Friday, February 27, 2026

CID அன்பழகன்

எங்களது குடும்ப நண்பரும் வேதாரண்யம் வட்டம், கருப்பம்புலம் கிராமத்தை பூர்வீகமாகவும் சென்னை, அம்பத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திரு ரெ. அன்பழகன் & திருமதி அ. வசந்தா தம்பதியினரின் இளைய மகன் அ. பிரவின் மற்றும் பட்டுக்கோட்டை வட்டம், மகிழங்கோட்டையை சேர்ந்தவரும், பட்டுக்கோட்டை மெஸ் பிரைவேட் லிமிடெட் -இன் நிர்வாக இயக்குநருமாகிய திரு ஜெ. திருவரசு & திருமதி தி. மேகலா ஆகியோரின் மகள் தி. நிதிலாஸ்ரீ இவர்களின் திருமணம் 20. 02. 26 அன்று ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.

 மணமக்கள் ஊர்வலம் மற்றும் திருமணம் என்று இரு நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டதோடு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று பலரை சந்திக்கும் வாய்ப்பும் மற்றும் புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது! 

எங்களது இரு குடும்பங்களும் கருப்பம்புலம் கிராமத்தை பூர்வீகமாக் கொண்டிருந்தாலும், வேலையின் காரணமாக பல ஆண்டுகளாக வெளியூரில் வசித்துக் கொண்டிருக்கிறோம். எனினும், வேதாரண்யம் பகுதியில் 'CID அன்பழகன்' என்று அறியப்படுபவர் மணமகனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

2004 - ஆம் ஆண்டு, எங்களது மகன் அமைதி விரும்பியும், அவர்களது மூத்த மகன் அருண்மொழியும், நமக்கல் குறிஞ்சி மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் ஒன்றாக சேர்ந்தபிறகு, எங்களுக்குள்ளான நெருங்கிய நட்பு தொடங்கியது. 
.
இன்று, ஐ.ஐ.டி. இல் படித்து, அமெக்கரிக்காவில் உயர்கல்வி பயின்று, அங்கேயே பணியாற்றும் மணமகன் திரு அ. பிரவின் எங்களுக்கு அறிமுகமான போது, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அவர்கள் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம், பிரவின் எங்களுடன் பொழுதைக் கழிக்காமல், வீட்டிலேயே அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார். சின்ன வயதிலேயே மிகவும் பொறுப்பாக இருப்பார்.

பெற்றோரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இரண்டையும் சரியாகப் புரிந்துக் கொண்டு, கல்வி மற்றும் ஒழுக்கம் இரண்டிலும் அவர்களது இரு மகன்களும் பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மணமக்கள், நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்து, பெருவாழ்வு வாழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

Thursday, February 19, 2026

புயல் குமார்!

சென்னையில்  'டி. பார்ம்' படிப்பை முடித்து, 1988 - இல் ஊருக்கு வந்த பிறகு, பழைய நண்பர்கள் மூலம் அறிமுகமான குமார் அவர்கள், நான் அரசு வேலையா அல்லது தொழிலா என்கிற குழப்பத்தில் இருந்தபோது, தனது நண்பரான வேலை வாய்ப்பு அலுவகத்தில் பணியாற்றிய அலுவலர் திரு காசிநாதன் அவர்கள் வழியாக, வேலைக்கான அறிவிப்பு எப்போது வரும் என்கிற தகவலை அறிவதற்காக, அவரே பயணச் செலவையும் செய்து, என்னை நாகப்பட்டினம் அழைத்து சென்றார். அவர் தான் பின்னாட்களில் 'புயல் குமார்' என்று அறியப்படுகிற தலைமையாசிரியர் திரு சு. தெட்சனாமூர்த்தி அவர்கள். 
அவரின் ஆலோசனைகள் எனது முன்னேற்றத்தில் பங்களிப்பு செய்ததுள்ளன என்றால் அது மிகையாகாது! 
 
நான் வேலையின் காரணமாக பல்வேறு ஊர்களுக்கு மாறுதலில் சென்ற பிறகு, நேரடித்தொடர்புகள் குறைந்தன. எனினும்,
பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற சுபநிகழ்வுகளை அவ்வப்போது இருவரும் பகிர்ந்துக்கொள்வோம். 

தனது இரண்டாவது மகள் திருமதி தமிழ்நிலவு மதன் அவர்களுக்காக வேதாரண்யத்தில் கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கான அழைப்பிதழுடன்,
தமிழ்நிலவு மதன் தம்பதியினர் எங்களது சென்னை வீட்டிற்கு நேரில் வந்து அழைத்தனர். சூழ்நிலையின் காரணமாக எங்களால் விழா நடைப்பெற்ற 1.02.26 அன்று கலந்துக்கொள்ள இயலாமல் போய்விட்டது. எனினும், நண்பர்களிடம் வீடு மற்றும் விழா குறித்து விசாரித்தபோது, பிரமாண்டத்தின் உச்சமாக வீடும், பெரும் திரளாக கூடியிருந்த உறவுகள் மற்றும் நண்பர்களால் விழாவும் சிறப்பு பெற்றதாக தெரிவித்தார்கள். 

நண்பர் குமார் அவர்களிடம் முன் கூட்டியே தகவல் அளித்துவிட்டு 17. 02. 26 அன்று அவர்களது புதிய வீட்டுக்கு சென்றோம்.

 நண்பர் ஆசிரியர் மட்டுமல்ல, நல்ல கவிஞரும் கூட என்பதை விளக்கும் விதமாக, கவிதையாக காட்சியளிக்கிறது புதிய வீடு. 'எது மாதிரியும் இல்லாத புது மாதிரி' என்பதற்கான உதாரணமாக திகழ்கிறது வீடு. 

புதிய வீட்டில் மகிழ்ச்சி என்றென்றும் நிரந்தரமாக இடம்பிடிக்க வேண்டுமென்று வாழ்த்துவதோடு💐, இயற்கையிடமும் வேண்டுகிறேன்🙏

Wednesday, February 11, 2026

வீட்டுத் தோட்டம்!

1970 -களில் அதாவது, எனது பள்ளிப் பருவத்தில், வீட்டைச் சுற்றி மரம், செடி, கொடி என்று அடர்பச்சையாகப் காணப்படும். நாட்டுக் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டிருக்கும். அப்போதெல்லாம், அதன் சுவை எனக்கு பிடிக்காமல் இருந்தது. இந்தக் காடுகளெல்லாம் அழிக்கப்படவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். 

வளர்ந்து கல்வி மற்றும் வேலையின் காரணமாக மன்னார்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை என்று, அதாவது 'கான்கிரிட் காடு' என்றழைக்கப்படும் நகர வாழ்க்கையை வாழ்ந்தபோதுதான், பசுமையின் அவசியம் குறித்தான புரிதல் வந்தது. 

அதன்பிறகு, ஊருக்கு வந்துப் பார்த்தால், நான் முதலில் சொன்ன, எனது சிறுவயது ஆசையெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்போதிருந்த மரங்கள் இப்போதில்லை. அன்று எனக்கு பிடிக்காத நாட்டுக் காய்கறிகளை  இப்போது மருந்துக்குகூட  எவரும் மறந்தும் பயிரிடுவதில்லை.

 பெரும்பகுதியான வீடுகளில் ஏசி மெஷின் மாட்டப்பட்டுள்ளது. கடைத்தெருவில் பிரமாண்ட காய்கறி கடைகள் காணப்படுகிறது. வீட்டுத் தோட்டம் முற்றிலும் அழிந்துபோய்விட்டது. ரசாயனத்தின் உதவியால் பயிரிடப்பட்ட காய்கறிகளை கடைகளில் வாங்கி சமைப்பதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது.

இதற்கிடையே, வீட்டு வாசலில் இந்த மரம் இருக்கக் கூடாது. வீட்டைச் சுற்றி எந்தெந்த மரங்கள் வளர்க்ககூடாது என்றெல்லாம் சொல்வதற்கு, ஊரில் நிறைய நிபுணர்கள் தோன்றிவிட்டார்கள்.

 ஓய்வு பெற்றுவிட்டதால் ஊரில் தங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வீட்டைச்சுற்றி ஏதாவது மரங்களை நடலாம் என்று நினைத்து, கரியாப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் வடமழை மணக்காட்டில் அமைந்துள்ள 'எஸ்எம் கார்டன்' Sm gardening- என்கிற நர்சரி பற்றி அறிந்திருந்ததால், நண்பரும் பிரபல ஜோதிடருமான திரு ம. திருப்பதிராஜன் அவர்களுடன் அங்கு சென்று, நர்சரியை சுற்றிப்பார்த்து தோட்டத்தின் உதவியாளரிடம் விளக்கம் கேட்டு சில செடிகளை வாங்கிவந்ததோடு, ஒன்றல்லது இரண்டாண்டுகளில் பலன்தரும் மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, நாவல் என்று பல்வேறு ரகத்தில் பெரிய மரச்செடிகளை வைத்துள்ள அதன் உரிமையாளர் திரு முத்தரசன் அவர்களையும் சந்தித்து, அவருடைய இந்த சேவையைப் பாராட்டிவிட்டு, விரைவில் மீண்டும் வருகிறோம் என்று சொல்லி விடைபெற்று வந்தோம். 

மரம் வளர்ப்போம், காய் மற்றும் பழம் பறிப்போம், மற்றவர்களுக்கும் கொடுப்போம்!

(வயதானக் காலத்தில், இவர் எதற்காக மரம் நடுகிறார் என்றெல்லாம் சிலருக்கு தோன்றலாம். அதனால்தான் கடைசி வரிகள்)