Sunday, January 24, 2010

3 ½ ஆண்டுகள் கிராமப்புற டாக்டர் படிப்பு வருமா.. வராதா..?

கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி செய்துதர அரசு பல வழிகளிலும் முயற்சி எடுத்துவருகிறது. அதில் முதல் முயற்சியாக கட்டாய கிராமபுற மருத்துவ சேவையளிக்க மருத்துவர்களை நிர்பந்ததித்தது, அவர்கள் பல போராட்டங்களை நடத்தி அரசை பணியவைத்தார்கள்.

மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்ல தயங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன... தங்குவதற்கு வீடு, குழந்தைகள் படிக்க சிறந்த பள்ளி, போக்குவரத்து போன்ற இன்னும் பல வசதிகள் சரியாக இருப்பதில்லை, மேலும் நகரங்களில் கல்விகற்று, அந்த நாகரிகத்தில் வாழ்ந்தவர்களை, திடிரென்று கிராமத்துக்கு சென்று சேவை செய்ய சொல்வதால், அவர்களால் கிராமபுறச் சுழ்நிலையில் பணிபுரிய முடியவில்லை.

இதன் காரணமாக அரசு புதிய முயற்ச்சியில் இறங்கிவுள்ளது. கிராமப்புறத்தில் சேவை செய்வதற்கென்று தனியாக மருத்துவர்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.

இதனால் கிராமத்தில் பிறந்து, அங்கேயே கல்விக்கற்று வாழ்ந்துவருகிற மாணவர்களை தேர்ந்தெடுத்து, பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு 3 ½ ஆண்டுகள் படித்தால் BRMS (Bachelor of Rural Medicine and Surgery) என்ற புதிய மருத்துவ பட்டப்படிப்பை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த BRMS பட்டபடிப்பை முடித்தவர்கள் கிராமங்களில் மட்டுமே மருத்துவம் பார்க்கமுடியும்.

சரி, கிராமங்களில் வாழ்பவர்கள் இரண்டாந்தர குடிமக்களா, அவர்களுக்கென்று தனியாக இரண்டாந்தர மருத்துவர்களா? என்ற கேள்வி பலர் மனதிலும் தோன்றலாம். இதற்கு வேறு வழியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. MBBS இடத்தை அதிகப்படுத்தலாமே என்று தோன்றும், அப்படி அதிகப்படுத்தினால் அதிலும் நகர்புற மாணவர்கள் தான் இடம்பிடிப்பார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கலாம் என்றால், ஏற்கனவே தமிழக அரசு கிராமப்புற மாணவர்களுக்காக சிறப்பு ஒதுக்கீடு வழங்கியதையும், நகர்புற மாணவர்களின் சார்பாக நீதிமன்றம் சென்று அதற்கும் தடைப் பெற்றதையும் நாம் மறந்திருக்க முடியாது.

இன்றைக்கும் கிராமங்களில் முறையான படித்த டாக்டர்கள் மருத்துவம் பார்ப்பதில்லை. கிராமங்களில் நடப்பது என்ன? ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறமுடியாமல் கல்வியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் சில காலம் மருத்துவர்களிடமோ அல்லது மருத்துவமனையிலோ எடுபிடி வேலைப்பார்த்து ஊசி போட கற்றுக்கொள்கிரார்கள். பின்பு கிராமங்களுக்கு சென்று அவர்களுக்கு தெரிந்த மருந்துகளின் பயன்பாட்டை வைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதும். மருந்துகளின் சரியான அளவு தெரியாமலும், பல மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுப்பது போன்ற தவறான சிகிச்சையளித்தும் வருகிறார்கள். இதனால் புதிதாக வரும் நோய்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மருந்துகளைக் கொடுத்து நோயின் தீவிரத்தை அதிகபடுத்தி பின்பு நகர மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதனால் பலர் உயிரிழக்க வேண்டிய நிலையில் இன்றைய கிராமங்கள் உள்ளன.

எனக்கு தெரிந்து இது போன்ற போலி மருத்துவர் ஒருவர், மிகப்பெரிய அரசியல் கட்சியின் மாவட்ட மருத்துவ அணியின் செயலாளராக உள்ளார். அவர்களைப் போல் உள்ளவர்கள் தவறான சிகிச்சையளித்து நோயாளி இறந்துபோனாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்களால் புகாரளிக்க முடிவதில்லை.

இந்நிலையில் ஒரு வருத்தமான செய்தி இந்த புதிய கிராமப்புற மருத்துவப் படிப்பை(BRMS) ஆரம்பிக்கக் கூடாது என்று கேரளாவில் மருத்துவர்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் நாட்டிலும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இது மற்ற மாநிலங்களிலும் தொடரலாம். அரசு பணிந்துவிடக் கூடாது என்பதே நமது விருப்பம், கிராமப்புற மக்களின் ஆசையும் இதுவாகத்தான் இருக்கும்.

7 comments:

  1. ஒரு அருமையான பதிவு. கிராமத்தில் வாழும் மக்கள்
    இரண்டாம்தர குடிமக்களா என்கிற கேள்வி நன்றாக யோசிக்க வைத்தது!

    ReplyDelete
  2. நல்ல பதிவு ஐயா

    ReplyDelete
  3. திரு. ஆரண்யநிவாஸ,் ஆர் ராமமூர்த்தி
    திரு. மோகன் குமார்
    இருவருக்கும் எனது நன்றி...!

    ReplyDelete
  4. கிராமத்து சூழ்நிலையை மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள்,மருத்துவர்களின்
    போராட்ட முடிவு, எனக்கு கிராமத்து மொழியை நினைவுப் படுத்துகிறது
    "தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்"
    வாழ்க ஜனநாயகம்...!
    - மனோகரன்.எஸ். நடுவாப்பட்டி.

    ReplyDelete
  5. கிராமத்தில் மருத்துவம் பார்க்க டாக்டர்கள் வரமாட்டார்கள், அரசு வேறு முடிவு எடுத்தாலும் விடமாட்டார்கள்.
    கல்வியின் தரம் குறைந்துவிடும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள். இப்பொழு தனியார்கல்லுரிகளில் படிக்கும் மாணவர்களின் யோக்கிதை இவர்களுக்கு தெரியாதா?
    அரசாவது நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து படிக்கவைப்பார்கள், இந்த கிராமப்புற மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரியிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஒன்றும் குறைந்தவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதே என் கருத்து.
    -ஆர்.அன்பழகன், காட்டூர்

    ReplyDelete
  6. திரு. மனோகரன் & திரு. அன்பழகன் இருவருக்கும் எனது நன்றி.

    ReplyDelete
  7. "கட்டாயம் திருந்தவேண்டும்...." என்று நண்பர் ஒருவர் கமென்ட் எழுதியிருந்தார், அது தவறுதலாக ரிஜக்ட்
    செய்யப்பட்டவிட்டது. மன்னிக்கவும் நண்பரே.. தொடரட்டும் உங்கள் வருகை...

    ReplyDelete