Saturday, April 2, 2022

மருத்துவரும் மக்களும்...!

ராஜஸ்தான் மாநிலத்தி்ல்
அர்ச்சனா சர்மா என்கிற மருத்துவரால் பிரசவம் பார்க்கப்பட்ட  பெண்மணி, பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய தீவிர இரத்தப்போக்கினால் இறந்துவிட்டார்.  இது சில நேரங்களில் தவிர்க்க முடியாத நிகழ்வு என்கிறது மருத்துவ உலகம்.  

இறந்த பெண்மணியின்  உறவினர்கள் கொடுத்த தொந்தரவாலும் காவல்துறையின் நடவடிக்கையாலும் மனமுடைந்து, கடிதம் எழுதிவைத்துவிட்டு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த முடிவு எவ்வளவு துயரமானது என்று இங்கே விவரிக்க தேவையில்லை. 

பல வருடங்களுக்கு முன்பு, நான் அறிந்த மருத்துவர் ஒருவர் அடிக்கடி பூஜை போன்றவற்றை தனது மருத்துவமனையில் செய்வார்.
'இந்த டாக்டர் ஊரில்  நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகிறாரோ?' என்று அப்போது நான் நினைத்ததுண்டு!

'தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குணம் பெற்று செல்ல வேண்டும் என்று பூஜை செய்கிறார்' என்பதை பிறகு தான் புரிந்துக் கொண்டேன்.

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நண்பரிடம் சிகிச்சையின் போது நோயாளிகள் இறப்பு குறித்தான பேச்சு வந்தபோது அவர் சொன்னார், "உயரமான இடத்தில் ஒருவன் தொங்கிக் கொண்டிருக்கிறான். எந்நேரமும் கிழே விழுந்து சாகலாம் என்கிற நிலை. அப்போது, ஒருவர் சென்று காப்பாற்ற முயற்சிக்கிறார். அதில் தோல்வி ஏற்பட்டு தொங்கியவர் கிழே விழுந்து இறந்துவிட்டால், காப்பாற்றப் போனவரால் தான் தொங்கியவர் கீழே விழுந்து இறந்தார் என்றால் எப்படி நியாமில்லையோ, அப்படித்தான் உயிருக்கு போராடும் நோயாளியை காப்பாற்ற முயற்சிக்கும் மருத்துவரை அந்த நோயாளி இறக்க நேரிடும் போது,  அவர் மீது குற்றம் சுமத்துவதும் நியாயமில்லாதது!" என்றார்.

பல வருடங்கள் தனது சுக துக்கங்களை மறந்து கடுமையாக போராடிப் படித்து மருத்துவரான பின்பும்,  இது போன்ற நிகழ்வுகள் காத்திருக்கிறதென்றால் இளம் மருத்துவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

இந்த சமூகம் நோயற்று வாழ வேண்டுமெனில், மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் மீது நாம் எப்போதும்  நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்🙏

1 comment: