Showing posts with label விழிப்புணர்வு.. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு.. Show all posts

Monday, February 6, 2012

ரத்த அழுத்தம்(BP) அளப்பது பற்றிய புதிய ஆய்வு முடிவு!





நமது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிவோம். மருத்துவரிடம் சென்றால் நமது கையில்  அளவெடுப்பார்கள். 120/80 mm Hg  என்பது இயல்பான  ரத்த அழுத்தம் என்பதையும் அறிவோம்.

இப்பொழுது, லான்செட்(Lancet என்பது 1823 -ல் ஆரம்பிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த ஒரு மருத்துவப் பத்திரிகை) ஓர்  ஆய்வு முடிவை  வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு கைகளிலும் எடுக்கப்படும் சிஸ்டாலிக் அளவில் (மேல் பகுதியில் குறிபிடப்படும்) அளவில் 15 mm Hg அளவுக்கு மேல் வித்தியாசம் வந்தால், கால்களில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது(peripheral vascular disease ) என்றும். மேலும், மூளைக்கு ரத்தம் செல்வது பாதிப்படையும்(cerebrovascular disease)  என்பது  தான்  அந்த ஆரயிச்சியின் முடிவு.

இது குறித்து  மருத்துவ நிபுணர்களின் கருத்து...

" இது ஒரு நல்ல ஆய்வு. வழக்கமா ஒரு கையில்தான் ரத்த அழுத்தத்தை அளப்போம். சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு கைகள் மற்றும் கால்களிலும் அளப்போம். வழக்கமாக,  இந்தியாவில்  30 சதவிகித்தினருக்கு  இரண்டு கைகளுக்கிடையே 10  mm Hg வித்தியாசம் இருக்கும். எப்படியோ, இரண்டு கைகளிலும் அளப்பது ஒன்று சிரமம் கிடையாது.  அதைச் செய்யலாம்" என்கிறார் டாக்டர் அனூப் மிஸ்ரரா.(Dr Anoop Misra, chairman of Fortis' Centre of Excellence for Diabetes, Metabolic Diseases and Endocrinology)

"முதல் முறையா ரத்த அழுத்தம் அளக்கப்படும்  நோயாளிகளுக்கு  கை மற்றும் கால்களில்  அளப்போம். கைகளில் உள்ள ரத்த  அழுத்தத்தை விட கால்களில் கூடுதலாக இருக்கும். கைகளைவிட கால்களில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், கால்களில் உள்ள தமனிகளில் அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும். இரண்டு கைககளுக்கிடையே  15 mm Hg
 மேல் வித்தியாசம் இருந்தால், அது கைகளில் உள்ள தமனியில் அடைப்பு உள்ளது என்பதோடு மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களிலும், இதயத் தமனிகளிலும்  அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாகும்"  என்கிறார் இதய நிபுணர் டாக்டர் கே.கே.அகர்வால்.(Dr K K Aggarwal,  president of Heart Care Foundation of India)

 இந்த ஆய்வை தலைமேற்று நடத்திய டாக்டர் கிறிஸ்டோபர் கிளார்க்(Dr Christopher Clark, University of Exeter Peninsula College of Medicine and Dentistry (PCMD)),  சொல்கிறார். "கைகளில் காணப்படும் சிஸ்டாலிக் அழுத்தத்தின் வேறுபாட்டிற்கும், ரத்த நாளங்களில் ஏற்படும் வியாதிகளுக்கும் மற்றும் இறப்புகளுக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு  இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க ஆராய்ந்தோம். நிச்சயமாக ஒன்றுக்கொன்று தொர்பு இருக்கிறது என்பேதே எங்கள் முடிவு. இரண்டுக் கைகளிடையே  10  mm Hg அல்லது 15  mm Hg அல்லது அதற்கு மேலும் வித்தியாசம் இருந்தால் அவர்களுக்கு வியாதி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், மேற்கொண்டு அவர்களை  பரிசோதனைகளுக்கு  உட்படுத்தலாம்"

ஆரம்ப நிலையில் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிப்பதற்கும் உரிய சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ளவும் இந்த ஆய்வு உதவும்.

எது எப்படியோ, காலிலும் BP அளக்கலாம் என்பதை இப்பொழுதான் தெரிந்துக் கொண்டேன். மேலும், இனி மருத்துவரிடம் செல்லும் பொழுது இரண்டு கைகளிலும் BP பார்க்கும்படி கேட்டுக் கொள்வோம்.

இது  குறித்து பத்திரிகை செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்.

.

Tuesday, July 5, 2011

கு.க. அறுவை சிகிச்சைக்கு கார் பரிசு!


குடும்பக் கட்டுப்பாடு குறித்து நான் சில விஷயங்களை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பியுள்ளேன். ஆனால், அதை எந்தப் பத்திரிக்கையும் வெளியிட்டது இல்லை. நேற்று நான் படித்து செய்தி, எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. அது என்னவெனில், கு.க. அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர் ஒருவருக்கு, குலுக்கல் முறையில் நானோ கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,மோட்டார் சைக்கிள், டிவி செட்டுகள், மிக்சி வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது.



அவசரப்படாதீங்க, இது தமிழ்நாட்ல இல்ல. ராஜஸ்த்தான் மாநிலத்தில் உள்ள ஜூன்ஜுனு மாவட்ட சுகாதார துறை அலுவலகம்தான் இப்படி அறிவித்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய செய்தி. இன்னும், இருபது ஆண்டுகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கையில் நாம் சீனா-வை முந்தி விடுவோம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அட, இதுல மட்டுமாவது உலகத்தில் முதலிடம் பிடிக்கலாம்ன்னு பார்த்தா, அதுக்கும் விடமாட்டாங்க போலிருக்கேன்னு உங்க மனசு சொல்லுதா?

இன்று எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம், எதற்கெடுத்தாலும் அடிபிடி என்கிற சூழ்நிலை. பேருந்து, தொடர் வண்டி, பெட்டிக்கடை முதல் பெரியக் கடைகள் வரை, எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம். இது மேலும் அசுர வேகத்தில் வளராமல் இருக்க, அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முந்தைய அரசு குழந்தைப் பெற்றுக் கொண்டால் ஆறாயிரம் ரூபாய்க் கொடுத்தது. ஆனால், கு.க. அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு சொற்பத் தொகையே சன்மானமாகக் கொடுக்கப்படுகிறது.

ஆண்களுக்கான அறுவை சிகிச்சை மிகவும் எளிமையானது, மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால், வாசெக்டமி செய்து கொள்ளும் ஆண்களுக்கு, குறைந்தப் பட்சம் பத்தாயிரம் ரூபாய்க் கொடுக்கலாம். இது பெண்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையை வழங்கலாம். பெண்களின் மீது அக்கறை உள்ள அரசு என்பதால், தமிழ்நாட்டிலும் கூடிய விரைவில் இப்படி ஒரு புரட்சிக்கரமான திட்டத்தை எதிர்ப்பார்க்கலாம் என்று நம்புகிறேன்.

இந்தப் பதிவைப் பாருங்கள்

திருந்தவே மாட்டார்களா?!

மக்கள் பெருக்கத்தின் அபாயம் புரியும்.





Friday, May 27, 2011

இது முடிவல்ல ஆரம்பம்...!

இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. நம் அல்லது நம்முடைய உறவினர்,நண்பர்களின் பிள்ளைகளின் தேர்வு முடிவு வந்திருக்கும். இந்த நேரத்தில், நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போம்.

முன்பெல்லாம் தேர்வு முடிவு வெளியானால் "பாஸா?" என்று கேட்ப்பார்கள். இப்பொழுது "எத்தனை மார்க்?" என்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும். இதிலும் சில பிரச்சினைகள் வருகிறது. அது என்னவென்றால், அதிக அளவு மதிப்பெண் எடுத்தவர்களை எல்லோரும் பாராட்டுவதும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விடுவதும் தான்.

இந்த வருடம் முதல் மதிப்பெண் 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர். இந்த விவரம் வருமாறு, நித்தியா - எஸ். எச் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், ரம்யா - ஸ்ரீ குருகுலம் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். சங்கீதா - முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், சேலம், மின்னல்விழி - செய்யாறு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஹரினி, அவர்லேடி பள்ளி, திருவெற்றியூர், சென்னை.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் 3 இடங்களைப் பிடித்த 40 பேர். விபரம் அறிய பார்க்க: தினமணி

இவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இவர்கள் +2 தேர்விலும் இந்த மாதிரி முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பத்தாம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்றவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அந்த சதவிகிதம் மதிப்பெண் பெறுவதில்லை என்பதை அனுபவப் பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். அதே மாதிரி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அப்படியே இருந்து விடுவதுமில்லை. பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த என்னுடைய நண்பர் ஒருவர், இன்று ஆடிட்டராக உள்ளார்.

சிலர், +1,+2 மட்டும் ரெசிடென்சியல் பள்ளிகளில் சேர்ப்போம் என்று சேர்த்து விடுகிறார்கள். அப்படி சேர்க்கக் காரணம். அந்தப் பள்ளிகளின் விளம்பரங்கள். அவர்கள் பள்ளியில் பத்து, இருபது மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் +1 சேர்க்கையின் பொழுதே மிகச் சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். சுமாராக ஆயிரம் மிகச் சிறந்த மாணவர்களில், பத்து இருபது பேர் மேற்படி மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. மேலும், சுமாராக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது.

வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இதில் மாணவர்களுக்கு மன ரீதியான அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடும். எனவே, பிள்ளைகளின் மனப்பூர்வமான விருப்பமில்லாமல்(முதலில் தலையாட்டிக்கொண்டு சேர்ந்து விடுவார்கள், பின்பு அது சரியில்லை இது சரியில்லை என்பார்கள்) இந்த மாதிரி விடுதிகளில் சேர்ப்பது எதிர்ப்பார்த்த முடிவைத் தராது என்பதே எனது அனுபவம்.

எனவே,அதிக மதிப்பெண் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றப் பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நாம் சொல்ல வருவது 'இது முடிவல்ல ஆரம்பம்' என்பதே!



Wednesday, May 18, 2011

திருந்தவே மாட்டார்களா?!

மக்களிடம் பொறுமையோ புத்திசாலித்தனமோ இல்லை என்பதற்கு இரண்டு நிகழ்வுகள் கீழே உள்ளன. படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

//பொதிகையின் கதவை திறந்தவுடன் டிராயர் போட்ட நமீதாவை தரிசிக்க முண்டியடிக்கும் பக்தர் கூட்டம் போல, நாயடி பேயடி அடித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இத்தனைக்கும் அது ஒரு ரிஸர்வர்ட் கம்பார்ட்மென்ட். ஏறிய மக்கள் வெள்ளத்தின் ஆவேசம் அடங்கிய பின்னர் பொறுமையாக அனைவரையும் கோச் ஏற்றினோம்.(நன்றி: தீராத விளையாட்டுப் பிள்ளை)//

//2011-12 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 62 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. முதல் நாளான திங்கள்கிழமை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 3 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மட்டும் அதிகாலை 3 மணி முதலே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக முதல் நாளிலேயே 88 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.(நன்றி: தினமணி)//


என்ன கொடுமைப் பாருங்கள் காலை மூன்று மணிக்கு விண்ணப்பம் வாங்குமிடத்தில் இருக்கிறார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது. முதலில் விண்ணப்பம் வாங்குபவர்களுக்கு, ஏதாவது முன்னுரிமை உண்டென்று நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ? ஏன் இப்படி சொல்கிறேனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் தனது மகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க முதல் நாளே விண்ணப்பம் வாங்க வேண்டும் என்றார். ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன காரணம் "விண்ணப்பத்தில் உள்ள நம்பரை வைத்துதான் தர வரிசை போடுவார்கள்" என்றார். பிறகு நான் எவ்வளவு விளக்கிச் சொல்லியும், அவர் சமாதானம் ஆகவில்லை என்பது வேறு கதை.

அனைவருக்கும் நிச்சயம் விண்ணப்பம் கிடைக்கும். இன்னும் வேடிக்கை என்னவென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. இவர்கள் அனைவரும் அதிகளவில் படிக்கப்போவது கணினித் துறை சார்ந்தப் படிப்பாகத்தான் இருக்கும். இவர்களுக்கே கணினியைப் பயன்படுத்தி நேரம், பொருளாதாரம் போன்றவைகளை மிச்சம் செய்ய வேண்டுமென்கிற நோக்கம் இல்லை. 31/05/11 அன்று வரை நேரடியாக
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் சமர்ப்பிக்க 3/06/11 அன்றும் கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு
http://www.annauniv.edu/tnea2011/

இவ்வளவு நாட்கள் இடைவெளி இருக்கையில், இப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு விடிய விடிய விழித்துக் கொண்டிருந்து விண்ணப்பம் வாங்க வேண்டிய அவசியமென்ன?

எல்.கே.ஜி. சேர்க்கைக்கு விண்ணப்பம் வாங்க விடிய விடிய வரிசையில் நின்ற மக்கள் என்று பத்திரிகையில் படிக்கும் போதெல்லாம். அந்தக் கல்வி நிறுவனங்களைப் பற்றி தரக்குறைவாக நினைத்துக் கொள்வேன். ஆனால், அன்று வரிசையில் நின்றவர்கள்தான் இவர்கள் என்பது இப்பொழுது புரிகிறது!(அட, அவனா இவன்?!)

இதையெல்லாம் சாதாரண படிப்பறிவு இல்லாத மக்கள் செய்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.
இதற்கு மேல், இது குறித்து எழுத மனசு வரவில்லை.
இவர்கள் திருந்த, இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டும்?


Tuesday, May 3, 2011

உலக ஆஸ்த்மா தினம் - ஒரு பார்வை!


இன்று உலக ஆஸ்த்மா தினம். நான் இதை அறிந்தவுடன் "இப்படி ஒரு தினம் கடைப்பிடிக்கப் படுகிறதா?" என்கிற ஆர்வத்தில் தேடிப் படித்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், முதல் செவ்வாய்க் கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.


இந்த வருட ஆஸ்த்மா தினத்தின் மையக் கருத்து "உங்களுடைய ஆஸ்த்மா நோயை உங்களால் கட்டுப்படுத்த முடியும்" (You Can Control Your Asthma)
என்பதாகும். வருகிற 2015 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்த்மா நோயால் மருத்துவமனையில் தாங்கி சிகிச்சைப் பெறுபவரின் சதவிகிதத்தை ஐம்பதாக குறைக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறது GINA -(Global Initiative for Asthma) இதை தமிழில் 'உலகளவில் ஆஸ்த்மாவை முன்னிலைப் படுத்துதல்' என்று பொருள் கொள்ளலாம். முதல் ஆஸ்த்மா தினம் 1998 -ல் ஸ்பெயினில் கொண்டாடப்பட்டது. ஆஸ்த்மா குறித்த மேலதிக தகவல் ஆங்கிலத்தில் அறிய இங்கே செல்லவும்.


ஆஸ்த்மா தினத்தையொட்டி சென்னையில் 'டாக்டர் மேத்தா ஹாஸ்பிடல்' சார்பாக இலவச ஆஸ்த்மா நோய் கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. மே 3 முதல் 12 வரை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை மாலை 5.30 முதல் 8.00 மணி வரை நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 9841075876 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேற்கண்ட தகவலை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்த பிறகே இங்கே குறிப்பிடுகிறேன். இது குறித்து மேலும் அறிய இங்கே செல்லவும்.


ஆஸ்த்மாவைக் கட்டுப்படுத்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் ஆராயிச்சி பற்றி அறிய இங்கே செல்லவும். கூடிய விரைவில் அந்தப் பக்கத்தை தமிழில் தர முயற்சி செய்யலாம் என்று உள்ளேன். மேலும் அவர்களின் ஆராயிச்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய அவர்களுடன் தொடர்பு கொள்ள உள்ளேன். பதில் கிடைத்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது குறித்து கடந்த ஆண்டு ஒரு பதிவு போட்டிருந்தேன். ஆஸ்த்மா,அலர்ஜி நோயாளிகளுக்கு...! அது பலருக்கும் பயன் பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

விழிப்புணர்வு பெறுவோம், விரட்டுவோம் ஆஸ்த்மாவை!


Wednesday, April 13, 2011

என்ன நடக்கும், முப்பது நாட்கள் இடைவெளியில்?

அப்பாடா, ஒருவழியா ஒட்டுப் போட்டு கையில மைய வச்சிகிட்டு வந்தாச்சி. முடிவு தெரிய இன்னும் முப்பது நாள் காத்துக் கிடக்கணும். முடிவு வர்றப்ப, கிட்டதிட்ட நாம எப்போ ஓட்டுப் போட்டோம்ன்னு மறந்து போயிடும்!

இப்படி ஒரு மாதம் கழிச்சி ஒட்டு எண்ணுவதால், என்ன லாபம் அப்படின்னு மட்டும் இங்கே பார்ப்போம்.

1 .மாற்றுக் கட்சி தொண்டர்கள் மேலுள்ள அர்த்தமற்ற பகைமை மறந்து/மறைந்து போகும். அதனால், சண்டை சச்சரவு குறையும்.

2 . ஒரு மாதக் காலமும் 'நாம்தான் ஆட்சியமைக்கப் போகிறோம்' என்று அனைத்துக் கட்சி தலைவர்களும்,
தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் காலத்தைக் கழிக்கலாம்.

3 . 'வெற்றிப் பெற்றால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது. தோல்வியடைந்தால் எப்படி பேசுவது, அறிக்கை விடுவது' என்று
இந்த கால அவகாசத்தில் சிந்தித்து, இரண்டுக்குமே அறிக்கை தயார் செய்து வைத்து விடலாம். இதிலும், ஒரு சிக்கல் இருக்கிறது,
வெற்றிப் பெற்ற சந்தோஷத்திலோ, தோல்வியடைந்த வருத்தத்திலோ அறிக்கையை மாற்றி வெளியிடும் அபாயம் உள்ளது.

4 . கருத்துக் கணிப்பு வெளியிட்ட பத்திரிக்கைகளும், பதிவர்களும் இந்தக் காலத்தில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கும் மேலே
உள்ள மூன்றாவது 'பாரா' பொருந்தும்.

5 . முடிவு தெரிவதற்குள் தலைவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளிநாட்டுக்கு சென்று வரலாம்!

6 . எந்தக் கவலையும் இல்லாமல் ஐ.பி.எல். பார்க்கலாம்!

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

Monday, April 11, 2011

விவசாயம் செய்வோம், வாருங்கள்...!

என்னுடைய ஒரு ஒட்டு, என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறது? என்பதுதான் பலரின் கேள்வி. இப்படி நினைப்பவர்கள், சுமார் முப்பதுக்கு மேற்பட்ட சதவிகிதத்தினர். இவர்கள்தான், வாக்குச்சாவடிப் பக்கம் செல்வதில்லை. இதில் பெரும்பகுதியினர் படித்தவர்கள் என்பதும், அரசியல் நிலைபாடு நன்கு அறிந்தவர்கள் என்பதும்தான் வேதனையான விஷயம்.
இந்தத் தேர்தலில் கூட கிராமத்து மற்றும் ஏழை மக்களை குறிவைத்தே பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைத் தயாரித்துள்ளதே இதற்கு சான்று. படித்தவர்களின் ஒட்டு அவர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

நாம் ஒட்டுப்போடும் வேட்பாளர் தோற்க கூடாது என்கிற எண்ணத்தில், யார் வெற்றிப் பெறுவாரோ அவருக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்பவர்களும் உண்டு. இது போல், கடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டுப் போட்டவர்கள் நினைத்திருந்தால், இன்று அந்தக்கட்சி 41 இடம் அ.தி.மு.க. விடம் வாங்கியிருக்க முடியுமா? யாருக்கு ஓட்டுப்போட்டாலும், அது வீணாகிப் போகாது என்பதற்குத் தான் இந்த உதாரணம் சொன்னேன். எனவே, உங்கள் தொகுதியில் போட்டியிடும் நல்ல வேட்பாளருக்கு, அவரின் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் வாக்கை, அவசியம் பதிவு செய்யுங்கள். இன்றைக்கு நம்முடைய ஒட்டு மதிப்பில்லாமல் போவது போல் தோன்றும். ஆனால், வரும் தலைமுறைக்கு அது நல்ல அரசியல் சூழ்நிலையை உருவாக்க வழி வகுக்கும். நாம் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என்பதையும், அது அவரவர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்பதையும் மறக்க கூடாது.

சரி, எனது தொகுதியில் உள்ள வேட்பாளர் யாருமே எனக்குப் பிடிக்கவில்லை என்பவர்களுக்கு, 49 'ஒ' இருக்கிறது. இதுமாதிரியான ஓட்டுக்கள் ஒரு தொகுதியில் அதிகம் விழுவதாக வைத்துக் கொள்வோம். அது வெற்றிப் பெற்ற வேட்பாளரின் வித்தியாசத்தைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில், தோல்வியடைந்த கட்சி, நல்ல வேட்பாளரை நிறுத்தியிருந்தால், இந்த 49 'ஒ' வாக்களித்தவர்கள் நமக்கு ஆதரவு தெரிவித்திருப்பார்களே என்று நினைக்கத் தோன்றலாம் அல்லவா? அப்படி நடந்தால், அது எதிர்வரும் தேர்தலில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த வழிவகுக்கும்.

' உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை' என்பார்கள். ஆம், நாம் விதைக்கிற நாள் ஏப்ரல் 13 . அறுக்கிற நாள் மே 13. அறுக்கிற நாள்தான் மே பதிமூன்றே தவிர, அதுதான் வருகிற ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை பசியில்லாமல் வைத்திருக்கப் போகிறது என்பதை மறக்க வேண்டாம்.

விவசாயமும், ஜனநாயகமும் ஒன்றுதான். 'எது பயிர், எது களை' என்று விவசாயிக்குத் தெரியும்!

Friday, March 4, 2011

தேர்தல் தேதியும் விளைவுகளும்!

தேர்தல் தேதி குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்கள். மாணவர்களின் தேர்வு பாதிக்கப்படும் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு. ஏற்கனவே கிரிக்கெட் மாணவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கிவிட்டது. இப்பொழுது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியால் விளையப்போகும் நன்மைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
  1. குறைந்த காலத்துக்குள் தேர்தல் வருவதால் பொது சுவரில் வெள்ளையடித்து விளம்பரம் எழுதவே நேரம் பத்தாது. அதனால், தனியார் வீட்டுச் சுவர்கள் தப்பிக்கும். வீட்டு உரிமையாளருக்கு தேர்தலுக்கு பிறகு வெள்ளையடிக்கும் செலவு மிச்சம். மேலும், வீட்டு உரிமையாளருக்கு எந்தக் கட்சிக்கு சுவரைக் கொடுப்பது என்கிற பிரச்சினை கிடையாது.
  2. எப்படியும் தேர்தல் வரை எடுபிடிகளுக்கு சாப்பாடு, தங்குமிடம் அளிக்க வேண்டிய செலவு வேட்பாளருக்கு குறையும்.
  3. நாட்கள் அதிகமிருந்தால் வாக்காளரை திரும்ப திரும்ப சந்தித்து மீண்டும் மீண்டும் 'கவனிக்க' வேண்டும். இப்பொழுது ஒருமுறை சந்திக்கவே நேரம் பத்தாது.
  4. அரசியல் கட்சிகளுக்கும் நல்லதுதான். இல்லையெனில், கூட்டணி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் .
  5. நாட்கள் அதிகமிருந்தால் பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்றவை பிரச்சாரம் என்கிற பெயரில் அதிகமாக வீணடிக்கப்படும்.
  6. தொகுதிக்கு சம்பந்தமில்லாத வேட்பாளர்களை களமிறக்க கட்சிகள் பயப்படும். ஏனெனில், பிரச்சாரம் செய்ய நேரமில்லை என்பதால் 'நிச்சயம் வெற்றிப் பெறுவார்' என்கிற நபர்களைத்தான் வேட்பாளர்களாக அறிவிப்பார்கள்.
  7. அரசியல்வாதிகள் 'திட்டமிட்டு' மக்களை ஏமாற்ற, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு என்பதால், மக்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு அதிகம்.
8. எந்தக் கட்சி வெற்றிப் பெரும் என்று விலாவாரியாக எழுதி காகிதத்தை வீணடிக்காமல், சுருக்கமாக தங்களுடைய கணிப்பை பத்திரிகைகள் வெளியிடும்.
9. அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏப்ரல் மற்றும் மே மாத வெயிலில் பிரச்சாரம் செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

10. ஏப்ரல் 13 லிருந்து மே 13 க்குள் அரசியல்கட்சிகள் அணிமாறிக் கொள்ளலாம்.
11. மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற, மே மாத வெயிலில் நின்று வாக்களிக்க வேண்டியதில்லை.

இப்படியே சிந்தித்துப் பாருங்கள், இன்னும் நூறு நன்மைகள் மறைந்து கிடக்கும். எல்லாக் கட்சிகளும் எதற்கு ஒன்று சேர்கிறார்களோ இல்லையோ, தேர்தல் தேதியை மாற்ற கோரசாகக் குரல் கொடுக்கிறார்கள். அப்படி தேதி மாற்றப்பட்டால் மேற்கண்ட நன்மைகள் கிடைக்காமல் போகலாம். ஆனால், வேறு சில நன்மைகள் கிடைக்கும். அது, தேதி மாறினால் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்படும்.



Wednesday, March 2, 2011

யாருக்கு என் ஒட்டு!




தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இனி அரசியவாதிகள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுவார்கள். நாமும் சும்மாயிருந்தா எப்படி? அதனால, என்னால முடிஞ்சத செய்யலாம்னு நினைச்சதன் விளைவு, இப்போ நீங்க படிக்கிறீங்க!

எனக்கு, இப்போ இருக்கிற அரசியல் கட்சிகளிடம் பெரிய வேறுபாடு தெரியவில்லை. கொடியைக் காட்டி இது எந்தக் கட்சியோட கொடின்னுக் கேட்டாலோ, கட்சிப் பெயரச்சொல்லி அதோட தலைவர் பெயரையோ அல்லது தலைவர் பெயரைச் சொல்லி கட்சிப் பெயரயோக் கேட்டா, இரண்டு மூன்று கட்சிகளைத் தவிர நிச்சயமா சொல்லத் தெரியாது. கொள்கைகள், செயல்பாடு இதில் எல்லாக்கட்சிக்கும் அப்படி ஒரு ஒற்றுமை. இந்த நிலமையில எந்தக் கட்சிக்கு ஒட்டு போடுறது அப்படின்னு யோசிச்சப்ப நாம நினைக்கிறத யார் செய்யிறதா சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் நாம ஒட்டு போடணுமுன்னு முடிவு செஞ்சேன்.

அப்படி, அவங்க என்ன சொல்லனுமுன்னு இனி தொடர்ந்து நான் சொல்லலாமுன்னு இருக்கேன். அதுல ஒன்னு இது.

இலவசமா, என்ன கொடுக்கலாம்னு அறிவிக்க, அரசியல் வல்லுனர்கள் 'ரூம்' போட்டு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நகைச்சுவையா சிந்திக்க அவங்க இருக்கிறதால, நாம் கொஞ்சம் மக்களுக்காக பொறுப்போடு சிந்திப்போம்.

இப்ப எங்கப் பார்த்தாலும் CCTV (கண்காணிப்பு கேமெரா) வந்துவிட்டது. விலையும் குறைச்சல். அதனால அரசு அலுவலகங்களில் குறிப்பாக ஆர்.டி.ஒ. ஆபீஸ், அதாங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பதிவாளர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையம், அரசு மருத்துவமனைகள், நியாயவிலைக்கடைகள், பள்ளிகள், மற்றும் இதர அரசு அலுவலகங்களிலும் CCTV -யை பொருத்திவிட்டால் லஞ்சம், கையெழுத்துப் போட்டுவிட்டு ஊர் சுற்றுவது, புரோக்கர்கள் மற்றும் சமுக விரோதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

இது ஒன்னும் பெரிய விஷயமில்லை. எங்கள் வீட்டருகே ஒருவர் அருகருகே இரண்டு கடை வைத்துள்ளார். அந்த முதலாளி, தன்னுடைய கடையிலிருந்து ஊழியரைக் கொண்டு செயல்படும் மற்றொரு கடையை CCTV மூலம் கண்காணிக்கிறார். மூவாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவரையே இப்படிக் கண்காணிக்கும் போது, லட்சக்கணக்கில் மக்கள் பணம் சம்பளமாக செலவிடப்படும் நிறுவனங்களை, ஏன் CCTV மூலம் கண்காணிக்க கூடாது? இது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக சிலர் விமர்சனம் வைக்கக்கூடும். மனசாட்சிக்குப் பயந்த மனிதன், இப்பொழுது இயந்திரத்துக்கு மட்டுமே பயப்படுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது. மேற்கண்ட வாக்குறுதியை யார் கொடுத்தாலும் அவங்களுக்கு என் ஒட்டு.

.

Sunday, February 20, 2011

ஓர் அபாய எச்சரிக்கை!

மதுரை அருகே அவனியாபுரம் மண்டேலா நகர் பகுதியில் உள்ள கண்மாயில் தண்ணீர் குடித்த 100 மாடுகள் பலியாகின. இதைப்பற்றி அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தது. " கண்மாயில் விஷம் கலந்து இருக்கலாம் அல்லது இப்பகுதியில் உள்ள ஒரு கெமிக்கல் கம்பெனியில் உள்ள கழிவு நீர் கலந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது" இது பத்திரிகை செய்தி.

ஆங்காங்கே குளத்தில் மீன்கள் இறந்து ஒதுங்குவது வாடிக்கையாகிவிட்டது. இன்றும் ஒரு மாடு இறந்திருந்தால், இச்செய்தி இவ்வளவு தூரம் அனைவருக்கும் தெரிந்திருக்காது. வாயில்லா ஜீவன்கள் தங்களுடைய உயிரைக் கொடுத்து மக்களை எச்சரித்துள்ளது. எது எப்படியோ நூறு மாடுகள் இறப்பதற்கும் இன்னும் பல மாடுகள் உயிருக்கு போராடுவதற்கும் மனிதன் செய்யும் தவறே காரணம்.

நீர்நிலைகள் மனிதனின் கண்ணுக்கு எப்படித் தெரிகிறதோ தெரியவில்லை. அவைகளைப் பாழ்படுத்துவதில் போட்டிபோட்டுக் கொண்டு செயலில் இறங்குகிறான். நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் குளத்திற்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கும் அதி மேதாவிகளே அதிகம்.

நீர்நிலைகளில் குப்பைக் கொட்டுவோரோ, கெமிக்கல் கழிவுகளை கலக்க விடுவோரோ, குடிநீர் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் நினைப்பெல்லாம் 'மினரல் வாட்டர்' குடித்துக் கொள்ளலாமென்று. அவையும் நிலத்தைடியிலிருந்து கிடைப்பதுதான் என்று சிந்திப்பதில்லை. இன்னும் சில பணக்காரர்கள், தாங்கள் இளநீர் குடித்துக் கொள்ளாம் என்று கூட நினைக்கலாம். ஆனால், வேர் மூலம் இளநீரில் விஷம் கலந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

மாடுகள் வைத்திருப்பவர்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் கிடையாது. குறைந்தப்பட்சம் மாடுகளுக்கு காப்பீடு கூட செய்திருக்க மாட்டார்கள். ஒரு மாட்டின் விலை பத்தாயிரம் என்றாலும் ரூ.பத்து லட்சம் இழந்து தவிக்கிறது அந்தக் குடும்பங்கள்.

அரசியல்வாதிகளுக்கோ வரும் தேர்தலில் 'எவன் தங்கள் கட்சியில் சேர்வான், எந்தக் கம்பெனிக்காரன் பணம் கொடுப்பான், எந்தக் கட்சி நம்மை சேர்த்துக் கொள்ளும்' என்ற சிந்தனை மட்டும்தான். யார் செத்தாலென்ன, எவன் குடும்பம் பாழாய்ப் போனாலென்ன?

அபாயச் சங்கு, இன்று மாடுகளின் இறப்பு வடிவத்தில் ஊதாப்பட்டுள்ளது. எத்தனை பேர் காதில் விழப்போகிறதோ?

.


Saturday, January 29, 2011

கிம் கிளைஸ்டர் ஒரு பாடம்!


கிம் கிளைஸ்டர் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் டென்னிசில் இருந்து காயம் காரணமாக ஓய்வு பெற்றுச் சென்றார். பிறகு,ஜூலை 2007 -ல் அமெரிக்க பேஸ்கட்பால் வீரரை திருமணம் செய்துகொண்டார். பிப்ரவரி 2008-ல் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். (ஏற்கனவே, டிசம்பர் 2003-ல் ஆஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட்-ஐ திருமணம் செய்து அக்டோபர் 2004 -ல் அந்த திருமணம் முறிவடைந்ததை, இங்கு சொல்லத் தேவையில்லை) இந்நிலையில் மீண்டும் 2009 -ல் டென்னிஸ் விளையாட்டில் களம் புகுந்து இன்று பட்டங்களை வென்று கொண்டிருக்கிறார்.

இவர் வாழ்வின் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது. திருமணம் என்று ஒன்று நடந்து விட்டால் அதன் பிறகு பெண்களுக்கு எல்லாமே முடிந்து விட்டது என்று இன்று படித்த பெண்கள் கூட நினைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு தனது உடல் நலத்தின் மீது அக்கறை கொள்வதில்லை. திருமணம் வரை சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கும் பெண்கள், அதன் பிறகு வீட்டில் முடங்க தயாராகி விடுகிறார்கள்.நல்ல திறமையோடு இருக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு முடங்க வேண்டிய அவசியமென்ன? அதுவும், ஒரு குழந்தைப் பிறந்துவிட்டால், தான் பார்க்கிற வேலை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிட்டு குழந்தை குடும்பம் என்று மாறிவிடுகிறார்கள். அவர்கள் மனதிற்குள் சோர்வு ஒளிந்திருக்குமோ? சில ஆண்கள் கட்டாயப்படுத்தி பெண்களை வீட்டில் முடக்குவது உண்டு. "பொண்ணு பி. ஈ. படிச்சிருக்கணும் ஆனா... வேலைக்கு போகக்கூடாது" என்று சொல்ற மணமகனும் உண்டு. அதற்கு, ஏன் ஒரு கலை அல்லது அறிவியலில் பட்டம் பெற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க கூடாது?

திருமணமோ அல்லது குழந்தை பெற்றெடுத்து விட்டாலோ தங்களுக்கு எல்லாமே முடிந்துவிட்டது. இனி டி.வி.சீரியல், மார்கெட் செல்வது, மாலையில் அரட்டை என்பதுதான் வாழ்க்கை என்று நினைத்துவிடுகிறார்கள். ஒரு சில பெண்கள் விதிவிலக்காக இருப்பதையும் நான் அறிவேன். கிம் கிளைஸ்டர் வாழ்க்கையை அறிந்த பிறகாவது திருமணம், குழந்தை பிறப்பு போன்றவை பெண்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்கிற உண்மையை பெண்களும் ஆண்களும் உணர வேண்டும். அப்படி, நமது பெண்கள் எழுச்சிப் பெற்றால், இந்தியாவின் மனித வளத்திற்கு எந்த நாடும் இணையாக முடியாது.

.

Friday, January 14, 2011

இன்று கார், நாளை கிட்னி?!


அண்மையில், பத்திரிகையில் படித்த செய்தி.
'கேரளா மற்றும் தமிழக பகுதியில், கார்களை திருடி விற்கும் நான்கு
பேர் கொண்ட கும்பல் காரைக்காலில் சிக்கியது. அவர்களிடம் இருந்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 19 சொகுசு கார்கள், நான்கு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்' இது ஒரு சாதாரண விஷயம்தான் என்று எல்லோருக்கும் தோன்றும்.
தொடர்ந்து படிக்கையில்தான் பயப்பட வேண்டிய செய்தி வருகிறது.


'கடலூர் புதுச்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் 10 கார்களை
வாங்கி, விற்றுள்ளார். இவர், தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்
ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர். இன்னும் ஒருவர் ஒரு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்' என்பதுதான் அது. அரசியல் கட்சி பிரமுகரை விட்டுவிடுவோம். இதில், ஆச்சர்யம் என்ன இருக்கிறது?!


நமது மனதை நெருடுவது இந்த மருத்துவக் கல்லூரி மாணவனின் செயல்தான்.
இன்றைக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்
இரவு பகல் பாராமல், சுக துக்கங்களைத் தொலைத்து எண்ணற்ற மாணவர்கள் தயார் செய்துகொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் மருத்துவ தொழில்
என்பது புனிதமானது. 'மருத்துவர்கள் கண்கண்ட கடவுள்' என்பதுதான். சமூகத்தில் மருத்துவர்களுக்கு என்று ஒரு மரியாதை உண்டு. ஒரு சில மருத்துவர்கள் விதிவிலக்கு.

தனியார் கல்லூரிகள் பணத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதின் விளைவுதான் இது. இந்த மாணவனின் பெற்றோர், தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு மாணவனின் விருப்பம் இல்லாமல் மருத்துவம் படிக்க சேர்த்து விட்டிருப்பார்கள். இவனுக்கு படிப்பில் அக்கறை இருந்தால் படிப்பைத் தவிர
வேறு எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. இந்த மாணவனுக்கு கெட்ட பழக்கங்கள்
வந்திருக்க வேண்டும். செலவுக்கு பணம் தேவைப்பட்டிருக்கும. நியாயாமன
செலவுகளுக்கு பெற்றோர் பணம் தருவார்கள். தேவையற்ற செலவுகளுக்கு
திருடுவதைத் தவிர வேறு என்ன செய்வது?

கடந்த வருடத்தில் சென்னையின் புகழ்ப் பெற்ற தனியார் மருத்துவப் பல்கலைக்
கழகத்தில் படித்த மாணவன், தனக்கு உதவியாக இருந்த பெண்மணி, தனது கெட்ட பழக்க வழக்கங்களை கண்டித்தார் என்பதற்காக கொலை செய்து எரித்ததை மறந்திருக்க முடியாது. நாவரசு படு கொலை செய்யப்பட்டதும், ஒரு தனியார் கல்லூரியில்தான். தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவன், மதிப்பெண்ணை திருத்தி மாட்டிக் கொண்ட கதை நாடறியும்.

படிப்பின் மீது அக்கறை இல்லாதவர்களை பணத்தைக் கொட்டி படிக்க வைத்தால் இதுதான் நடக்கும். தட்டுத்தவறி இவர்கள் படித்து முடித்து மருத்துவர்களாக பதிவு செய்து விட்டால், அப்பாவி மக்களின் கதி என்னவாகும்?


இன்று கார் திருடுபவன் நாளை கிட்னி திருடமாட்டான் என்பதற்கு என்ன
உத்திரவாதம்?
இன்றைய தினம், திருடர்களிடமும், ஊழல்வாதிகளிடமும்,அயோக்கியர்களிடமும்தான் அளவுக்குஅதிகமான பணம் உள்ளது. அதிக அளவில், இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, இப்படி அரைகுறையாக படித்துவிட்டு..... நினைக்கவே பயமாக உள்ளது. இன்னும், எதை எதை படிக்கப் போகிறோமோ, பார்க்கப் போகிறோமோ?

இதற்கெல்லாம் அரசுதான் ஒரு முடிவுக் கட்ட வேண்டும். இந்தக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் வெளிப்படையான அணுகுமுறை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், அரசே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

இந்தப் பிரச்சினையை சாதாரணப் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது. இது ஒரு சமூகப் பிரச்சினை. மாட்டிக்கொண்டவர்கள்தான் மேலே உள்ளவர்கள். இன்னும் மாட்டாமல் இருப்பவர்கள் எத்தனைப் பேரோ?

Wednesday, January 12, 2011

சிரமப்படாமல் உதவலாம்!

நாம் பிறருக்கு உதவ விரும்புகிறோம்.ஆனால், உதவும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை.எங்கு உதவி கிடைக்கும் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதும் ஒரு உதவிதான். அப்படி தோன்றியதால் இந்தப் பதிவு.


எனக்கு வந்த மெயிலை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை அனுப்பிய நல்ல உள்ளத்திற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்களும் மற்றவர்களுக்கு தெரிவிக்கலாமே!

Dear Friends,

Kindly, share this valuable information wherever possible.

1. If you see children Begging anywhere in TAMIL NADU, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.

2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address.
www.friendstosupport.org

3. Engineering Students can register in
www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.

5. If anyone met with fire accident or people born with problems in their ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM Hospital . From 23rd March to 4th April by German Doctors.
Everything is free. Contact : 045420-240668,245732
"Helping Hands are Better than Praying Lips"

6. If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.
-Don't use or burn Plastics

8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"
9. Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites. http://ruraleye.org/


10.
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. It’s available free of cost at "Adyar

Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone

Thursday, January 6, 2011

இலவசமாய் எம்.பி.பி.எஸ். படிக்க, இறுதி வாய்ப்பு!

அகில இந்திய அளவில் மருத்துவக்கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கு வருடம்தோறும் ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது, இப்பொழுது பிரச்சினையாக உள்ள பொது நுழைவுத்தேர்வல்ல. அது வேறு, இது வேறு.


இந்தத் தேர்வை தடுக்கவோ, இதில் தமிழகம் இழக்கும் இடங்களை மீட்கவோ ஒருவருமில்லை. இந்தத் தேர்வின் மூலம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், பதினைந்து சதவிகித இடங்கள் நிரப்பபடுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் சுமாராக 280 இடங்கள், இந்தத் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்படுகிறது. இதற்கான விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்துவிட்டது. இருந்த போதிலும் தாமதக் கட்டணத்துடன் வரும் 10/01/2011 முதல் 17/01/2011 வரை கூடுதாலாக ரூ. 500/- செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைப்பு இங்கே.www.aipmt.nic.in

"இதற்கெல்லாம் ஒரு பதிவா?" என்று சிலருக்கு கேள்வி எழுவது இயற்கையே!
அவசியம்தான் என்பதற்கு என்னைச் சுற்றி நடந்த சில நிகழ்வுகள் ஆதாரமாய் உள்ளன. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

2005-2006-ல் 'அமைதி விரும்பி' +2 படித்தபோது, எனக்கு இதைப் பற்றிய விபரம் தெரியவில்லை. அப்பொழுது, எனது நண்பர் சொன்னார் "அரசுக்கலூரியில் 15 சதவிகித இடங்கள் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு வழியாக நிரப்படுகிறது. குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் கூட இந்தத் தேர்வை எழுதி இடம் பிடித்துவிடுகிறார்கள். அதைப்பற்றிய விபரமும், எந்தத் தேதியில் விண்ணப்பிக்க வேண்டும் என்பன போன்றவை எதுவும் தெரிய மாட்டேங்குது" என்றார். இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால் அந்த நண்பரின் இரண்டு மகள்கள் அரசுக்கலூரியில் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தார்கள். அவரின் மூன்றாவது மகளை எம்.பி.பி.எஸ். சேர்க்கவேண்டும் என்று நினைப்பில்தான் என்னிடம் மேற்கண்டவாறு கூறினார். அவரும் விண்ணப்பிக்கவில்லை.

மற்றொரு செய்தி, மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் மூன்றாம் இடம் பிடித்த, எனது உறவினர் பெண் இந்தவருடம் +2 எழுதுகிறார். அந்தப் பெண்ணுக்கோ, பெண்ணின் பெற்றோருக்கோ, இப்படி ஒரு நுழைவுத்தேர்வு நடப்பது தெரியவில்லை. ஆசிரியர்களும் வழிக்காட்டவில்லை. இந்த நுழைவுத்தேர்வு குறித்த விளம்பரங்கள் தமிழக பத்திரிக்கைகளில் வருவதில்லை.

இன்னும் கொடுமை என்னவென்றால் லட்சக்கணக்கில் பணம் பிடுங்கும் தனியார்ப் பள்ளிகள், குறிப்பாக நாமக்கல், ஈரோடு மாவட்ட 'பெயர் பெற்றப்பள்ளிகள்' இம்மாதிரி நுழைவுத்தேர்வு குறித்துக் கண்டுக்கொள்வதில்லை. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமில்லை. மேலும், இந்தத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதும் கிடையாது.

தமிழகத்தில் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்தத் தேர்வை எழுதி பதினைந்து சதவிகித தமிழக ஒதுக்கீட்டில் சேர்ந்தால், எழுத முடியாதவர்களுக்கு (தேர்வு ஆங்கிலத்தில் இருப்பதால், தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் எழுதுவது கடினம்) தமிழகத்தில் எண்பத்தைந்து சதவிகித இடத்தில் வழி விடலாமே!!

ஐ. ஏ. எஸ். தேர்வில் சாதனைப்புரியும் நாம், சரியான வழிக்காட்டுதல் இருந்தால், இந்தத் தேர்விலும் சாதனைப்புரிய முடியும். இன்றே துவங்குவோம்! உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வுக் குறித்து தெரிவிப்போம்!!

.