Monday, June 14, 2010

கு.க.அறுவை சிகிச்சைக்கு எதிராக மாதர் சங்கம்!

கடந்த வாரத்தில் பத்திரிகையில் வந்த செய்தியின் சுருக்கம். புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு நிறைமாத கர்ப்பிணிப்பெண் சென்றிருக்கிறார்.
அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இது இரண்டாவது பிரசவம், அறுவை சிகிச்சையின் மூலம்தான் பிரசவம் நடக்கும் என்கிற நிலையில்
அம் மருத்துவனையின் மருத்துவர், சிசேரியன் அறுவை சிகிச்சையோடு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையும் செய்ய முடிவு செய்து அதற்கு அப்பெண்ணின் கணவரின் ஒப்புதலைப் பெற முயர்ற்சித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் கணவர் "வயிற்றுக்குள் உள்ளது ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை, மேலும் மனைவியின் உடல்நிலை சரியில்லை, பிறகு ஆறு மாதம் கழித்து அறுவை சிகிச்சை செய்துகொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர் "குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையும் சேர்த்து செய்துகொண்டால், நான் அறுவை சிகிச்சை செய்வேன் இல்லையெனில், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறியிருக்கிறார். உடனே உறவினர் மூலம் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்ற மாதர் சங்கத்தினர் மருத்துவருக்கு எதிராக போராடி, வேறொரு மருத்துவர் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் அந்த மருத்துவரின் செயல் ஏதோ மனிதாபிமானம் இல்லாத செயலாகத் தோன்றும். ஆனால் அந்த மருத்துவர் அந்த பெண்மணியின் உடல்நிலை மற்றும் சமூகப் பின்னணியைக் கருத்தில் கொண்டுதான் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யவேண்டுமென்று சற்று கடுமையாகத் தெரிவித்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன். இந்த செய்தியின் மூலம் நாம் அறிவது யாதெனில் இன்றைக்கும் சாதாரண மக்கள் மத்தியில் குடும்பக்கட்டுப்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லையென்பதே!

அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவதும் அறுவைசிகிச்சை மூலம்தான் குழந்தையை வெளியே எடுக்கமுடியும் என்பதால் அத்துடன் சேர்த்து கு.க. அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர் முடிவு செய்திருக்கிறார். இதில் மனிதாபிமானத்துடன் கூடவே சமூக அக்கறையும் அந்த மருத்துவருக்கு இருப்பது தெரிகிறது. சிசேரியன் அறுவை சிகிச்சைமட்டும் செய்தால் நிச்சயம் மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு அப்பெண்மணி கர்ப்பமாகும் வாய்ப்புகளே அதிகம். ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்று கணவர் குறிப்பிடுகிறார். இந்தநிலையில் மீண்டும் தேவையற்றக் கர்ப்பம் என்பது அப்பெண்ணின் உயிருக்கே பிரச்சினையை உண்டுபண்ணும்.

இந்தப் பிரச்சினை மதார் சங்கத்திற்கு செல்கிறது, அவர்கள் என்ன செய்யவேண்டும் "உனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இப்பொழுது நீ கு.க. அறுவைசிகிச்சை செய்து கொள்வதே சிறந்தது. பெண் குழந்தை என்று பிரித்துப் பார்க்காதே, இன்றைக்கு பெண்கள் இல்லாத துறைகளே இல்லை" என்பன போன்ற அறிவுரை சொல்லி கு.க. அருவைசிகிச்சைக்கு சம்மதிக்க வைத்திருந்தால், நாம் அந்த மாதர் சங்கத்தைப் பாராட்டலாம். ஆனால் அவர்கள், அந்த மருத்துவருக்கு எதிராக கோஷம் போட்டு, இனி மற்ற மருத்துவர்களும் 'நமக்கென்ன' என்ற எண்ணத்துடன் செயல்பட வைக்கும் சூழலை உருவாக்கி இருக்கிறார்கள்.

பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்பது தெரியாததால்தான் கு.க.அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பதே அப்பெண்ணின் கணவரின் முடிவு. இதற்கு மாதர் சங்கம் ஆதரவு! என்ன விநோதம் பாருங்கள். பெண்களுக்கு பெண்களே எதிரி.

பெரிய பதிவாக போவதால் குடும்பக்கட்டுப்பாடு குறித்த என்னுடைய எண்ணங்களை வேறு ஒரு பதிவில் தெரிவிக்கிறேன்.

.

16 comments:

  1. சார் உங்கள் கருத்திலிருந்து சற்று வேறுபடுகிறேன். குடும்ப கட்டுப்பாடு செய்வது அந்த தனி மனிதன்/ பெண் விருப்பம். அதை அந்த மருத்துவர் கட்டாய படுத்துவது தவறு. It is against the fundamental rights.

    இது எனது தனிப்பட்ட கருத்து. தங்களை காயபடுத்தினால் மன்னிக்க..

    ReplyDelete
  2. இப்படியெல்லாம் நடக்கிறதா? பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. மோகன் குமார் அவர்கள் சொன்னதை நானும் ஆதரிக்கிறேன். ஒரு மருத்துவர் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் படி எடுத்துக் கூறலாம், இறுதி முடிவு அந்தக் கணவன் மனைவியினுடையதே [அந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது இங்கு முக்கியமில்லை.], மருத்துவர் வற்ப்புறுத்த முடியாது. அவருக்கு பிரசவம் பார்க்க மாட்டேன் என்று சொன்னதெல்லாம் அராஜகம். அந்த சமயத்தில் அந்தப் பெண் எந்த நிலையில் இருந்தார் என்று தெரியவில்லை. வலி வந்து அதுக்கப்புறம் மருத்துவர் பேரம் பேசியிருந்தார் என்றால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். K. ஜெயதேவா தாஸ்.

    ReplyDelete
  4. doctor kuuriyathu thaan sari. maathar sangkangkal thevai illaamal pooraadi ullathu.

    ReplyDelete
  5. இந்த பதிவில் நாம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தி, மாதர் சங்கத்தின் தவறான நடவடிக்கை... கணவனுக்கு இந்த அறுவை சிகிச்சையின் அவசியத்தை உணர்தியிருக்கலாம் என்ற அமைதி அப்பாவின் கருத்தை நான் மனதார பாராட்டுகிறேன் .... மேலும் சிலர் சொல்லவது போல் இது தனிநபர் விருப்பமேயானாலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு இது ஒரு தடைக்கல்லாய் இருப்பதை நாம் உணரவேண்டும், உணர்த்தவேண்டும்....

    எனது கருத்து உங்களை பாதித்தல் மன்னிக்கவும்....

    ReplyDelete
  6. இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்!
    நாட்டுக்கும் கேடு, வீட்டுக்கும் கேடு!

    ReplyDelete
  7. அவர்களின் குடும்ப சூழ்நிலையையும் ஆரயவேண்டும். அப்படி அவர்கள் செய்தால் அந்த பெண்ணுக்கு பிரச்சினை எதுவும் இல்லையென்றால் பரவாயில்லை..

    ReplyDelete
  8. "குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சையும் சேர்த்து செய்துகொண்டால், நான் அறுவை சிகிச்சை செய்வேன் இல்லையெனில், தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்//

    என்னதான் சொன்னாலும்...
    இது மோசமான அனுகுமுறை....

    ReplyDelete
  9. அமைதி அப்பா சொன்னது:

    //பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்பது தெரியாததால்தான் கு.க.அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்பதே அப்பெண்ணின் கணவரின் முடிவு. இதற்கு மாதர் சங்கம் ஆதரவு! என்ன விநோதம் பாருங்கள். பெண்களுக்கு பெண்களே எதிரி.//

    நிறைய பேர் தங்களுடைய குறிக்கோள் என்னவென்று தெரியாமலேயே வாழ்கிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள். மிகப்பரிதாபமான ஜன்மங்கள்.

    ReplyDelete
  10. மோகன் குமார் said...
    //. குடும்ப கட்டுப்பாடு செய்வது அந்த தனி மனிதன்/ பெண் விருப்பம். அதை அந்த மருத்துவர் கட்டாய படுத்துவது தவறு. It is against the fundamental rights.

    இது எனது தனிப்பட்ட கருத்து. தங்களை காயபடுத்தினால் மன்னிக்க..//

    இதை நானும் வழிமொழிகிறேன் அப்பா.

    இவ்விசயத்தில் பிறரின் வலுக்கட்டாயம் நம் வாழ்கையே சிலவேளை திசைதிருப்பிவிடும் என்பது என்கருத்து...

    ReplyDelete
  11. இந்த பதிவைப் படித்துக் கருத்துச் சொன்ன மோகன் குமார் சார், சித்திரா மேடம், K. ஜெயதேவா தாஸ் சார், ஐசிநாதன் சார், அனானி, வால்பையன், புஷ்பா மேடம், சி. கருணாகரசு சார், டாக்டர் பி.கந்தசாமி சார், மலிக்கா மேடம் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

    இதில் எதிர் கருத்து ஆதரவு கருத்து என்று ஒன்றுமில்லை. குடும்பக்கட்டுபாடு அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுகொண்டதால்தான் இன்று தமிழகமும், இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக நான் கருதுகிறேன். மக்கள் தொகை என்பது பலம்தான் என்றாலும் அதுவே பலஹீனமாகிவிடக் கூடாது என்பதே நமது விருப்பம்.

    இந்த பதிவில் மாற்றுக் கருத்துக்கொண்டவர்கள் சொல்ல வருவது, 'கட்டாயப் படுத்தக்கூடாது' என்பதுதான், மற்றபடி
    அவர்கள் ஆண், பெண் வேறுபாடு பார்ப்பவர்கள் அல்ல என்பதையும் நம் கருத்தில் கொள்ளவேண்டும்.

    நான் இந்த பதிவை எழுதக் காரணம், ஆண் குழந்தைதான் வேண்டுமென்று வரிசையாகப் பெண் குழந்தைகளைப் பெற்றால்...?! அந்தக் குடும்பத்தில் பெண் குழந்தைகளின் நிலையும் அவர்களின் எதிர்காலமும் எப்படி இருக்கும் என்பதே எனது ஆதங்கம்.

    சில விஷயங்களை அழுத்திச் சொன்னால்தான் எடுபடும். இல்லையேல், ஹெல்மெட் சட்டம் போலாகிவிடும்...!

    ReplyDelete
  12. பெண்களுக்கு பெண்களே எதிரி.
    ///


    சார் , சரியா சொன்னிக்க

    ReplyDelete
  13. அன்பின் அமைதி அப்பா

    இடுகையின் நோக்கம் நன்று - மருத்துவரின் கண்டிப்பான சொற்கள் மாதர் சன்கத்தினரைத் தூண்டி இருக்கலாம் - ஆனால் அவர்களும் சர்றே மருத்துவருடன் கலந்தாலோசித்து - அக்கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆலோசனை கூறி இருக்கலாம். அன்பின் அமைதி அப்பாவின் மறுமொழிகளுக்கான விளக்கம் ஏற்கத் தக்கது. நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் அமைதி அப்பா - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. நீங்கள் சொல்வதில் சிலவகைளில் சரி என்றாலும், ஒரு மருத்துவர் ஆலோசனை வழங்க முடியுமே ஒழிய யாருக்கும் நிபந்தனைகள் விதிக்க முடியாது. தனிமனிதருக்கு உள்ள விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

    அதே நேரம் கருத்தடை நல்ல விடயம். "சாதாரண மக்கள் மத்தியில் குடும்பக்கட்டுப்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு" ஏற்படுத்த வேண்டியது எமது கடமை.

    பல நல்ல தற்காலிக கருத்தடை முறைகள் இருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  15. எதுவானாலும் சம்பந்தப்பட்ட பெண் முடிவு எடுக்கிறது நல்லது..

    ReplyDelete
  16. very nice blog........plz visit my blog if time permits.............http://lets-cook-something.blogspot.com/

    ReplyDelete