Sunday, July 19, 2020

நம்பிக்கை...!

பள்ளியில் படிக்கும் வயதில் பெத்தான், பெரியாச்சி, மாரியம்மன் அய்யனார், ஐயப்பன் போன்ற கடவுள்களின் மீது நம்பிக்கையுள்ள சிறுவனாக வளர்ந்தேன். அப்போதெல்லம், நான் எதையாவது வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடனாக தேங்காய் உடைக்கும் பழக்கமுண்டு. எறும்புகளை பிடித்து சாமிக்கு பலியிடுட்டு விளையாடுவதுமுண்டு. 
எது எதுக்கெல்லாம் சாமியை துணைக்கு அழைந்தேன் என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கும்.
வீட்டுப்பாடம் எழுதி வரச்சொன்ன வாத்தியார் பள்ளிக்கு வரக்கூடாது,
தேர்வில் நிறைய மதிப்பெண் பெறவேண்டும். மேலும், வீடு வந்துசேரும் வரை வயிறு வலிக்கக்கூடாது.

இப்படியாக வளர்ந்து
கல்லூரியில் சேர்ந்த பிறகு, எனது நண்பரின் பேச்சைக்கேட்டு கடவுள் மறுப்பாளனாக மாறினேன். அதன் பிறகு, அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.

கடவுள் இல்லை என்பதற்கு நான் வைக்கும் வாதங்களில் முக்கியாமானது,  "காணிக்கை என்பது நமக்கு வேலை செய்த கடவுளுக்கு நாம் கொடுக்கும் கூலி" என்பேன்.  இதுபோல் நிறைய பேசுவேன். 
ஆனால், என்னை மாற்றிய நண்பர் சில ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுள் நம்பிக்கை உள்ளவராக மாறிவிட்டார் என்பது வரலாறு. 

பல ஆண்டுகள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்த எனக்கு, 1995 -ல் ஒரு நாள் ஏற்பட்ட சங்கடத்திற்கு, தீர்வாக எதுவும் தோன்றவில்லை. அப்போது, என்னுள் தோன்றிய சிந்தனையானது,  'கடவுள் நம்பிக்கை நமக்கு இருந்திருந்தால், தீர்வை கடவுளிடம் விட்டுவிட்டு நாம் நிம்மதியாக இருந்திருக்கலாமே' என்பதுதான். அதனால், 'இனி யாருடைய கடவுள் நம்பிக்கையையும் தகர்க்ககூடாது' என்று உறுதியெடுத்தேன். 

நம்மைவிட ஒரு 'சூப்பர் பவர்' மீது நாம்  நம்பிக்கை வைக்க வேண்டுமென்று எண்ணினேன். எனவே, இயற்கையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து வருகிறேன்.

 அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு, அது அடுத்தவருக்கு இடைஞ்சலாக இல்லாதவரை...!

No comments:

Post a Comment