Friday, January 14, 2011

இன்று கார், நாளை கிட்னி?!


அண்மையில், பத்திரிகையில் படித்த செய்தி.
'கேரளா மற்றும் தமிழக பகுதியில், கார்களை திருடி விற்கும் நான்கு
பேர் கொண்ட கும்பல் காரைக்காலில் சிக்கியது. அவர்களிடம் இருந்து 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 19 சொகுசு கார்கள், நான்கு மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்' இது ஒரு சாதாரண விஷயம்தான் என்று எல்லோருக்கும் தோன்றும்.
தொடர்ந்து படிக்கையில்தான் பயப்பட வேண்டிய செய்தி வருகிறது.


'கடலூர் புதுச்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் 10 கார்களை
வாங்கி, விற்றுள்ளார். இவர், தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம்
ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர். இன்னும் ஒருவர் ஒரு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்' என்பதுதான் அது. அரசியல் கட்சி பிரமுகரை விட்டுவிடுவோம். இதில், ஆச்சர்யம் என்ன இருக்கிறது?!


நமது மனதை நெருடுவது இந்த மருத்துவக் கல்லூரி மாணவனின் செயல்தான்.
இன்றைக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்
இரவு பகல் பாராமல், சுக துக்கங்களைத் தொலைத்து எண்ணற்ற மாணவர்கள் தயார் செய்துகொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் மருத்துவ தொழில்
என்பது புனிதமானது. 'மருத்துவர்கள் கண்கண்ட கடவுள்' என்பதுதான். சமூகத்தில் மருத்துவர்களுக்கு என்று ஒரு மரியாதை உண்டு. ஒரு சில மருத்துவர்கள் விதிவிலக்கு.

தனியார் கல்லூரிகள் பணத்தின் அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பதின் விளைவுதான் இது. இந்த மாணவனின் பெற்றோர், தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு மாணவனின் விருப்பம் இல்லாமல் மருத்துவம் படிக்க சேர்த்து விட்டிருப்பார்கள். இவனுக்கு படிப்பில் அக்கறை இருந்தால் படிப்பைத் தவிர
வேறு எண்ணங்கள் வர வாய்ப்பில்லை. இந்த மாணவனுக்கு கெட்ட பழக்கங்கள்
வந்திருக்க வேண்டும். செலவுக்கு பணம் தேவைப்பட்டிருக்கும. நியாயாமன
செலவுகளுக்கு பெற்றோர் பணம் தருவார்கள். தேவையற்ற செலவுகளுக்கு
திருடுவதைத் தவிர வேறு என்ன செய்வது?

கடந்த வருடத்தில் சென்னையின் புகழ்ப் பெற்ற தனியார் மருத்துவப் பல்கலைக்
கழகத்தில் படித்த மாணவன், தனக்கு உதவியாக இருந்த பெண்மணி, தனது கெட்ட பழக்க வழக்கங்களை கண்டித்தார் என்பதற்காக கொலை செய்து எரித்ததை மறந்திருக்க முடியாது. நாவரசு படு கொலை செய்யப்பட்டதும், ஒரு தனியார் கல்லூரியில்தான். தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவன், மதிப்பெண்ணை திருத்தி மாட்டிக் கொண்ட கதை நாடறியும்.

படிப்பின் மீது அக்கறை இல்லாதவர்களை பணத்தைக் கொட்டி படிக்க வைத்தால் இதுதான் நடக்கும். தட்டுத்தவறி இவர்கள் படித்து முடித்து மருத்துவர்களாக பதிவு செய்து விட்டால், அப்பாவி மக்களின் கதி என்னவாகும்?


இன்று கார் திருடுபவன் நாளை கிட்னி திருடமாட்டான் என்பதற்கு என்ன
உத்திரவாதம்?
இன்றைய தினம், திருடர்களிடமும், ஊழல்வாதிகளிடமும்,அயோக்கியர்களிடமும்தான் அளவுக்குஅதிகமான பணம் உள்ளது. அதிக அளவில், இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, இப்படி அரைகுறையாக படித்துவிட்டு..... நினைக்கவே பயமாக உள்ளது. இன்னும், எதை எதை படிக்கப் போகிறோமோ, பார்க்கப் போகிறோமோ?

இதற்கெல்லாம் அரசுதான் ஒரு முடிவுக் கட்ட வேண்டும். இந்தக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் வெளிப்படையான அணுகுமுறை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், அரசே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

இந்தப் பிரச்சினையை சாதாரணப் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது. இது ஒரு சமூகப் பிரச்சினை. மாட்டிக்கொண்டவர்கள்தான் மேலே உள்ளவர்கள். இன்னும் மாட்டாமல் இருப்பவர்கள் எத்தனைப் பேரோ?

7 comments:

  1. //இன்று கார் திருடுபவன் நாளை கிட்னி திருடமாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்? //

    ஒரு உத்திரவாதமும் இல்லை. கிட்னி மட்டுமல்ல, கண் போன்றவற்றையும் திருடுவான். அதற்குக் கூட்டாக அரசியல்வாதிகளும் இருப்பார்கள்... வெட்கம்.

    எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம் என்பது புரியவில்லை...

    ReplyDelete
  2. என்னங்க இப்படி கூட நடக்கிறதா? ரொம்ப யோசிக்க வைக்கிறது உங்களின் கேள்வி??

    பிரச்சனையின் மூலம் எங்கே இன்று பார்க்க வேண்டும்...? அது கொண்டு வந்துவிடும் இடம் வீடாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  3. நாட்டின் மீது அக்கறை கொண்ட பொறுப்பான அப்பா நீங்கள். நல்ல பகிர்வு.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  4. இப்போது இவர்களுக்குத்தான் காலம் என்பதுப்போல் தொடர்ந்து தினச்செய்திகளில் வந்து கொண்டே தான் இருக்கின்றனர் எதுவும் தடுப்பு நடவடிக்கை வந்ததாக தெரியவில்லை

    ReplyDelete
  5. என்னவெல்லாம் நடக்கும் பாருங்க..

    இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

    ReplyDelete
  6. மணி ; மருத்துவ படிப்பிற்கு ஆர்வம் உள்ளவர்கள் மட்டும்
    படித்தால் நன்றாக இருக்கும் ,தற்போது மருத்துவம் என்பது
    கெளரவம் +பணம் பறிக்கும்,தொழிலாக மாறிவிட்டது,
    மனச்சாட்சி உள்ளவர்கள் மட்டும் மருத்துவம் படித்தல் நன்றாக
    இருக்கும் என நினைக்கிறேன் .

    ReplyDelete
  7. //
    படிப்பின் மீது அக்கறை இல்லாதவர்களை பணத்தைக் கொட்டி படிக்க வைத்தால் //

    உண்மைதான் அமைதி அப்பா. சிந்திக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete