Showing posts with label சட்டக் கல்வி. Show all posts
Showing posts with label சட்டக் கல்வி. Show all posts

Wednesday, May 18, 2011

தமிழனைத் தலை நிமிரச் செய்த சாதனைப் பெண்!



அண்மையில் வெளிடப்பட்ட ஐ.ஏ.எஸ். தேர்வில், இந்தியா அளவில் முதலிடம் பெற்று தமிழகத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்த, செல்வி திவ்யதர்ஷினி அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். (தமிழகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் விபரம் அறிய பார்க்க: தினமணி)

இவர், சென்னை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் உள்ள 'சீர்மிகு சட்டப் பள்ளி' யில் (SCHOOL OF EXCELLENCE IN LAW) பி.ஏ.,பி.எல்., (ஹானர்ஸ்) முடித்தவர் என்ற தகவல், மகிழ்ச்சியான ஒன்று. ஏனென்றால், 2002 ஆம் ஆண்டு இந்தியா அளவில், தமிழகத்தில் மிகச் சிறந்த சட்ட வல்லுனர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில், முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் இந்தக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்பொழுது விதைக்கப்பட்டது இப்பொழுதான் அறுக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.


+2 தேர்வு முடிவு வந்திருக்கும் நிலையில், இந்தச் செய்தி பல்வேறு சிறந்த மாணவர்களை சட்டக்கல்வி பக்கம், திரும்பிப் பார்க்க வைக்கும் என்று நம்புவோம்.

எனக்குத்
தெரிந்த நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்ற போதும், யாரும் சட்டக்கல்வி பயில விரும்புவதில்லை. காரணம் கேட்டால், "சட்டக் கல்வி பயிலும் மாணவர்களிடம் ஒழுக்கம் இருக்காது. அடாவடியாக நடந்து கொள்வார்கள். நல்ல மாணவர்கள் கூட கெட்டு போய்விடுவார்கள்" என்பார்கள்.

'அமைதி விரும்பி' 2006 ஆம் வருடம் 93 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற போதும், இன்ஜினியரிங் அல்லது மருத்துவக்கல்வியில் சேர்க்காமல், சட்டக் கல்வியில் சேர்த்தோம். அப்பொழுதெல்லாம், இந்தளவுக்கு இந்த சட்டப்பள்ளி பலரால் அறியப்படவில்லை.

நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் "அமைதியை, சென்னையில் உள்ள சட்டப் பள்ளியில் பி.ஏ.பி.எல். (ஹானர்ஸ்) சேர்த்து விட்டிருக்கிறேன்" என்றேன். அதற்கு அவர் "ஏதோ பிரைவேட் காலேஜ் போல, நீங்க கவர்மென்ட் காலேஜ்ல சேர்த்திருக்கலாமே?" என்றார்.

சட்டப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது 2002 -ல், நான் சொன்னது 2006 - ல். ஏன், இதை இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், ஒரு மாவட்ட தலைநகரில் உள்ள வழக்கறிஞரிடமே, இந்தக் கல்விநிறுவனம் பற்றி என்னால் புரிய வைக்க முடியவில்லை. பிறகு, எனது உறவினர்கள், நண்பர்களிடம் எப்படி புரிய வைக்க முடியும். ஒரு சிலரைத் தவிர்த்து, மற்றவர்கள் என் செயலை பைத்தியக்காரத் தனமாகவே நினைத்தார்கள். இவையெல்லாம், ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், நம்மிடையே சட்டக்கல்விக் குறித்த விழிப்புணர்வு சுத்தமாக இல்லை.

இடையில் 2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை வேறு, சட்டப்படிப்பை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. கடந்த வருடம், ஐந்தாண்டு பி.எல். படிப்பில் சேர்வதற்கு குறைந்த பட்ச மதிப்பெண் ஐம்பது சொச்சமே! இங்கே பார்க்கவும்.

கொடுமை என்னவென்றால் 70, 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆர்ட்ஸ் காலேஜில் படித்துவிட்டு வேலையில்லாமல் சங்கடப்படுகிறார்கள். சட்டக்கல்வி ஒரு தொழிற்கல்வி என்பதே பலருக்குப் புரிவதில்லை. மேலும் கட்டணமும் மிக மிகக் குறைவு என்பது, இன்னும் பலருக்குத் தெரிவதில்லை.

இன்றும் கூட சட்டக்கல்வி பயின்றால் 'கோர்ட்டில் நீட்டி முழங்கி வசனம் போல் பேச வேண்டும்' என்று நினைப்பவர்களே அதிகம். இது சினிமாக் காட்சிகளால் வந்தப் பாதிப்பு! கோர்ட்டுக்கு செல்லாமல் எண்ணற்ற வேலை வாய்ப்பைத் தேடிக்கொள்ளலாம். அது குறித்து 'வீடுதிரும்பல்' திரு மோகன்குமார் சார் விரைவில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனியாவது சட்டக்கல்வியின் மேன்மையை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, தலை சிறந்த மாணவர்களை சட்டக்கல்விப் பக்கம் திருப்பி விட நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது.

அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும். 044 - 24641212 / 24641919. மேலும், தகவல் அறிய http://www.tndalu.ac.in/

2008 -ல் நடந்த சட்டக்கல்லுரி வன்முறை, தமிழர்களுக்கு தலைக் குனிவை உண்டாகியது. ஆனால், இப்பொழுது அதே சட்டம் பயின்ற, செல்வி திவ்யதர்ஷினி தமிழனைத் தலை நிமிரச் செய்திருக்கிறார்!




படம் உதவி: கூகிள் & அமைதி விரும்பி.