Thursday, February 9, 2012

கைத்தட்டிய ரெண்டு பேருக்கு நன்றி!


நண்பர் வீட்டுத் திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றிருந்தேன்.  அங்கு மிக நல்ல மெல்லிசைக் கச்சேரி நடந்துக் கொண்டிருந்தது. பெண்ணும் மாப்பிளையும் மேடைக்கு வரும் வரை எல்லோரும் பாடலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். மணமக்கள் மேடைக்கு வந்தவுடன், அவர்களை  வாழ்த்துவதற்காக எல்லோரும் எழும்பிச் சென்று வரிசையில் நின்றுக் கொண்டனர்.  என்னுடன் சிலர் மட்டும் பாடலைக் கேட்டுக் கொண்டு அங்கு இருந்தனர். கச்சேரி தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது.   'யாருமே கேட்கலன்னாலும், இவங்க கவலைப்படாம பாடுறாங்க. இது இவர்களுக்கு பழகிப் போயிருக்கும் போல!' என்று நினைத்துக் கொண்டேன்,

 
 
                                                         என்னை  போட்டோவில் தேடாதீர்கள்,  நான்தான்  எடுத்தேன்.

அந்தப் பாடல் முடிந்தவுடன் அருகிலிருந்த இரண்டு பேர் கைத் தட்டியிருப்பார்கள் போல. அதை, நானும் கவனிக்கவில்லை. அந்த கச்சேரியை நடத்துபவர், "கைத்தட்டிய ரெண்டு பேருக்கு நன்றி, இங்கு வந்திருக்கும்  எல்லோரும் திறமையானவர்கள்  லைவா வாசிக்கனும்னு மெலோடியாப் பாடிகிட்டிருக்கிறோம்" என்றார். அவருடைய நினைப்பு, மெலோடி பாடுவதால் மக்கள் தொடர்ந்து அமர்ந்திருக்கவில்லை என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்து, எங்கள் கிராமத்தில் திருமணம் என்றால், முதல் நாளிலிருந்து  கூம்பு  ஸ்பீக்கர் -ஐ உயரமான மரத்தில் கட்டி  சினிமா  பாடல்கள் போடுவார்கள். அதுவும், திருமண வீட்டார் விரும்பும் பாடலைப் போடவில்லை என்றால், பணம் கொடுக்கும் பொழுது தகராறு நிச்சயம் உண்டு. அதனால், முன்பே என்ன மாதிரி பாடல்கள் கொண்டு வரவேண்டும் என்று ஒப்பதந்தம் போடப்படும். ஆனால், இன்று இம்மாதிரியான கச்சேரிகளை கேட்கும் அளவுக்கு மக்களுக்கு பொறுமையில்லை என்பதே உண்மை.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசைக் கச்சேரி ஒரு சம்பிரதாயமாகிவிட்டது.

பணத்திற்காக பாடினாலும், அவர்களும் பாராட்டை எதிர்பார்ப்பார்கள் தானே?  நாம்  செல்லும் திருமண நிகழ்ச்சிகளுக்கு நேரம்  கிடைத்தால், கொஞ்ச நேரமாவது கச்சேரி கேட்டு, கைத்தட்டி அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்திவிட்டு  வரவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். நீங்க?

.

16 comments:

  1. உண்மைதான். பாராட்டு கிடைக்காதெனத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டு வந்தது போலவே இருப்பார்கள் திருமண மெல்லிசை குழுவினர்.

    தங்கள் முடிவிலும் மகிழ்ச்சி. செல்லுமிடமெல்லாம் கேமராவை துணைக்கு அழைத்துச் செல்வது கண்டும் மகிழ்ச்சி:)!

    ReplyDelete
  2. நிச்சயம் கை தட்டி கலைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும்தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அலகிய தமில் மகல் இவல் என்று சிலர் பாடித் தொலைக்கும் போது கொலைவெறி வருகிறதே... என்ன செய்ய?

    ReplyDelete
  3. மெல்லிசைக் குழுவாவது பரவாயில்லை, இதற்கெல்லாம் பழகியிருப்பார்கள். ஒரு கல்யாணத்தில் கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் கச்சேரி ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அவர் பெரிய உலகப் புகழ் பெற்ற வித்வான். உட்கார்ந்து கேட்பாரில்லை. நான்தான் மெனக்கெட்டுப் போய் ஒரு கீர்த்தனையைச் சொல்லி வாசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஒரு ரசிகராவது இருக்கிறார் என்ற திருப்தி ஏற்பட்டிருக்கலாம்.

    ஆகே எல்லோரும் பணத்திற்கு அடிமைகள்தான்.

    ReplyDelete
  4. அவங்க பாராட்ட எதிர்பார்க்குராங்களோ இல்லியோ கலைக்கு மறியாதைசெய்யனுமில்லியா/

    ReplyDelete
  5. நல்ல கருத்து
    கலைஞர்களை மதிக்கவேண்டும் என்பதற்காகவே
    கச்சேரி நேரத்தில் வேறு சடங்கு சம்பந்தமான நிகழவுகளை
    வைத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன்
    பகிர்வுக்கும் அதனை விளக்கும் விதமாக கொடுத்துள்ள
    படத்திற்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கல்யாணங்களில் ரிசப்ஷன் சமயங்களில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தறது இப்பல்லாம் கௌரவத்துக்கான அடையாளமாகிருச்சு. நிகழ்ச்சி நடத்த வர்றவங்களும் பாராட்டை பெரூசா எதிர்பார்த்து வர்றதில்லைதான். இருந்தாலும் எதிர்பாராத ஒரு சின்னப் பாராட்டும், கை தட்டலும் அவங்க கிட்ட ஒரு மலர்ச்சியையும் உற்சாகத்தையும் கொண்டாந்துருதே.

    நல்லதொரு கருத்தைப் பகிர்ந்துருக்கீங்க..

    ReplyDelete
  7. ராமலக்ஷ்மி said...

    //தங்கள் முடிவிலும் மகிழ்ச்சி. //

    மிக்க நன்றி மேடம்.

    //செல்லுமிடமெல்லாம் கேமராவை துணைக்கு அழைத்துச் செல்வது கண்டும் மகிழ்ச்சி:)! //

    கேமராவை துணைக்கு அழைத்துச் செல்வதில் துணைக்குத்தான் கொஞ்சம் சங்கடம்:-))))!

    தங்களைப் போன்றவர்களின் பாராட்டுகள் தான், இம்மாதிரி படத்துடன் கூடிய பதிவை எழுதத் தூண்டுகிறது என்பதை மறுக்க முடியாது.

    நன்றி.

    ReplyDelete
  8. நிறைய கல்யாணங்களில் இது போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறேன்...கொஞ்சம் வருத்தமா இருக்கும்...ஒருத்தரும் நிகழ்ச்சியை கவனிச்ச மாதிரியே இருக்காது,அப்புறம் எங்க கை தட்ட...

    பள்ளி விழாக்களில் கூட மாணவர்களை உற்சாகபடுத்தனும் என்று யாரும் எண்ணுவதில்லை...மைக்கில் கை தட்டி உற்சாக படுத்துங்கள் என்ற அறிவிப்பு வந்ததும் கைதட்டுவார்கள், பின் அதுவும் இல்லை.

    உங்களின் முடிவை மிக பாராட்டுகிறேன்.

    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  9. கணேஷ் said...

    //நிச்சயம் கை தட்டி கலைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும்தான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அலகிய தமில் மகல் இவல் என்று சிலர் பாடித் தொலைக்கும் போது கொலைவெறி வருகிறதே... என்ன செய்ய?//

    உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. சம்பிரதாயக் கச்சேரிகளும் உண்டு. அதை தவிர்ப்பதே நல்லது.
    கருத்துக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  10. நல்ல கருத்து... சில மாதங்கள் முன்பு சென்னை வந்திருந்தேன். கல்யாணத்தில் புல்லாங்குழலில் சினிமா பாடல்கள் வாசித்துக் கொண்டு இருந்தாட் ஒரு இளைஞர்.. வந்திருந்த பலரில் நானும் இன்னும் சில நண்பர்கள் மட்டுமே அங்கே அமர்ந்து அவர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருந்தோம்.. நீங்கள் சொன்னதை அதனால் உணர முடிந்தது.

    எல்லா கலைஞர்களுக்கும் உற்சாகம் கொடுக்கத்தான் வேண்டும்....

    ReplyDelete
  11. கண்டிப்பாக கேட்க வேண்டும் ! அதை விட பாராட்டவும் வேண்டும் !

    ReplyDelete
  12. நன்றாகச் சொன்னீர்கள். இருந்தாலும் இசையை ரசிக்கும் சூழ்நிலை இல்லையென்றால் யாரையும் குறை கூற முடியாது. ரமணி கூறுவதுபோல் நிகழ்ச்சி நடத்துபவர் அந்நேரத்தில் வேறு முக்கியமான நிகழ்ச்சிகளைத் தவிர்க்கலாம்.உங்கள் ஆதங்கம் புரிகிறது.

    ReplyDelete
  13. ஐயா உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் என்பக்கம் வந்து பாருங்க. நன்றி

    ReplyDelete
  14. நல்ல கருத்துதான். பாராட்டி உற்சாகப் படுத்த வேண்டும்தான். ஆனால் எனக்கு என்ன தோன்றும் என்றால் கல்யாணம், ரிசப்ஷன் போன்ற நிகழ்வுகளில்தான் நாம் நீண்ட காலம் சந்திக்காத பல உறவு மற்றும் நட்புகளைச் சந்திக்க இயலும். அந்த இடத்தில் இது மாதிரி சத்தத் தொந்தரவுகள் இருக்கக் கூடாது என்று தோன்றும். அளவளாவத் தடை. மனம் விட்டு பேச முடியாது. தொண்டை வரள ரெண்டு மூணு வார்த்தைகள் கத்தத்தான் முடியும். இசையை ரசிக்க வேறு இடமும், மணமக்களைச் சந்திக்கவும் அங்கு அமர்ந்து நட்பு உறவுகள் உரையாடவும் தனி இடமும் இருந்தாள் ஓகே!

    ReplyDelete
  15. உங்களுக்காக எனது பக்கத்தில் ஒரு விருது காத்திருக்கிறது...

    http://venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_16.html

    ReplyDelete
  16. இதுபோல் அடுத்தவர் மனம் சந்தோஷப்படும்படி கருத்துக்கள் கூறும் உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது அன்புடன் பற்றுக்கொள்ளுங்கள்http://valluvam-rohini.blogspot.in/

    ReplyDelete