Thursday, July 23, 2026

ஆசிரியர் மறைவு ...!

நான் கருப்பம்புலம் பள்ளியில் படித்தபோது எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களில் பெரும்பகுதியினர் இயற்கை எய்திய நிலையில், மிச்சமிருந்த ஓரிருவரில் ஆயக்காரன்புலம் -3, கீழ்பாதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் RG @ திரு.R.கோவிந்தராஜன் அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. 

நான் படிக்கின்ற காலத்தில் மாணவர்களால் '6B சார்' என்று அழைக்கப்பட்டவர். எப்போதும் நீதிக் கதைகள் சொல்லி பாடத்தோடு, வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுக் கொடுத்தவர். 

அவரது பேச்சில் நகைச்சுவை இழையோடும். எவ்விதத்திலும் அடுத்தவர்களின் மனைதப் பாதிக்கும் வகையில் இருக்காது. 

1990-ல் நான் ஆயக்காரன்புலம் PHC யில் பணியில் சேர்ந்த சில மாதங்களில், ஒருநாள் வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது, கைக்காட்டியில் ஆசிரியரைப் பார்தேன். நான் பணியில் சேர்ந்துள்ள விபரம் தெரிவித்தேன். 

"தெரியும்ப்பா, ஆஸ்பத்திரி வந்த ஜனங்க உன்னப் பத்தி பெருமையாப் பேசிகிட்டாங்க. நீ எல்லார்ட்டையும் பொறுமையா, அன்பா பேசுறதா சொன்னாங்க. என்னடோ 'ஸ்டுடண்ட்'ன்னு சொன்னேன்" என்றவர், தொடர்ந்து "நீ சர்விஸ் முழுவதும் இந்த மாதிரி நல்ல பேரோட இருக்கணும்" என்று வாழ்த்தினார். 

1999 - இல் கருப்பம்புலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போது கடைசியாகப் பார்த்தது. 

அதன் பிறகு, ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவருடைய வாழ்த்துகள் என்றென்றும் என்னோடு இருக்குமென்று நம்புகிறேன். 

எனது மனைவி திருமதி திலகவதி அவர்களும் ஆசிரியரிடம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அன்னாரை இழந்துவாடும் குடுமபத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, July 15, 2026

இனி லஞ்சம் கொடுக்க வேண்டாம்...

9498180936 இன்று அதிகமாகப் பகிரப்படும் 'வாட்ஸ் அப்' நம்பர் இது. தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் மேற்கண்ட நம்பருக்கு புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதாக தகவல் உலா வருகிறது.  

இம் மாதிரியான நடைமுறை இதற்கு முன்பும் இருந்து வருகிறது.  தேவை அதில் மாற்றம். 

லஞ்சம் கேட்பது குறித்து உரிய ஆதாரத்தோடு புகார் அளிப்பவருக்கு உரிய சட்டப் பாதுகாப்பும், புகாருக்குரிய வேலை முடிவதற்கு உத்தரவாதமும், புகாருக்கு ஆளாகும் அரசு ஊழியர் வகிக்கும் பதவி நிலைக்கு ஏற்ப, புகார்தாரருக்கு சன்மானமும் வழங்க அரசு முன்வர வேண்டும்.

ஊழியர்கள் நேரத்திற்கு பணிக்கு வராததும், பணிக்கு வந்தும் வேலை செய்யாமல் ஏமாற்றுவதும் லஞ்சம் வாங்குவதற்கு சமம் என்பதாக் கருதி அவர்களுக்குரிய தண்டனையை வழங்க வழிவகை செய்ய வேண்டும். 

அதிகளவில் விடுப்பெடுக்காமல், தனது பணியை சிறப்பாக செய்துவரும் ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் தர அரசு முன் வரவேண்டும் என்பதே நமது வேண்டுகோள் 🙏

Sunday, July 12, 2026

ஒரு கிராமத்தின் மகப்பேறு வரலாற்றின் தொடர்ச்சி...



அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, நான் பிறந்த போது எங்கள் கிராமத்தில் மகப்பேறு என்பது சர்வசாதாரணமாக  வீட்டில் நடைபெறுவது வழக்கம். அதற்கு துணையாக எங்கள் வீட்டருகே வசித்த லோகு என்று அழைக்கப்பட்ட திருமதி லோகாம்பாள் என்பவர் இருப்பார். 

இவர் யாரிடமிருந்து பயிற்சி பெற்றார் அல்லது இவருக்கு முன்னால் யார் இதனை செய்தார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அப்போது எனக்கு இல்லை. பிறகு, புதிதாக துவங்கப்பட்ட அங்கன்வாடியில் குழந்தைகள் பராமரிப்பாளராகவும் பணியாற்றினார்.

 எங்கள் பெற்றோருக்கு பிறந்த ஐந்து பேரில் கடைசியாக பிறந்த தம்பி, பிறந்த சில நாட்களில் இறந்துவிட்டான்.  நஞ்சுக்கொடியை அறுக்கப் பயன்படுத்திய கத்தியிலிருந்த 'துரு'வால் ஏற்பட்ட தொற்றுதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியதாக அப்போது எங்கள் வீட்டில் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள்.   

பிறகு வந்த பத்து ஆண்டுகளில் குடும்பக்கட்டுப்பாடு தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டதால் பிரசவங்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும் வழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது.

அங்குள்ள அரசு மருத்துவமனைகளை விரும்பாமல் திருத்துறைப்பூண்டிக்கு  செல்வோர் டாக்டர் இந்திரா அவர்களையும் டாக்டர் தமிழரசி அவர்களையும் குறிப்பிட்டு அவர்களிடம் செல்ல ஆரம்பித்தார்கள். பின்னாட்களில் டாக்டர் மதுரம் அவர்களும்  டாக்டர் புஷ்பா அவர்களும் இணைந்ததோடு, அனைவரும் மக்களிடையே புகழ் பெற்றனர்.

திருவாரூரில் டாக்டர் மஹாலட்சுமி அவர்களின் சேவையையும் தேடிச்சென்று பெற ஆரம்பித்தனர். 

மேலும், கருப்பம்புலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் V. சந்திரசேகரன் அவர்கள் பிரசவம் பார்ப்பதில் நிபுணத்துவம் பெற்றவராக அப்பகுதி மக்களால் கொண்டாடப்பட்டார் என்பதும் வரலாறு.

பிறகு, வேதாரண்யத்தில் டாக்டர் சுமதி ராமசந்திரன் அவர்கள் புகழ் பெற்றார்.  
அதன் பிறகு, நான் சென்னை வந்துவிட்டதால் அப்பகுதியில் சேவை புரியும் மகப்பேறு மருத்துவர்கள் பற்றிய விவரம் எனக்கு தெரியவில்லை.  

விழிப்புணர்வும், வாழ்க்கைத் தரமும் உயர ஆரம்பித்த பிறகு,  நாகப்பட்டினம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மற்றும் சென்னை என்று பல்வேறு இடங்களுக்கு தேடிச் சென்று மகப்பேறு மருத்துவ சேவையைப் பெறும் நடைமுறை இப்போது வேதாரண்யம் பகுதி மக்களிடையே உள்ளது.

இப்படியாக அப்பகுதி மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயமாக, இன்று  'அபிநிலா கிளினிக்' என்கிற பெயரில் மருத்துவர் M. அபூர்வநிலா MBBS., DGO., FRM. அவர்கள் திருத்துறைப்பூண்டி, ரயில்வே ஸ்டேசன் ரோட்டில், டாக்டர் மாசிலாமணி தெருவில்  தனது மருத்துவச் சேவையைத் தொடங்கியுள்ளார்.

டாக்டர் M. அபூர்வநிலா MBBS., DGO., FRM. அவர்கள் தனது குடும்பத்தாரின் வழியைப் பின்பற்றி, எளிய மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு 💐💐💐 நீங்களும் உங்கள் வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, இயற்கையிடமும் வேண்டுகிறேன் 🙏

Saturday, July 4, 2026

டாக்டர் K. R. அனந்தகிருஷ்ணன் இல்ல திருமண விழா...

1992-இல் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு புதிதாக MD படித்த மருத்துவர் ஒருவர் வந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

நானும் அண்ணன் CTC திரு கா. ஆறுமுகம் அவர்களின் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சைபெற அந்த மருத்துவரைச் சந்திக்கச் சென்றோம். அப்போது அண்ணன், "நீங்க எம்டி படித்திருக்கிறதா தம்பி சொன்னான். அதனால்தான் உங்களைப் பார்க்க வந்தேன்," என்றார்.

அதற்கு மருத்துவர் சிரித்தபடி, "நீங்க கொஞ்சம் தவறாகப் புரிந்துகொண்டு வந்திருக்கீங்க. நான் படித்தது குழந்தைகள் நல மருத்துவத்திற்கான MD!" என்றார்.

அதுவரை DCH மட்டுமே குழந்தைகள் நல மருத்துவப் படிப்பு என்று நினைத்திருந்த எனக்கும் அது புதிய தகவலாக இருந்தது.

அன்று எனக்கு அறிமுகமானவர்தான் Dr. KRA என்கிற டாக்டர் K.R. அனந்தகிருஷ்ணன் MD. அவர்கள்.

பின்னர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நான்  பணியாற்றியதால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது.

அந்தக் காலகட்டத்தில் சினிமா, தமிழ் இலக்கியம், தத்துவம், உலக அரசியல் என்று எண்ணற்ற விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார். நடமாடும் Google -லாக அன்று இருந்திருக்கிறார் என்பதை இன்று உணர்கிறேன். 

மாயூரத்தில் டாக்டருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர் டைரக்டர் திரு டி. ராஜேந்தார் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருமுறை எனக்கு காய்ச்சலும் ஜலதோஷமும் ஏற்பட்டது. அவரிடம், "சார், இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சலும் ஜலதோஷமும் இருந்தது. பாராசிட்டமாலும் Wysolone-உம் சாப்பிட்டேன். சரியாகிவிட்டது. ஆனால் இப்போது மீண்டும் வந்துவிட்டது," என்றேன்.

அதற்கு அவர், "Wysolone ஒரு Steroid. அது நோய் குணமானது போலத் தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில் நோயை மறைத்து வைத்து, பின்னர் தீவிரமாக்கவும் செய்யலாம்," என்று விளக்கினார்.

அன்றுதான் ஸ்டீராய்டு மருந்துகள் குறித்து எனக்கு அனுபவபூர்வமான புரிதல் ஏற்பட்டது.

மற்றொரு முறை, உறவினர் ஒருவருக்காக இரத்தம் கொடுத்தபோது எனது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. இதைப் பற்றி கேட்டபோது, "நீங்க பயந்திருக்கீங்க," என்றார்.

"இல்லை சார், நானாகவே விரும்பித்தான் இரத்தம் கொடுத்தேன். பயமெல்லாம் இல்லை," என்றேன்.

உடனே அவர், "இரத்தம் கொடுத்த உடனே சிறுநீர் கழிக்கணும்னு தோணுச்சா?" என்று கேட்டார்.

"ஆமாம் சார், பாத்ரூம் தேடி ஓடினேன்," என்றேன்.

அதற்கு அவர், "அதுதான் பயத்தின் வெளிப்பாடு. பயம் என்பது சில நேரங்களில் நமக்கே தெரியாமல் உடல் வழியாக வெளிப்படும்," என்றார்.

அன்று அவர் சொன்ன அந்த விளக்கத்தை, பயம் பற்றிப் பேசும்போதெல்லாம் இன்றுவரை பலரிடம் எடுத்துக்காட்டாகச் சொல்லி வருகிறேன்.

டாக்டரின் இன்னொரு சிறந்த குணம், தன்னிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும், அதை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வது.

 அவர் அன்புடன் கொடுத்த பல பொருட்கள் இன்றும் என்னிடம் உள்ளன. அமைதி விரும்பி கல்லூரியில் சேர்ந்தபோது அவர் கொடுத்த Iron Box யும் அவற்றில் ஒன்று.

வேதாரண்யம் பகுதியில் 25 முதல் 45 வயதுக்குள் உள்ள பலர் அவரிடம் சிகிச்சை பெற்றிருப்பார்கள். இரவு, பகல் பாராமல் மருத்துவ சேவை செய்தவர். பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் தனியார் மருத்துவப் பணியை முழுமையாக நிறுத்திவிட்டார். 

நண்பர்களாக இருந்தால் கூட, "அரசு மருத்துவமனைக்கே வாருங்கள்" என்று சொல்லும் அளவிற்கு தனது கொள்கையில் உறுதியாகவும் இருந்தார். பொருளையும் புகழையும் எளிதாக உதறித் தள்ளியவர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாகை அரசு மருத்துவமனையில் கடைசியாக அவருடன் பணியாற்றிவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன். அதன் பின்னர் எங்களது தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது.

கடந்த மாதம், தனது மகன் டாக்டர் K.A. அச்சுதகிருஷ்ணன், BDS., MDS (OMFS) மற்றும் டாக்டர் S. ஐஸ்வர்யா, MBBS., MBA., MD ஆகியோரின் திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தார். அதனுடன் ஒரு செய்தியும் சேர்ந்து வந்தது...

"நான் பிஸியாக இல்லை. ஆனால் சில சமயங்களில் நினைவாற்றல் குறைவு, சூழ்நிலை போன்றவைகளால் அழைக்கவோ உடனடியாக பதிலளிக்கவோ, அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவோ முடியாமல் போய்விடுகிறது. அதற்காக என்னைத் தவறாக எண்ண வேண்டாம்."

70 வயது நிரம்பிய மருத்துவரின் உயர்ந்த பண்பை வெளிப்படுத்த இதைவிட வேறு என்ன வேண்டும்?

02.07.2026 அன்று சென்னையில் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. டாக்டரும், அவரது மனைவி டாக்டர் P.N. இந்திரா அவர்களும் மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

திருமண விழாவில், எங்களது குடும்ப நண்பரும், வேதாரண்யம், சீதா இரத்தப் பரிசோதனை நிலையத்தின் உரிமையாளருமான திரு ஆர். நடராஜன் அவர்களை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து மனம்விட்டு உரையாடியதும் கூடுதல் மகிழ்ச்சி😊
மணமக்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு 💐💐💐 இயற்கையிடமும், உங்களின் வாழ்த்தும் கிடைக்க வேண்டுமென்றும் வேண்டுகிறேன் 🙏

திரு SKV இல்ல திருமண விழாவில் ...

எனது பிறந்த ஊரான கருப்பம்புலம் நண்பர், திரு S. K. வெங்கடாசலம் & திருமதி திலகா தம்பதியினரின் மகன் S. K. V. அரவிந்தன், B.E  மற்றும் சென்னை, வேளச்சேரி, திரு. S. ஆனந்தசேகர் & திருமதி. A. சுமதி தம்பதியரின் மகள்
A. ஐஸ்வர்யா, B.Sc., M.A., D.Fit.& style இவர்களது திருமணம்  தோப்புத்துறை அம்மன் திருமண மஹாலில் கடந்த 7.6.26 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றதை நண்பர்கள் மூலம் அறிந்தேன். 

நண்பர் திரு SKV அவர்கள்
என்னை விட இரண்டு வயது இளையவர் என்பதால், கருப்பம்புலம் பள்ளியில் இரண்டாண்டுகள் எனக்கு பின்னால் படித்தார்.

ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். 
அந்த நாள்களில் பள்ளிக்கு நாகரீகமாகவும், நேர்த்தியாகவும் உடை உடுத்தி வருகின்ற ஒன்றிரண்டு மாணவர்களில் அவரும் ஒருவர்.

அந்த வயதிலேயே மிடுக்கான தோற்றமும், தலைமைப் பண்பும் அவரிடம் இயல்பாக இருந்ததை கண்டிருக்கிறேன். 

தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு. அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என்று   அனைவரிடத்திலும் நெருக்கமான நட்பு கொண்டிருப்பவர். 

நாங்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இருவருக்கும் இடையே மெல்லிய நட்பு எப்போதும் இழையோடிக் கொண்டிருக்கும்.

 எனது மகன் அமைதி விரும்பி சட்டம் படிக்க கல்லூரியில் சேர்ந்தபோது, நண்பர் என்னிடம் ஆர்வமுடன் விசாரித்ததோடு, சட்டப்படிப்பு குறித்து நேர்மறையான தகவல்களையும் பகிர்ந்துக் கொண்டார். 

மேலும், நேரில் பார்க்கும்போது என்னுடைய பதிவுகளை பாராட்டுவதோடு, தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்துபவர். 

நண்பர் வீட்டு திருமண வரவேற்பு சென்னையில் எங்கள் வீட்டருகே 13.06.26 அன்று மாலையில் நடைபெற உள்ளதையும், அழைப்பிதழ் வந்திருப்பதையும்  ஊரில் உள்ள, என்னைவிட மூத்த நண்பரிடம் தெரிவித்தேன். 

அப்போது அந்த நண்பர், தனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நண்பர் SKV உதவியதைத் தெரிவித்ததோடு, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நண்பர் SKV அவர்கள் அக்காவின் திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றதையும் பகிர்ந்துக் கொண்டார். இதே தகவலை சென்னையில் வசிக்கும் உறவினர் ஒருவரும் ஏற்கனவே என்னுடன் பகிர்ந்திருந்தார்.

வரவேற்பு அழைப்பிதழைக் கொடுத்த நண்பரும், அவரது சம்பந்தியும் அன்புடன் குடும்பத்தோடு வாங்க என்றழைத்தார்கள்.  வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மகன் குடும்பத்தோடு, மொத்தமாக சென்று புதுமண தம்பதிகளை வாழ்த்தினோம். 
மிகப் பிரமாண்டமாக நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வில் கருப்பம்புலம் நண்பர்களை சந்தித்தது, அவர்களோடு சேர்ந்து உணவருந்தியது என்று மாலைப் பொழுது மகிழ்ச்சியாக கழிந்தது. 
புதுமணத் தம்பதிகள் அரவிந்தன் – ஐஸ்வர்யா ஆகியோர் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், எல்லா வளங்களும் பெற்று, என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவிப்பததோடு, இயற்கையிடமும் வேண்டுகிறேன். 

வழக்கம் போல் தங்களின் வாழ்த்துக்களும் மணமக்களுக்கு கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.