Monday, July 4, 2011

பொறியியல் கலந்தாய்வு - ஓர் அவசர ஆலோசனை!

ஜூலை முதல் மற்றும் இரண்டாம் தேதி நடந்த மருத்துவ கலந்தாய்வில் அழைக்கப்பட்ட அனைவரும் (இரண்டு மூன்று பேரைத் தவிர்த்து) மருத்துவக் கல்வி பயில இடம் பிடித்துள்ளார்கள். அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். இதில் எத்தனைப் பேர் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளார்கள் என்பது இப்பொழுது தெரியாது. இவர்களில் பெரும் பகுதியினர் பொறியியல் படிப்பிலும், தரப் பட்டியலில் முன்னிலையில் இருப்பார்கள் என்பதை அறிவோம். இன்று மருத்துவக்கல்வியைத் தேர்ந்தெடுத்தவர்களில் எத்தனைப்பேர், இதை உதறிவிட்டு பொறியியல் பக்கம் செல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. என்னுடைய கணிப்பு, ஒரு சிலர் மட்டுமே பொறியியல் பக்கம் செல்வார்கள் என்று நம்புகிறேன்.




மருத்துவக்கல்வியைப் பொறுத்துவரை கல்லூரிகளும் இடங்களும் குறைவு. மேலும், எம்.பி.பி.எஸ். என்ற ஒரே படிப்புதான். அதனால், கலந்தாய்வு அவ்வளவு சிக்கலானது கிடையாது. ஆனால், எஞ்சினியரிங் படிப்பு அப்படிக் கிடையாது. இடங்கள், கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் ஏராளம். மேலும், எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக சிக்கலான ஒன்று. இதில் மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம், என்ன படிக்கப் போகிறோம், என்ன மாதிரி வேலையில் சேர வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் தெளிந்த அறிவு இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

இங்கு ஒரு செய்தியை சொல்லியாகவேண்டும். எனக்குத் தெரிந்த ஒருவர், படிப்பறிவும் குறைவு, அவ்வளவாக பொருளாதாரமும் இல்லாதவர். அவர் மகன் +2 -வில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். அந்த மாணவன் தற்பொழுது கணினி அறிவியல் படாப்பிரிவில் பொறியியல் படித்து வருகிறார். அந்த மாணவனின் தந்தையை அண்மையில் சந்தித்தேன். அவரிடம், மகனின் படிப்புக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்,"சரியா படிக்க மாட்டேங்கிறான், அவனுக்கு பிடிச்ச படிப்பில் சேர்த்திருந்தால் நன்றாக படிச்சிருப்பான்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது, கவுன்சிலிங் அழைத்துச் சென்ற உறவினர், அந்த மாணவனின் விருப்பமான மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு பதிலாக கம்பியூட்டர் எடுக்க சொல்லியிருக்கிறார். மாணவனும் அந்த நேரத்தில் தலையாட்டிவிட்டு, பிறகு எனக்கு அந்தப் படிப்பில் விருப்பமில்லை என்று சொன்னால், யார் வாழ்க்கை வீணாகிறது பாருங்கள்.

சரி, விரும்பாத பாடமாக இருந்தாலும் சேர்ந்து விட்டோம். இனி சிறப்பாக படித்து, நாமும் நம் குடும்பமும் முன்னேற பாடுபடுவோம் என்று நினைக்காமல், சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கு காரணம், தனக்கு பிடிக்காத படிப்பு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இதில், சொத்தை விற்று, வங்கியில் கடன் வாங்கி கஷ்டப்படும் அந்த அப்பாவி தந்தையின் பங்கு என்ன? ஒரு கிராமத்தில் ஏழை வீட்டில் பிறந்த மாணவனே இப்படி நடந்துக் கொள்ளும் பொழுது, நடுத்தர மற்றும் பணக்கார வீட்டு பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

தட்டுத் தவறி கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் சேரவேண்டும், எந்தப் பாடப் பிரிவில் சேரவேண்டும் என்று ஆலோசனை சொல்லி விடாதீர்கள். அப்புறம் நீங்கள்தான் அவர்களின் படிப்பிற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு சில மாணவர்களைத் தவிர மற்றவர்கள் சிறப்பாகப் படிப்பதில்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கு காரணம், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கே, அதாங்க முகநூல்(facebook), செல் போன் மூலம் நேரம் போதவில்லை. சினிமா, பர்த்டே பார்ட்டி (நாற்பது மாணவர்கள் வகுப்பில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். வருடத்தில் நாற்பது நாள் பர்த்டே பார்ட்டிக் கொண்டாடுவதில் போய்விடுகிறது) இவை எல்லாவற்றையும் விட ஆன்லையன் கேம்ஸ் அதிக நேரத்தை விழிங்கி விடுகிறது. இவையெல்லாம் போக நேரம் கிடைத்தால் படிப்பு என்கிற சூழ்நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய தரப்பை நியாயப்படுத்த ஒரு காரணம் தேடுவார்கள். அந்தக் காரணம் எனக்குப் பிடிக்காதப் படிப்பு அல்லது கல்லூரி என்பதாக இருக்கும்.

அது சரி, "எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம், எந்தக் கல்லூரி நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்" என்று யாராவது கேட்டால், முதலில் உங்கள் விருப்பம் என்னவென்று கேளுங்கள் அதற்கு தகுந்தபடி ஆலோசனை சொன்னால், நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் தினந்தோறும் கவுன்சிலிங் பற்றிய விபரங்களைப் பார்த்து வந்தால், அவர்களுக்கு வரும் ஆண்டில் குழப்பங்கள் குறையலாம். எனக்குத் தெறித்த 'நிறைய படித்த' நண்பர் என்னிடம் கேட்டார், "கட் ஆப் மதிப்பெண் எப்படிக் கணக்கிடுகிறார்கள்?" இவராவது பரவாயில்லை. எனது இன்னொரு நண்பர் சொன்னார், "அப்பிளிகேஷன் நம்பர் படியும், ரேங் போடுவார்கள்" என்றார்.

படம் உதவி: கூகிள்.

8 comments:

  1. படிப்பு விசயத்தை முடிவு செய்ய வேண்டியது பெற்றொரும், பிள்ளைகளும்தான். பொறியியல் என்பது நான்கு வருடப் படிப்பு. நாம் சேரும்போது வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதாக இருக்கும் பிரிவு, முடிக்கும்போது கதை மாறியிருக்கும். இது நான் படித்த காலத்திலிருந்தே நடைபெறுகிறது. கல்வித்துறையில் இருப்பவர்களிடம் ஆலோசனை பெறலாம். சம்பந்தமே இல்லாதவர்கள் வழிகாட்ட முயற்சிப்பது தவறு. ஒவ்வொரு பிரிவிற்கும் தேவைப்படும் திறமைகளையும் கொண்டு செலக்ட் செய்யலாம் -. கணித அறிவு , வரையும் திறமை, ஆங்கிலத்துல் பயிற்சி, கம்யூனிகேசன் திறமை . இத்தனையையும் ஆலோசித்து, பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரவேண்டும் என்று பெரும் செலவில் அளிக்கப்படும் பொறியியல் கல்வி, அவர்களது நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்பதும் கேள்விதான்.

    ReplyDelete
  2. ஆலோசனை சொல்வது எவர்க்கும் எளிது;அதன் விளைவு யாருக்குச் சாதகம்/பாதகம்?எந்த மாணவனையும் பிடிக்காத துறையில் ஈடுபடுத்தக் கூடாது1

    ReplyDelete
  3. நல்ல பதிவு. பெற்றோரும் மாணவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  4. //தட்டுத் தவறி// தப்பித் தவறி?

    //எனக்குத் தெறித்த// எனக்குத் தெரிந்த ??

    இப்படியாக ஆங்காங்கு எழுத்து பிழைகள் உள்ளனவே! அவரமாக எழுதினீர்களோ?

    ReplyDelete
  5. சாகம்பரி said...

    //படிப்பு விசயத்தை முடிவு செய்ய வேண்டியது பெற்றொரும், பிள்ளைகளும்தான்.//

    சரியாகச் சொல்லியிருக்கீங்க மேடம். ஆனால், பிரச்சினை கல்வியறிவு இல்லாதப் பெற்றோர் மற்றும் அவர்தம் பிள்ளைகள் பற்றியதுதான்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  6. சென்னை பித்தன் said...

    //எந்த மாணவனையும் பிடிக்காத துறையில் ஈடுபடுத்தக் கூடாது!//

    நிச்சயமாக, இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.

    இன்றைய தினத்தில் மாணவர்கள் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், போதிய மதிப்பெண் பெறாமல் மருத்துவம்தான் படிப்பேன் என்பதும், மற்றப் படிப்புகளில் ஆர்வம் இல்லை என்பதும் எப்படி சரியாகும்?

    கருத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. ராமலக்ஷ்மி said...

    //பெற்றோரும் மாணவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.//

    கருத்துக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  8. மோகன் குமார் said...

    **//தட்டுத் தவறி// தப்பித் தவறி?

    //எனக்குத் தெறித்த// எனக்குத் தெரிந்த ??

    இப்படியாக ஆங்காங்கு எழுத்து பிழைகள் உள்ளனவே! அவரமாக எழுதினீர்களோ?//**

    ஆமாம் சார், அவசரம் பிளஸ் தூக்கத்துடன் எழுதியது. வரிவிடாமல் பொறுமையாகப் படித்து தவறுகளை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி சார்.

    இனி வரும் பதிவுகளில் இந்த தவறுகள் வராமலிருக்க முயற்சி செய்கிறேன்.
    நன்றி சார்.

    ReplyDelete