Tuesday, May 17, 2011

இது நல்ல (ஏ)மாற்றம்...!



இந்த வருட தேர்தல் ஆரம்பித்ததிலிருந்து ஏமாற்றமும் மாற்றமும் நிறைய நிகழ்ந்துள்ளது . அப்படி என்னதான் நடந்தது என்று சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

முதலில் தேர்தல் தேதி. குறைந்த நாட்கள் இடைவெளியில் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டவுடன், எல்லோருக்கும் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால், குறைந்த நாட்கள் என்பதால் மக்களின் அன்றாட வாழ்விற்கு இடையுறு ஏற்படாமலும், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் குறைந்த உழைப்பிலும் தேர்தல் முடிந்தது நல்ல மாற்றமாக அமைந்தது.

பணத்தை செலவழித்து வெற்றிப் பெறலாம் என்று நினைத்தவர்களுக்கு தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் ஏமாற்றம் தந்தது. ஆனால், இந்தக் கெடுபிடிகளால் தேர்தலில் வீண் ஆடம்பரம், கட் அவுட், ஒளிப் பெருக்கிகளின் இரைச்சல், மின்சார இழப்பு (முன்பெல்லாம் தெருவுக்கு தெரு உயர் கோபுர விளக்குகள் அமைத்து மின்சாரத்தை வீணடிப்பார்கள்) வாகனங்களின் அணிவகுப்பு, சுவர் விளம்பரம், வேட்பாளர்களின் செலவு போன்றவைகள் குறைந்தது போன்றவைகள் நல்ல மாற்றம்.

தேர்தல் நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட நாட்கள் அதிகமாக இருந்தது ஏமாற்றம். ஆனால், அதிக நாட்கள் இருந்தக் காரணத்தால், வாக்கு எண்ணிக்கையின் பொழுது விரிவான ஏற்பாடு செய்வதற்கு அவகாசம் கிடைத்தது. தேர்தலுக்கு பின்பு வரும் சண்டை சச்சரவு குறைந்தது. இது நல்ல மாற்றம்.

தேர்தல் கணிப்பு வெளியிட்ட பெரும்பகுதியினரின் கணிப்புக்கு கிடைத்து ஏமாற்றம் . ஆனால், கடந்தத் தேர்தலில் நடந்தது போல் அல்லாமல் பெரும்பான்மை அரசு அமைந்தது நல்ல மாற்றம்.

தேர்தல் முடிவுக்கு பிறகு, இருப்பத்தி ஏழு அமைச்சர்கள்தான் பதவி ஏற்பார்கள் என்று ஆருடம் சொன்னவர்களுக்கு ஏமாற்றம். ஆனால், ஒன்பதாம் எண் மட்டுமல்ல எல்லா எண்ணும் ராசிதான் என்று முதலமைச்சர் நிறுபித்தது நல்ல மாற்றம்.

ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள்தான் அதிகளவில் அமைச்சர்களாவார்கள் என்று ஆளாளுக்கு ஒரு பட்டியல் சொன்னவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம். ஆனால், புதியவர்கள் பலரை அமைச்சர்களாக நியமித்து. நம் பக்கத்து வீட்டுக்காரர் அல்லது உறவினர் போன்றத் தோற்றத்தில் எளிமையாக அவர்கள் இருப்பது தமிழக அரசியலில் ஏற்பட்ட நல்ல மாற்றம்.

கம்னியுஸ்ட்களும் பி.ஜே.பி. தலைவர்களும் எதிரிகள் என்பவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம். ஏனெனில், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் திரு மோடியும் திரு ராஜாவும் அருகருகே அமர்ந்து பேசியது இந்திய அரசியலில் நல்ல மாற்றம்.

இப்படியே தேர்தல் குறித்து, இன்னும் நிறைய எழுதுவேன் என்று நினைப்பவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம். ஏனெனில், இனி இப்போதைக்கு தேர்தல் மற்றும் அரசியல் பதிவு எழுதுவதில்லை என்ற முடிவை நான் எடுத்திருப்பது நல்ல மாற்றம் தானே?!

.




11 comments:

  1. மிகவும் சுவையான பதிவு
    நீங்கள் சொன்னது போல இனி நீங்கள் தேர்தல் மற்றும் அரசியல் பதிவு எழுதுவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பது நல்ல ஏமாற்றம்

    ஆகவே ஏமாற்றாதீகள் எங்களை

    ReplyDelete
  2. //இனி இப்போதைக்கு தேர்தல் மற்றும் அரசியல் பதிவு எழுதுவதில்லை என்ற முடிவை நான் எடுத்திருப்பது நல்ல மாற்றம் தானே?!//
    “இப்போதைக்கு’ என்பது எத்தனை நாள்? :}

    ReplyDelete
  3. saro said...

    //உங்கள் பதிவு நன்றாக இருந்தது//

    நன்றி.

    *****

    //சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்//

    எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். என்றாவது ஒரு நாள் கிட்ட வரும் பொழுது செய்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  4. மாற்றம் வேண்டும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் வராமல் இருந்தால் சரி சார் !!!

    ReplyDelete
  5. A.R.RAJAGOPALAN said...

    // மிகவும் சுவையான பதிவு//

    நன்றி சார்.

    ***************

    // நீங்கள் சொன்னது போல இனி நீங்கள் தேர்தல் மற்றும் அரசியல் பதிவு எழுதுவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பது நல்ல ஏமாற்றம் ஆகவே ஏமாற்றாதீகள் எங்களை //

    :-))))))))!

    ******************

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  6. //சென்னை பித்தன் said...

    “இப்போதைக்கு’ என்பது எத்தனை நாள்?:}//


    வேற ஒண்ணுமில்ல இப்படி எழுதி எழுதியே எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி. இனி கொஞ்சநாள் ஓய்வுக்குப் பிறகு, அதாவது அடுத்தத் தேர்தல் வரும் வரையின்னு வச்சுக்குவோம் சார்.

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  7. மாற்றங்களும் ஏமாற்றங்களும்:)! அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.

    அரசியல் பதிவுகள். தொடரலாமே. அதில் ஏ(ன்)மாற்றம்?

    ReplyDelete
  8. T.V.ராதாகிருஷ்ணன் said

    //Nice //

    நன்றி சார்.

    ReplyDelete
  9. ராமலக்ஷ்மி said,

    //மாற்றங்களும் ஏமாற்றங்களும்:)! அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.//

    ரொம்ப நன்றி மேடம்.

    ******

    //அரசியல் பதிவுகள். தொடரலாமே. அதில் ஏ(ன்)மாற்றம்? //

    வேற ஒண்ணுமில்ல, இப்படி தொடர்ந்து ஒரே சிந்தனையில் எழுதி எழுதியே எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி. அதனால்தான் ஓய்வு. மற்றபடி காரணம் ஒன்றுமில்லை. உங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  10. வந்திருக்கும் புதிய ஆட்சி நல்ல மாற்றமாக இருந்தால் சரி .

    ReplyDelete