Tuesday, March 1, 2011

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!




தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கவனத்திற்கு...!

தேர்வுகள் துவங்கிவிட்டன, இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று இங்கு பார்ப்போம்.

மாணவர்களுக்கு....

தேர்வுக்கு செல்லும் முன் எழுத்துப் பொருட்கள், நுழைவுச் சீட்டு போன்றவற்றை சரிபார்த்து எடுத்துச் செல்லவும். பேருந்தில் செல்வோர் பஸ் பாஸ் மற்றும் சரியான சில்லறை கொண்டு செல்லவும். தனியாக வாகனம் ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவும். குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வுக் கூடத்தை அடைந்துவிடவும். கடைசி நேரத்தில் மற்ற மாணவர்களின் "அதைப் படித்தாயா, இதைப் படித்தாயா?" போன்ற கேள்விகள் உங்களின் மனநிலையைப் பதிக்கச் செய்யும். அப்படியான சூழ்நிலையைத் தவிர்க்கவும்.

தேர்வில் ஓரிரு கேள்விகளுக்கு விடைத் தெரியவில்லை என்றால் உடனே 'சென்டம்' போச்சே என்று கலங்க வேண்டாம். அந்தக் கேள்விகளைத் தவிர்த்து மற்றக் கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு கடைசியாக மீண்டும் அந்தக் கேள்வியைப் படியுங்கள் நிச்சயம் விடையளிப்பீர்கள். இங்கு முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் சில கேள்விகள் அச்சுப் பிழை மற்றும் தவறுதலாக இடம் பெற்றிருக்கும், அந்த மாதிரியான கேள்விகளை கடைசியாக பதிலெழுத முயற்சி செய்யவும். முதலில் எழுத முற்பட்டு நேரத்தை வீனடிப்பதோடு மனக்கஷ்டப் படவேண்டாம். இம் மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்கி விடுவார்கள். அப்படியே ஓரிரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விட்டுவிட்டாலும், வீட்டிற்கு வந்தபிறகும் அதையே நினைத்து வருந்தாமல், அடுத்து வரும் தேர்வுக்கு இன்னும் கூடுதல் கவனத்துடன் தயாராகுங்கள்.

பெற்றோர்கள் கவனத்திற்கு...

நல்ல உணவு, வீட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேர்வு முடிந்து வந்த பிள்ளைகளிடம் "எத்தனை மார்க் வரும், எந்தக் கேள்வியை விட்டாய்?" என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். "நன்றாக எழுதினியா?" என்பன போன்ற கேள்விகள் மட்டும் போதுமானது. அப்படியே சரியாக எழுதவில்லை என்றாலும் உங்கள் வருத்தத்தை பிள்ளைகளிடம் காட்டாமல் அடுத்து வரும் தேர்வை சிறப்பாக எழுதுவாய் என்று நம்பிக்கையளித்து உற்சாகப்படுத்துங்கள்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு...

தேர்வு எழுதும் பிள்ளைகள் உள்ள வீட்டிற்கு, இந்த சமயத்தில் விருந்தாளியாகாச் செல்வதை தவிர்க்கவும்.தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவிக்கலாம். எஸ்.எம்.எஸ். ல் வாழ்த்து அனுப்பினால் போதுமானது. ஏனெனில், உறவு மற்றும் நட்பு என்று பலரும் தேர்வு நாளன்று தொலைபேசியில் பேசினாலும் மாணவர்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற வாழ்த்துவோம்.

.

12 comments:

  1. நல்ல குறிப்புகள். பகிர்வுக்கு நன்றிங்க... தேர்வுகள் எழுதும் அனைத்து மாணவர்கட்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. maanavarkal sirantha mathippen pera vaalththukkal. good post.

    ReplyDelete
  3. பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஈடுபடும் 16 விதமான குற்றங்களையும், அதற்கான தண்டனையையும் தேர்வுத்துறை வெளியிட்டு எச்சரித்துள்ளது.* மாணவர் தன்னிடம் உள்ள துண்டுச் சீட்டு, புத்தகங்களை தாமாக முன்வந்து கண்காணிப்பாளரிடம் தந்தால், தலைமை கண்காணிப்பாளர் ஒரு முறை எச்சரித்து விடலாம். அதே தவறை மீண்டும் செய்தால், தேர்வு அறையில் இருந்து வெளியேற்றலாம்.* தடை செய்யப்பட்ட தேர்வு பொருட்கள் இருப்பதை கண்காணிப்பாளர் கண்டறிந்தால், எழுத்துப்பூர்வமான விளக்கம் பெற்ற பின், மாணவர், தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவார்.* "காப்பி'யடித்தால், தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவார். ஓர் ஆண்டு வரை தேர்வு எழுத முடியாது.* பிட் அடித்து பிடிபட்டால், அந்த தேர்வு மார்க் ரத்து செய்யப்படும். இருமுறை தேர்வு எழுத அனுமதியில்லை* மாணவர் மற்றும் அவரை சார்ந்தவர் கண்காணிப்பாளரை தவறான நோக்கில் அணுகினால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத தடை.* ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு ரத்து மற்றும் வாழ்நாள் தடை விதிக்கப்படும்.* விடைத்தாளில் தேவையற்ற வார்த்தை எழுதுதல், இயக்குனர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதுதல் போன்ற குற்றங்களுக்கு, குறிப்பிட்ட பாடம் மற்றும் அனைத்து தேர்வும் ரத்து செய்யப்படும்.* கண்காணிப்பாளருடன் அறைக்குள்ளும், வெளியேயும் தகராறு செய்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத முடியாது.* தேர்வு நேரத்தில் அறைக்கு வெளியே வினாத்தாளை தந்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை.* பிடிபட்ட பின் தலைமை கண்காணிப்பாளர் சொல்வதை கேட்காமலிருந்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத அனுமதி கிடையாது.* விடைத்தாளுக்குள் பிட் இருப்பது திருத்தும் போது தெரிய வந்தால், தேர்வு ரத்து.* மற்றொரு மாணவரின் விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை.* விடைத்தாளில் பெயர், இன்ஷியல், வேறு குறியீடு எழுதினால், மாணவரிடம் எழுதி வாங்கிய பின் மன்னிப்பு, அல்லது அந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும்.*தேர்வு அறைக்குள் வினாத்தாளை அடுத்தவர் மீது வீசினால் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.


    ஆசிரியருக்கும் தண்டனை : பிட் அடிக்கும் மாணவனுக்கு மட்டுமின்றி, தேர்வறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியருக்கும் இனி தண்டனை வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தேர்வு அறையில் மாணவன் பிட் அடிப்பது கண்டறியப்பட்டால், அங்கு கண்காணிப்பு பணியில் இருக்கும் ஆசிரியர் மீது, "17ஏ, 17பி' பணியாளர் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  4. தங்கள் அனுபவத்திலிருந்து சொல்கிறீர்கள். மிக உண்மை.

    அனானிமஸ் நல்ல தகவல் தானே பின்னூட்டத்தில் தருகிறார். தன் பெயரிலேயே சொல்லலாமே! (ஒரு வேளை கூகிள் ID இல்லையோ என்னவோ ?)

    ReplyDelete
  5. நல்ல அறிவுரைகள். அதோடு, அதுவரை உபயோகித்த பேனா, பென்சில் போன்றவைகளையே தேர்வுக்கும் பயன்படுத்தினால் நன்று. சில சமயம் புது பேனாக்களை உபயோகிக்கும் போது வேகமாகவோ சரியாகவோ எழுத வராது.

    ReplyDelete
  6. சரியான நேரத்தில் பயனுள்ள பகிர்வு,அனைவரும் புரிந்து செயல்பட்டால் மாணவர்களின் எதிர்காலம்
    சிறப்பாக அமையும்.

    ReplyDelete
  7. Chitra said...

    நல்ல குறிப்புகள். பகிர்வுக்கு நன்றிங்க... தேர்வுகள் எழுதும் அனைத்து மாணவர்கட்கும் வாழ்த்துக்கள்!//

    நன்றி மேடம்.

    ReplyDelete
  8. மதுரை சரவணன் said...

    maanavarkal sirantha mathippen pera vaalththukkal. good post.//

    நன்றி சார்.

    ReplyDelete
  9. மோகன் குமார் said...

    தங்கள் அனுபவத்திலிருந்து சொல்கிறீர்கள். மிக உண்மை.//

    ஆமாம், எனது அனுபவமும் இதில் கலந்துள்ளது. நன்றி சார்.

    //அனானிமஸ் நல்ல தகவல் தானே பின்னூட்டத்தில் தருகிறார். தன் பெயரிலேயே சொல்லலாமே! (ஒரு வேளை கூகிள் ID இல்லையோ என்னவோ ?)//

    அனானிக்கும் நன்றி சொல்வோம்.

    ReplyDelete
  10. ஆதி மனிதன் said...
    நல்ல அறிவுரைகள். அதோடு, அதுவரை உபயோகித்த பேனா, பென்சில் போன்றவைகளையே தேர்வுக்கும் பயன்படுத்தினால் நன்று. சில சமயம் புது பேனாக்களை உபயோகிக்கும் போது வேகமாகவோ சரியாகவோ எழுத வராது.//

    சிலர் தேர்வுக்காக புதுப் பேனா வாங்கி வைத்திருப்பார்கள். எழுதிப் பழகவேண்டும். இல்லையெனில்,தேர்வு சமயத்தில் பேனா எழுதாமல் கூட போக வாய்ப்புண்டு.

    மிகவும் நல்ல ஆலோசனை. மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  11. manivannan said...
    சரியான நேரத்தில் பயனுள்ள பகிர்வு,அனைவரும் புரிந்து செயல்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.//

    நன்றி சார்.

    ReplyDelete