Friday, September 18, 2026

கதைப் போன்ற நிஜம்...!

கிராமங்களில் 1990-களில் ஒருவரின் முன்னேற்றத்திற்கான காரணம் ‘கள்ள நோட்டு’ என்பார்கள். சரி, ஒருவரின் பொருளாதார இழப்பிற்கான காரணமாகவும் அதைத்தான் சொல்வார்கள்.

ஒருவரின் முன்னேற்றத்திற்கு, அவரின் உழைப்பு, திறமை மற்றும் குணநலன்களே முக்கிய காரணம் என்பதை அன்றும், இன்றும், என்றும், பொறாமைக் குணம் கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப் பட்டவர்களைப் புறம் தள்ளி நாம் முன்னேறுவோம், வாருங்கள்!

நற்பண்புகளை மட்டுமே மூலதனமாகக் கொண்டு முன்னேறி, இன்று மற்றவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து வருபவர் குறித்தான பதிவுதான் இது!

கருப்பம்புலம் கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1974 ஆம் ஆண்டு ஆறாவதாகப் பிறந்தவர், குடும்ப வறுமையின் காரணமாக ஒன்பதாம் வகுப்பைத் தொடர முடியாமல், தனது 14-ஆம் வயதில் சைக்கிளில் தினந்தோறும் பூ மூட்டைகளைப் பல கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று கொடுப்பது, 'ரேடியோஸ் கம்பெனி'யில் லைட் கட்டுவது போன்ற கிடைத்த வேலைகளைச் செய்தார். 

அவ்வாறு வேலைகள் செய்து சேர்த்த பணத்தைக்கொண்டு, கருப்பம்புலம் கடைத்தெருவில் சுமார் நான்காண்டுகள் வாடகை சைக்கிள் மற்றும் ரிப்பேர் கடை நடத்தினார்.

 பின்னர், 1995-ஆம் ஆண்டு கடனையும் கனவையும் சுமந்து சிங்கப்பூர் சென்றார்.
சிங்கப்பூரில் பணியாற்றியபோது இவரது உழைப்பு மற்றும் நேர்மையால் ஈர்க்கப்பட்ட நிறுவன முதலாளி, இவர் அங்கு ஓட்டுநராக மாறுவதற்கு உதவினார்.

குடும்பச் சூழ்நிலையால் தடைப்பட்டிருந்த இவரது திருமணம், நண்பர்களின் பெரும் முயற்சியால் 2009-ஆம் ஆண்டு ஒரத்தநாட்டைச் சேர்ந்த கவிதாவுடன் நடைபெற்றது. மகள், மகன் என இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

ஊரார் மீது அன்பு செலுத்தும் இவரது இயல்பு, தனது உயிராக வந்த மனைவி மற்றும் குழந்தைகள் மீது இன்னும் கூடுதலாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

தனது குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, சுமார் 14 ஆண்டுகள் பணிபுரிந்த சிங்கப்பூர் வாழ்க்கையைத் துறந்து, சொந்தமாகக் கார் வாங்கி ஊரில் வாடகைக்கு ஓட்டும் அளவுக்குப் பணத்துடன் ஊர் திரும்பினார்.

வாடகைக் கார் ஓட்டியதோடு, சிங்கப்பூரில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், வீடுகளுக்கு ‘மெட்டல் ஷெட்’ அமைக்கும் தொழிலையும் தொடங்கினார்.  பின்பு,
குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு ஆடு வளர்ப்பு மற்றும் விவசாயத்திலும் ஈடுபட்டார்.

இவ்வாறு சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தாலும், நண்பர்களின் உதவியாலும் கருப்பம்புலத்தில் கட்டியுள்ள 'இரண்டடுக்கு மாடி' வீட்டில் இன்று புதுமனைப் புகுவிழா சிறப்புற நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு, இவரது மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றார் என்பதோடு, இவரது மகனும் படிப்பில் சுட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இயல்பாலும் பணிவான அணுகுமுறையாலும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று, ‘மெட்டல் ஷெட்’ அமைக்கும் தொழிலில் தனக்கென இன்று ஓர் இடத்தையும் பிடித்துள்ளார்.

இவர் அனைவருக்கும் செல்லமாகத் திகழ வேண்டும் என்பதோடு, இவரைப் பற்றிய நினைவுகள் இனிமையாக இருக்க வேண்டுமென்று நினைத்த பெற்றோர், இவருக்கு இரண்டு பெயர்களைச் சூட்டுகிறார்கள்.
ஆம், சக்கரை என்கிற மா. செல்லத்துரைதான் அவர்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் தனது தாய் தந்தை இருவரையும் கடைசிவரை இவர் கைவிடவில்லை என்பதை நான் இங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் இளைஞர்களுக்கு, இவரது வாழ்க்கைப் பாடம் நம்பிக்கையளிக்கும் என்ற நோக்கில், எனது அனுபவத்தோடும் மற்றவர்களிடம் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையிலும் இதனைப் பதிவு செய்துள்ளேன்.

வாருங்கள், அனைவரும் சேர்ந்து சக்கரை குடும்பம் என்றென்றும் மகிழ்ச்சி பொங்க வாழட்டும் என்று வாழ்த்துவோம். மேலும், நான் வழக்கம்போல் இயற்கையிடமும் வேண்டிக்கொள்கிறேன். 🙏
Sella Kavi