அமைதி விரும்பிகள்

Thursday, October 27, 2011

தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் வெற்றிப் பெறலாம்...?!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிக அளவு  மக்கள் போட்டியில் குதித்தனர். இதற்கு காரணம் அரசியல் கட்சிகள்  தனியாக நின்றதும், அரசியலில் பங்கேற்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டதுதான். நல்ல விஷயம் வரவேற்போம். ஆனால், போட்டியில் இறங்குபவர்களில் பலர், பணம் கொடுத்து வெற்றியடைந்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். பெரும்பகுதியினர்  முதலீடு செய்து லாபம் பார்க்கும் தொழிலாக தேர்தலைப் பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்த மாதிரி நபர்கள் அதிகளவில் வெற்றியடையவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம்.



இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஆளும் கட்சி அதிகளவில் வெற்றிப் பெற்றது என்று ஒரே வரியில் முடித்துவிட முடியாது. சுயேட்சைகளின் வெற்றி குறிப்பிடும் படியாகவும் இருந்தது. தனி நபர் செல்வாக்கு அவசியம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
சரி, தனி நபர் செல்வாக்கு என்றால் என்ன?  ஊரில் உங்கள் பெயர் சொன்னால் எல்லோருக்கும் தெரியும் என்றால், அது செல்வாக்காக இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உங்களுக்கு மக்கள் மீது அக்கறை கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு நபரிடம்  நீங்கள் நெருங்கி பழக வேண்டும். அவர்களின் வீட்டு சுக துக்கங்களில்  பங்கெடுக்க வேண்டும். தாராளமாக மொய் எழுத வேண்டும்.இதைத் தான் இன்றைய நிலையில் மக்கள் எதிர்ப் பார்க்கிறார்கள். இந்த மாதிரியான வேட்பாளர்களே வெற்றியும் பெறுகிறார்கள்.



இதையெல்லாம் செய்யாமல், நீங்கள், 'தெரு விளக்கு எரியவில்லை, குப்பைகள் அள்ளப்படவில்லை,  ரோடு சரியாகப் போடப்படவில்லை, அரசு அலுவலங்கள் சரியாக இயங்கவில்லை' என்று புகார் தெரிவிப்பீர்கள். அதனால், ஒப்பந்தக்காரர் உங்களைக் கண்டு பயந்து சரியாக ரோடு போடலாம். அரசு அலுவலர்கள் உங்களுக்கு பயந்து சரியாக வேலை செய்யலாம். ரேஷன் கடை சிறப்பாக செயல்படலாம். இவ்வளவு மக்கள் நலப் பணியில் ஈடுபடுகிறோமே, ஏன் நாம் தேர்தலில் நிற்கக் கூடாது? என்று நீங்கள் நினைத்தால் தோல்விதான் உங்களுக்கு பரிசாகக் கிடைக்கும். எனவே, இன்றைய நிலையில் இவையெல்லாம் மக்கள் நலப் பணியாக மக்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை என்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்காக இவையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இதனுடன் சேர்த்து மக்களோடு மக்களாக சேர்ந்து பழகவும் கற்றுக் கொள்ள  வேண்டும். உங்களுடைய போராட்டத்தில் மக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.  அப்படி செய்தால் தான் உங்களால் வெற்றிப் பெற முடியும்.


நல்லது செய்வதுதான் உங்கள் நோக்கம் என்றால் இன்றே மக்களோடு மக்களாக கலந்து விடுங்கள். வரும் தேர்தலில் யார், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக்  கொண்டு உங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பது உறுதி.

.

11 comments:

dr.tj vadivukkarasi said...

நல்ல செய்தி சொன்னீர்கள்.தேர்தலில் மட்டுமல்ல எந்த தொழிலும் எந்த உறவிலும்..(தொழிலில் கொள்ளும் நட்பும் உறவு தானே) வெற்றி பெற மக்களோடு மக்களாய் இணைய வேண்டும். தருகின்ற நிலையில் இருக்கும் மனிதர்களை சுற்றி எப்போதும் உற்சாகமானவர்கள் நிரம்பியிருப்பார் என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள்.ஆனால்,எல்லோராலும்,நிறைய மொய் பணம் வைக்கமுடியாது என்று நினைக்கிறேன்!!
soft skills எனப்படும் அரவணைத்து வாழும் கலையை , நம் கல்வியும் சமூகமும் கற்று கொள்ளும் காலம் வெகு அருகில் உள்ளது.

அமைதி அப்பா said...

dr.tj vadivukkarasi said...

// நல்ல செய்தி சொன்னீர்கள்.//

மிக்க நன்றி மேடம்.

//தேர்தலில் மட்டுமல்ல எந்த தொழிலும் எந்த உறவிலும்..(தொழிலில் கொள்ளும் நட்பும் உறவு தானே) வெற்றி பெற மக்களோடு மக்களாய் இணைய வேண்டும்.//

யதார்த்தத்தை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும். பலர் பணம் கொடுத்து வெற்றிப் பெறலாம் என்று நினைக்கிறார்கள். இனி, அது நடக்காது என்பதுதான் இப் பதிவின் மூலம் நான் சொல்ல வருவது.

// தருகின்ற நிலையில் இருக்கும் மனிதர்களை சுற்றி எப்போதும் உற்சாகமானவர்கள் நிரம்பியிருப்பார் என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள். ஆனால்,எல்லோராலும்,நிறைய மொய் பணம் வைக்கமுடியாது என்று நினைக்கிறேன்!!//

இப்படி, ஒரு தந்திரம் கையாளப் படுவதைத்தான் இங்கு சுட்டிக் காட்டினேன். மற்றபடி, மொய் எழுதினால்தான் வெற்றிப்பெற முடியும் என்றில்லை. ஆனால், பிறருக்கு பலன் எதிர்பார்க்காமல் பண உதவி செய்வது தவறில்லை.


//soft skills எனப்படும் அரவணைத்து வாழும் கலையை , நம் கல்வியும் சமூகமும் கற்று கொள்ளும் காலம் வெகு அருகில் உள்ளது.//

மிக்க மகிழ்ச்சி மேடம். அதைத்தான் எல்லோரும் எதிர்ப்பார்க்கிறோம்.

suryajeeva said...

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான், ஆனால் அதிகார பலம் வெற்றி பெறும் என்பது இங்கு நிதர்சன உண்மை என்பதையும் மறுப்பதற்கில்லை... மக்கள் போடும் ஓட்டால் தான் வேட்பாளர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று நீங்கள் கூறினால், நம் ப.சிதம்பரம் வெற்றி என்ன கூறுகிறது என்பதை நினைத்து பாருங்கள்... இது எங்கோ ஒன்று ரெண்டு நடக்கிறது என்று கூற முடியும்... ஓட்டு போட்டு தான் ஜெயிக்கிறார்கள் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை, ஓட்டு போடாமல் ஜெயிக்கிறார்கள் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை... விவாதிக்க வரவில்லை, என் கருத்தை சொன்னேன்

அமைதி அப்பா said...

suryajeeva said...

//விவாதிக்க வரவில்லை, என் கருத்தை சொன்னேன்//

கருத்துச் சொல்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு.

வருகைக்கு நன்றி சார்.

90bc5e8c-b1c5-11e0-8e97-000bcdca4d7a said...

//நல்லது செய்வதுதான் உங்கள் நோக்கம் என்றால் இன்றே மக்களோடு மக்களாக கலந்து விடுங்கள். வரும் தேர்தலில் யார், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு உங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பது உறுதி.
//

உண்மைதான்... நல்லா சொன்னீர்கள்.... நாங்கள் நல்லது செய்வதாக சொல்லுவோமே தவிர செய்வதற்காகவா அரசியலுக்கு வந்து தேர்தலில் நிக்கிறோம்....

சே.குமார்
மனசு

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி.

VASANTH said...
This comment has been removed by the author.
அமைதி அப்பா said...

VASANTH has left a new comment on your post

"தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் வெற்றிப் பெறலாம்......":

வேட்பாளர்களுக்கு நல்ல யோசனை சொன்னீர்கள் சார்

விச்சு said...

உண்மைதான்.மக்கள் ஊழியன்தான் வெற்றியும் சூட முடியும்.

அமைதி அப்பா said...

//உண்மைதான்... நல்லா சொன்னீர்கள்.... நாங்கள் நல்லது செய்வதாக சொல்லுவோமே தவிர செய்வதற்காகவா அரசியலுக்கு வந்து தேர்தலில் நிக்கிறோம்....

சே.குமார்
மனசு //

மிக்க நன்றி சார்.

அமைதி அப்பா said...

Rathnavel said...

// நல்ல பதிவு.
நன்றி.//

mikka nanri.

Post a Comment