Saturday, July 4, 2026

டாக்டர் K. R. அனந்தகிருஷ்ணன் இல்ல திருமண விழா...

1992-இல் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு புதிதாக MD படித்த மருத்துவர் ஒருவர் வந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

நானும் அண்ணன் CTC திரு கா. ஆறுமுகம் அவர்களின் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சைபெற அந்த மருத்துவரைச் சந்திக்கச் சென்றோம். அப்போது அண்ணன், "நீங்க எம்டி படித்திருக்கிறதா தம்பி சொன்னான். அதனால்தான் உங்களைப் பார்க்க வந்தேன்," என்றார்.

அதற்கு மருத்துவர் சிரித்தபடி, "நீங்க கொஞ்சம் தவறாகப் புரிந்துகொண்டு வந்திருக்கீங்க. நான் படித்தது குழந்தைகள் நல மருத்துவத்திற்கான MD!" என்றார்.

அதுவரை DCH மட்டுமே குழந்தைகள் நல மருத்துவப் படிப்பு என்று நினைத்திருந்த எனக்கும் அது புதிய தகவலாக இருந்தது.

அன்று எனக்கு அறிமுகமானவர்தான் Dr. KRA என்கிற டாக்டர் K.R. அனந்தகிருஷ்ணன் MD. அவர்கள்.

பின்னர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நான்  பணியாற்றியதால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.

அந்தக் காலகட்டத்தில் சினிமா, தமிழ் இலக்கியம், தத்துவம், உலக அரசியல் என்று எண்ணற்ற விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார். நடமாடும் Google -லாக அன்று இருந்திருக்கிறார் என்பதை இன்று உணர்கிறேன். 

மாயூரத்தில் டாக்டருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர் டைரக்டர் திரு டி. ராஜேந்தார் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருமுறை எனக்கு காய்ச்சலும் ஜலதோஷமும் ஏற்பட்டது. அவரிடம், "சார், இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சலும் ஜலதோஷமும் இருந்தது. பாராசிட்டமாலும் Wysolone-உம் சாப்பிட்டேன். சரியாகிவிட்டது. ஆனால் இப்போது மீண்டும் வந்துவிட்டது," என்றேன்.

அதற்கு அவர், "Wysolone ஒரு Steroid. அது நோய் குணமானது போலத் தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில் நோயை மறைத்து வைத்து, பின்னர் தீவிரமாக்கவும் செய்யலாம்," என்று விளக்கினார்.

அன்றுதான் ஸ்டீராய்டு மருந்துகள் குறித்து எனக்கு அனுபவபூர்வமான புரிதல் ஏற்பட்டது.

மற்றொரு முறை, உறவினர் ஒருவருக்காக இரத்தம் கொடுத்தபோது எனது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. இதைப் பற்றி கேட்டபோது, "நீங்க பயந்திருக்கீங்க," என்றார்.

"இல்லை சார், நானாகவே விரும்பித்தான் இரத்தம் கொடுத்தேன். பயமெல்லாம் இல்லை," என்றேன்.

உடனே அவர், "இரத்தம் கொடுத்த உடனே சிறுநீர் கழிக்கணும்னு தோணுச்சா?" என்று கேட்டார்.

"ஆமாம் சார், பாத்ரூம் தேடி ஓடினேன்," என்றேன்.

அதற்கு அவர், "அதுதான் பயத்தின் வெளிப்பாடு. பயம் என்பது சில நேரங்களில் நமக்கே தெரியாமல் உடல் வழியாக வெளிப்படும்," என்றார்.

அன்று அவர் சொன்ன அந்த விளக்கத்தை, பயம் பற்றிப் பேசும்போதெல்லாம் இன்றுவரை பலரிடம் எடுத்துக்காட்டாகச் சொல்லி வருகிறேன்.

டாக்டரின் இன்னொரு சிறந்த குணம், தன்னிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும், அதை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வது.

 அவர் அன்புடன் கொடுத்த பல பொருட்கள் இன்றும் என்னிடம் உள்ளன. அமைதி விரும்பி கல்லூரியில் சேர்ந்தபோது அவர் கொடுத்த Iron Box யும் அவற்றில் ஒன்று.

வேதாரண்யம் பகுதியில் 25 முதல் 45 வயதுக்குள் உள்ள பலர் அவரிடம் சிகிச்சை பெற்றிருப்பார்கள். இரவு, பகல் பாராமல் மருத்துவ சேவை செய்தவர். பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் தனியார் மருத்துவப் பணியை முழுமையாக நிறுத்திவிட்டார். 

நண்பர்களாக இருந்தால் கூட, "அரசு மருத்துவமனைக்கே வாருங்கள்" என்று சொல்லும் அளவிற்கு தனது கொள்கையில் உறுதியாகவும் இருந்தார். பொருளையும் புகழையும் எளிதாக உதறித் தள்ளியவர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாகை அரசு மருத்துவமனையில் கடைசியாக அவருடன் பணியாற்றிவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன். அதன் பின்னர் எங்களது தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது.

கடந்த மாதம், தனது மகன் டாக்டர் K.A. அச்சுதகிருஷ்ணன், BDS., MDS (OMFS) மற்றும் டாக்டர் S. ஐஸ்வர்யா, MBBS., MBA., MD ஆகியோரின் திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தார். அதனுடன் ஒரு செய்தியும் சேர்ந்து வந்தது...

"நான் பிஸியாக இல்லை. ஆனால் சில சமயங்களில் நினைவாற்றல் குறைவு, சூழ்நிலை போன்றவைகளால் அழைக்கவோ உடனடியாக பதிலளிக்கவோ, அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவோ முடியாமல் போய்விடுகிறது. அதற்காக என்னைத் தவறாக எண்ண வேண்டாம்."

70 வயது நிரம்பிய மருத்துவரின் உயர்ந்த பண்பை வெளிப்படுத்த இதைவிட வேறு என்ன வேண்டும்?

02.07.2026 அன்று சென்னையில் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. டாக்டரும், அவரது மனைவி டாக்டர் P.N. இந்திரா அவர்களும் மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

திருமண விழாவில், எங்களது குடும்ப நண்பரும், வேதாரண்யம், சீதா இரத்தப் பரிசோதனை நிலையத்தின் உரிமையாளருமான திரு ஆர். நடராஜன் அவர்களை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து மனம்விட்டு உரையாடியதும் கூடுதல் மகிழ்ச்சி😊
மணமக்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு 💐💐💐 இயற்கையிடமும், உங்களின் வாழ்த்தும் கிடைக்க வேண்டுமென்றும் வேண்டுகிறேன் 🙏

திரு SKV இல்ல திருமண விழாவில் ...

எனது பிறந்த ஊரான கருப்பம்புலம் நண்பர், திரு S. K. வெங்கடாசலம் & திருமதி திலகா தம்பதியினரின் மகன் S. K. V. அரவிந்தன், B.E  மற்றும் சென்னை, வேளச்சேரி, திரு. S. ஆனந்தசேகர் & திருமதி. A. சுமதி தம்பதியரின் மகள்
A. ஐஸ்வர்யா, B.Sc., M.A., D.Fit.& style இவர்களது திருமணம்  தோப்புத்துறை அம்மன் திருமண மஹாலில் கடந்த 7.6.26 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றதை நண்பர்கள் மூலம் அறிந்தேன். 

நண்பர் திரு SKV அவர்கள்
என்னை விட இரண்டு வயது இளையவர் என்பதால், கருப்பம்புலம் பள்ளியில் இரண்டாண்டுகள் எனக்கு பின்னால் படித்தார்.

ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். 
அந்த நாள்களில் பள்ளிக்கு நாகரீகமாகவும், நேர்த்தியாகவும் உடை உடுத்தி வருகின்ற ஒன்றிரண்டு மாணவர்களில் அவரும் ஒருவர்.

அந்த வயதிலேயே மிடுக்கான தோற்றமும், தலைமைப் பண்பும் அவரிடம் இயல்பாக இருந்ததை கண்டிருக்கிறேன். 

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என்று   அனைவரிடத்திலும் நெருக்கமான நட்பு கொண்டிருப்பவர். 

நாங்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இருவருக்கும் இடையே மெல்லிய நட்பு எப்போதும் இழையோடிக் கொண்டிருக்கும்.

 எனது மகன் அமைதி விரும்பி சட்டம் படிக்க கல்லூரியில் சேர்ந்தபோது, நண்பர் என்னிடம் ஆர்வமுடன் விசாரித்ததோடு, சட்டப்படிப்பு குறித்து நேர்மறையான தகவல்களையும் பகிர்ந்துக் கொண்டார். 

மேலும், நேரில் பார்க்கும்போது என்னுடைய பதிவுகளை பாராட்டுவதோடு, தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்துபவர். 

நண்பர் வீட்டு திருமண வரவேற்பு சென்னையில் எங்கள் வீட்டருகே 13.06.26 அன்று மாலையில் நடைபெற உள்ளதையும், அழைப்பிதழ் வந்திருப்பதையும்  ஊரில் உள்ள, என்னைவிட மூத்த நண்பரிடம் தெரிவித்தேன். 

அப்போது அந்த நண்பர், தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நண்பர் SKV உதவியதைத் தெரிவித்ததோடு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர் SKV அவர்கள் அக்காவின் திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றதையும் பகிர்ந்துக் கொண்டார். இதே தகவலை சென்னையில் வசிக்கும் உறவினர் ஒருவரும் ஏற்கனவே என்னுடன் பகிர்ந்திருந்தார்.

வரவேற்பு அழைப்பிதழைக் கொடுத்த நண்பரும், அவரது சம்பந்தியும் அன்புடன் குடும்பத்தோடு வாங்க என்றழைத்தார்கள்.  வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மகன் குடும்பத்தோடு, மொத்தமாக சென்று புதுமண தம்பதிகளை வாழ்த்தினோம். 
மிகப் பிரமாண்டமாக நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வில் கருப்பம்புலம் நண்பர்களை சந்தித்தது, அவர்களோடு சேர்ந்து உணவருந்தியது என்று மாலைப் பொழுது மகிழ்ச்சியாக கழிந்தது. 
புதுமணத் தம்பதிகள் அரவிந்தன் – ஐஸ்வர்யா ஆகியோர் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், எல்லா வளங்களும் பெற்று, என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பததோடு, இயற்கையிடமும் வேண்டுகிறேன். 

வழக்கம் போல் தங்களின் வாழ்த்துக்களும் மணமக்களுக்கு கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.