Showing posts with label வாழ்த்துக்கள்.. Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள்.. Show all posts

Tuesday, March 1, 2011

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!




தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கவனத்திற்கு...!

தேர்வுகள் துவங்கிவிட்டன, இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று இங்கு பார்ப்போம்.

மாணவர்களுக்கு....

தேர்வுக்கு செல்லும் முன் எழுத்துப் பொருட்கள், நுழைவுச் சீட்டு போன்றவற்றை சரிபார்த்து எடுத்துச் செல்லவும். பேருந்தில் செல்வோர் பஸ் பாஸ் மற்றும் சரியான சில்லறை கொண்டு செல்லவும். தனியாக வாகனம் ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவும். குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வுக் கூடத்தை அடைந்துவிடவும். கடைசி நேரத்தில் மற்ற மாணவர்களின் "அதைப் படித்தாயா, இதைப் படித்தாயா?" போன்ற கேள்விகள் உங்களின் மனநிலையைப் பதிக்கச் செய்யும். அப்படியான சூழ்நிலையைத் தவிர்க்கவும்.

தேர்வில் ஓரிரு கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லை என்றால் உடனே 'சென்டம்' போச்சே என்று கலங்க வேண்டாம். அந்தக் கேள்விகளைத் தவிர்த்து மற்றக் கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு கடைசியாக மீண்டும் அந்தக் கேள்வியைப் படியுங்கள் நிச்சயம் விடையளிப்பீர்கள். இங்கு முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் சில கேள்விகள் அச்சுப் பிழை மற்றும் தவறுதலாக இடம் பெற்றிருக்கும், அந்த மாதிரியான கேள்விகளை கடைசியாக பதிலெழுத முயற்சி செய்யவும். முதலில் எழுத முற்பட்டு நேரத்தை வீனடிப்பதோடு மனக்கஷ்டப் படவேண்டாம். இம் மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்கி விடுவார்கள். அப்படியே ஓரிரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விட்டுவிட்டாலும், வீட்டிற்கு வந்தபிறகும் அதையே நினைத்து வருந்தாமல், அடுத்து வரும் தேர்வுக்கு இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராகுங்கள்.

பெற்றோர்கள் கவனத்திற்கு...

நல்ல உணவு, வீட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேர்வு முடிந்து வந்த பிள்ளைகளிடம் "எத்தனை மார்க் வரும், எந்தக் கேள்வியை விட்டாய்?" என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். "நன்றாக எழுதினியா?" என்பன போன்ற கேள்விகள் மட்டும் போதுமானது. அப்படியே சரியாக எழுதவில்லை என்றாலும் உங்கள் வருத்தத்தை பிள்ளைகளிடம் காட்டாமல் அடுத்து வரும் தேர்வை சிறப்பாக எழுதுவாய் என்று நம்பிக்கையளித்து உற்சாகப்படுத்துங்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு...

தேர்வு எழுதும் பிள்ளைகள் உள்ள வீட்டிற்கு, இந்த சமயத்தில் விருந்தாளியாகாச் செல்வதை தவிர்க்கவும்.தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவிக்கலாம். எஸ்.எம்.எஸ். ல் வாழ்த்து அனுப்பினால் போதுமானது. ஏனெனில், உறவு மற்றும் நட்பு என்று பலரும் தேர்வு நாளன்று தொலைபேசியில் பேசினாலும் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற வாழ்த்துவோம்.

.