தேர்தல் குறித்தப் பதிவுகள் தவிர்க்க முடியாதவையே. நானும் எழுத வேண்டாம் என்றே நினைத்தேன். எனினும், எனக்குத் தோன்றுவதை இப்பொழுது பதிவு செய்துவிட்டால், தேர்தல் முடிவு வந்தப் பிறகு பெருமைப்பட்டுக் கொள்ளலாம்/ அசடுவழியலாம்.,
இன்றைய சூழ்நிலையில், நடுநிலையோடு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று சிந்தித்தால், வேட்பாளரின் செல்வாக்கு மட்டுமே வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்யும் என்பது எனது எண்ணம். இதற்கு விளக்கம் கொடுத்தால் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தும் என்பதால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. எந்தக் கட்சியின் வேட்பாளரை, 'நல்லவர், நேர்மையானவர், சுயநலமில்லாமல் மக்களுக்கு பாடுபடுபவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், மனிதநேயமிக்கவர், அணுகுவதற்கு எளிமையானவர்' என்று மக்கள் நம்புகிறார்களோ அவர்களே இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவார்கள். கட்சி, சின்னம், ஜாதி, போன்றவை இந்தத் தேர்தலில் எடுபடாது. அதற்காக, சுயேட்சைகள் அதிகளவில் வெற்றிபெறுவார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.
இரண்டு பெரிய அணிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். உங்கள் தொகுதியில், இரண்டு அணி வேட்பாளர்களில் யார் நல்லவர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்தான் வெற்றிபெறுவார். எனவே, அதிக அளவில் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலுக்குப் பிறகு விரிவாக பார்ப்போம்.
.