாங்கள் அடிப்பதைப் பார்த்து எங்கள் தாத்தா சொல்லவார். " செத்தப் பாம்பை அடிக்காதீங்க!" என்பார். செத்தப் பாம்பின் மீது கருணையின் காரணமாகவோ, அல்லது  செத்தப் பாம்பிடம் உனது வீரத்தைக் காட்டக் கூடாது என்பதற்காகவோ  சொல்லியிருப்பாரா  என்று  அதன் அர்த்தம் இன்றளவும் புரியவில்லை. 

எது எப்படியோ, 'செத்தப் பாம்பை அடிப்பது தர்மம் அல்ல!' என்பது மட்டும் புரிகிறது!

.

16 comments:

  1. பிறர் துன்பத்தை தன் துன்பமாகப் பார்க்கும் பெண் இன்று நம்மிடையே இல்லை. இவரின் செயலை நான் நியாப்படுத்தவில்லை. ஆனால், இவரின் நல்ல உள்ளத்தை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.
    //
    சரியான சொல்லோடல்!
    ஆழ்ந்த அலசல்.பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. //பிறர் துன்பத்தை தன் துன்பமாகப் பார்க்கும் பெண் இன்று நம்மிடையே இல்லை. இவரின் செயலை நான் நியாப்படுத்தவில்லை. ஆனால், இவரின் நல்ல உள்ளத்தை யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள், பிறர் நலத்திற்காக தன்னுயிர் நீக்கும் தியாகம் எல்லோராலும் இயலாது. முத்துகுமார், செங்கொடி போற்றத்தக்கவர்கள்

    ReplyDelete
  3. என்ன சொல்ல அண்ணா, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கின்றனர்..

    இது முன்னமே நிறைவேற்றி இருந்தால் எந்த கேள்வியும் வந்து இருக்காதே, இவ்வளவு தாமதம் குழப்பத்திற்கு எல்லாம் காரணம்..

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. ஆமாங்க கரெக்டா சொன்னீங்க. செத்தபாம்பை அடிக்க வேண்டாமே.

    ReplyDelete
  6. மரணதண்டனை காட்டுமிராண்டித்தனமானது.அதனை ஒழித்தே ஆகவேண்டும் .

    ReplyDelete
  7. உண்மையை சொல்வதென்றால் எனக்கு இது மாதிரியான செயல்களில் உடன்பாடு இல்லை.

    ReplyDelete
  8. தங்களின் உணர்வுகளை அழுத்தமாகவும் அதே சமயம் கருணை தோய்ந்தும் எடுத்து காட்டி உள்ளீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம். எனது தூக்கிலிடுவோம் பதிவு இங்கே http://aathimanithan.blogspot.com/2011/08/blog-post_26.html

    ReplyDelete
  9. இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்ட மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  10. தங்களின் பகிர்வு தமிழக மக்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது

    ReplyDelete
  11. செங்கொடியே! என் செல்ல மகளே!
    சேவிக்கத் தகுந்ததுன் சேவடி துகளே!

    ஒன்றுரைப்பேன்; உன் தியகத்திற்கில்லை
    ஒப்பு;
    என்றாலும் - அதை
    ஏற்பதற்கில்லை; அது தப்பு!

    -கவிஞர் வாலி,

    நன்றி- ஜூவி 11/9/2011

    ReplyDelete
  12. inraiya soozhalil rajiv kolaiyil neradiyaaka sammanthappadaatha ivarkal uyirai eduppathu sariyillai enru thaan thonrukirathu.

    ReplyDelete